திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தரணியில் உள்ளோர்க்குக் 
கர்மமது தீரக் கணக்கு எடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் எழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச் சேவிப்பதுவும்
தொண்டராகச் சான்றோர் சூழ்ந்துநின்ற ஆறதுவும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
---------
உரை
---------
இப்பூவுலகில் உள்ளோரின் முன் வினைக் கருமங்கள் தீரத் தரும வைத்தியமாக அவர்களின் முன்வினைப் பாவக் கணக்குகளை எடுத்துப் பார்த்ததுவும்; ஏகாபுரிக் கணக்கும்; ஏழு யுகங்களின் கணக்கும்; காளி வளர்த்த சான்றோர் மக்கள் வைகுண்டர் பாதத்தைக் கண்டு தொழுததுவும்; அவர்கள் கைகளைக் கட்டிக்க கொண்டு பணிவிடை செய்ததுவும்; அப்பணிவிடைகளை இறைத்தொண்டராக வைகுண்டரைச் சூழ்ந்து நின்று செய்த முறைகளையும்; திருமாலும் ஏழு கன்னிகளும் சேர்ந்து பெற்ற சான்றோர்கள் வைகுண்டரைப் போற்றிக் கொண்டாடிச் சுத்தமான பதத்தில் குழித்துத் தங்களுடைய ஆடைகளைத் துவைத்ததுவும்; ....


சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக்கு இனிது இருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியே 
பாரேழும் அளந்த பரமேசுவரி தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகர் ஒவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயாய் உதிக்கச் செடம் எடுத்தது போலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து ஆறு மேல் பெரிய தவம்புரிந்து
சிறந்து குழலான் சீதை சிறையதுபோல்
---------
உரை
---------
சரசுவதிதேவியே, குளிர்ச்சி பொருந்திய மணி போன்றவளே, இந்நாட்டை அரசு புரிய என்னை இருத்தும் பெரியவளே, அம்பிகையே, பதினான்கு உலகங்களையும் காக்கின்ற உத்தமதேவியே, இவ்வேழு உலகங்களையும் அளந்து அறிந்த பரமேசுவரி தாயே, நான் இந்நூலை எழுத அருள் புரிவீராக.
பத்துத் தலைகளையுடைய பாவியாகிய இராவணனை வெற்றி கொள்வதற்காகவும், ஒருவருக்கும் நிகரில்லாத தசரத மன்னனுக்குக் குழந்தையாய் உதிப்பதற்காகவும் மாயன் உருவெடுத்தார். அது போல, மாலதி சூட்சம மாயன் ""இக்கலியுகத்தில் பிறந்து ஆறு வருடங்கள் அரிய பல தவங்கள் செய்ததுவும், சிறந்த கூந்தலை யுடைய சீதை சிறையில் அனுபவித்த துன்பத்தைப் போன்று, தாம் எடுத்த மனித அவதாரம் மூலம் பல துன்பங்களை அனுபவித்ததுவும்; பல வகையான மாய சூட்சுமத் தன்மையுள்ள அற்புதங்கள் செய்ததுவும், மருந்தானது தண்ணீர் திருமண் கொடுத்து வைத்தியங்கள் செய்து நோய் தீர்த்ததுவும்;
---------------------


வம்பால் அநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்காக இரக்கமதாய்
அருகரத்தோன் வாழும் ஆழிக்கரை ஆண்டி 
நறுகரத்தோன் ஆன நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாளும் உலகம் ஏழும் தழைக்கத்
திருவெடுத்து கோலம் சிவனார் அருள்புரிய
ஈசன் அருள்புரிய இறையோன் அருள்புரிய
மாயன் அருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புலிமாது போர்மாது
நாமாது இலட்சுமியும் நன்றாய் அருள்புரிய
---------
உரை
---------
அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில் உள்ள வம்புகளையும், அநியாயங்களையும் மாதேவராகிய நாராயணர் அழியச் செய்வதையும்;
இவ்வுலகில் உயர்வு பொருந்திய கரங்களையுடைய முருகன் வாழும் திருச்செந்தூர்க் கடற்கரையில் வாழ்ந்த கடற்கரை ஆண்டியாகிய ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, சான்றோர் குலத்தில் மனிதனாய் உருவெடுத்து, எப்போதும் இவ்வுலகம் ஏழும் தழைத்து நிற்க உருவான வைகுண்ட அவதாரத்தைப் பற்றியும்;
நான் இந்த நூலில் எழுத எல்லாம் வல்ல சிவனும், மாயனும், நாவில் வாழும் சரசுவதிதேவியும், இலட்சுமிதேவியும், பூமாதேவியும் நல்ல முறையில் அருள் புரிவார்களாக.
---------------------


தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக்
கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம்
பறந்திடும் நிசமே சொன்னோம்.
மூலம்: முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி ஈரஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏதும் வராது தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்ததே பணியும் தீசாதியான துரியோதனன் முதலாய் அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து எவ்வுகமும் காணாது ஏகக்குண்டம் ஏகிப் பொல்லாத நீசன் பொருள் அறியா மாபாவி கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்....
பொருள்: முன்பு குறோணிமுதல் சூரன்வரை உள்ளவர்களின்
உடல்களை அழித்து, பின்பு இரணியனுடைய
உடலை இரண்டாகப் பிளந்து, இரு கூறுகளாக்கி,
பத்துத் தலைகளையுடைய இராவணனையும்
எதிர்த்து வெற்றி கொண்டு, வீரம் காட்டிய மூர்க்கரின்
எதிர்ப்புகளை எல்லாம் அழித்து, எல்லாத் தேசத்தில்
உள்ளவர்களும் தலை கவிழ்ந்து, பணிந்து,
கீழ்ப்படியும்வண்ணம் வாழ்ந்த தீய சாதியைச்
சார்ந்த துரியோதனன் முதலாக அந்த யுகத்தில்
உள்ள தீயோர் எல்லாரையும் வதைத்து
, எந்த யுகத்தில் உள்ளவர்களும் காண முடியாத
வைகுண்டம் சென்றதையும். பொல்லாத தன்மை
வாய்ந்த நீசனும், மெய்ப்பொருளை அறியாத மாபாவியும்,
கல்லாத குறுகிய தன்மை உள்ளவனும் ஆகிய
அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில்... -------------------------- அய்யா உண்டு --------------------------


முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து
பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏதும் வராது
தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்ததே பணியும்
தீசாதியான துரியோதனன் முதலாய்
அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து
எவ்வுகமும் காணாது ஏகக்குண்டம் ஏகிப்
பொல்லாத நீசன் பொருள் அறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்....
பொருள்:
முன்பு குறோணிமுதல் சூரன்வரை உள்ளவர்களின் 
உடல்களை அழித்து, பின்பு இரணியனுடைய உடலை
 இரண்டாகப் பிளந்து, இரு கூறுகளாக்கி, பத்துத் 
தலைகளையுடைய இராவணனையும் எதிர்த்து வெற்றி
 கொண்டு, வீரம் காட்டிய மூர்க்கரின் எதிர்ப்புகளை எல்லாம் 
அழித்து, எல்லாத் தேசத்தில் உள்ளவர்களும் தலை கவிழ்ந்து
, பணிந்து, கீழ்ப்படியும்வண்ணம் வாழ்ந்த தீய சாதியைச் சார்ந்த
 துரியோதனன் முதலாக அந்த யுகத்தில் உள்ள தீயோர்
 எல்லாரையும் வதைத்து, எந்த யுகத்தில் உள்ளவர்களும்
 காண முடியாத வைகுண்டம் சென்றதையும். பொல்லாத
 தன்மை வாய்ந்த நீசனும், மெய்ப்பொருளை அறியாத 
மாபாவியும், கல்லாத குறுகிய தன்மை உள்ளவனும் 
ஆகிய அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில்...
---------------------
அய்யா உண்டு 





அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

அவையடக்கம்**********
அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே
மெய்யாய் எழுதி விரிப்பேன் நான் என்பதெல்லாம் 
ஆணை நடைகண்டு அன்றில் நடையது ஒக்கும்
சேனை சரிவது என்ன சிற்றெறும்பு பத்தி என்ன
குயில்கூவக் கண்டு கூகைக் குரல் ஆமோ
மயில் ஆடக் கண்டு வான்கோழி ஆடினது ஏன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசம் அறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யான் அடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்த பிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பது ஒக்கும்
---------
உரை
---------
அய்யா திருவாய் மலர்ந்தருள அவ்வுண்மைகளை நான் எழுதி அய்யாவின் பக்தர்களாகிய உங்கள் முன்னே விரித்துரைப்பேன் என்பது, யானையின் நடையைக் கண்ட அன்றில் பறவை யானையைப் போன்று நடக்க முயல்வதைப் போன்றது ஆகும். சேனையின் பெரிய கூட்டத்தைச் சிற்றெறும்புக் கூட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? குயிலின் இனிமையான குரலைக் கேட்ட கூகை அதைப் போன்று குரல் கொடுக்க முடியுமா? மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி அதைப்போல ஆட முயன்றது ஏன்?
இராணித்தேனீயின் ஆட்சியின் கீழ் உள்ள தேனீக்கள் சேர்த்த தேன் ரசத்தின் சுவையை அறிந்து, கடந்தைகள் தாமும் அச்சுவையுள்ள தேனைத் தயாரிக்க எண்ணித் தாடேற்றிக் கூடு கட்டிய சிரிப்பிற்குரிய கதையைப் போல, அய்யாவின் அடியேனாகிய நான், ""ஏழு யுகங்களும் நீதி நியாயங்களைக் கேட்டு நீதி பரிபாலனம் செய்ய வந்த வைகுண்ட பிரானாகிய அந்த உயர்வுடையோன் திருக்கதையை எழுதுவேன்"" என்று கூறுவது ஒக்கும்.
---------------------


தானும் தவம் அதுவாய்ச் சாயுச்சியமே புரிந்து
நல்லோரை எழுப்பி நாலு வரமும் கொடுத்து
பொல்லாரை நரகில் போட்டுக் கதைவடைத்து 
வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவும் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.
---------
உரை
---------
..... புலன் இறந்து (அகக்) கடலில் மறைந்து வாழ்ந்ததையும், சாயுச்சிய நிலையில் தவம் புரிந்து வெற்றி கண்டதையும்;
நல்லவர்களை ஆத்ம விழிப்புக் கொண்டு எழச் செய்து அவர்களுக்குப் பல வரங்களைக் கொடுத்து, தீயவர்களை நரகில் தள்ளிக் கதைவடைத்ததையும்; வானத்தில் உருவாகின்ற இடிகளால் மலைகள் இளகிடும் என்றும், காடு நாடாகி விடும் என்றும், இவற்றைக் காணுகின்ற நிலையில் சூரியன் தெற்கு வடக்காகத் திசைமாறி தன்னுடைய இயக்கத்தைப் பெற்று நிற்கும் என்றும், இவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து அய்யா வைகுண்டநாதன் உரைக்கின்றார். அன்பர்களே, நீவிர் கருத்துடன் கேட்பீராக.
--நூல் சுருக்கம் பகுதி இத்துடன் நிறைவு பெறுகிறது. இனி தொடர்வது அவையடக்கம்
---------------------


மேல் எதிரி இல்லாமல் வினை அறுத்து ஆண்டதுவும்
இந்நாள் விவரம் எல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே 
நாரணரும் வந்து நடத்தும் வளமைதனைக்
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக உள்வினைநோய் தீரும் என்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே
பேயை எரித்துப் புதுமை மிகச்செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்...
---------
உரை
---------
தமக்கு வேறு எதிரிகள் இல்லாது தீய நினைவு உடையவர்களை அழித்து அருள் புரிந்ததையும்; மேலும் இன்றைய நிகழ்ச்சிகளையும் வியாகர முனி முன்னரே தமது நூலில் உரைத்துள்ளார்.
அதற்கு ஏற்ப, நாராயணராகிய வைகுண்டரும் இப்பூவுலகில் வந்து நடத்துகின்ற நடப்புகளை மிகுந்த விருப்பமுடன் எழுதி, இந்நூலைக் கதை போன்று படிப்பவர்களுக்கு தீர்க்க முடியாத உள்வினை நோயாகிய "பிறவி நோய்" நிச்சயமாகத் தீர்ந்து விடும் என்று திருமால் இச்சிறந்த கதையைத் திருவாய் மலர்ந்து அருளுகின்றார். அன்பர்களே.
மேலும், பேய்களை எரித்துப் புதுமையான செயல்கள் செய்தவையும்; ஆயர் குலத்தில் அவதாரம் எடுத்து அக்குலத்தை ஆட்கொண்டதையும்;
சான்றோர் குலத்தைக் காத்துக் கொண்ட நிகழ்ச்சியையும்; ......
---------------------


கண்டு மாபாவி கலைத்து அடித்ததுவும்
சாணார் இனத்தில் சுவாமிவந்தார் என்றவரை
வீணாட்டமாக வீறு செய்த ஞாயமதும் 
மனிதனோ சுவாமி வம்பு என்றுதான் அடித்துத்
தனு அறியாய் பாவி தடிஇரும்பில் இட்டதவும்
அன்பு பார்த்து எடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை அழித்து யுகம் வைகுண்டம்தான் ஆகி
எல்லா இடும்பும் இரையும் மிகத்தவிர்த்து
சொல் ஒன்றால் நாதன் தொல்புவியை ஆண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும்...
---------
உரை
---------
.....இவற்றைக் கண்டா கலியன் அவர்கள் ஒற்றுமையாய்ச் சேராவண்ணம் விரட்டி அடித்ததையும்;
"சாணார் இனத்தில் சுவாமி வந்து உதித்தார்" என்று கூறியவரை எந்தவிதக் குற்றமுமின்றித் துன்புறுத்திய அநீதியையும்; "இந்த மனிதனா சுவாமி? இது வம்பாகும்" என்று அடித்து, வைகுண்டரின் பொன் உடலின் உண்மையை அறியாத நீசன், பலம் பொருந்திய இரும்புச் சங்கிலியால் அவரைக் கட்டியதையும்; அன்புள்ளம் கொண்டோரை அருள் பாலித்துத் தேர்ந்தெடுத்துத் தம்முடைய தொண்டரடிமையாகக் கொண்டதையும்; வம்பான முன் யுகங்களை அழித்து, கலியுகத்தில் வைகுண்டராக அவதரித்ததையும்; சான்றோரின் எல்லாத் துன்பங்களையும், வீணாகச் சான்றோர் கொடுக்கின்ற வரிகளையும், தவிர்க்கச் செய்தவையும்; தமது ஒரே சொல்லின் கீழ் வைகுண்டநாதன் இந்தப் பழமை பொருந்திய பூவுலகினை அரசாண்ட நிகழ்ச்சியையும்; ஏழு யுக மக்களுடைய நீதிக் கணக்கினை நியாயம் தீர்த்த முறையையும்; ........
---------------------
அய்யா உண்டு 
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

தெச்சணத்தின் பெருமை ***********
நாராயணரும் நல்ல திருச்செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளி கொண்டு அங்கிருந்து 
ஆண்டு ஆயிரத்து அ என்னும் இலக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரை ஊர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்து இருக்கும் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமை கேள் அம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்கும் தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீசுவரரும் அமர்ந்திருக்கும் தெச்சணமே ....
---------
உரை
---------
உலகத்தோர் ஆச்சரியப்படத்தக்க வகையில் திருச்செந்தூர்க் கடலில் பள்ளி கொண்டிருந்த நாராயணரும், 1008 ஆம் ஆண்டு, மாசி மாதம், நல்ல முகூர்த்த நாளில், சான்றோர்கள் வளர்ந்து வருகின்ற தாமரையூராகிய நல்ல பதியில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்றுபேரும் சோதி வடிவாக (தாணுமாலயனாக) உறைந்து இருக்கும் தெச்சணாபூமியில் வந்திருந்தார். அந்தத் தெச்சணாபூமியின் பெருமைகளை இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் உறைந்து இருப்பதும் இந்தத் தெச்சணாபூமி ஆகும். தேவர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதுவும் இப்பூமியாகும். வேதபி புரோகிதர்கள் புகழோடு விளங்கி இருந்ததுவும், நாதாந்த வேதத்தை நாடுபவர்கள் வாழ்ந்ததுவும். அகத்தியர் ஈசுரரின் கட்டளைப்படி அமர்ந்து இருந்ததுவும்.......
---------------------

**நூல் பயன்***********
வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா 
பழித்தோர் நகைத்தோர் பதில் எதிரியாய்ப் பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியும் இக்கதையை மகாவிருப்பத்தோடு இளகித்
தளம் அளந்தோனை நாடிதான் கேட்பாளாமாகில்
என் ஆணை பார்வதியாள் ஏகாபரத்தின் தன் ஆணை
உன் ஆணை மதலை உடனே கிடைக்குமடா
கூட்டமது கொண்டோர் குணம் வைத்துக் கேட்பாராகில்
திட்டமது சொன்னோம் தீரும் திரு ஆணை
---------
உரை
---------
இந்த அகிலத்திரட்டு அம்மானை நூலை வாசித்தும், (அல்லது) வாசிப்பதைக் கேட்டு மகிழ்ந்தும், அதில் திளைத்தும் இருக்கும் ஆன்மீக அன்பர்கள், எல்லோரும் விரும்புகின்ற சாகாநிலையை அடைவர்.
இந்நூலின் கருத்துக்களைப் பழித்தவர்களும், நகைத்தவர்களும், எதிர் மறையான பதில்களைக் கூறியவர்களும், இந்நூல் படிக்காத தகாது என்று ஒதுக்கியவர்களும் வறுமையுற்று நரக நிலையில் அமிழ்ந்து விடுவார்.
இக்கதையை அதிக விருப்பத்தோடு மனம் இளகி, நாராயணரை நாடிய வண்ணம் மலடியான ஒரு பெண் கேட்பாளானால் அவளுக்கு உடனடியாகக் குழந்தை உண்டாகும். என்மேல் ஆணை; பார்வதியாள்மேல் ஆணை; ஏகாபரனாகிய ஈசுவரன்மேல் ஆணை; உன்மேல் ஆணை.
குட்டநோயைக் கொண்டவர்களே, ஒரே நிலையான மனத்துடன் இக்கதையை கேட்பீரானால், உங்கள் குட்டநோய் குணம் அடையும்; இலட்சுமிமேல் ஆணையாக நிச்சயமாகக் கூறுகின்றோம்.
---------------------



சீதமுடன் எழுப்பிச் செப்பினாரே காரணத்தை
காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகைத்திறந்து
தாற்பரியமாகச் சாற்றினார் எம்பெருமாள் 
மகனே இவ்வாய் மொழியை வகுக்கும் காண்டம் அதுக்கு
உகமோர் அறிய ஊனு நீமுதல் காப்பாய்
அதன்மேல் நடப்பு உன்னுள்ளே அகமிருந்து
சரிசனமாய் நான் வகுப்பேன்தான் எழுது காண்டமதை
நான் உரைக்க நீ எழுதி நாடு பதினாலு அறிய
யான் உரைக்க நீ எழுதி காண்போர்கள் தங்கள் முன்னே
---------
உரை
---------
.....மெதுவாய் என்னை எழுப்பி தாம் வந்த காரணம் பற்றிக் கூறலானார்.
காப்புப் பகுதியில் ஏரணியில் எனும் ஒரு சீரை தெளிவாக வெளிப்படுத்தி விளக்கமாக உரைத்தார் "மகனே, எனது வாய்மொழியை தொகுக்கும் காண்டங்களுக்கு, பாதினான்கு உலகங்களும் அறியும்படியாக, காப்புப் பகுதியில் முதல் சீராக நீ எழுது அதன் பிறகு வருகின்ற காரியங்களை உன் மனம் புரியும்படியாக நான் உனக்குச் சரிசமமாக அமர்ந்திருந்து வகுத்துத் தருவேன். அதையும் நீ எழுது இவ்வாறு நான் உரைக்கின்றவற்றை நீ எழுதி, பதினான்கு உலகங்களும் அறிய அன்பர்களுக்குத் தெரியப்படுத்த" என்று அருளினார்.
---------------------


*வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்*****
தோத்திரம் என்று சுவாமிதமைத் தொழுது
இராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே 
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டனைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக் கியான இலக்கமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து.....
---------
உரை
---------
ஒரு நாள் இறைத்துதி செய்துவிட்டு, இரவுபொழுதில் இன்பமாக அறிதுயில் கொண்டிருந்தேன். அவ்வேளையில் , கொல்லம் 1016 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நாளில் ஞானம் வெளிப்படும் சிறந்த முகூர்த்தத்தில், வைகுண்டநாதன் என் அருகில் அமைதியாக வந்திருந்து....
---------------------



.தர்மயுகம் ஆக்கித் தாராணியை ஆளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்த கதை
சாகாது இருக்கும் தர்ம அன்புள்ளோர் முன் 
வாகாகத் தர்ம அம்மானைதான் வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பித்தவத்துக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே.
---------
உரை
---------
இக்கலியுகத்தை அழித்துத் தருமயுகமாக்கி, இப்பூவுலகை ஆட்சி புரிய கலியுகத்தில் வைகுண்டர் வந்த கதையைச் சாகாநிலை பெற்றிருக்கும் தரும சிந்தனையுள்ள அன்புள்ளோர் முன்னிலையில் வெளிப்படுத்த ஒழுங்கான முறையில் தரும ஞாயமுள்ள இந்த அம்மானையை நாராயணர் வகுத்தார்.
இதை வகுத்த நாராயணருக்கும், என் தாய், தந்தையருக்கும், இதைத் தொகுத்துக் கூறிய வைகுண்டராகிய என் குருவுக்கும், என் வணக்கங்கள்.


இறைதுதி****************
எம்பிரானான இறையோன் அருள் புரிய
தம்பிரான் சொல்லத் தமியோன் எழுதுகிறேன் 
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்
பழுது ஒன்றும் வாராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாய் வா இக்கதைக்கு
தோசம் அகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் கர்ம சஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வராமலே காரும்
காரும் அடியேன் கௌவை வினைதீர
வாரும் அடியேன் மனதில் குடிகொளவே.......
---------
உரை
---------
எம்பிரானாகிய இறையோன் அருள் புரிய தம்பிரானாகிய அய்யா திருவாய் மலர்ந்தருள அடியேன் இந்நூலை எழுதுவேன் என்பது முழுவதும் ஈசருடைய அருள் செயலே ஆகும். இந்த எழுத்துக்களில் எவ்வித குறையும் வராமல் பரமேசுவரி காப்பாளாக. ஈசனுடைய மகனே, முருகா இக்கதை இயல்புடன் அமைய துணை இருப்பீராக.
குண்டலனி சக்திக்கு குருவாக இருக்கின்ற கணபதியே கால மாற்றத்தை நிகழ்த்துகின்ற கிரகத்தின் தீய வினைகள் முன் வினையினால் உருவாகும் மனச் சஞ்சலங்கள் ஆகிய கடினமான வினைகள் என்னைச் சூழ்ந்து வராதவண்ணம் காத்தருள்வீராக. அடியேன் பணியில் பழிச்சொல் எழாத வகையில் காத்தருள என் உள்ளத்தில் குடி கொள்ள வருவீராக.....


அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

வாரணத்தின் மீதில்வரும் பவனி ஆரவமும்
மாவேறி வீதிவரும் பவனி வீதிகளும்
கூரையிலே முத்துக்குலை சாய்க்கும் கன்னல்களும் 
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் அளிப்பாரும்
அன்னமிடும் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ணம் அளித்துச் சொகுசு பெற நிற்பாரும்
சிவனே சிவனே என்று சிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிது எனவே தவநிலைகள் செய்வாரும்
கோவிந்தா என்று குருபூசை செய்வாரும்
நாவிந்தையாக நால்வேதம் பார்ப்பாரும்...
---------
உரை
---------
யானையின் மீது பவனி வருகின்றபோது எழுகின்ற ஆரவார ஒலியும், குதிரையின் மீது ஏறிப் பவனி வருகின்ற வீதிகளும், வீடுகளின் மேற்கூரையில் தாம் ஈன்ற முத்துக் குலைகளைத் தாங்க முடியாது சாய்த்துக் கொண்டிருக்கும் கரும்புகளும் அங்கு ஏராளம் உள்ளன.
வழிப் பாதைகளில் காணுகின்ற அந்தணர்களுக்குப் பொன்னினை அளிப்பார்களும் அங்கு உள்ளனர். பசித்தோருக்கு அன்னம் இடுகின்ற சாலைகளும் பக்தர்களுக்கு ஆலயங்கள் உருவாக்குபவர்களும், ஏழைகளுக்குப் பொன் அளித்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவாரும் 'சிவனே, சிவனே' என்று சிவன்மேல் ஒரே கருத்தாய் நிற்கின்றவர்களும்.
தவமே உயர்ந்தது என்றெண்ணித் தவங்களைச் செய்கின்றவர்களும், ""கோவிந்தா"" என்று சொல்லிக் குரு பூசை செய்கின்றவர்களும், மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் ரிக், யஜுர் , சாமம், அதர்வணம், ஆகிய வேதங்களை ஆராய்பவர்களும் அங்கு உள்ளனர்.
---------------------


சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும்
முடியும் அடியும் இல்லா முதலோனைப் போற்றும் ஒலியும்
முத்தாலே பாண்டி முதன் மடவார் ஆடல் ஒலியும் 
மத்தாலே மோரு மடமட என்னும் பேரொலியும்
சமுத்திரத்து முத்துதான் கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை இடும் பேரொலியும்
சங்கீத மேளம்தான் ஓதும் ஆலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்.....
---------
உரை
---------
....சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும், மடியில் இருந்த பணத்தை இறைவன் முன்னில் போட்டு விட்டுத் தன்னை ஆட்கொள்ள வேண்டி மார்பில் குத்திக் கொள்ளுகின்ற ஒலியும், அடி முடி காண முடியாத முதல்வனைப் போற்றும் ஒலியும், பெண்கள் முத்துக்களைக் கொண்டு 'பாண்டி' விளையாடும்போது எழுகின்ற ஒலியும், மோரை மத்து கொண்டு 'மடமட' என்று கடைகின்ற ஒலியும், கடலில் உள்ள முத்துக்கள் கரை சேருகின்ற ஒலியும், திரள் திரளாகப் பெண்கள் இனிமையாகக் குரவையிடும் ஒலியும், சங்கீத மேளத்தோடு மந்திரங்கள் ஓதுகின்ற ஆலயங்களும், மங்கள கீதங்களைக் கற்பிக்கின்ற ஆலயங்களும், வேத விளக்கத்தினை விளக்கிக் கல்வி கற்பிக்கும் ஆலயங்களும்.....
---------------------


தெச்சணத்தின் இயல்பு*********
புன்னை மலர்க்காவில் பொறி வண்டு இயல்பாட
அன்னமது குதித்து ஆராடும் சோலைகளும் 
கன்னல் கதலி கரும்புப் பலாச்சுளையும்
எந்நேரமும் பெருகி இலங்கி நிற்கும் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கும் கதிரோன் பூமேல் குடை நிழற்ற
நந்தாவனம் பூத்து நகரி மணம்வீச
செந்தாமரை பூத்துச் சிலம்பி மணம்வீச
அரகரா என்று அபயம் இடும் ஒலியும் .....
---------
உரை
---------
புன்னை மலர்க்காட்டில் பொறிவண்டுகள் இன்னிசை பாட அன்னம் குதித்து விளையாடும் சோலைகளும்; கரும்பும், கதலி வாழைப் பழமும், கரும்பின் சுவை போன்று இனிமையான பலாச்சுளையும் எப்பொழுதும் பெருகிக் கிடக்கின்ற சோலைகளும் அங்கு உள்ளன. எல்லா இடமும் இனிய நாதம் முழங்கும் ஒலியும் அங்குக் கேட்டுக் கொண்டிருக்கும். காலையில் பொங்கி எழுகின்ற கதிரோன் தனது ஒளியைப் பூ மொட்டுகளின் மேல் குடை போன்று பரந்து நுண்மையான சக்தி கொடுத்து நந்தாவனம் பூத்து மலரச் செய்யவும், அப்பூக்கள் பட்டினம் முழுவதும் இனிமையான மணம் வீசவும், செந்தாமரைகளும் பூத்து ஒலி செய்து மணத்தை வீசவும் தெச்சணாபூமி இயற்கை வளம் கொழித்துக் கொண்டிருக்கும். 'அரகரா' என்று அபயமிடும் ஒலியும்...
---------------------


விருத்தம்**********
கச்சணி தனத்தாளோடு கறைமிடற்று அண்ணல் ஈசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத்தேவி 
நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான
தெச்சணா புதுமை சொல்லிச் சீமையின் இயல்பும் சொல்வாம்
---------
உரை
---------
கச்சையணிந்த மார்பையுடைய பார்வதியோடு நீலநிறக் கறையை கழுதிலுடைய ஈசர், பச்சை நிறத்திருமால், முனிவர்கள், தேவர்கள், தாமரைப் பூவில் இருக்கும் இலட்சுமிதேவி திடமான கற்பில் சிறந்த பகவதியாள் ஆகியவர்களும் கூடுகின்ற தெச்சணாபூமியின் இயல்புகளைச் சொல்லுவார்.
---------------------


..ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
பார்வதியாள் வந்து ஆடுகின்ற தெச்சணமே
சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே 
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
தெச்சணத்தின் புதுமை செப்ப முடியாது
அச்சமில்லாப் பூமி அடைவு கேள் அம்மானை.
---------
உரை
---------
......ஆகமத்தில் கூறப்படுகின்ற விளையாட்டுகள் விளையாடப்படுவதுவும், பார்வதிதேவி வந்து அமர்ந்து இருப்பதுவும் , பார்வதியை ஈசன் திருமணம் புரிந்ததுவும், திருமால் மாயனாகத் தோன்றி வந்து அமர்ந்து இருந்ததுவும் இந்தத் தெச்சணாபூமியிலே ஆகும்.
விஷ்ணு திருவிளையாடல்களை நடத்தியதுவும் இத்தேசணப்பூமி ஆகும். இதன் பெருமைகளைச் சொல்லுவது முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்தது இப்பூமியாகும். இனி எவ்வித அச்சமுமின்றி வாழுகின்ற மக்களுடைய இத்தெச்சணாபூமியின் இயல்புகளை நான் கூறப் போகின்றேன், கேட்பாயாக.
---------------------


.மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
தாணுமால் வேதன் தாமசிக்கும் தெச்சணமே
ஆணுவம் சேர் காளி அமர்ந்திருக்கும் தெச்சணமே 
தோசம் மிககர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீசவினை தீர நீராடும் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்கும் தெச்சணமே
பாறு படவு பரிந்து நிற்கும் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்கும் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே......
---------
உரை
---------
.......மாமுனிகள் வாழ்ந்து வருவதுவும் இத்தெச்சணாப்பூமியே.
தாணுமாலயன் வாழ்ந்து வருவதுவும், இனிமைத் தன்மை வாய்த்த காளிதேவி அமர்ந்திருப்பதுவும், மிகுதியான பாவத் தோசைக்கு கர்ம வினைகளைத் தொலைக்கச் செய்வதுவும், நீசத்த தன்மையுள்ள செயல்களின் பாவம் தீர்வதற்குத் தீர்த்தமாடுவதும் இந்தத் தெச்சணாபூமியே ஆகும்.
குமரிப் பகவதியம்மை மகிழ்ந்திருப்பதுவும், மரக்கலங்கள் அலங்காரமாக நிற்பதுவும், யானைப்படைகள் அலங்கரிப்பதுவும், சேனைப் படைத்தளங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கின்றதுவும்.....
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*தெய்வ நீதம்***************
வாரமது இல்லாமல் மன்னன் அதிசோழன்
நீதமாய்ப் பூமி நிறுத்தி அரசு ஆளுகையில் 
கண்டு வேதாவும் கமலத் திருமகளும்
நன்று தெய்வாரும் நாராயணரும் மெச்சி
அன்று அந்த மாமுனிவர் எல்லோரும் தாம்கூடிச்
சென்று சிவனார் திருப்பாதம் தெண்டனிட்டு
சாகாது இருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகாபரனே எங்கும் நிறைந்தோனே
மூலப்பொருளே முதற்பொருளே காரணரே
சாலபொருளே தவத்தோர் அரும்பொருளே...
---------
உரை
---------
அதிசோழன் எவ்வித ஓரவஞ்சக நியாயமும் இல்லாமல் நடுநிலைமையாய் நீதியை நிலை நாட்டித் தெச்சணாபூமியை அரசாண்டு வந்தான்.
இதைக் கண்டு பிரம்மனும், தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமிதேவியும், நல்ல தேவர்களும், நாராயணரும், அங்கிருந்த மாமுனிவர்களும் சோழநாட்டின் தருமநீதியைப் புகழ்ந்து, எல்லாரும் கூடிச் சிவனிடம் சென்றனர்.
சிவனிடம் திருப்பாதங்களை வணங்கி, "சாகாநிலையில் இருக்கும் சகலவற்றுக்கும் மூலத திருப்பொருளே, யாரும் அடைய முடியாத பரம்பொருளே, எங்கும் நிறைந்திருப்பவரே, எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாகவும் உயர்வான பொருளாகவும் இருப்பவரே, எல்லா வழியாகவும் இருப்பவரே, தவசிகளுக்கு அருமையானவரே...
---------------------

பன்னிரண்டு ஆண்டு பரிவாய் இறை இறுத்தால்
பின்இரண்டு ஆண்டு பொறுத்து இறைதாரும் என்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை ஆண்டிருந்தான் 
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம் பதத்தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவேன் அம்மானை.
***************விருத்தம்(ஆசிரியர் கூற்று)***************
இவ்வகையாகச் சோழன் இருந்து இராச்சியத்தை ஆள
கவ்வைகள் இல்லாவண்ணம் கலியுகம் வாழும் நாளில்
செவ்வகைத் திருவேயான திருவுளக் கிருபை கூர்ந்து
தெய்வ மெய்ந்நீதம் வந்த செய்தியைச் செலுத்துவாரே.
---------
உரை
---------
பன்னிரண்டு வருடங்கள் ஒழுங்காக வரி கொடுத்திருந்தால், இரண்டு ஆண்டுகள் வரியைத் தவிர்த்து, மீண்டும் வரி தரக் கூறிடுவான். இப்படியாகச் சோழன் இராச்சியத்தைத் ஆண்டு வந்தான். இவ்வாறு ஆண்டு வந்த வேளையில், மெய்யறிவு பெற்று மேலான இறைபதத்தைத் தெளிந்து வாழ்ந்து வந்தவர்களின் தெய்வ நிலையினைப் பற்றி இனிச் சொல்லப் போகின்றேன். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
***********ஆசிரியர் கூற்று***********
சோழமன்னன் இந்த வகையில் எந்தவிதப் பழிச் சொல்லும் இல்லாமல் இராச்சியத்தை ஆண்டு இக்கலியுகத்தில் வாழ்ந்து வருகின்ற நாளையில், செம்மை பொருந்திய இலட்சுமியின் திரு உள்ளத்தின் கருணையினால் சோழ நாட்டுக்குத் தெய்வநீதி வந்த செய்தியினை நாராயணர் இனிச் சொல்லுவார்.
---------------------


அன்னமடம் வைத்து அகம் களிகூர
எநேரம் பிச்சை இடுவார் எளியோர்க்கும்
பந்தல் இட்டுத் தண்ணீர் பக்தர்க்கு அளிப்பாரும் 
எந்த இரவும் இருந்து பிச்சை ஈவாரும்
ஆறில் ஒருகடமை அசையாமல்தான் வேண்டித்
தேறியே சோழன் சீமை அரசாண்டிருந்தான்
சிவாயநம என்னும் சிவவேதம் அல்லாது
கவாமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறில் ஒரு கடமையது தரவே மாட்டோம் என்று
மாறு ஒருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்...
---------
உரை
---------
....உண்பதற்கு அன்னமடம் வைத்து எப்பொழுதும் ஏழைகளுக்கு மனம் மகிழ்ச்சி பெறும் அளவில் அன்னப் பிச்சை இடுவர். இறை பக்தர்களுக்குத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தண்ணீர் கொடுப்பாரும், இரவு நேரத்தில்கூட எலியாருக்குப் பிச்சை அளிப்பவர்களும் ஆகிய தருமநீதி செய்பவர்கள் அங்கு உள்ளனர்.
வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை மட்டும் வாரியாகப் பெற்றுக் கொண்டு திடமாகச் சோழ மன்னன் அரசு செலுத்தினான். அங்குள்ள மக்கள் "சிவாய நம" என்னும் சிவமந்திரத்தைத் தவிர வேறு மந்திரச் சொல்லை அறியாதவர்களாக வாழ்ந்தார்கள். "வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைக்கூட வாரியாகத் தர மாட்டோம்" என்று யாராவது கூறினால் சோழ மன்னன் அவ்வரியை வற்புறுத்திக் கேட்கமாட்டான்.
---------------------

தருமநீதம் (இராசநீதம்)***************
ஆதிபொருளை அனுதினமும் தான்ஓதிச்
சோதியுட நீதம் சொல்லுவேன் அம்மானை 
தெய்வ மனுநீதம் தேச ராசநீதம்
மெய்யறிந்த நீதம் விளம்புவேன் அம்மானை
ஆயிரத்தெட்டு ஆன திருப்பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பும் முடங்காது
கோயில் கிணறு குளங்கரைகள் ஆனதையும்
தேய்வு வராதே சேரும் மதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்று எண்ணி மிகப்பாராமல்
களிகூர நன்றாய்க் கண்ட வழக்கே உரைப்பார்....
---------
உரை
---------
ஆதிபொருளின் திருநாமத்தைத் தினந்தோறும் சொல்லிவரும் நான், முதலில் அரச நீதியாகிய தேச ராசநீதம் (ஆண்கள் நிலைமை) பற்றிச் சொல்லப் போகின்றேன். அதற்கு அடுத்ததாக, உண்மையாகவே நான் அறிந்த தெய்வநீதம் பற்றியும், மனுநீதம் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவேன்.
1008 திருக்கோவில்களின் வாயில்களில் அதற்குத் தேவையான பூசை முறைகள் தடைபடாது நடந்துவரும். கோவில்கள், கிணறுகள், குளத்தின் கரைகள், ஆகியவை சேதமுறாவண்ணம் அரசன் மதில்கள் அமைத்திடுவான். மக்கள் "இவர் எளியவர்" என்றும், "இவர் வலியவர்" என்றும் பிரித்துப் பார்க்காமல் உண்மையான நீதியினையே மகிழ்ச்சியுடன் எடுத்துரைப்பர்.....
---------------------


மாரி பொழியும் மாதம் ஒன்று மூன்று தரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளர் எல்லாம்
நாத்து நடும் புரசி நளினம் மிகுசொல் ஒலியும் 
கூத்து ஒலியும் குருபூசைகள் ஒலியும்
எப்பார் எல்லாம் புகழும் ஏகாபதி அதுபோல்
தப்பாத தெச்சணத்தின் தன்மை ஈது அம்மானை.
***************விருத்தம்***************
காமனை எரித்த ஈசன் கழலிணை மறவாவண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான
சீமையின் குணமும் சொல்லிச் சிறந்திடும் பூமிதன்னில்
நேமம் அவர் தர்மஞாய நிலைதனை நிகழ்த்துவாரே.
---------
உரை
---------
...மழை ஒவ்வொரு மாதமும் மூண்டு தடவை பொழிந்து வரும், ஏறி எப்பொழுதும் பெருகி இருக்கும். நாற்றுப் பயிர்களை நட்டுக் கொண்டிருக்கும் உழவர்களின் நளினம் இழைந்தோடும் பேச்சு ஒலியும், எல்லா உலகத்தாரும் புகழுகின்ற வர்ணிக்க முடியாத தருமபதியைப் போன்று, தெச்சனாபூமியைத் தோன்ற வைத்தன. எந்தத் தவறும் நடக்காத தெச்சணாபூமியின் தன்மைகள் இவையாம்.
*******************ஆசிரியர் கூற்று*******************
தம்மை ஆசை உண்டாக்க வந்த காமனை எரித்த ஈசரின் கழல் அணிந்த பாதத்தினை மறவாதவாறு, பூவின் இனிய வாசம் பொருந்திய கூந்தலையுடைய கன்னி பக்கவதியாள் அமர்ந்திருக்கும் இத்சதெச்சணாபூமியின் இயற்கை வளத்தை நாராயணர் சொன்னார். இனிச் சிறந்து விளங்குகின்ற இத்தெச்சணா பூமியில் அன்புடன் வாழ்ந்து வருகின்ற மக்களின் இராசநீதி பற்றி சொல்லுவார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

சாத்திர வேதம் சமயம் வழுவாமல்
சூத்திரமாகத் துல்யப்படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்கள் ஒருகோடி பெற்று 
இனிதாக நாளும் இறவாது இருக்க என்றும்
சந்திர சூரியர்கள் தட்டு மிகமாறாமல்
இந்திரரும் தேவர்களும் ரிஷிநிலை மாறாமல்
தானதவங்கள் தப்பி மிகப் போகாமல்
ஈனம் இல்லாமல் இதுவும் தெய்வநீதம் எல்லாம்
மானம் நிறுத்தி வை என்றார் ஈசுரரும்
---------
உரை
---------
...ஆறு சாத்திரங்கள், நான்கு வேதங்கள், சமயக் கருத்துக்கள் ஆகியவை வழுவாமல் சூத்திரப் பொருளாக மக்கள் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்திடவும், அவர்கள் எல்லோரும் செழிப்புப் பெற்று அதிகமான சந்ததியனரைப் பெற்று என்றென்றும் மகிழ்ச்சியான வாழ்வில் திளைத்து "இறவாநிலை" பெற்றிடவும் வழி செய்.
மேலும் சந்திரனும், சூரியனும் எந்தவித இடையூறு செய்யாமலும் இந்திரனும், தேவர்களும் ரிஷித்தன்மை வழுவாமலும், தானங்களும் தவங்களும் அங்கு அழியாது இருந்திடவும், எந்தவிதக் குறையும் இல்லாமல் தெய்வநீதம் முதல் எல்லாவற்றையும் மானத்தோடு தெச்சணாபூமியில் நிலை நிறுத்தி வை" என்றார் ஈசுரர்.
---------------------


நினைத்தோர்க்கு உறுதி நினைவில் அறிவு தோன்றி
எனைத் தோத்திரங்கள் இளகாமல் வை என்றார்
பன்றியோடே கடுவாய் பாவித்து இருந்திடவும் 
அன்றிலோடே குயிலும் அன்புற்று இருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற்று இருந்திடவும்
பசுவும் புலியும் ஒரு பக்கம் நீர் உண்டிடவும்
கசுவும் கரைபுரளக் கரும்பு முத்து ஈன்றிடவும்...
---------
உரை
---------
இன்னும், ஈசர் தொடர்ந்து கூறியதாவது:
"என்னை நினைத்தாருக்கு அவருடைய உறுதியான நினைவின் மூலம் அறிவு தோன்றி என்னை மனம் மாறாதவண்ணம் துதி பாடகி செய்.
மேலும், பன்றியும் - கடுவாயும், அன்றிலும் - குயிலும், கீரியும் - பாம்பும் ஒரே இனத்தவர் போன்று அன்புற்றுக் கொஞ்சி வாழ்ந்திடவும், கடல், குளத்தைப் போல் ஒரு கட்டுப்பாட்டில் நின்றிடவும், அங்கு உள்ள மக்கள் விதைத்த விதைகள் பதினாறு மடங்காக பெருகிடவும், நாயும் - முயலும் ஒற்றுமையான பண்போடு வாழ்ந்திடவும், பசுவும் - புலியும், சேர்ந்து ஓரிடத்தில் நீர் பருகிடவும்,
குளங்களில் நீர் நிறைந்து கரைபுரண்டோடிடவும், முற்றிய கரும்புகள் முத்து ஈன்றிடவும்,...
---------------------


.நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமாதேவிதனை வருத்து
வருணன்தனை அழை நீ மாதம் மும்மாரி பெய்ய
கருணைக்குடை விரிக்க கங்குல்தனை அழை நீ
வாசியது பூவாய் வழங்க வரவழை நீ
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடு நீ
குருபூசை செய்யும் கூட்டமதில் சிவமாய்த்
திருவீற்று இருக்கச் செய்திடு நீ கோலமது
நித்திராதேவி நித்தம் அந்தப் பூமியிலே
மத்தீபமாய்க் காக்க வை என்றார் ஈசுரரும்...
---------
உரை
---------
..."மாயவனே, இது மிகவும் நல்ல காரியம்தான். சோழ நாட்டைக் காப்பதற்காக வல்லவனாகிய நீ பூமாதேவியை வரவழை; உழைத்த களைப்புத் தீரக் கருணை புரிந்து இளைப்பாறுதல் கொடுக்கும் இரவினை வரவழை; காற்று பூப்போன்று மெதுவாய் வீசிட வாயு பகவானை வரவழை; தோஷம் புரிகின்ற எமனை அங்குச் செல்லாதவாறு விலக்கி விடு; குருபூசை செய்கின்றவர் கூட்டத்தில் சிவக்கோலத்தில் இலட்சுமிதேவியை எழுந்தருள வை; என்றென்றும் அப்பூமியில் வாழும் மக்களுக்குத் தேவையான அளவு தூக்கம் கொடுத்துக் காக்க நித்திராதேவிக்குக் கட்டளை இடு." என்றார் ஈசர்.
---------------------


வாடிவந்த பச்சினுக்கு வாளால் அவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் தொடை அரிந்து ஈந்தவன்காண்
ஆறில் ஒருகடமை அவன் வேண்டிற்றான் எனவே 
மாறி அவன் புவியோர் மனதில் கௌவைகள் இல்லை
கோவில் சிவாலயங்கள் குளம் கூபம் வாவிகளும்
சேவித்து அனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளும் சீமையிலே
நீதமாய்த் தெய்வநிலை நிறுத்த வேணும் அய்யா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கண்டிருந்த ஈசர் கரியமாலோடு உரைப்பார்...
---------
உரை
---------
"தன் உயிரைக் காக்க வேண்டி வாட்டத்துடன் ஓடி வந்த புறாவினுக்குப் பதிலாகச் சோழன் தனது தொடையிலிருந்த மாமிசத்தை வாளால் அரிந்து அதைத் தேடி வந்த வேடனுக்குச் ஈந்ததை நீர் அறிவீராக. வருவாயில் ஆறில் ஒரு பகுதி மட்டும் வரியாகச் சோழன் பெற்றுக் கொண்டான். எனவே, அந்நாட்டு மக்கள் மனதில் சோழனை எதிர்க்கும் எந்தவிதப் பழி உணர்வும் இல்லை.
சோழமன்னன், சிவாலயங்கள், கோவில்கள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், ஆகியவற்றை தினந்தோறும் பாதுகாத்து வருவதோடு மக்களுக்குத் தானமும் தருமமும் செய்த வருகின்றான்.
எனவே, சோழன் அரசாளும் தெச்சணாபூமியில் தெய்வ நீதி முறையினை நிலை நிறுத்தி வைக்க வேண்டும், அய்யாவே," என்று தேவர்கள் எல்லாரும் அடி பணிந்து சிவனைத் தொழுதனர்.
இதைக் கண்டா ஈசர், கருமை நிறம் பொருந்திய திருமாலோடு பேசலுற்றார்,....
---------------------


..நாரணரும் வேதாவும் நாடிப்பொரும் போரில்
காரணரே நீரும் கனல்கம்பம் ஆனோரே
ஆலமுது அருந்தி அரவையும் மிகஉரித்துக் 
கோலத் திருக்கழுத்தில் கோவையாய் இட்டோரே
ஆனைதனை உரித்து அங்கமதிலே புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோவேங்கிரியில் குடியிருக்கும் கோவே
தானே இருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அரிய திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளும் அய்யா...
---------
உரை
---------
...விஷ்ணுவும், பிரம்மாவும், உமது ஆதி முடி காணச் செய்த போரில் எல்லாவற்றிற்கும் காரணமான நீர் அவர்களுக்கு அக்கினி ஜோதியாகக் காட்சியளித்தவரே. ஆழ கால விசத்தை அருந்தித் திருப்பாற்கடலில் தோன்றிய பாம்பை அடக்கிக் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டவரே.
ஆணவ யானையின் தோலை உரித்து உமது உடம்பிலே அணிந்து கொன்டு, மானினையும் மழு ஆயுதத்தையும் கையில் ஏந்தியபடி இருக்கின்ற, சிவனே, கயிலையங்கிரியில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறைவனே, தாமே உருவாகியிருக்கும் தவமானவரே, எல்லாவற்றுக்கும் காரணமாகவும் ஆதியாகவும் நின்ற அருமையான முதல்வரே, ஜோதி மயமானவரே, சோழ நாட்டில் நடக்கும் தரும நீதி நெறியினைக் கேட்டருள்வீராக.
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

விருத்தம் (ஆசிரியர் கூற்று)*********
இப்படித் தெய்வ இராசமெய் நீதமும்
மற்படி தேச மனுவுட நீதமும் 
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தார்.
---------
உரை
---------
இவ்வண்ணம் இராச நீதமும் (தருமநீதமும் - ஆண்கள் நிலைமை) தெய்வ நீதமும் (மெய்நீதம்), மனு நீதமும் (பெண்கள் வளமை) வளமை பொருந்திய தெச்சணாபூமியில் நிலவி வந்ததால் நல்ல பண்புடைய மக்கள் அத்தேசத்தில் மகிழ்வுடன் வாழ்வதை அறிந்து சிவன் மகிழ்ச்சியுற்றார்.
---------------------


*சாதிவளமை*************
...வையம் வழக்கு வராதே இருந்தார்
அடிபணிய என்று அலைச்சல் மிகச்செய்யாமல் 
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தார் அம்மானை
சேயினுட ஆட்டு செவிகேட்டு இருப்பது அல்லால்
பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்
இந்தப்படி மனுவோர் எல்லாம் இருந்து ஒரு
விந்துக் கொடி போல் வீற்றிருந்தார் அம்மானை.
---------
உரை
---------
...இந்த உலகச் சம்மந்தமான வழக்குகள் அவர்களுக்குள் எழாமலேயே இருந்தன.
தம்மை நாடி வந்தவர்கள் தமக்கு அடிபணிய வேண்டும் என்று அலைச்சல் செய்யாமல் குடி மக்கள் எல்லோரும் ஒரு மனதோடு பொருந்தி வாழ்ந்து வந்தார்கள். தங்கள் குழந்தைகளின் விளையாட்டு வெற்றிகளைப் பற்றிக் கேட்டு மகிழ்ந்து இருந்தனரே அல்லாமல் பேய்ப் பிடித்து அடியவர்கள் பற்றி அம்மக்கள் அறியாது இருந்தனர். இப்படியாகத் தெச்சணாபூமியில் வாழ்ந்த மக்கள் ஒரே குடும்பத்தில் தோன்றிய மக்களைப் போன்று அமைதியாக வாழ்ந்தனர்.
---------------------



**சாதிவளமை*************
சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
உண்டான சாதி ஓக்க ஓரினம்போல் 
தங்கள் தங்கள் நிலைமை தப்பிப் மிகப்போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்து ஓங்கியே வாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அல்வல் தினம் செய்து அன்புற்று இருந்தனராம்
தான்பெரிது என்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரிது என்று மகிழ்ந்திருந்தார் அம்மானை
ஒருவருக்கு ஒருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தாய் இருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரில் அல்லாது...
---------
உரை
---------
சான்றோர் சாதிமுதல் சக்கிலியன் சாதிவரை, பதினெட்டுச் சாதி மக்களும் சேர்ந்து ஓர் இனம் போல் தங்கள் தங்கள் நிலையில் உள்ள கட்டுப்பாடுகள் தவறாமல், மாதம் மும்மாரி பொழியச் சிறந்தோங்கி வாழ்ந்தனர். செல்வம் பொங்கிப் பெருகச் சிவனைத் தொழும் நிலை மாறாமல் எல்ல வேலைகளையும் அன்றாடம் செய்து முடித்து, ஒருவரோடு ஒருவர் அன்புற்று இருந்தனர். "தாம்தாம் பெரியவர்" என்று தவறாக எண்ணாமல், மழை வளங்களே எல்லாவற்றுக்கும் பெரிது என்று மனம் மகிழ்ச்சியோடு வாழ்ந்திருந்தார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தனரே ஒழிய ஊழியங்கள் செய்வதில்லை. அவர்களின் சிந்தனை எப்போதும் எல்லாம் வல்ல சிவன் பேரிலேயே இருந்தது. அவர்களுக்குள் எழுகின்ற வழக்குச் சிவனைப் பற்றிய ஆராய்ச்சி வழக்காக இருக்குமே அல்லாது...
---------------------



*மனுநீதம் (பெண்கள் நிலைமை)************
...தவத்துக்கு அரிய தையல் நல்லார் தங்களுட
மனுநீதம் சொல்லி வகுக்க முடியாது 
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கும் அந்த நாளையிலே
வணிதான சாதி வளமைகேள் அம்மானை.
---------
உரை
---------
...தவத்தில் சிறந்த இப்பெண்களுடைய இயல்புகள் பிரித்துச் சொல்ல முடியாத அளவு பெருமை வாய்ந்தனவாம். கனிகளைப் போன்று இனிமையான கற்புநிலை மாறாத இப்பெண்கள் வாழ்ந்துவரும் நாளில், அங்கிருந்த சிறப்பான சாதி வளமை பற்றி இனிச் சொல்லுகின்றேன், இலட்சுமிதேவியே நீ கேட்பாயாக.
---------------------


*மனுநீதம் (பெண்கள் நிலைமை)*******
...முன்பான சோதி முறைபோல் உறவாடிப்
போற்றியே நித்தம் பூசித்து அவள்மனதில் 
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமானது தடவிக் கால் தடவி நின்றிடுவாள்
துயின்றது அறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை எழுந்திருந்து
முகத்தில் நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்துவமாக பாரிப்பார் பெண்ணார் ...
---------
உரை
---------
...ஏற்கனவே சொல்லப்பட்ட தரும நீதியோடு உறவு கொண்டாடி துதித்து, தினந்தோறும் அவர்களைப் பூசித்து வருவார். அவர்கள் தாங்கள் இளமையில் கற்று மனதில் பதித்து வைத்திருந்த வேதங்களின் உயர்ந்த மொழிகளை ஓதி வருவார்கள். அவர்கள், தம் கணவர் அமைதியாகத் தூங்குவதற்காகத் தாலாட்டி, கைகளையும், கால்களையும் கலைப்புத் தீரத் தடவிக் கொடுத்து, அன்பு பெருக்கெடுக்க நின்றிடுவர்; கணவனின் ஆழ்ந்த தூக்கத்தை அறிந்த பின்னர், தாமும் தூங்கச் செல்வர்; அவர்கள் விடிவதற்கு ஒரு சாமநேரம் முன்னரே விழித்தெழுந்து, தங்கள் முகத்தை நன்றாக நீர்விட்டுக் கழுவி, கணவரையும், நான்முகத்தோனையும் தொழுவர்; பிறகு, இப்பெண்கள் வீட்டின் உள்ளும், தெரு முற்றத்தையும், அழகாகச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வேலையாகப் பகுத்து முடித்து, தினந்தோறும் தன்னையும் சுற்றத்தாரையும் பாதுகாத்து வரும் குண இயல்பு உடையவர்கள்; ...
---------------------


*மனுநீதம் (பெண்கள் நிலைமை)************
தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய்நீதப் பெண்கள் நிலைமை கேள் அம்மானை 
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேன் அம்மானை
கற்கதவு போலக் கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திறவுகோல் அம்மனை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவாதுக்கும்...
---------
உரை
---------
தெய்வ நிலைமையை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி, தெச்சணாபூமியில் நோய் இல்லாமல் நீதியுடன் வாழும் பெண்களின் நிலைமையையும், கணவன் மொழிக்கு எதிர் மொழி பேசாத நல்ல மனைவியின் நிலைமையையும் நான் சொல்லுகிறேன். கல்லால் ஆன கதவுகளைப் போன்று யாரும் புக முடியாத அளவு உறுதி படைத்த மனக்கதவைக் கொண்டு பெண்கள் தம் கற்பினைக் காத்து வந்தனர். அத்தகைய பழமையான பாரம்பரியம் பெற்ற அக்கதவுக்குத் திறவு கோலாக இருப்பது ஞானமே ஆகும்.
அங்குள்ள பெண்கள் அன்பாகத் தம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரிடம்...
---------------------


விருத்தம்(ஆசிரியர் கூற்று)************
இப்படித் தெய்வ நீதம் ஈசுரர் இதுவே கூற
செப்படி மறவா வண்ணம் திருமருக்கோணும் செய்தார் 
அப்படித் தவறா நீதம் அம்புவிதனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே.
---------
உரை
---------
இப்படியாகத் தெய்வநீதம் பற்றி ஈசர் கூறவும், அவர் கூறிய சொல் மறவாதபடி பின்பற்றி நாராயணரும் செய்து முடித்தார். அப்படி உயர்ந்த தெய்வநீதி தவறாத வகையில் தெச்சணாபூமி இருந்தது. சிறப்பு ஆபரணங்களையும், கூந்தலையுமுடைய, பெண்களின் வழக்கை நெறியினை இனி அவர் கூறுவார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

**அகில (வைகுண்ட) வளமை*****
...தேவரீர் என்னைத் திருக்கல்யாணம் முகித்துக்
கோவரி குண்டக் குடியிருப்பிலே இருத்திப் 
போவது என்ன புதுமை எனக்கறியத்
தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள்
பின்னும் அந்த இலட்சுமியாள் பெருமாள்தமைத் தொழுது
என்றும் இருக்க இறவாது இருப்போனே
ஆதியால் சூச்சம் அளவெடுக்கக் கூடாத
நாதியாய் நின்ற நாராயணப் பொருளே...
---------
உரை
---------
... "தேவரீரே, தாங்கள் என்னைப் திருமணம் முடித்த பிறகு, இந்த வைகுண்டத்தில் குடியிருக்க வைத்தீர். பிறகு தாங்கள் என்னைப் பிரிந்து போன காரங்களா என்ன? அப்புதுமையான காரியம் பற்றி எனக்கு விளங்கும்படி நீவிர் கூறியருள வேண்டும்" என்று கூறி, மீண்டும் தொடர்ந்தாள்.
"என்றும் இருப்பவனே, இறவாதநிலை பெற்றோனே, ஆதி பொருளால்கூட அளவெடுத்துக் கூற முடியாது அநாதியாய் நின்ற நாராயணப் பொருளே,
---------------------


அகில (வைகுண்ட) வளமை*****
கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது
அகில வளமை அருளக்கேள் அம்மானை 
தேவாதி தேவர் திருக்கூட்டமாய் இருக்க
மூவாதி மூவர் மிக்கஒரு மிக்கஒரு
சிங்காசனத்தில் சிறந்து இருக்கும் வேளையிலே
மங்காததேவி மாது திரு இலட்சுமியாள்
ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியாள்
பார் ஏழும் படைத்த பரமதிரு இலட்சுமியாள்
நன்றாய் எழுந்திருந்து நாராயணர் பதத்தைத்
தெண்டனிட்டு இலட்சுமியும் செப்புவாள் அம்மானை...
---------
உரை
---------
இதுவரை கூறிய கயிலையின் வளமை முழுவதும் கூறமுடியாத ஒன்று. இனி (நமது) வைகுண்டத்தின் (அகிலத்தின்) வளமை பற்றிக் கூறுகிறேன்.
ஒரு சமயம், வைகுண்டத்தில் தேவர்கள் கூடியிருந்தார்கள். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஆளுக்கொரு சிம்மாசனத்தில் எழுந்தருளி இருந்தார்கள். அவ்வேளையில், எப்போதும் பிரகாசித்துக் கொண்டும், பதினான்கு உலகங்களையும் பாதுகாத்துக் கொண்டும், ஏழு உலகங்களையும் படைத்த பெருமைக்குரிய இலட்சுமிதேவி, அழகாக எழுந்து, நாராயணர் பாதங்களை வணங்கி, ...
---------------------


விருத்தம் (ஆசிரியர் கூற்று)*********
ஆறுசெஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழும் கயிலை வளமதைக்
கூறக்கூறக் குறையவில்லை காணுமே கொன்றை சூடும் அண்டர் திருப்பாதம் 
வாறுவாறு வகுக்க முடிந்திடாத மகிழுங் குண்டவளம் சொல்லி அப்புறம்
வேறுவேறு விளம்பவே கேளுங்கோ மெய்யுள்ளோராகிய வேத அன்பரே.
---------
உரை
---------
செம்மை நிறத்தையுடைய ஆறு சடைகளைச் சூடிய ஈசர் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கயிலையின் நிலையினைப் பற்றி விளக்கிக் கூறக் கூற அதன் விளக்கம் குறையாதவண்ணம் விரிந்து கொண்டே இருக்கும். கொன்றை மலர் சூடும் அண்டர் பிரானின் பெருமையான பாதத்தினைப் பற்றி ஒவ்வொரு வழியாகப் பிரித்துப் பெருமையான பாதத்தினைப் பற்றி ஒவ்வொரு வழியாகப் பிரித்துப் பிரித்துக் கூறுவது முடியாது. இனி, மகிழ்ச்சி பொருந்திய வைகுண்டத்தின் வளமை பற்றிச் சொல்லி விட்டு அதன் மூலமாக வேறு பல காரியங்களையும் நாராயணர் சொல்லுவார். உண்மைத் தன்மை பொருந்தியவர்களாகிய வேதம் அறிந்த அன்பர்களே, கேட்பீர்களாக.


கயிலை வளமை ****************
...மறைவேத சாத்திரங்கள் மலரோன் அடிவணங்க
இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்க 
எமதர்ம ராசன் எப்போதும் வந்து நிற்க
பூமகளும் வேதப் புரோகிதர் வந்து தெண்டனிட
காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
நாம நெடியோன் பதத்தை நாள்தோறும் போற்றி நிற்க
தலைவன் எடுத்துரைக்க நிலையாது அம்மானை
நிலைமை எடுத்துரைக்க நிலையாது அம்மானை.
---------
உரை
---------
மறை வேத சாத்திரங்களும், இறவாத தன்மையுள்ள தேவர்களும் இறைஞ்சி வணங்கி நின்றார்கள்.
எமதருமராஜன் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க, பூமாதேவியும், லோகத்தை ஓதும் புரோகிதர்களும் வணங்கி நிற்க. காமதேவன் முதல் கணக்கில் அடங்காத முனிவர்களும், சிறந்த பெயரையுடைய நாராயணரின் பாதத்தைத் தினந்தோறும் போற்றி நின்று கொண்டிருக்க, எல்லாருக்கும் தலைவனாகிய ஈசர் வீற்றிருக்கும் தங்கத்தினால் ஆகிய திருக்கயிலையின் நிலைமையை எவ்வளவு கூறினாலும் எடுத்துரைப்பது முடியாது. இலட்சுமியே, நீ கேட்பாயாக.



வேதப் புரோகிதர் விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்து இலங்கும் மண்டபமும்
நீதத் திருமால் நிறைந்து இலங்கும் மண்டபமும் 
சீதை மகிழ்ந்து சுரந்திருக்கும் மண்டபமும்
ஆதவனும் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
ஆரும் மிக அறிந்து அளவிடக் கூடாத
பாரு படைத்த பரமேசுரனாரை
விசுவாச மேலோர் விமலன் அடிவணங்க
வசுவாசு தேவன் வந்து மிகவணங்க...
---------
உரை
---------
... வேதப் புரோகிதர்கள் தாங்கும் மண்டபமும், குளுமை பொருந்திய பார்வதிதேவி வீற்றிருக்கும் மண்டபமும், நீதியினைப் பரிபாலிக்கும் திருமாலின் மண்டபமும், சீதை மகிழ்ந்திருக்கும் சிறப்பான மண்டபமும், சூரியனும், சந்திரனும் மேலிருந்து இறங்கித் தங்கும் மண்டபமும், பிரம்மனும், உருத்திரனும் எழுந்தருளும் மண்டபமும் உள்ளன.
அவற்றின் பெருமையினை யாரும் அறிந்து அளவிட முடியாது.
இத்தகைய கயிலை உலகினைப் படைத்த பரமேசுரனாரை விசுவாசமான தேவர்களும், வாசுவுகம், வாசுதேவனும் வணங்கி நின்றார்கள்.
---------------------


கயிலை வளமை ****************
முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசையாகப் பண்பாய்த் தழைத்திடவே 
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி இருந்திடவே
தேவர் உறையும் திருக்கயிலைதன் வளமை
பாவலர்கள் முன்னே பாடினார் அம்மானை
ஈசர் உறையும் இரத்தின கிரிதனிலே
வாசவனும் தேவர் மறையோரும் வீற்றிருக்க
பொன்னம்பல நாதர் பொருந்தி இருக்கும் மண்டபமும்
கின்னர்கள் வேதம் கிளிர்த்துகின்ற மண்டபமும்
---------
உரை
---------
மூன்று நீத்ததோடு முத்துக்கள் நிறைந்த தெச்சணாபூமி இறைவனைப் பற்றும் ஆசையுடைய மக்களைப் பெற்றுத் தளைத்து, நான்கு வேதங்களும் பரந்து நல்ல தன்மையுள்ள கலியுகமாய் மேன்மை பொருந்திய தருமபதி போன்று அது விளங்கி இருந்தது. இப்படி இருக்க பாவலர்களால் முன்னரே பாடப்பட்ட தேவர்கள் வாசம் செய்கின்ற கயிலாயத்தின் வளமைப் பற்றி இனிச் சொல்லுகிறேன்.
ஈசர் வீற்றிருக்கும் இரத்தினகிரியில் (கயிலையில்) இந்திரனும் தேவர்களும், பிரம்மனும் அமர்ந்திருந்தார்கள்.
அங்கே பொன்னம்பலநாதர் தாங்குகின்ற மண்டபமும், கின்னர்கள் வேதம் ஓதுகின்ற மண்டபமும், ...
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...வாருதி நீரை வாரி விழுங்கினன்காண்
கடல் நீர் அவ்வளவும் கடைவாய் நனையாமல் 
குடல் எல்லாம் மெத்தக் கொதிக்குது என வெகுண்டு
அகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்ப அளவில்
கயிலைதனைக் கண்டு கண்கள் மிகக்கொண்டாடி
ஆவி எடுத்து அவன் விழுங்கும் அப்போது
தாவிக் குதித்துக் தப்பினார் மாயவரும்
மாயவரும் ஓடி மண்ணுலோகம் புகுந்து
தூயவரும் இங்கே சிவனை மிகநினைத்துத்
தவசு இருந்தார்காண் தாமோதரனாரும்...
---------
உரை
---------
...கடல் கொண்டிருந்த நீரை முழுவதும் வாரி விழுங்கினான்.
ஆனால் அவன் கடைவாய்க்கூட நனையவில்லை. எனவே, குறோணி "அய்யோ, வயிறு முழுவதும் நன்றாகக் கொதிக்குதே!" என்று கூறிக் கோபக்கனல் வீச, வைகுண்டத்தை விழுங்கும் திட்டத்துடன் நின்றான். கயிலையைக் கண்டு அவன் கண்கள் மகிழ்ச்சிக் கூத்தாடின. எனவே, குறோணி வைகுண்டத்தை விட்டுவிட்டுக் கயிலையை வாரியெடுத்து விழுங்கினான். அத்தருணத்தில் வைகுண்டத்தில் இருந்த மாயவர் அங்கிருந்து தப்பித்துப் பூலோகம் அடைந்தார்.
பூலோகம் வந்த மாயன் ஈசரை நினைத்துத் தவம் புரிந்தார்...
---------------------



**நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...நகக்கரங்கள் கோடி கால்கள் ஒருகோடி
தவங்கள் அறியாச் சண்டித் தடிமோடன் 
குறோணி அவன் உயரம் கோடி நாலு முழமாய்
கயிலை கிடுகிடு என்கும் கால்மாறி வைக்கயிலே
அகிலம் கிடுகிடு என்கும் அவன் எழுந்தால் அம்மானை
இப்படியே குறோணி என்னும் ஓர் அசுரன்
முப்படியே நீடிய யுகத்தில் இருந்தான்காண்
இருந்து சிலநாள் இவன் தூங்கிதான் விழித்து
அருந்தும் பசியால் அவன் எழுந்து பார்ப்ப அளவில்
பாருகம் காணான் பலபேர் உடல் காணான்...
---------
உரை
---------
...நகத்தையுடைய கரங்கள் ஒரு கோடி; கால்கள் ஒரு கோடி; தவம் அறியாத அந்தச் சண்டித்தனம் உள்ள தடிமோடன் ஆகிய குறோணியின் உயரம் நான்கு கோடி முழங்களாம். அவன் நடக்கும்போது ஓர் அடி எடுத்து வைத்தால் கயிலை 'கிடுகிடு' என ஆடும். அவன் திடீரென எழுந்தால் வைகுண்டலோகம் 'கிடுகிடு' என அசையும். இலட்சுமிதேவியே கேட்பாயாக.
முன்னால் கூறப்பட்ட நீடிய யுகத்தில் இத்தன்மையான குறோணி என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் சில நாள்கள் நன்றாகத் தூங்கி விட்டு விழித்ததும் கண்டவை எல்லாவற்றையும் உண்ணத் துடிக்கும் கடும் பசியால் துடித்தான். பிறகு அவன் தலையைத் தூக்கிப் பார்க்கின்ற தருணத்தில், இந்தப் பூவுலகையும் அங்குள்ள மக்களின் உடலையும் உண்டால் பசி அடங்காது என்று விட்டு விட்டு,...
---------------------
அய்யா உண்டு
---------------------


நீடிய யுகம் (குறோணி பாடு)*****
அவ்வுகத்தை ஈசன் ஆர்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக்கு ஆரை இருத்துவோம் என்று சொல்லி 
எல்லோரும் கூடி இதமித்தார் அம்மானை
தில்லையார் ஈசன் திருவேள்விதான் வளர்க்க
நல்லையா வேள்வி நன்றாய் வளர்ந்திடவே
பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே
அறந்தான் அறியா அநியாய கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்டம் அமைய அவன் பிறந்தான் அம்மானை
முகம் கண்கள் எல்லாம் முதுகுப்புறம் மேல் ஆட...
---------
உரை
---------
அந்த யுகத்தை ஈசர் ஆரம்பித்த காலத்தில், இந்த யுகத்துக்கு யாரை எதிரியாக உருவாக்க வேண்டும்? என்று கூறி எல்லோரும் சேர்ந்து ஆலோசனை செய்தனர். முடிவில் தில்லையில் நடனமாடும் ஈசர் அன்று வேள்வி ஒன்றை வளர்த்தார். அந்த வேள்வி வெற்றிகரமாக வளர்ந்து, அதன் மூலம், பெரிய மலை போன்று குறோணி பிறந்தான்.
அப்பொல்லாதவன் அறத்தை அறியாத அநியாய கேடனாகவும், உடம்பில் சதை நிறைந்து அண்டத்தைப் போன்று பெரியவனாகவும் பிறந்தான்.
அவன் முகம், கண்கள் எல்லாம் அவனது முதுகுப் புறத்தின் மேல் ஆடிக் கொண்டிருந்தன...
---------------------


*நாராயணர் பதிலுரைத்தல்*****
...அவ்வுகத்தை கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாமம் என்ன இடுவோம் என்று 
மாலும் பிரமாவும் மாயாது இருப்போனும்
ஆலோசித்து ஆகமத்தை தாம்பார்த்து
நீடியுகம் எனவே நியமித்து உறுதி கொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினார்கான் அம்மானை.
---------
உரை
---------
அந்த யுகத்தை (இராச்சியத்தை) கண்டு ஆதி பிரம்மா மகிழ்ந்தார். அந்த யுகத்துக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும்? என்னும் கேள்வி எழுந்தது.
உடனே, திருமால், பிரம்மா, சிவன் ஆகிய முப்பொருளும் ஆகமங்களை ஆராய்ந்து, அந்த யுகத்துக்கு, நீடியயுகம் என்று உறுதி செய்து பெயரிட்டனர்.
இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
---------------------


**நாராயணர் பதிலுரைத்தல்*****
நன்றுநன்று என்று நாராயணர் உரைப்பார்
சத்தி சிவமும் தாம் உதித்த காலமதில் 
எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்
ருத்திரம் மயேசுரரும் உதித்த நாளதிலும்
பக்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
வானோர் தெய்வார் மறைவேத சாத்திரமும்
ஈனமாய்ச் சண்டன் இவன் பிறந்த நாளதிலும்
ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
ஈது உதித்த காலம் இராச்சியம் ஒன்று உண்டு கண்டாய்...
---------
உரை
---------
உடனே, நாராயணர் அவள் கருத்தை ஆமோதித்து "நல்லது சொன்னாய்" என்று கூறி இலட்சுமிக்குப் பதில் கூறலுற்றார்.
சக்தியும், சிவமும் தோன்றிய பிறகு எல்லாத் திசைகளிலும் நாம் இருவரும் அவதாரம் எடுத்தோம், பிறகு, உருத்திரர், மயேசுரர், பக்தியுள்ள தேவர்கள், பரநாதர் ஆகியோர் தோன்றினர். வானோர்களும், தெய்வங்களும், நான்கு வேதங்களும், சாத்திரங்களும் தோன்றின; பிறகு, சூரியன், வாயு, அண்டங்கள், உயிரினங்கள் எல்லாம் தோன்றின; தீயகுணங்களுடைய சண்டன் ஆகிய இவன் (கலியன்) அங்குப் பிறப்பதற்கு முன்னால் அவன் பிறக்க இராச்சியம் ஒன்று இருந்தது.
---------------------


அகில (வைகுண்ட) வளமை*****
...தேவாதிக்கு எல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக்கு எல்லாம் முதன்மையாய் நின்றோனே 
உமக்கும் எதிரி உலகமதில் உண்டோகாண்
தமக்கும் எதிரி வந்த தன்மை மிகஉரையும்
யுகத்துக்கு யுகம் பிறந்து உலகிடத்திலே இருக்க
அகத்து வந்த ஞாயம் அருளுவீர் எம்பெருமாள்
என்று திருவும் ஈதுரைக்க மாயவரும்.
---------
உரை
---------
தேவர்கள் எல்லாருக்கும் முதல்வனாக நின்றவனே, உமக்கும் எதிரி இந்த உலகத்தில் இருக்கின்றார்களா? ஆச்சரியமாய் இருக்கின்றதே! சுவாமி, அப்படி எதிரிகள் உள்ளனர் என்றால், அந்த எதிரிகள் உண்டான தன்மை பற்றித் தெளிவாக உரைப்பீராக. நீவிர் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து உலகத்தின் மக்களிடையே வாழ்ந்து வர வேண்டி, ஒரே மனத்தோடு நின்றவனின் சுழிமுனை சுவாசத்தில் நின்று, அவர் அகத்தில் புகுந்து, இவ்வுலகத்தில் பிறந்து வந்த முறையினை எனக்குப் புரியும்படி உரைப்பீராக." என்று இலட்சுமிதேவி பணிவுடன் வேண்டினாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...நாகத்தணை கிடந்த நாராயணமூர்த்தி
வேகத்தால் குரோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்
வெட்டினார் ஆறு மிகுத்துண்டம் அம்மானை
கெட்டிதான் என்று கிருபை கூர்ந்தே தேவர்
துண்டமது ஆறும் தொல்புவியிலே போட்டு
பிண்டமதைச் சுமந்து போட்டனர்காண் அம்மானை
அந்தக் குறோணி அவணுதிரம் ஆனதையும்
கொந்து கொந்தாகக் குளம்போலக் குண்டு வெட்டி
உதிரமதை விட்டு உயர்ந்த பீடம் போட்டு.
---------
உரை
---------
நாகத்தில் பள்ளி கொள்ளும் விஷ்ணு, விரைவாகக் குறோணியை வெட்டிப் பிளந்து ஆறு துண்டுகளாக்கினார். இது சரியான செயல்தான் என்று கூறி மகிழ்ச்சியுற்றுத் தேவர்கள் எல்லாரும் அத்துண்டங்கள் ஆறையும் பழமை பொருந்திய பூமியிலே ஆறு இடங்களில் சுமந்து கொண்டு போட்டனர்.
பிறகு, கொந்து கொந்தாகக் குளம் போல ஆறு குண்டுகள் வெட்டி அவற்றுள் குறோணியின் இரத்தத்தை விட்டு, ஆறு துண்டுகளையும் போட்டு உயர்ந்த ஆறு பீடம் போட்டார்.
---------------------



*நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...கொன்று போட்டே நரகக் குழிதூக்க நாள்வரும்கான்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்காண் அம்மானை 
அன்று விடைவேண்டி அதிக திருமாலும்
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குரோணிதனைச் செயிக்கக் கோபம் வெகுண்டெழுந்து
சுரோணித வேதன் துடியாய் நடந்தனராம் ...
---------
உரை
---------
...அவன் சீவனை நரக லோகத்துக்குக் கொண்டு செல்லும் நாள் வரும், மாயனே, இதை நீ அறிந்து கொள்வாயாக" என்று ஈசர் கூறி, விஷ்ணுவுக்கு வரம் கொடுத்தார்.
வரங்கள் பெற்ற விஷ்ணு ஈசரிடம் விடை பெற்றதும், மலை போன்று வந்த கொடிய படுபாவியான குறோணியுடன் போரிட்டு வெற்றி பெற நினைத்துக் கோபங்கொண்டு, கோபத்தால் கண்கள் இரத்தம் போன்று சிவக்க, வேகமாகக் குறோணியை நோக்கி நடந்து சென்றார். ...
---------------------


*நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...கெட்டுக் கிளையாய்க் கொடிய அசுரக் குலமாய்ப்
பிறக்கும் அவன் உதிரம் பொல்லாதவன் தன்னுடம்பு 
துண்டம் ஒன்று தானும் தொல்புவியிலே கடிய
குண்டோம சாலியனாய்க் குவலயத்திலே பிறப்பான்
அப்படியே குறோணி அவனுதிரம் ஆனதுவும்
இப்படியே ஆறு யுகத்துக்கும் அவனுடம்பு
வந்து பிறப்பான்காண் மாற்றானாய் உன்றனுக்கு
யுகத்துக்கு யுகமே உத்தமனாய் நீ பிறந்து
அகத்துக்கு அவன் பிறப்பு ஆறு யுகமத்திலும்
உண்டு அவன் சீவன் உயிரழிவு வந்த அந்நாள்
பண்டு நடுக்கேட்டுப் பாவி அவன் உயிரைக்...
---------
உரை
---------
...கேடுடைய அவனது அசுரச் சந்ததியாக தோன்றுமே?
மேலும், பொல்லாத தன்மையுடைய அக்குறோணி ஆறு துண்டுகளில் ஒன்று மூலம் பூமியில் அடுத்த யுகத்தில் கொடுமை பொருந்திய குண்டோமசாலியனாய்ப் பிறப்பான்.
இனித் தோன்றும் ஆறு யுகத்துக்கும் ஆறு பிண்டங்கள் மூலம் அவன் உனக்கு ஆறு எதிரிகளாகத் தோன்றுவான்.
அவ்வாறு அவன் தோன்றும் ஒவ்வொரு யுகமும் நீயும் உத்தமனாய் அவன் பிறக்கின்ற யுகத்தில் (அகத்தில்) பிறந்து, அவன் உடலை அழிக்கும் அன்று நியாய நீதி கேட்டு, அவன் உடம்பை அழித்து விட்டு, ...
---------------------


*நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...என்றும் கயிலை இலங்கி இருந்திடவும்
முண்டு செய்த பாவி முகமும் அவனுடம்பும் 
துண்டு ஆறாகத் தொல்புவியில் இட்டிடவும்
கண்டம் கண்டமாய்ப் போடக் கடிய வரம் எனக்குத்
தண்டமிழீர் நீரும் தரவே தவசு இருந்தேன்
என்று திருமால் எடுத்துரைக்கவே ஈசர்
மன்றுதனை அளந்த மாலோடு உரைக்கலுற்றார்
கேளாய் நீ விஷ்ணுவே கேடன் குறோணிதனைத்
தூளாக்கி ஆறு துண்டமது ஆக்கி
விட்டு எறிந்தால் அவன் உதிரம் மேலும் ஒருயுகத்தில்...
---------
உரை
---------
...2. எப்பொழுதும் கயிலை பிரகாசம் பொருந்திய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
3. முன்பு பல அழிவினைச் செய்த பாவி குறோணியின் முகத்தோடு அவன் உடம்பையும் நான் ஆறு துண்டுகளாக வெட்டிக் கண்டம் கண்டமாகப் பழமை பொருந்திய இந்தப் பூமியில் போட்டிட வேண்டும். குளுமை பொருந்திய தமிழரான நீவீர் இவ்வளவு கடினமான வரங்களும் எனக்குத் தந்தருள வேண்டும் என்று தவம் இருந்தேன்." என்று திருமால் எடுத்துரைத்தார்.
ஈசர், உலகளந்த திருமாலிடம் "விஷ்ணுவே, கேள். கேடுடைய குறோணியை இல்லாமல் செய்ய முதலில் ஆறு துண்டுகள் ஆக்கிப் பூமியில் விட்டெறிந்தால், அவனது இரத்தமானது இன்னும் ஒவ்வொரு யுகத்திலும்...
---------------------



நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...தவசுதனில் ஈசன் சன்னாசி போலே வந்து
ஆரு நீ இந்த ஆழ வனந்தனிலே 
ஏது நீ தவசு எனை நினைந்தவாறு ஏது
என்று சன்னாசி ஈதுரைக்க மாயவரும்
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தார் அவரோடே
கயிலை எமலோகம் கறைக்கண்டர் சத்திவரை
அகிலம் அதைக் குறோணி அசுரன் என்னும் மாபாவி
விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பி வந்தேன்
பளிங்குமலை நாதன் பாரத்தேவாதிமுதல்
பண்டுபோல் நாளும் பதியில் இருந்திடவே...
---------
உரை
---------
...இதை அறிந்த ஈசர், சன்னியாசி போல வேடம் தரித்து, மாயன் முன்னிலையில் தோன்றினார். அங்கு ஈசர் மாயனை நோக்கி. "யாரப்பா நீ? இந்தக் கடுமையான காட்டில் வந்து என்னை நினைத்துத் தவம் செய்யும் காரணம் என்ன? என்று கேட்டார்.
ஈசர் இவ்வாறு கூறாக கேட்ட மாயவர், "ஐயா, கயிலை, எமலோகம், வைகுண்டலோகம் (அகிலம்) கறைக்கண்டர் மனைவி சக்திவரை எல்லாச் சக்திகளையும் குறோணி என்னும் அசுரனாகிய பாவி விழுங்கினான். நான் தந்திரமான முறையில் தப்பித்து இங்கு வந்தேன்" என்றார். பிறகு, "எனக்குச் சில வரங்கள் நீர் தர வேண்டும்" என்று கூறி வரங்களைக் கேட்கலானார்.
1. "வீரம் பொருந்திய தேவர்கள்முதல் பளிங்கு மலை நாதனாகிய சிவன்வரை எல்லோரையும் பழைய நிலை போல் எப்பொழுதும் அவரவர் இருப்பிடங்களில் இருக்கும்படி செய்ய வேண்டும்...
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...மாண்டனன்காண் பாவி வலிய மலைபோலே
பாவி மடிய பரமேசுரனாரும் 
தாவிச் சலத்தால் சதுரயுகம் அழித்தார்
சதுரயுகம் அழிய தானவர்கள் எல்லோரும்
முதுரமொழி ஈசன் மலரடியைத்தான் பூண்டு
தேவர் மறையோர் தெய்வேந்திரன் முதலாய்
மூவரும் வந்து முதலோன் அடிபணிந்து
பரமனே நீரும் படைத்த யுகம் இரண்டதிலும்
வரமேதும் கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே...
---------
உரை
---------
இதனால் பாவியாகிய குண்டோமசாலி மாண்டு, பெரிய மலை போல விழுந்தான். குண்டோமசாலி இறந்ததும் ஈசர் உடனே நீரினால் சதுரயுகத்தை அழித்து விட்டார். இவ்வாறு சதுரயுகம் அழிந்திடவே, தேவர்கள் எல்லாரும் தேன் போன்ற மொழியை உடைய ஈசரின் மலரடியைத் தொழுது, தேவர்களும், பிரம்மனும், தேவேந்திரன் முதலாய் மூவர்களும் வந்து, எல்லாருக்கும் முதல்வரான ஈசர் பாதங்களைப் பணிந்து வணங்கி,
"பரமனே, நீர் படைத்த இரண்டு யுகங்களிலும் உம்முடைய வரங்களைப் பெற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரையும் காண முடியவில்லையே?, வரம் பெற்றதற்கான அழகும், இனிமைத் தன்மையும் உள்ள வாழ்க்கையுள்ளவர் இலரே? ...
---------------------


*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவர
காவாலி மாயன் கன்னியிலே தூண்டல் இட 
சதுரயுகம் ஆளும் சண்டித்தடி மூடன்
எதிரே வரும் ஆற்றில் இரையை மிகக்கொண்டு ஆவி
நாடிப் பசிதீர நல்ல இரையாகும் என்று
ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டில்தனை
தூண்டில் விழுங்கிச் சுரண்டி மிகக்கொளுவி
---------
உரை
---------
...மூவர்களும் அந்தத் தோணியைத் தள்ளி வர, வாலியை அழித்து ஆட்கொண்ட மாயன் சதுரயுகம் என்னும் ஆற்றிலே தூண்டிலை இட்டார்.
சதுரயுகத்தை ஆட்சி புரிந்து வந்து குண்டோமசாலி ஆற்றில் தனக்கு எதிரே வந்து கொண்டிருக்கும் இரையைத் கண்டு, ஆசை கொண்டு, "பசி தீருவதற்கு இது நல்ல இரையாகும்" என்று ஓடி வந்து இரையோடு தூண்டிலையும் விழுங்கினான். இவ்வாறு விழுங்கிய தூண்டிலிலிருந்த சுரண்டி வாயினுள்ளே கொழுவிக் கொண்டது.
---------------------



*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...வானமது அலைய வாய்விட்டான் கண்டாயோ
என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும் 
அன்று மகாமாலும் அக்குண்டோம சாலியனுக்கு
இரையாகத் தேவர்களை ஏற்ற நாங்கிலாக்கி
வரையானதைத் தூண்டில் மறையைக் கயிறாக்கி
வாயுவைத் தோணி வருணன்தனை மிதப்பாய்
தேயமதைச் சுழ்ந்திரைக் கடலைத்தான் வருத்தி
ஓடையாய்ச் சதுரயுகம் வழியேதான் ஏக
தேட அரிய மாயன் திருஓணிதான் ஏறி ...
---------
உரை
---------
...இந்த மேல்லோகம் அசையும் அளவிற்குச் சத்தமிட்டான், அறிந்து கொள்வாயாக"" என்று மாயனுக்குத் தெளிவாக விளக்கினார்.
இவ்வாறு சிவன் உரைத்தவற்றைக் கேட்டு, மாயவர் குண்டோமசாலியனை அழிக்கப் புறப்பட்டார்.
குண்டோமசாலிக்கு இறையாகத் தேவர்களை நாங்கூழ் புழுவாக்கி, மலைகளைத் தூண்டிலாக்கி, வேதங்களைக் கயிறாக்கி, காற்றைத் தோணியாக்கி, வருணபகவானை மிதப்பாக்கி, தேசம் எல்லாம் சூழ்ந்துள்ள கடலை வருத்தி, சதுரயுகத்தை ஓடையாக்கி, அதன் வழியே செல்வதற்கு மாயன் தயாரானார்.
பிறகு, தேடுவதற்கு அரிய மாயன் வாயுவாகிய தோணியில் ஏறினார். ...
---------------------



*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
... தவமே தவப்பொருளே தாண்டவச் சங்காரவனே
எவனோ ஒருத்தன் இட்ட சத்தமதினிலே 
தவலோகமே எல்லாம்தாம் அலைவது ஏது எனவே
மாயன் அதுகேட்க வகுப்பார் அங்கு ஈசுரரும்
ஆயனே நீயும் அரியலையோ ஞாயமது
குண்டோமசாலி கொடிய மாபாவியனாய்
பண்டு ஒரு குறோணி பாதகன்தன் துண்டமதாய்
பிறந்தான் அவனும் பேருதிரம் தன்கிளையாய்
இறந்தார் அவர்கள் இரையாய் அவன்தனக்கு
ஆன பசி ஆற்றாமலே அவனும் ...
---------
உரை
---------
"தவமாக இருப்போனே, தவத்துக்குக் காரணமான பொருளே, தாண்டவமாடிச் சங்காரம் செய்பவனே, எவனோ ஒருவன் பலமாகச் சத்தமிடுகிறான். அதனால் தேவலோகம் முழுவதும் அசைவதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.
ஈசர், "இவ்வுலக மக்களை நடத்தும் ஆயனே, அதன் காரணத்தையும் அறியாமலா இருந்தாய்? இப்போது அதன் காரணத்தைக் கூறுகிறேன், கேள். சத்தமிட்ட இவன் குண்டோமசாலி ஆவான். இவன் கொடிய மாபாவியாய்ப் பிறந்த குறோணி என்னும் பாதகனின் ஒரு துண்டத்திலிருந்து பிறந்தவன் ஆவான். குறோணியின் இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரக் குலத்தை முழுவதும் இக்குண்டோமசாலி விழுங்கியும் பசி தீராமல்...
---------------------


*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...உடை தோள் உடம்பு உருவறியா மாபாவி
படைத்தோன்தனை அறியான் பாரி என்றும் அறியான் 
அட்டைபோலே சுருண்டு அம்மிபோலே கிடப்பான்
மட்டை போலே சுருண்டு திரிவான் வயிறு மிகப்பசித்தால்
அன்னுகத்தில் உள்ள அசுரக் குலங்களையும்
தன்வயிற்றுக்கு இட்டுத் தடிபோல் உருண்டிடுவான்
இப்படியே நாளும் இவன் குலங்களானது எல்லாம்
அப்படியே தின்று அவன் பசி ஆற்றாமல்
அய்யையோ என்று அலறினன்காண் அம்மானை
மெய் ஐயனான விருமா அது கேட்டு
சிவனைத் தொழுது செப்புவார் அம்மானை...
---------
உரை
---------
அவன் தனது நல்ல பலத்தையுடைய தோள், உடம்பு, போன்றவற்றை ஆடை கொண்டு காக்கத் தெரியாத மகாபாவி ஆவான். அவன் தன்னைப் படைத்தவனையோ, தன் மனைவியையோ அறியாது, அட்டை போன்று சுருண்டு, அம்மி போன்று உறுதியாகக் கிடந்தான். முட்டாளைப் போலத் திரிவான்; வயிறு மிகுதியாகப் பசித்து விட்டால் அந்த யுகத்தில் உள்ள அசுரக் குலமக்களையும் விழுங்கி விட்டுப் பெரிய தடி போன்று உருண்டு கொண்டிருப்பான்.
இப்படியே இவன் தன அசுரக் குலம் முழுவதும் தின்றும் பசி தீராமல் "அய்யோ" என்று அலறினான். இலட்சுமியே, நீ கேட்பாயாக.
உண்மையுள்ள தலைவனான மாயன் இதனைக் கேட்டுச் சிவனிடம் சென்று தொழுது கூறலுற்றார்.
---------------------



II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
சதுரயுகம் எனவேதாம் வகுத்தார் ஒரு பீடத்தை
அவ்வுகத்தில் உதிரும் அசுரக் குலமாகி 
முவ்வுகத்துப் பாவி முடிந்த ஒரு துண்டமதைக்
குண்டோமசாலி எனவே கொடியவனாய்ப்
பண்டு ஒரு குறோணி பாதகன் ஆறு துண்டமதில்
வந்து பிறந்தான் சதுர வையகத்தில் அம்மானை
முந்து பிறந்த முழுமோசம் ஆனதிலும்
மந்த முகமாய் மாபாவி தன்னுயரம்
நானூறாயிரம் முழங்கள் நாடும் அவன்கரங்கள்
முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே ...
---------
உரை
---------
ஆறு பீடங்களுள் ஒரு பீடத்தைச் சதுரயுகத்துக்காகப் பிரித்தார்.
முன்னாள் முடிந்த யுகத்தின் பாவியாகிய குறோணி என்பவனுடைய ஆறு துண்டங்களில் ஒரு துண்டம் மூலமாகக் குண்டோமசாலியன் சதுரயுகத்தில் வந்து பிறந்தான். பிரித்தெடுத்த பீடத்தில் உள்ள குறோணியின் இரத்தம் அசுரக் குலமாகியது. இலட்சுமியே, நீ கேட்பாயாக.
அழகற்ற வகையில் காட்சியளித்த அவனது முகம் முன்னர்ப் பிறந்த குறோணியைவிட மோசமாக இருந்தது. அவனுடைய உயரம் நானூறு ஆயிரம் முழங்களாம். அவனது கைகள் முந்நூறு முழங்கள் நீளமுடையன. அவனது கால்களும் கைகளும் யானையின் துதிக்கை போன்று காட்சியளித்தன.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
...மூரர்கால் நூறு உயர்ந்து சிரசு அன்பதுவும்
கண்கள் ஒருநூறு வெண்தரளம் இருக்கலமே 
துங்கணங்களாகச் சூரர் நடந்தேறி
கண்கவிழ்ந்து யோகம் கருத்து உருத்தாய் நிற்கின்ற
வண்கவிழ்ந்த மாமுனியை வாரி எடுத்து அவர்கள்
அலைமேல் ஏறிய ஆர்ப்பரிக்கும் அவ்வளவில்
கலைமேல் பரந்த கடிய முனி பகர்வான்
ஏனடா என்னை இருந்த தவசு அழித்து
வீணடா செய்தாய் விழலாய் அறமோடா ...
---------
உரை
---------
... கால்கள் நூறு, உயர்ந்த தலைகள் ஐம்பது, கண்கள் நூறு, கண்களின் வெண்மை பகுதியின் அசைவு இரண்டு படகுகள் அசைவது போன்று காட்சி அளித்தன.
அச்சூரர்கள் தீமையான பேய்க் கணங்கள் போன்று நடந்து சென்று, தன் உள் அகத்தை நோக்கிய கண்களோடு யோகம் புரிந்து ஒரே கருத்தாய் மனத்தெளிவுடன் தவநிலையில் நின்றிருந்த அந்த முனிவனை வாரி எடுத்தனர். பிறகு அந்த முனியைக் கடல் மேல் எறிய எத்தனித்தனர். அச்சமயம், சுழி முனையில் நின்ற அந்தப் பலம் பொருந்திய முனிவன்,
"அரக்கர்களே, நீங்கள் நான் இருந்த தவத்தை ஏனடா அழித்தீர்கள்? நீங்கள் ஏன் தவத்தை வீணாக விழலாகச் செய்துவிட்டீர்களே! இஃது அறமாகுமா? ...
---------------------



**III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
... தெண்டன் இட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி
அந்த முனி அடுக்கல் இவர்கள் இரண்டு பேரைவிட்டு 
அந்த முனி தவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்
என்று சிவம் உரைக்க எல்லோரும் சம்மதித்து
அன்று பிறந்த அசுரர்களைத் தாம் ஏவ
போறாரே சூரர் பொருப்பு ஒருநூறு ஆனது போல்
வாறாரே சூரர் வாய்கள் இரு காதவழி
சூரருட கைகள் தொண்நூற்று ஈரஞ்சு அதுவும் ...
---------
உரை
---------
...சுருதிமுனி என்பவன் என்னை நினைத்து தவத்தில் இருக்கிறான். அந்த முனிவன் பக்கத்தில் இவர்கள் இருவரையும் அனுப்பி அவன் தவத்தை அழித்திடச் சொல்லுவோம்" என்று கூறினார்.
எல்லாரும் சம்மதித்து, அன்று பிறந்த அவ்வசுரர்களை அனுப்பி வைத்தனர். உடனே, அவ்வசுரர்கள் நூறு மலைகள் பெயர்ந்து செல்வது போன்று முனியை நோக்கிப் போனார்கள்.
அவ்வரக்கர்கள் வாய் இரண்டு காதம் வீதி உள்ளதாக இருந்தது. அவர்களுடைய கைகள் நூறு, ...
---------------------



*III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
அப்போது மாயன் ஆதி அடிவணங்கி
இப்போது ஈசுரரே இவர்கள் இருபேர்க்கும் 
என்ன பேர்தான் இடுவோம் என உரைக்க
வன்ன பரமேசுரனார் வகுத்துரைப்பார்
திறந்தான் பெருகும் திருமாலே நீ கேளு
பிறந்த அசுரருக்குப் பெயரிட வேணும் என்றால்
மாயனே நானும் ஓர் உபாயமது வகுப்பேன்
ஆயனே நீயும் அது கேட்க வேணும்
அண்ட பிண்டம் காணாத ஆதி கயிலாசம் அதில் ...
---------
உரை
---------
... அப்போது மாயன் ஆதியாகிய சிவனுடைய பாதங்களை வணங்கி, "ஈசுரரே, இப்பொழுது இந்த இருவருக்கும் என்னென்ன பெயர் இட வேண்டும் என்று தாங்கள் அருள வேண்டும்" என்றார். உடனே, ஈசர் எல்லாவற்றையும் வகுத்து உரைக்கலானார்.
"வலிமை பெருகும் திருமாலே, நான் கூறுவதைக் கேட்பாயாக இங்குப் பிறந்த அசுரர்களுக்குப் பெயரிட வேண்டுமென்றால், மாயனே, நானும் ஒரு வழியைக் கூறுகிறேன். ஆயனே, அதை நீ கேட்க வேண்டும்" என்றார்.
பிறகு, தொடர்ந்து கூறலானார்.
"அண்டம் பிண்டம் காண முடியாத ஆதிகைலாசத்தில், ...
---------------------



*III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
மாலும், பிரமாவும் வாய்த்த பரமேசுரரும்
நாலு மறையோரும் நடுவர் மிகக்கூடி 
முன்னேயுள்ள துண்டம் ஒன்றை இரண்டாக்கி வைத்து
பின்னே பிறப்புப் பிரமா உருபடைக்க
சிவாய பொருள்தாம் சீவன்நிலை கொடுக்க
உபாய திருமால் உல்லாசமே கொடுக்க
முண்டம் இருபேரும் உருவாய் உருவளர்ந்து
தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி...
---------
உரை
---------
பிறகு திருமாலும் நான்கு மறையோன் ஆகிய பிரம்மாவும் எல்லாம் பொருந்தி இருக்கின்ற நடுவராகிய ஈசுரரும், தேவர்களுக்கு மத்தியில் கூடி, முன் யுகத்தில் வெட்டப்பட்ட ஆறு துண்டுகளில் ஒன்றை எடுத்து இரண்டு துண்டுகள் ஆக்கினர். பிறகு, அவ்விரண்டு துண்டுகளையும் பிரம்மா இரண்டு உருவாகப் படைத்தார். அவ்வுருவங்களுக்கு அதிசூட்சும பொருளான சிவன் உயிரைக் கொடுத்தார். எல்லாவற்றிற்கும் உபாயமாக இருக்கின்ற திருமால் உல்லாசம் முதலிய உணர்ச்சிகளைக் கொடுத்தார்.
இப்படியாக அந்தத் துண்டங்கள் இரு முழு உருவாய் உருவெடுத்தன. அவர்கள் சிவனைப் போற்றி வணங்கி நின்றனர். ...



*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...நாட்டுப் பயிரால் நாளும் பசி தீர்ந்து
இருந்து பொறுக்க இராச்சியம் ஒன்று உண்டாக்க 
வருந்தி மகாதேவர் மலரோன் அடிவணங்க
ஆதிசிவமும் அதிக சந்தோசமாய்
வேதியரைத்தாம் வருத்தி விளம்புவார் ஈசுரரும்.
---------
உரை
---------
...நடப்பட்ட பயிர்களினால் கிடைக்கும் உணவால் பசி தீர்ந்து, அமர்ந்து வாழ அமைதியான இராச்சியம் ஒன்று அவனுக்கு உண்டாக்க வேண்டும்." என்று மிகவும் வருந்தித் தேவர்கள் சிவனாரின் பாதம் தொழுது வேண்டினார். ஆதிசிவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு பிரம்மனை அழைத்து இவற்றை எல்லாம் அவரிடம் கூறினார்.
---------------------


*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...அந்தச் சந்தம் இல்லை ஆணுவங்கள்தாமும் இல்லை
இந்த வகைச்சாதி இல்லாமல் ஈசுரரே 
பிறந்தால் அவனும் பெரியோன் அடி வணங்கி
வரந்தாரும் என்று வாள் ஆயுதத்தோடே
வலுவும் பலமும் வாய்த்த சூரப்படையும்
கொலுவும் பெரிய குவிந்த மதில் கோட்டைகளும்
கெட்டுக் கிளை பாணிக்கிரணம் அதுவுடனே ...
---------
உரை
---------
"அவ்வாறு இனிப் பிறக்கக் கூடிய அவன் பெரியோனாகிய உம்மை அடிவணங்கி வரந்தாரும் என்பான். அப்போது, தாங்கள் அவனுக்கு வாளாயுதங்களும், உயர்ந்த பெரிய மதில் சுவர்களும், கோட்டைகளும், உள்ளவனாக அருள வேண்டும். மேலும், திருமணம் புரிந்த வாழ்வுடன்...
---------------------
அய்யா உண்டு