வெள்ளி, 7 அக்டோபர், 2016

alexander

1. முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
2. உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
3. சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
4. சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.
5. இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.
6. வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை.
7. இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.
8. முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார்.
9. நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.
10. நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.
11. வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.
12. நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை

வியாழன், 1 செப்டம்பர், 2016

அய்யாவும் ஆன்மிகமும்

இறைவன் ஒருவனே. அவன் ஒளி வடிவானவன். அவனை பலவித உருவங்களில் வழிபடுவதைவிட ஒளி ரூபமாக வழிபடுவதே சிறந்தது".

- இப்படிச் சொன்னவர், வள்ளலார் இராமலிங்க அடிகளார்.

ஒளி வழிபாட்டை உருவாக்கிய வள்ளலார், கி.பி. 1871-ம் ஆண்டுதான் வடலூரில் தனது சத்திய தருமச்சாலைக்கு அருகே ஒரு ஒளித் திருக்கோவிலை ஏற்படுத்தினார். இவர் ஏற்படுத்திய ஒளி வழிபாடு ஆன்மிக மார்க்கத்தில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தியது. ஒளித் திருக்கோவிலில் அபிஷேக ஆராதனைகள் கிடையாது. தீபமும் காட்ட மாட்டார்கள். நைவேத்தியமும் இல்லை. மேள-தாளம் போன்ற ஆரவாரத்திற்கும் அங்கே இடமில்லை. கோவிலில் அபிஷேக ஆராதனை செய்ய ஆகும் செலவில் எத்தனையோ பேரது பசியை போக்கிவிடலாம் என்பார் வள்ளலார்.

1873 ஆம் ஆண்டில்தான் சத்திய ஞானசபைக்காக சன்மார்க்கக் கொடி ஒன்றினை ஏற்றி அருளுறை ஆற்றினார் வள்ளலார். அப்போதுதான்,

"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"

என்ற மந்திரத்தை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, அருட்பெருஞ்ஜோதி அகவலையும் எழுதி வெளியிட்டார். மேலும், ஜோதி ரூபமான இறைவனை வழிபடுவதற்காக ஒரு வழிபாட்டு பாடலையும் உருவாக்கினார்.

ஆன்மிக மார்க்கத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய வள்ளலாருக்கு முன்பாகவே, நாஞ்சில் நாட்டில் ஆன்மிகப் புரட்சி ஏற்படுத்தியவர்தான் அய்யா வைகுண்டர். இவர் உருவாக்கிய கோவில்களில் சிலைகள் இல்லை. மாறாக, கருவறையில் ஒரு கண்ணாடியை வைத்து, அதற்கு முன்பு ஒளிரும் விளக்கு ஒன்றை வைத்தார். 'கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்' என்ற அய்யா வைகுண்டர், உருவ வழிபாடு கூடாது என்றார். கண்ணாடியை அவ்வப்போது துடைத்து தூய்மையாக வைத்திருந்தால்தான் அதில் நம் உருவம் தெள்ளத்தெளிவாகத் தெரியும். அதுபோல், இறைவன் குடிகொண்டுள்ள நம் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, கெட்ட எண்ணங்கள் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்த நல்ல உள்ளத்தில் இறைவன் குடியேறுவான் என்கிற தத்துவத்தையும் இந்த கண்ணாடி நமக்கு உணர்த்துகிறது.

அதன்படியே, இன்றும் ஒவ்வொரு அய்யா வைகுண்ட சுவாமி கோவிலிலும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்த கோவில்களில் நிலைக் கண்ணாடிக்கு முன்பாக அய்யாவின் திருமேனியை உருவம் இல்லாது வைத்து வழிபடுகிறார்கள்.



இங்கே பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. பிற கோவில்களில் பின்பற்றப்படும் தீப ஆராதனைகள் இங்கு கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். அதை, உடைத்து சாமிக்கு படைப்பது உயிர்ப்பலி கொடுப்பதற்கு சமமாக கருதப்படுவதால் அவற்றைத் தவிர்க்கிறார்கள். சூடகம், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவற்றுக்கும் இங்கு இடம் கிடையாது.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் வெற்றிலை, பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சம்பழம் ஆகியவற்றை மாத்திரமே கொண்டு வருகிறார்கள். இவை அவர்களுக்கு திரும்பக் கொடுக்கப்படுவது கிடையாது. எல்லாப் பக்தர்களுக்கும் பிரசாதமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. ‘காணிக்கை கூடாது’ என்று அய்யாவே சொல்லி இருப்பதால், இந்தக் கோவில்களில் உண்டியல்களை பார்க்க முடியாது.

ஆன்மிகம் குடும்ப வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்பதையும் அய்யா வைகுண்டர் அழகாக குறிப்பிடுகிறார். இல்லறத்தை துறந்து இறைக்கடன் செய்வது முட்டாள்த்தனம் என்று சாடுகிறார் அவர். தருமம் செய்வதை எல்லோரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வற்புறுத்துகிறார். ‘இயலாதவர்களுக்கு நீ உதவி செய்தாலே, உனக்குள் இருக்கும் இறைவன் உள்ளம் மகிழ்வான்’ என்கிறார் அய்யா. "காணிக்கை வேண்டாதுங்கோ
கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூஜை ஏறாதிருங்கோ
பெலி தீபம் ஏராதுங்கோ
ஆசை வையாதுங்கோ
அவகடம் செய்யாதுங்கோ
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ
வைகுண்டா என்று மனதில் நினைத்திருங்கோ...

பொய்கொண்ட தேரோட்டம் புணக்காரம் ஏராதுங்கோ
தாதிக் கை காட்டல் சப்பிரங்கள் ஏராதுங்கோ
மோதிப்பேசாதுங்கோ மோகம் பாராட்டாதுங்கோ
ஆலத்தி கைவிளக்கு ஆராட்டு பாராதுங்கோ
சாலத்தீ பாராதுங்கோ சகல பூ ஏராதுங்கோ...

கொழுந்து மஞ்சண மாலை, குப்பையுடன் சந்தனமும்
விழுந்து நமஸ்காரம் முதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ
கூ என்று உரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ
ஓ என்று உரையாதுங்கோ ஓம முறை ஏராதுங்கோ
தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ..."

- இப்படி, அன்றைய வழிபாட்டு முறைகளை கண்டித்ததோடு, எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் அழகாக குறிப்பிடுகிறது அய்யாவின் அகிலத்திரட்டு.

உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கமும் அய்யா வழி ஆன்மிக மார்க்கத்தில் கிடையாது. எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள் என்பது அய்யா வாக்கு.

திருவிதாங்கூர் மன்னன் விதித்த தண்டனைகளை வென்று சாமித்தோப்பு திரும்பும் வழியில் ஒரு கிராமத்தின் வழியாக அய்யா வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு நிறைய ஆடுகளை கூட்டமாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவற்றின் ம்மே... ம்மே... கதறல், உதவி கேட்பது போல் இருந்தது. உடனே, அந்த ஆடுகள் ஏன் ஒரே இடத்தில் மொத்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளன என்று விசாரித்தார். கோவில் திருவிழாவில் பலி கொடுப்பதற்காக அவை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள், அந்தக் கிராமமக்கள்.

அதை ஏற்றுக்கொள்ள விரும்பாத அய்யா, ஊர்ப் பெரியவர்களை அழைத்தார். உயிர் பலியிடுவது மன்னிக்க முடியாத குற்றம் என்ற அவர், உயிரின் மேன்மையை சிறிது நேரம் அவர்களுக்கு விளக்கினார். அவரது உபதேசத்தில் அந்தக் கிராமமக்கள் மனம் மாறினர். பலியிட அடைத்து வைத்திருந்த ஆடுகளை அவிழ்த்து விட்டனர். பலியிடுவதற்குப் பதிலாக மாவு உருண்டைகளைப் படைத்து வழிபட்டனர்.

மேலும், ஆன்மிக மார்க்கத்தில் போலிச்சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கூறுகிறார் அய்யா. இந்தப் போலிகள், மாய மந்திரங்கள் செய்து மக்களை மயக்கி விடுவார்கள் என்கிறார் அவர்.

“நந்தன் நான் என்பான்
நாரணுக்கோன் ராமன் என்பான்
முன் உதித்து வந்தவர்க்கெல்லாம்
முன் உதித்து வந்தேன் என்பான்
கண்ட கண்ட அற்புதங்கள்
காணக் கோடி செய்திடுவான்
இந்தப் பேரோ என்றிடுவீர்
சூட்சுமம் அறியாமல் தொல்புவி மயங்கும்...”



என்று, போலிச்சாமியார்களை பற்றியும், அவர்களை நம்பினால் கடைசியில் என்ன ஆகும் என்பது பற்றியும் அழகாக குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு. மேலும் பல வித்தியாசமான நடைமுறைகளும் அய்யா வழி ஆன்மிக மார்க்கத்திலும், அவர்கள் வழி சமூகத்திலும் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சில...

1. அய்யா வழி திருமணங்களில் வேத விற்பன்னர்களுக்கு இடமில்லை. அவர்கள் சமூக பெரியவர் ஒருவரே குருவாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

2. அய்யா தருமபதிகளில் விளக்கு மற்றும் நிலைக்கண்ணாடி வைத்து வணங்கும் அய்யா வழி மக்கள், வீடுகளில் விளக்கேற்றி, அதன் ஒளியை இறைவனாக வணங்குகிறார்கள். மாலை நேரத்தில் அகிலத்திரட்டு வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

3. அய்யா வழி கோவில்களுக்குள் நுழையும் ஆண்கள் சட்டை அணிந்திருக்கக் கூடாது. ஆனால், திருமணத்தன்று திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு வரும் மணமகன் மட்டும் சட்டை அணிந்து கொள்ளலாம்.

4. பருவ வயதை அடையும் பெண்களை, ருதுவான 41 நாட்களுக்கு பிறகு அய்யா கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். அங்கு, குருவானவர் 5 முறை அந்தப் பெண்ணின் முகத்தில் பதம் (தீர்த்தம்) தெளித்து ஆசி வழங்குகிறார்.

5. கணவன் இறந்த பிறகு தாலியைக் கழற்றும் வழக்கம் அய்யா வழி மார்க்கத்தில் இல்லை. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்வதையும் அய்யா வழி வரவேற்கிறது.

6. அய்யா கோவிலில் சுருள் கொடுத்தல் என்பது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறிய ஒருவர், வாழைத்தார், எலுமிச்சை, பன்னீர், வெற்றிலை, பாக்கு, முழுத்தேங்காய், பிச்சிப்பூ, விளக்கேற்றத் தேவைப்படும் எண்ணெய் வாங்கத் தேவைப்படும் பணம் ஆகியவற்றை வழங்குவதற்கு பெயர்தான் சுருள் கொடுத்தல் என்று பெயர்.

7. அய்யாவின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் ஒவ்வொரு அய்யா வழி தருமபதிகளிலும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்கள் நடைபெறுகின்றன.

8. அய்யாவின் தருமபதிகளில் தலைமைபதி அய்யா அவதரித்த சாமித்தோப்புதான். அய்யாவின் காலடிபட்டு புனிதம் பெற்ற தாமரைக்குளம் பதி, முட்டப்பதி, அம்பலப்பதி, பூப்பதி, துவாரகாபதி போன்ற பதிகளும் சிறப்பு பெற்றவை. இவற்றோடு, சென்னை புறநகரான மணலி புதுநகரில் உள்ள பிரம்மாண்ட அய்யா வைகுண்டர் தருமபதியும் சிறப்பு பெற்றது.

9. அய்யாவின் அவதார நாள் ஒவ்வொரு பதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகுண்டர் முத்துக்குட்டியாக, முடிசூடும் பெருமாளாக பிறந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இந்த விழா நடைபெறுவதில்லை. மாறாக, திருச்செந்தூர் கடலில் மூழ்கி வைகுண்டராக அவதரித்த மாசி மாதம் 20 ஆம் தேதிதான் (கி.பி. 1832 மார்ச் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை) அவரது அவதார நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சாமித்தோப்பு தலைமைபதியில் நடைபெறும் விழா மிகவும் பிரபலம். லட்சக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள். 10. இதே போல், வைகாசித் திருவிழாவும் புகழ்பெற்றது. 11 நாட்கள் நடைபெறும் அந்த விழாவின் 8 ஆம் நாள் வைகுண்டர் கலியை வெல்லும் கலி வேட்டை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

11. எந்தவொரு செயலைச் செய்தாலும், ‘அய்யா உண்டு’ என்று சொல்லும் வழக்கம் இந்த மார்க்க மக்களிடம் உள்ளது. அய்யாவின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதலையே இது காட்டுகிறது.

12. பொங்கல், சுண்டல், புளியோதரை... போன்றவை இந்துக் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும். ஆனால், அய்யா வழி கோவில்களிலும் இந்த பிரசாதமும் வித்தியாசமாகவே வழங்கப்படுகிறது. சிறுபயிறு, வற்றல், பச்சரிசி கொண்டு செய்யப்படும் ‘நித்தப்பால்’, பச்சரிசி கொண்டு செய்யப்படும் ‘தவனக்கஞ்சி’, அரிசி, மிளகாய், வாழைக்காய், கத்தரி, பூசணிக்காய், இளவங்காய் கொண்டு செய்யப்படும் கூட்டாஞ்சோறான ‘உம்மான்சாதம்’ ஆகியவையே இங்கு வழங்கப்படும் பிரசாதங்கள்.

13. தருமம் பற்றி இந்த மார்க்கத்தில் அதிகமாக வலியுறுத்தப்படுவதால், இந்தக் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எல்லோருமே தங்களால் முடிந்த அன்னதானம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அன்னதானம் வழங்கத் தேவைப்படும் சமையல் பொருட்களும் அவற்றில் அடங்கும்.

14. ‘அய்யா... நாங்கள்... அறிஞ்சி அறியாமல் செய்ததெல்லாம்... அய்யா பொறுக்கணும்...’ என்று 5 முறை சொல்லி வாயில் அடித்து அய்யா வழி பக்தர்கள் வழிபடுவது, மற்றவர்களுக்கு விநோதமாக தெரிந்தாலும், இவர்களின் அனைத்துப் பழக்க வழக்கங்களிலும் ஆழ்ந்த பொருள் உள்ளது. அய்யாவின் தருமபதிகளுக்கு ஒரு முறையேனும் சென்று, அங்குள்ள வழிபாட்டு முறைகளை சற்று உன்னிப்பாகக் கவனித்தால், ‘இந்தக் கலிகாலத்தில் இப்படியொரு மார்க்கமா?’ என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள்.

அய்யாவும் அகிலத்திரட்டு அம்மானையும்

இந்துக்களுக்கு பகவத்கீதை எப்படியோ, கிறிஸ்தவர்களுக்கு பைபிள் எப்படியோ, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன் எப்படியோ அது போன்று அய்யா வழி மக்களுக்கு உரிய வேதநூல்தான் அகிலத்திரட்டு அம்மானை. அகிலம், அகிலத்திரட்டு என்ற பெயர்களிலும் இதை அழைக்கிறார்கள். இதை எழுதியவர் அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரிகோபாலன் என்பவர். அய்யாவின் வாய் வார்த்தைகளாகவே, அதாவது அய்யாவே நேரடியாக சொல்வது போன்று பாடல் வரிகளாக அகிலத்திரட்டு எழுதப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகள்வரை பனை ஓலையில் பாதுகாக்கப்பட்டு வந்த அகிலத்திரட்டு அம்மானை கி.பி.1939 ஆம் ஆண்டு முதன் முறையாக அச்சில் ஏற்பட்டது.

இந்த அகிலத்திரட்டு பிறந்த கதை கொஞ்சம் வித்தியாசமானது. இதை எழுதிய அரிகோபாலன் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஒரு வேதத்தை, ஆகமத்தை எழுத முடியும்? இதுவும் அய்யா வைகுண்டரின் அற்புதமே!

அது கி.பி.1840ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி வெள்ளிக்கிழமை

அன்று இரவு 12 மணிக்கு அரிகோபாலன் கனவில் தோன்றிய அய்யா வைகுண்டர் (இந்த காலக்கட்டத்தில் அய்யா சாமித்தோப்பில் 6 ஆண்டுகால தவம் மேற்கொண்டிருந்தார்), ‘ஏரணியும் மாயோன்...’ என்ற முதல் அடியை எடுத்துக் கொடுக்க... திடுக்கிட்டு எழுந்த சகாதேவன், பக்திப் பெருக்கால் பரவசம் ஆனார். தம்முள் வைகுண்டர் உறைந்திருப்தைப் போன்ற ஓர் உணர்வு அவரை மெய்மறக்கச் செய்தது. அந்த நேரம் அவரது கண்களுக்கு மகாவிஷ்ணு, மகாலட்சுமியிடம் உலக வரலாற்றை கூறுவதைப் போன்ற ஒரு காட்சி தெரிந்தது.



அந்த அருட்காட்சியில் கேட்டவை அனைத்தையும் அப்படியே அம்மானை ராகத்தில் பனை ஓலைகளில் எழுத ஆரம்பித்தார். 14 நாட்களில் அதை எழுதி நிறைவு செய்தார். இது, இறைவனால் அம்மாவுக்குச் சொன்ன செய்தி ஆகையால், அந்த ஆகமத்திற்கு ‘அகிலத்திரட்டு அம்மானை’ என்று வைகுண்டரின் அனுமதியோடு பெயர் சூட்டினார் அவர்.

அகிலத்திரட்டை எழுதிய அரிகோபாலனை, அதை எழுதும் ஒரு கருவியாக அய்யா பயன்படுத்திக் கொண்டார் என்பது அய்யா வழி மக்களின் நம்பிக்கை. அய்யா வைகுண்டம் சென்ற பிறகுதான், இந்த ஏடு கட்டவிழ்க்கப்பட்டு, அதில் அய்யா கூறிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அய்யா வழியும் பரப்பப்பட்டது.

அகிலத்திரட்டானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகம் தோன்றியது முதல் வைகுண்ட அவதாரத்திற்கு முன்பு வரையிலான சம்பவங்கள் முதல் பகுதியாகவும், வைகுண்டர் அவதாரம் முதல் தர்மயுகம் வரை உள்ள நிகழ்வுகள் இரண்டாவது பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இப்போது படிப்போரின் வசதிக்காக அகிலத்திரட்டானது ஒன்று, இரண்டு, மூன்று... என்று 17 பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது. நீடிய யுகம், சதுர யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய 5 யுகங்களில் நடந்த சம்பவங்கள், மகாவிஷ்ணுவின் திருவிளையாடல்கள், கலியுகம் அழித்து தருமத்தை நிலைநாட்ட குரோணி என்னும் அசுரன் படைக்கப்பட்ட வரலாறு, சம்பூர்ணதேவன் அய்யா வைகுண்டராக பூமியில் அவதாரம் எடுத்தல், 18ஆம் நூற்றாண்டில் நாஞ்சில் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்பட்ட 18 ஜாதியினர் அனுபவித்த கொடுமைகள், நாடார் சமூகத்தின் மேன்மைகள், கலிநீசனை வென்று தருமயுகத்திற்கான பணிகளை நிர்மாணித்தல், அதன் தொடர்ச்சியாக மீண்டும் அய்யா வைகுண்டர் திருமால் மலரடி செல்லுதல்... என்று விரிவாக விரிகிறது அகிலத்திரட்டு அம்மானை.

“தரும யுகமாக்கி தரணியை ஆட்சி செய்ய கர்மக் கலியில் கடவுளர் வந்த கதை” என்று அகிலத்திரட்டு பற்றி அந்த நூலிலேயே குறிப்பிடுகிறார், அதை இயற்றிய அரிகோபாலன்.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிக்க ஜாதியினர், 18 ஜாதியினரை ஒதுக்கி வைத்து, அவர்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்களையும் அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது அகிலத்திரட்டு. தங்கள் இஷ்டப்படி சமஸ்தான மன்னரை தலையாட்ட வைத்த திருவிதாங்கூர் நம்பூதிரிகள், அப்பாவிப் பெண்களுக்கு எதிராக இழைத்த பாலியல் கொடுமைகள் ஏராளம்... ஏராளம்..! அன்றே கோவிலில் சாமியைத் தேடி வந்த பெண்களின் மார்பை பிடித்து இழுத்து சில்மிஷங்கள் செய்ததோடு, பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டு, தங்களை ஒரு வெறியர்களாகவே அவர்கள் காட்டிக் கொண்டார்கள். நம்பூதிரிகளால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிறைய.

அப்பாவிப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த வன் கொடுமைகளை பொங்கியெழுந்து சாடுகிறது அகிலத்திரட்டு.

“வெங்கப் பயல் சிலர் வேசையுட ஆசையினால்
என்னைக் கெணியாமல் என் கோவிலுக்குள்ளே தான்
சன்னை சொல்லி பெண்களுடன் சரசமிட்டு எச்சிட்டான்
இருபேரும் ஒத்து இருந்தாலும் பழுதல்லவே...

ஒருவன் பெண்ணாளை ஒரு நம்பூரி பிடித்து
எனக்கு ஏவல் பண்ணி ஏந்திழையால் போகுகையில்
மனம் பொத்தாக்குழலி மார்பின் கலைபிடித்து
இழுத்து வலித்து இழுக்கோடு செய்யவென்று
பழுத்துச் சழிந்த பருத்த ஒரு நம்பூரி

மேல்தலையில் இட்ட முத்திரி கழற்றாமல்
மால மயக்கத்தாலே மனம் கலங்கி நம்பூரி
மங்கை மனம் கலங்க வாரிப் பிடித்து இழுத்துக்
கொங்கைதனைப் பங்கமதாய் கூறழியவே கிழித்து
வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று
மோதி என் பேரில் ஒரு சாபம் கூறினாள்...
சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து
சீவனது விடவே சிவனே கண் நோக்கினளே...”

என்கிறது அகிலத்திரட்டு.



அதே போல், பெண்களை வாழவிடாத நாடும் கெட்டு குட்டிச்சுவராகப் போய்விடும் என்றும் எச்சரிக்கிறது அகிலத்திரட்டு.

“வாழாத மங்கையரை வைத்திருந்த ராச்சியத்தில்
தர்மம் தலைகெடுங் காண் சாஸ்திரத்துக் கேராது
வர்மம் வந்து சிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக் கேராது குடும்பம் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்பு கெட்டு மனுநீதி தானழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது
கோட்டை அழியும் குளங்கரைகள் தாணிடியும்
நாட்டை முடிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்...”

என்று, தனது வயிறெரிய குறிப்பிடுகிறது அது.

இப்படி, அன்றைய நாட்டு நடப்புகளை அப்பட்டமாக அகிலத்திரட்டு வழியாக குறிப்பிட்ட அய்யா, எதிர்கால நிகழ்வுகளையும் எளிய தமிழில் கூற தவறவில்லை.

சாமிவேதம் மறந்து சுழல்வேதம் உண்டாகும்
பாரிகட்கு மூப்பு பார்மீதில் உண்டாகும்
பொளிணிச் சேத்திரக் குருக்கள் பூமிதனில் மேவிவரும்
சிவ ஆலயங்கள் தேளிணிந்து சுவரிடியும்...

கிணறு பாழாகும் கீழுற்றுப் பொளிணியாகும்
காமோக வெறியால் கனபழிகள் உண்டாகும்
மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும்
மாட்டின் வயிற்றில் மனிதர்போல் தான் பிறக்கும்...

காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும்
மாணிக்கம் தங்கம் வைரம் மிக மறையும்
மாநிலத்தில் வேளாண்மை மழையால் கெடுதிவரும்
கூடப் பிறப்பைக் கொடும்பகைபோல் எண்ணிடுவார்...

நட்சத்திரம் உதிரும் நடக்கும் வழிகுறுகும்
வானம் உறுமும் மழைகீழ் சொரியாது
ஈனருக்குக் காலம் நிரம்பமிக உண்டாகும்
காளிணிதல் பெருகும் கஞ்சா அபின்பெருகும்...

சன்னாசி நிஷ்டை தவறி அலைவார்கள்
அக்னியால் தண்ணீரால் அநேகச் சீமையழியும்
கொலை களவு நிரம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்
தலைஞான வேதமதைத் தடுமாறிக் கைவிடுவார்...

கள்ளக் கணவருடன் கருத்துமிக மாதருக்காம்
கூடி உடன்பிறந்தக் கோதையரைப் பெண்ணெனவே
நாடி அவரெண்ணி நாணி இறப்பார் கோடி
இராச நெறிநீதம் இராட்சியத்தில் காணாது...

பிராயம் வரும்முன்னே பெண்கள் நிலையழிவார்
தனுவாளிணிப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்
வாரி கோபிக்கும் வாங்கும் சில இடங்கள்...

சாதிவரம்பு தப்பி நிலை மாறும்
நட்சத்திரம் உதிரும் நடக்கும் வழி குறுகும்
இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
மாமோக ஆசையினால் மா சண்டை உண்டாகும்

வானத்து இடிகள் வருடா வருடந்தோறும்
நீணிலத்தில் வீழும் நின்று மலையதிரும்
இலைகள் உதிரும் இருவேதம் பொய்யாகும்
தானம் அழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும்

நாட்டை அரசாங்கம் நாலுரண்டு மூன்றாக்கும்
அதிலே சிலபேர் அரசுவுனக்கு எனக்கெனவே
விதியை அறியாமல் வெட்டிக் கொண்டே மாள்வார்
நேர்மைக்குக் காலம் நெகிந்திருக்கும் பார்மீதில்
போருக்கு எவரும் புத்தியாய் தானிருப்பார்

கேடு தொடுத்துலகம் கெட்டவரும் நாடு தனில்
மழைதழைத்துப் பெய்யாமல் வானம் சுறுங்கி வரும்
களைகள் பயிரில் கலக்குமே விளையாது
வெள்ளத்தால் பஞ்சம் வரும் வெண்சாவி ஆகிவிடும்
பள்ளத்தாலும் நெற்பயிர் நடுங்கும் சனங்களுற்ற
பட்டணங்கள் தோறும் பசிநோய் அதிகமதாய்...

பனியாலும் விசக்காற்றாலும் வெயிலினாலும்
சீறுமிருகமதால் செத்திடுவார் வீறுகெட்டு
வானம் திசைமாறும் கூலிக்குப் பார்க்கும் பாழ்நரகில்
ஏறு அக்னியாம் நாள்தோறும் பூமி நடுக்கமுண்டாம்

மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிரண்டு
முன்று வரும் கோ என்று பெட்டை கூலிடும்
நீசரால் வெள்ளத்தினால் சிலவூர் மூழாமல் தாழ்ந்துவிடும்
மின்னல் இடியால் சிலவூர் வேகுமே பள்ளமதாய்
தாழுமே சிலவூர் சமுத்திரம் வந்தே பெருகும் மாளும்
சிலவூர்கள் இக்குடனே மண் மாரி பெய்துவிடும்

நாள்தோறும் பூமியெல்லாம் காடு தணிந்து வரும்
கண்டிருங்கோ வெள்ளி இடிகளாய் விழுமாம்
வில்போடும் மாறிமாறி வேளாண்மை குன்றி வரும்
மேல்மேலும் வெள்ளமது பெருகும் வேகமதிலே
இருந்து மீனும் விழும் மழையிலே மேகமதாய்
வில்லும் வெவ்வேறாகிவிடும்
ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி
குன்றிவிடும் தாக்குப் பொறுக்காது
ஜனங்களுக்கு ஆயுள்தான் குறையும்...”

என்று, இப்போது நடைபெறும் இயற்கை, கலாச்சார சீரழிவுகள் பற்றி அன்றே அழகாக கூறியுள்ளார் அய்யா.

முக்காலப் பெட்டகமாக விளங்கும் அகிலத்திரட்டு அம்மானையை அரிகோபாலன் எழுதி முடித்தது, சாமித்தோப்பு அருகே உள்ள தாமரைக்குளம் பதியில் வைத்துதான். அவர் அதை எழுதி நிறைவு செய்த நாளை நினைவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தாமரைக்குளத்துப் பதியில் திரு ஏடு வாசிப்பு என்கிற வைபவம் தொடங்கி, தொடர்ந்து 7 நாட்களுக்கு அது வாசிக்கப்படுகிறது. பின்பு, அடுத்து வரும் மூன்றாம் வெள்ளிக்கிழமை சாமிதோப்பில் ஏடு வாசிப்பு தொடங்கி மார்கழி மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைகிறது.

சாமிதோப்பில் இந்த ‘17 நாள் திரு ஏடு வாசிப்பு’ நிறைவு பெற்ற மறுநாள், மார்கழி மாத முதல் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கி மார்கழி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் நிறைவடைகிறது.