1. போலி சாமியார்களை பற்றியும், அவர்களை நம்பினால் கடைசியில் என்ன ஆகும் என்பது பற்றியும் அழகாக குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
2. அய்யா வழி திருமணங்களில் வேத விற்பன்னர்களுக்கு இடமில்லை. சமூக பெரியவர் ஒருவரே குருவாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
3. அய்யா தருமபதிகளில் விளக்கு மற்றும் நிலைக்கண்ணாடி வைத்து வணங்கும்
அய்யா வழி மக்கள், வீடுகளில் விளக்கேற்றி, அதன் ஒளியை இறைவனாக
வணங்குகிறார்கள்.
4. அய்யா வழி கோவில்களுக்குள் நுழையும் ஆண்கள் சட்டை அணிந்திருக்கக்
கூடாது. ஆனால், திருமணத்தன்று திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு வரும்
மணமகன் மட்டும் சட்டை அணிந்து கொள்ளலாம்.
5. பருவ வயதை அடையும் பெண்களை, ருதுவான 41 நாட்களுக்கு பிறகு அய்யா
கோவிலுக்கு அழைத்து வருகிறார்கள். அங்கு, குருவானவர் 5 முறை அந்தப்
பெண்ணின் முகத்தில் பதம் (தீர்த்தம்) தெளித்து ஆசி வழங்குகிறார்.
6. கணவன் இறந்த பிறகு தாலியைக் கழற்றும் வழக்கம் அய்யா வழி மார்க்கத்தில்
இல்லை. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்வதை அய்யா வழி வரவேற்கிறது.
7. அய்யா கோவிலில் சுருள் கொடுத்தல் என்பது சிறப்புமிக்கதாக
கருதப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறிய ஒருவர், வாழைத்தார், எலுமிச்சை,
பன்னீர், வெற்றிலை, பாக்கு, முழுத்தேங்காய், பிச்சிப்பூ, விளக்கேற்றத்
தேவைப்படும் எண்ணெய் வாங்கத் தேவைப்படும் பணம் ஆகியவற்றை வழங்குவதற்கு
பெயர்தான் சுருள் கொடுத்தல் என்று பெயர்.
8. அய்யாவின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் ஒவ்வொரு
அய்யா வழி தருமபதிகளிலும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்கள் நடைபெறுகின்றன.
9. அய்யாவின் தருமபதிகளில் தலைமைபதி அய்யா அவதரித்த சாமித்தோப்புதான்.
அய்யாவின் காலடிபட்டு புனிதம் பெற்ற தாமரைக்குளம் பதி, முட்டப்பதி,
அம்பலப்பதி, பூப்பதி, துவாரகாபதி போன்ற பதிகளும் சிறப்பு பெற்றவை.
10. அய்யாவின் அவதார நாள் ஒவ்வொரு பதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வைகுண்டர் முத்துக்குட்டியாக, முடிசூடும் பெருமாளாக பிறந்த ஏப்ரல்
19-ந்தேதி இந்த விழா நடைபெறுவதில்லை. மாறாக, திருச்செந்தூர் கடலில் மூழ்கி
வைகுண்டராக அவதரித்த மாசி மாதம் 20-ந்தேதிதான் (கி.பி.1832 மார்ச் மாதம்
3-ந்தேதி வெள்ளிக்கிழமை) அவரது அவதார நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம்
சாமித்தோப்பு தலைமை பதியில் நடைபெறும் விழா மிகவும் பிரபலம். லட்சக்கணக்கான
அய்யா வழி பக்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள்.
11. இதேபோல், வைகாசித் திருவிழாவும் புகழ்பெற்றது. 11 நாட்கள் நடைபெறும்
அந்த விழாவின் 8-ம்நாள் வைகுண்டர் கலியை வெல்லும் கலி வேட்டை நிகழ்ச்சி
நடத்தப்படுகிறது.
12. எந்தவொரு செயலைச் செய்தாலும், `அய்யா உண்டு' என்று சொல்லும் வழக்கம்
இந்த மார்க்க மக்களிடம் உள்ளது. அய்யாவின் மீது அவர்கள் கொண்டுள்ள
பற்றுதலையே இது காட்டுகிறது.
13. சிறுபயிறு, வற்றல், பச்சரிசி கொண்டு செய்யப்படும் `நித்தப்பால்',
பச்சரிசி கொண்டு செய்யப்படும் `தவனக்கஞ்சி', அரிசி, மிளகாய், வாழைக்காய்,
கத்தரி, பூசணிக்காய், இளவங்காய் கொண்டு செய்யப்படும் கூட்டாஞ்சோறான
`உம்மான்சாதம்' ஆகியவையே அய்யா வழி பதிகளில் வழங்கப்படும் பிரசாதங்கள்.
14. தருமம் பற்றி இந்த மார்க்கத்தில் அதிகமாக வலியுறுத் தப்படுவதால்,
இந்தக் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எல்லோருமே தங்களால் முடிந்த
அன்னதானம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
15. அய்யாவின் பெரும்பான்மையான போதனைகள், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்
இருந்த 18 ஜாதியினர் ஏற்றம் பெற வேண்டும் என்பதையே வலியுறுத்தியது.
16. உருவ வழிபாடு இல்லாத, கற்பூர தீப ஆராதனை இல்லாத, பூஜை வழிபாடுகள் இல்லாத வித்தியாசமான ஆன்மீகப் பாதையை காட்டினார்.
17. அவரது புரட்சி போதனைகளால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
18. கூரை வீடுகளில்தான் வசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டவர்களுக்காக சமதர்ம குடியிருப்புகளை உருவாக்கினார் அய்யா.
19. அய்யா தன் போதனைகளை பரப்ப அன்புக்கொடி என்ற இயக்கம் ஆரம்பித்தார்.
20. அய்யாவின் சீடர்களான மயிலாடி சிவனாண்டி, கைலாசபுரம் பண்டாரம்,
பிள்ளையார் குடியிருப்பு அர்ஜுனன், குளச்சல் சுப்பையா, தாமரைக்குளம்
அரிகோபாலன் ஆகியோர், அந்த இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்கள்.
21. மக்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், அவர்களது வீடுகளில்
இருந்து பொருட்களை வாங்கி ஒன்றாக்கி, முத்திரி கிணற்று நீரால் அதை சமைத்து,
எல்லோரையும் ஒன்றாக அமர வைத்து சாப்பிட வைத்தார்.
22. சாமித்தோப்பில் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களுக்கும் தனது சீடர்களை
அனுப்பி, அனைத்து சாதி மக்களையும் ஒரே இடத்தில் திரள செய்து சமபந்தி
விருந்துகளை செய்ய வைத்தார்.
23. கடவுளை எப்படி வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பல இடங்களில்
நிழல்தாங்கல்கள் எனப்படும் அய்யா வழி கோவில்களை ஏற்படுத்தினார்.
24. நிழல்தாங்கல்கள் இரவில் கல்வி கற்பிக்கும் பள்ளிக் கூடங்களாகவும் இயங்கின.
25. தருமம் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் அவசியம் என்று அய்யாவால்
அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. தரும சிந்தனை ஏற்பட்டால்தான் மனம்
பக்குவப்படும் என்பது அய்யாவின் நம்பிக்கை.