திங்கள், 29 செப்டம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை





அய்யாவை முட்டப்பதிக்கு அழைத்தல்
இந்தப் படியே இவர் வாழும் நாளையிலே
சொந்தத் திருமால்க்கு சுவாமி யுரைத்தபடி
ஆண்டாறு சென்று அதிகத் தவமதுதான்
கூண்டாய் முடித்துக் குருநாதக் கண்மணியும்
இனிநாம் செய்யும் இயல்பென்ன என்றுசொல்லி
மனிதவ தாரன் மனதில் நினைத்திருக்க
நன்றான முட்டப் பதிதலத்தில் நாரணரும்
மன்றாடும் நல்ல வாய்த்தபர மேசுரரும்
வேதப் பிரமன் விளங்கு மறையோனும்
நாத ரிஷிமாரும் நல்லசங்கத் தோர்களுமாய்ச்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
வித்தை முகத்து வேழ முகத்தோனும்
எல்லோரும் வந்து இருந்தார் கடலருகே
அல்லோரும் வந்து அங்கே யிருந்துகொண்டு
ஏற்ற முனியில் இரண்டுபே ரைவருத்திச்
சித்த முடனே திடீரெனவே நீங்கள்சென்று
நம்முடைய பாலன் நல்லவை குண்டரையும்
எம்முடைய அருகில் இப்போ கொடுவரவே
சொல்லி யயைச்சார் சுவாமிதா னென்றுசொல்லி
நல்லியல்பாய்ச் சொல்லி நாரணனை யிங்கழையும் 20
வாருங்கோ முனியே வாய்த்த தவத்தோரே
சேருங்க ளங்கே திடீரெனவே யிப்போது
என்று விடைகள் இருவருக் குங்கொடுக்க
அன்று முனிகள் அவ்வாயு போல்விரைவாய்க்
கடிதாய் நடந்து கரியமால் நற்றவசு
முடிவாகச் செய்த முகுந்தன் பதியில்வந்தார்
வந்தனர் வைந்தர் பாத மலரிணை முனிமார் கண்டு
செந்தமிழ் ஆயன் பெற்றச் சேயிது கண்ணோ விண்ணோ
கந்தரக் கலியை வென்றுக் கனதர்மப் புவியை யாள
முந்தநல் தவங்கள் செய்து முடித்தவா பேற்றிப் பேற்றி
பொல்லாக் கலியில் வந்திருந்து பெண்ணோ டவனிப் பொன்னாசை
மண்ணோ டுண்ணு மதத்தாசை மாய்கை விழியார் மருட்டாசை
பண்ணோர் தவத்துள் ளணுகாமல் பவமே யறுத்துப் பார்வைவிழி
கண்ணோ ஞானக் கருவிருத்திக் கண்டாய்ப் பொருளைக் கண்டாயே
அய்யா வுமது தவமதுவால் அரம்பை மாத ரன்றுபெற்ற
மெய்யாஞ் சான்றோர் கெதிகள்பெற்றார் மேவலோரு மிகப் புகழ்ந்தார்
பொய்யாங் கலிய னுயிரிழந்து போனா னரக மீழாமல்
அய்யா முட்டப் பதிதனிலே அழைத்தா ருந்த னப்பனென்றார்
அழைத்தா ரெனவே சொன்னவுடன் ஆதி முனியை மிகநோக்கிப்
பிழைத்தார் போலே மனமகிழ்ந்து பின்னு முனியோ டுரைபகர்வார் 40
இழைத்த கலியி னுள்ளிருத்தி என்னைக் கலியன் செய்தவலு
சழத்த மறிந்து வந்தாரோ சமய மிதுவோ தானுரைப்பீர்
நல்ல முனியே நம்மைக் கலியதனுள்
செம்மைகெட்ட நீசத் தீபாவிக் கையதிலே
கண்ணியிட்டு வைத்துக் கடக்கே நகண்டிருந்த
புண்ணியவா னின்று பிழைத்துக் குதித்தாரோ
நான்பட்ட பாடு நாடுபதி னாலறியும்
ஏன்பட்டா யென்று இன்றுகேட்க வந்தாரோ
ஏதோ தெரியலையே என்னுடைய நாயகமே
பாதகன்தான் செய்த பாராத்தியங் களெல்லாம்
பார்க்கும் படியாய்ப் பாரிக்கி றேனெனவே
ஆர்க்க முடனே அந்நீசன் செய்தபடிக்
கட்டுங் கயிறும் கையில் விழுந்திடத்தில்
முட்டுக்கு மேலே ஊற்ற மிகநினைத்தார்
வெடிப்புடங்கு தன்னால் விலாவி லிடித்திடத்தில்
துடிப்புடனே ஊற்றம் தோன்றும் படியேவைத்தார்
மேலில் பிரம்பால் மிக்க அடித்திடத்தில்
சீல முடனே சிணந் தோணவைத்தனரே
கன்னமதில் கம்பால் கனக்க அடித்திடத்தில்
உன்னித மாக உடன்தோண வைத்தனரே 60
கூண்ட முடியைக் குலுக்கியசைத் திடத்தில்
வேண்டு முடியை மிகக்கழிய வைத்தனரே
இப்படியே நீசன் செய்த இடறதுபோல்
அப்படியே தோணவைத்து ஆங்காரங் கொண்டனரே
பால்மாட்டை நீசன் பற்றிக்கொண்டே யடைத்து
மால்பா லேற்கும் மாதிரியைப் பார்ப்போமென
இந்தநாள் வரைக்கும் இருந்ததொன் றானதுக்குள்
அந்தநீ சன்தான் அநியாய மாகவேதான்
கொண்டு அடைக்க கோவேங் கிரிநாதன்
அன்றுமுத லிருபத் தொருநாள துவரைக்கும்
கோல மெடுத்துக் குருச்சமைந்த நாரணரும்
பாலுமுதல் வேறு பண்டமொன் றேராமல்
இருக்குந் தறுவாய் இதுநல்ல தாகுமென
அருக்காக நீசன் அவன்செய்த வேதனைபோல்
எல்லா முறைபோல் எடுத்தார் சொரூபமது
நல்ல முனிமார் நாரணா என்றுநிற்க
கைக்குள்ளே நின்ற கரியசீ சன்மாரில்
மெய்க்குள் ளறிய விளம்பினா ரெம்பெருமாள்
அய்யா முட்டப்பதி ஏகல்
இன்றைத் திவசம் இசைந்தமுட் டப்பதியில்
நன்றிப்போ போக நல்மணிக ளாகுதெனச் 80
சொல்ல அறிந்து சீசன்மார் தாமகிழ்ந்து
நல்லதெனச் சொல்லி நாடி யவரிருக்க
அன்றிரா தன்னில் ஆரு மறியாமல்
நன்றினிய சீசன் நாலுபேர் தாமறிய
வந்த முனியும் வளர்ந்த இருமுனியும்
சொந்தமுடன் நாதன் தொட்டில் மிகஏறி
சீசன்மார் காவிச் சிணமாய் மிகநடக்க
வாசமுள்ள மாமுனிவர் வலமிடமுஞ் சூழ்ந்துவரத்
துடியாகத் தொட்டில் சுவாமி மிகஇருந்து
வடிவான முட்டப் பதிதலத்தில் வந்தனரே
முட்டப் பதியில் முகுந்த னரிநாதன்
கிட்ட வருகும் கிருஷ்ணர்வந்து சேர்ந்திடவே
மகனை மிகக்கண்டு மாவிருப்பத் தோடிளகி
உகமாள வந்த உடையமக னேயுனத
சடமெல்லாம் வாடி சடைப்பானே னென்மகனே
வடவெல்லா மென்னோடு வகுத்துரைநீ யென்மகனே
கண்ணே மணியே கருத்துள்ள நாயகமே
விண்ணே வொளியே வேதத் திருவிளக்கே
கலியில் மிஇருந்து கலக்க மிகஅடைந்த
மெலிவெல்லாஞ் சொல்லி விளம்புநீ யென்மகனே 100
அடித்ததா ருன்னை அவனிதனில் பேயனென்று
கடுத்தமது செய்தக் கலக்கமெல்லாஞ் சொல்லுவென்றார்
சொல்லென்று மாலும் சிவமு மெடுத்துரைக்க
வல்லபெல மான வைகுண்ட ரேதுரைப்பார்
செந்தூர்க் கடலில் செகலதுக்குள் ளென்னைவைத்து
முந்த எனக்கு மொழிந்த வுபதேசம்
கப்பாம லாறு வருசந் தவசாக
மெய்ப்பாவின் பாலருந்தி வீடுசொத் தெண்ணாமல்
கலிக்காசி யாசை கனாவில் நினையாமல்
அலிக்கியானப் பெண்ணின் ஆசை யணுகாமல்
பக்கக் கிளையாசை பாவித் தினிதாசை
அக்கத்தி னாசை அனுப்போல் நினையாமல்
நல்ல துணியாசை நளின மொழியாசை
சொல்லினிய ஆசை தீன்பண்டத் தினாசை
தேய்ப்புக் குளிப்புச் சிறந்த பொருளாசை
தாற்பரிய மானச் சந்தோசத் தினாசை
பூமியா சைமுதலாய்ப் பேராசை யும்வெறுத்துச்
சாமி யுமதருளால் தொல்புவியி லுள்ளோர்க்குத்
தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல்
மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான் 120
நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன்
வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன்
தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன்
பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன்
கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன்
வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும்
குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன்
ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில்
வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு
ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி
தேயமதி லுங்களுக்குத் தேரோட்டமு முதலாய்
ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம்
மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால்
பூசை படைப்புப் பெலிதீப மேராமல்
வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச்
சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
வையகத்தை யாளும் மாநீச னுமறிய
மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன்
இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம் 140
மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும்
அல்லாமற் பூமிதனில் அவர்களறி யாதபடி
வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை
நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை
வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும்
சதுராய் நருளறிய நல்லவெகு அற்புதங்கள்
இதுக்காய் கிணற்றில் ஏகாச்சிலை யுங்காட்டி
இருந்தேன் தவசாய் என்னுடைய நாயகமே
பொருந்தாத காரியங்கள் புத்திக் குளறிமிகச்
செய்துமிகக் காணாது செய்ய மணிவிளக்கே
நிசமிதுவோ என்று நீரவரோ டேகேளும்
இத்தனையுந் தர்மமதாய் யான்செய் திருக்கையிலே
புத்திகெட்ட நீசன் பொல்லாதான் வந்தெனையும்
கட்டி யடித்துக் கைவெடி யாலிடித்து
இட்டிறுக்கி வைத்தான் இரும்பு விலங்கதிலே
நஞ்சிட்டுத் தந்தான் நாடுஞ்சா ராயமதில்
கொஞ்சுங் கடுவாய்க் கூட்டி லடைக்கவென்றான்
நீச னவன்சாதி நிசமாகத் தான்கூடி
ஏசி யெனைப்பழித்த இடறுசொல்லக் கூடாது
ஐயோ அவர்கள் அடித்த அடிகளெல்லாம் 160
வையம் பொறுக்காதே மாநீசன் செய்தவினை
மாந்திர தந்திரத்தால் வஞ்சனைகள் செய்தெனையும்
கோந்திர மாகக் கொல்லவகை செய்தார்கள்
பாவிகள் செய்த பலவினைகள் சொல்லவென்றால்
தாவு முலகில் தாலமதி லோலையில்லை
என்னைத் தவத்துக்(கு) இருத்தியிது நாள்வரையும்
இன்ன மிரங்கலையோ என்தவசு காணலையோ
அன்றருளித் தந்த ஆண்டு திகையலையோ
இன்று முதற்கலியில் யான்போக வில்லையையா
நம்மாற் கலியில் நனின்றிருக்கக் கூடாது
சும்மா எனைநீங்கள் சோலிபண்ணக் கூடாது
நன்றிசற்று மில்லா நாற வெறுங்கலியில்
கொண்டென்னை வைத்துக் கோலமது பாராதேயும்
இனியென்னாற் கூடாது இக்கலியி லேயிருக்கப்
பனிதவழு மாயவரே பகர்ந்தமொழி மாறாமல்
ஆறு வருசம் அவனித் தவசிருந்தேன்
தாறுமா றுண்டானால் சாட்சியோ டேகேளும்
என்று வைகுண்டர் இத்தனையுஞ் சொல்லிடவே
நன்றினிய மகனை நல்லமுகத் தோடணைத்து
கண்ணே மணியே கருவூலமே கனக மணியே ரத்தினமே 180
விண்ணே வொளியே கற்பகமே வேதச் சுடரே விளக்கொளியே
மண்ணே ழளந்த மலர்பதத்தில் வந்தே குதித்த மலர்க்கொழுந்தே
இண்ணே முதலா யுனக்குநல்ல இயல்பே யாகு தென்மகனே
மகனே தவத்துள் ளிருக்கையிலே வருமோ செல்வ மாரார்க்கும்
செகமே ழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக் ககமகிழ்ந்து
தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும்
அகமே யுனக்கு அருளினது அனுப்போல் தவறா தருள்மகனே
செல்ல மகனே சீமானே நீகேளு
நல்ல மகனே நாரணா நீகேளு
தவவேடம் பூண்டு தவமா யிருக்கையிலே
சிவஞான மல்லால் செல்வம்போல் காணாது
தவசு நிறைவேறித் தமோதரர்க் கேற்று
பவிசு மிகவேண்டிப் பலன்பெற்று வாழ்வார்கள்
மகனே நீயிருந்த மகாதவத் தின்பெருமை
செகமீதே சொல்லத் தொலையுமோ என்மகனே
கள்ள யுகத்தைக் காணாம லேயறுத்து
உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக
ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு
வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி
மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து 200
வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த்
தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப்
பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை
அன்பாக வைத்து ஆள முடிசூடிப்
பண்பாக வேண்டும் பவிசு மிகவாகச்
சாகா வுலகத் தர்ம பதியாள
வாகாய்த் தவசு வகுத்து முடிக்கையிலே
ஆங்கார மாமோ ஆணுவங்க ளங்காமோ
ஓங்கார மாமோ உற்ற தவசதுக்கு
தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி
பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே
அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும்
துரிதமுடன் மாமுனிகள் சுவாமி யெனத்தொழுதார்
இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு
சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே
அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து
தப்பெருநா ளில்லை தவத்துக் குறுதியுண்டு
நூலொழுக்க மல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை
மாலொழுக்க மல்லாமல் மனதுவே றில்லையையா
தப்பாத தவத்தில் சண்டித் தடிநீசன் 220
சிப்பாயி விட்டுச் சுவாமி தனைப்பிடித்து
முடித்தலையைப் பின்னி முழுநீசப் பாவியவன்
அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே
வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால்
மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை
என்று முனிமார் இசையத் திருமாலும்
கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த ஞாயமெல்லாமல்
இருக்கட்டு மந்த இழிநீசன் செய்ததெல்லாம்
குருக்கட்டு முறையின் குணத்தைமிகச் சொல்லுமென்றார்
உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து
படபடென நின்று பணிந்து மிகப்போற்றித்
தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை
என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய்
அன்று உரைக்க அதகத் திருநெடுமால்
நல்ல தெனவே நன்மகனைத் தானாவி
செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென
மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத்
தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர
பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட 240
நாவாணர் போற்ற நாரா யணர்மகனை
பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி
ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி
அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி
முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து
வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த
நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில்
தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே
மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும்
எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட
நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க
முட்டப்பதி விஞ்சை 2
வல்ல திருமால் மகனை முகம்நோக்கி
செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால்
திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும்
ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல்
நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே
சத்தகன்னி மாரைத் தான்வருத்தி மாலையிட்டுக்
கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும் 260
சலியாமற் காசுத் தந்தவர்க ளுண்டானால்
வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு
ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல்
பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும்
மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும்
மேற்கட்டி கட்டி மிகுவா யலங்கரித்து
மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சை டம்மானமிட்டு
இந்தப் படியாய் ஏழுநாளுந் திருநாள்
அந்தப் படிசெய்து அவனியி லாடிக்களித்து
எல்லா முறையும் இயல்பாகக் கொண்டாடி
நல்லாண்டு தேதி நல்லதிவ சம்பார்த்துத்
தெய்வகன்னி மாரைத் தெய்வச்சான் றோரிடமே
மெய்வரம் பான மனுமுறைபோல் தான்பேசிக்
கொடுக்கல்வாங் கல்முறையும் கூறி மிகக்கேட்டுத்
துடுக்கான நல்ல தோகைக்குண மும்பார்த்து
பார்த்துன் னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற
தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறை யும்பார்த்து
பரிய முறையும் பாவையர்கள் தம்முறையும்
சரியா யுலகோர் சங்கை யதுபோலே
தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ  280
மங்கள மதாக மாலையிடு என்மகனே
என்னோடு கன்னி ஏலமே சொன்னபடி
தன்னோ டினங்கள் தலைவன்மா ரேழ்வரையும்
எடுத்துக் கொடுத்து இளமுலைப்பால் தானூட்டி
கொடுத்து இகனைக் கூறிக்கோ என்மகனே
இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு
அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு
வகைவகையாய் வேசம் மாறி யுருவெடுத்துத்
திகையாம லவர்க்குச் சொல்லு முறைபோலே
கலியாணக் காட்சி கணக்குத்தீர் வைமுறையும்
வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடிச்
சாம்பசிவக் கோலம் சாருமஞ்ச ணைக்கோலம்
ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக் கழித்து
முற்றுந் திருநாள் முழுது மிகநடத்திப்
பத்தும் பெரிய பாலர்தங்கள் வீடேகி
விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி
திருந்து புகழ்கிளைபோல் சிலவீட் டமுதருந்தி
பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி
மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே
வெற்றியி டம்மானம் விருதுக் கொடிகள்கட்டிப் 300
புத்திர ரானோர்க்குப் பிழைக்கும்வலு புத்திசொல்லிப்
பாடித்தீர் வைதீர்த்துப் பரசோ தனைபார்த்து
ஆடித்தீர் வைதீர்த்து ஆண்பெண் மிகவேகண்டு
நல்லாண்டு கண்டு நாடும் மங்கையரைச்
செல்லக் கலியாணம் செய்து சிறப்புடனே
செந்தா மரையா ளுடனே சிறப்பிருந்து
ஆனை கன்றீணி அதினா லுலகமெல்லாம்
தானாக நீயும் தலைவ னெனச்சமைந்து
முரணிக் கலியழிய முச்சுடரு மொன்றாவாய்த்
தரணி யீரேழும் தடதடெனத் தானசைத்து
நீயதின்மே லாளும் நிண்ணயத்தைக் கேள்மகனே
தங்க முடிசூடிச் சான்றோர்க்கு நால்வரமும்
அங்கவர்க்குத் தானருளி அழகு மிகக்கொடுத்து
நல்லதர்ம மாக நாடும் புவியதிலே
அல்லல்வினை யற்று அவனியதை நீயாள்வாய்
அப்போ நீயரசு ஆளுகின்ற நாளையிலே
செப்பொண்ணாச் செல்வம் சிறப்புமிக வுண்டாகும்
பூமடந்தை வீட்டில் புகுந்து கொலுவிருந்து
தாமுனிந்து நீயும் தரணிதனில் வந்தவுடன் 320
நான்வந்து உன்னை நாடி மிகஎடுத்துத்
தான்மகிழச் செல்வத் தலைவ னுனையாக்கிச்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
எல்லைக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
தீர்த்து உனக்குத் திருவம்ப லமருளித்
தோற்றும் பதிகள் துலங்கும்வெகு ரத்தினமாய்
எல்லா மருளி ஏழுமாதர் தாஞ்சூழ
வல்லோனாய் நீயும் வாழுவா யென்மகனே
மலங்காதே யென்மகனே மாதவங்கள் பெற்றவனே
கலங்காதே யென்மகனே கண்ணேயென் கற்பகமே
என்று மகனுக்கு ஈதுரைக்கு மிவ்வளவும்
மன்று குலுங்காது வாரி யலுங்காது
மேகங் குடைநிழற்ற மேவலர்கள் போற்றிநிற்க
யோக முனிமார் ஓதித் தமிழ்கூற
ஈசர் மகிழ்ந்து இரத்தின மதிலிருக்க
வாசவனுந் தேவர்களும் வாய்பொற்றித் தாழ்ந்துநிற்க
இப்படியே சங்கம் எல்லா மகிழ்ந்துநிற்க
அப்படியே விஞ்சை யருளினா ராதியுமே
விஞ்சையும் பெற்று வைந்தர் விரைவுடன் தகப்பன் பாதம்
அஞ்சையும் புணர்ந்த சோதி அரனையும் வணங்கிப் போற்றி 340
நெஞ்சையு மொன்றுள் ளாக்கி நிர்மலத் தாயைப் போற்றி
கொஞ்சையுங் குணத்தி னாதன் கூறுவார் குருவைப் பார்த்து
என்னையாட் கொண்ட நாதா எங்குமாய் நிறைந்த நீதா
உன்னையான் கண்டு போற்ற உன்னருள் கிருபை தந்தாய்
இன்னமுங் கலியில் போய்நான் இருந்திந்த முறைகள் செய்தால்
என்னையாட் கொண்டு ரத்தினக் கிரீட மெப்போ தீவீரோ
கிரீட மெப்போ தீவிரென் றெனக் கேட்ட மைந்தா
அரிவிரி கொண்டே சூடி அணியிடை மாரைத் தோய்ந்து
தரிவிதி யான போதும் தாமரைக் கைநிகழ்ந்த போதும்
பரிவலம் வந்த போதும் பார்மக ளடைந்தா யன்றே
உன்விதி யதனால் முன்னூல் ஊறிய அமிர்தந் தன்னால்
என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள் ளாகி
மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும்
பொன்மக ளகன்ற தன்றும் பூமக ளடைந்தா யன்றே
பூமக ளுன்னைச் சேர்ந்து பின்னாறு வரைக்கு மேலே
நானுகந் தன்னாற் போக்கி நகரொரு பகற்குள் ளாக்கித்
தானுனைத் தங்க மானத் தயிலமாம் பதத்தில் மூழ்க்கி
வானுனை மகிழ ரத்தின மகிழ்கிரீட மருள்வே னென்றார்
மகனே யுனக்கு மகாசெல்வ மாகிவரும்
சுகமேபோ யிரெனவே சொல்லி யனுப்பலுற்றார் 360
அனுப்பத் திருமால் அமைமக வேதுரைக்கும்
மனுப்புகழப் பெற்ற வைகுண்ட மேதுரைக்கும்
பாவி வெறுநீசன் பண்ணிவைத்த பாட்டையெல்லாம்
ஆவியறிந் தென்னுடைய அங்கமெல்லாஞ் சோருதையா
என்று வைகுண்டர் இசையத் திருமாலும்
அன்று மகனுக்கு அருளினது கேள்மாதே
இந்நீசன் நமக்கு இந்த யுகம்வரையும்
மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால்
செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே
மைதான மான வாக்குநமக் காச்சுதெனக்
கைவாய்த்து தென்மகனே கலிநீச னையறுக்க
மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு
அன்பான் சீமை அரசாள நாளாச்சு
தன்பா லடைய சரியாச்சு தென்மகனே
மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில்
கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே
முட்டப்பதியிலிருந்து அய்யா தோப்புப்பதி திரும்புதல்
என்று விடையருள ஏற்ற திருமாலும்
அன்றுதிரு மாலும் அன்பாய் விடைவேண்டி
அலைவாய்க் கரையில் ஆதி வருகுமுன்னே
நிலையான சான்றோர் நிரம்பவந்து கூடினரே 380
கண்டந்தச் சான்றோரைக் கரியமா லுமகிழ்ந்து
நன்றென்று சொல்லி நாராயணர் கூட்டிப்
பண்டிருந்த நல்லப் பதியில்வந்து சேர்ந்தனரே
கண்டெந்தப் பேரும் கனபிரிய மாய்மகிழ்ந்து
தாமோ தரனார் தலத்தில் மிகச்சேர்ந்து
நாமோ முனிகூட நாடி மிகஇருந்தார்
இருந்து மிகப்பாலும் ஏற்றநல்ல பச்சரிசி
திருந்து சிறுமணியும் தேங்காய்ப்பூ தன்னுடனே
கொல்ல மிளகு கூண்டப் பொடியுடனே
நல்லாக இவ்வகைகள் நாடியொரு நேரமதாய்
காவி மிகப்புரிந்து கனத்திருத்தி ராட்சமிட்டுத்
தாவமுடன் மாத்திரைக்கோல் தானிதுவோ டேயிருந்தார்
கொஞ்சநாள் கழித்துக் கூண்டதிவ சம்பார்த்துப்
பஞ்சகரு ணாதிகளைப் பண்பாகத் தானிறுத்திக்
கந்தை மிகச்சூடிக் காவித்தொட்டில் மீதிருந்து
விந்தை யுடனுகத்து விவரிப்பெல் லாமெடுத்துக்
கூறினா ரந்தக் கூண்டரியக் காரணத்தை
பேறிருக்கும் நல்லோர் பெரிய பெருமானும்
நாடழியப் போறதுவும் நன்னாடு தோன்றுவதும்
பாடழிய நீசன் படப்போற செய்தியதும் 400
நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும்
வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும்
சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து
எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான்
நடத்துகிறா ரென்று நல்லோர்கள் சொல்லிடுவார்
சடத்தமுள்ள நீசச் சண்டாளப் பாவியெல்லாம்
காசு மிகவேண்டக் கபடுசெய்கி றானெனவே
பேசி யிவனும் பிதற்றுகிறா னென்றுசொல்லி
நகைப்பார் சிரிப்பார் நன்றிகெட்ட நீசர்குலம்
சிக்ப்பா னதுவால் தெய்வகுலச் சான்றோர்கள்
சான்றோர் பக்தி
கூடிக் குவித்து குணமாக வேகூடித்
தேடிவைத்த பண்டம் சுவாமி தனக்கெனவே
நம்முடைய சஞ்சலங்கள் நாடும்பிணி தீர்த்தவர்க்குத்
தம்முடைய பாலு தாங்கொடுக்க வேணுமென்று
பசுவைக் கொடுப்பார் பாலாடு தான்கொடுப்பார்
கசுவிரக்க மாகக் காசு பணங்கொடுப்பார்
கஸ்தி மிகத்தீர்த்த காயாம்பு வண்ணரென்று
வஸ்திரங் கொடுப்பார் வழங்கு மிலைகொடுப்பார்
நெல்லு சிறுமணிகள் நெய்த்தேங் காய்கனிகள்
நல்லமைப்புச் சான்றோர் நாடி மிகக்கொடுத்தார் 420
கொடுக்க அன்பரெல்லாம் குணமாய் மிகவேண்டி
அடுக்க அவரருகில் அன்பாக நின்வரில்
பணிவிடைகள் செய்வோர்க்குப் பரிந்து மிகஈந்தார்
மணியாம் பரனும் மகிழ்ந்துபா லேற்றனரே
ஏற்று உகத்துக்கு உகத்தீர்ப் பும்புரிந்து
சாற்று மொழிகூறித் தானிருக்கு மப்பொழுது
மாயத் திருமால் மால்வேச மேயெடுத்துத்
தேயமதில் நம்முடைய தெய்வகுல மாதர்களை
வருவிக்க வென்று மாஞால வித்தையினால்
உருவிக்க வென்று உலகநரு னானதிலே
தாக்கி உடலுள் தமனிய மாய்ப்பொதிந்து
நோக்கு முறைகாண்டம் நேர்மை மொழிமொழிந்து
பெண்ணாண் வரைக்கும் பெருங்கிழவி தான்வரைக்கும்
கண்ணா னமதலை கைக்குழந்தை முதலாய்ப்
பாட்டு வித்தேசம் படிப்புவித் தேசமுதல்
ஆட்டுவித் தேசம் ஆட்டி மிகவருத்தி
முன்னமைத்த பெண்ணை எல்லா மிகப்பார்த்துச்
சொன்ன முறைபோல் சிணம்செய்ய லாமெனவே
இட்டா ரொருசூட்சம் ஈசர்முத லெல்லோரும்
மட்டாரும் சூட்சம் வையகத்தி லேயாவி 440
சாதிபதி னெட்டும் ஆராட்டுப் பார்த்தனரே
ஆதிச்சா திதனிலே அமைப்புபோ லுள்ளவர்கள்
தானிறைந் தாடித் தண்மை மிகக்கூறி
வானிறைச் சோதி மயமாய்க் குதித்தனரே
இப்படியே சான்றோரில் ஏற்றபெண் ணாண்வரையும்
அப்படியே நன்றாய் ஆராதனை யாகி
ஊருக்கூ ரேயிருந்து உற்ற நருட்களெல்லாம்
பாருகங் காணப் பண்பாகக் கொண்டாடி
உமைபார் வதியெனவும் உற்றமுத் தாரெனவும்
இமையோர் புகழும் இலட்சுமி நானெனவும்
சத்திகன்னி மாதரென்றும் தார்குழலார் தோழியென்றும்
பத்தியுள்ள நல்ல பரமே சொரியெனவும்
மண்டைக்காட் டாளெனவும் மாதுநல்லாள் தோழியென்றும்
பண்டையுள்ள ஈசொரியாள் பாக்கிய வாட்டியென்றும்
வள்ளிதெய் வானை வாய்த்தபக வதியெனவும்
பூம டந்தையென்றும் பெரிய பிராட்டியென்றும்
பார்ம டந்தையென்றும் பத்திரமா காளியென்றும்
நாகக் கன்னியென்றும் நல்லதெய்வக் கன்னியென்றும்
பாகைக் கைகாட்டும் பைங்கிளிமார் நாங்களென்றும்
இப்படியே நல்ல ஏந்திழைமா ரெல்லோரும் 460
அப்படியே நல்ல அவனிப்பெண் ணார்பேரில்
ஆரா தனையாய் அங்கங்கு தான்கூடி
சீராகக் கூடிச் சேர்ந்துவரு வார்தினமே
ஆண்பிள்ளை கள்பேரில் ஆனசிவன் மாலெனவும்
நான்பிரமா வென்றும் நல்ல அனுமனென்றும்
காலனென்றும் ஏமனென்றும் கடியபெலக் கந்தனென்றும்
மாலவனின் மக்களென்றும் மாமுனிமார் நாங்களென்றும்
தேவ ரிஷியெனவும் சிமிள்கருட சேவனென்றும்
தாவமுள்ள நல்ல சன்னாசி மார்களென்றும்
ஆரா தனையாய் அவர்கள் மிகஆடிச்
சீராகக் காண்டம் செப்பிமிகப் படிப்பார்
வருவார் தினமே மாயோனிட மதிலே
கருவா யுதித்த காண்டம் மிகப்படிப்பார்
இப்படியே பெண்ணாணும் யாம முறைப்படியே
அப்படியே வந்து ஆடி மிகப்படிக்க
நல்லநா ராயணரும் நாட்ட மிகஅறிந்து
வல்லப் பொருளும் மனது ளறிந்திருப்பார்
அறிந்து சிலநாள் அகமகிழ்ந்து தான்பார்த்துச்
செறிந்த குணநாதன் தேதி கணக்கதிலே
இகனை நடத்த எண்ணமுற்றி ருக்கையிலே 480
உவமை பலசொல்லி உற்றதெய்வக் கன்னியர்கள்
அனைவோ ரும்புகழும் அரன்கயிலை வாழ்ந்ததுவும்
சுனையாடப் போனதுவும் தூயோ னடத்தினதும்
பிள்ளைதனைப் பெற்றதுவும் பெருவனத்தில் சென்றதுவும்
வள்ளல் சிவனை வருந்தித் தவம்புரிந்து
உலகில்மிகத் தோன்றும் உள்ளவர்த்த மானமெல்லாம்
சிலைநுதலிக் கன்னி சொல்லி மிகப்படிப்பார்
அப்போ திருமால் அடக்கி மிகமனதில்
செப்புவ தெல்லாம் சிந்தைதனில் கொண்டிருந்தார்
உமைமண்டைக் காட்டாள் உற்ற பகவதியாள்
இமையோர் புகழும் ஏற்றகுல பார்பதியாள்
சீதை மடந்தை சேயிழைமா ரெல்லோரும்
மாதவனை நோக்கி வளங்கூறி யேபடிப்பார்
பாவிக் கலியன் பழிநீசன் தோன்றினதால்
மேவிக் கலியில் மிகமூழ்கி மாயமதால்
மாயக் கலியை வதைக்குமந்த நாளையிலே
தேசமதி லெங்களையும் திருக்கல்யாண முகித்து
எங்களுட நாயகனார் இங்குவரு வோமெனவும்
எங்களையு மிங்கே இக்கோல மாய்வரவே
சொல்லி யயைச்ச சுவாமிநீர் வந்தீரோ 500
பல்லுயிரும் பணியும் பரமனேநீர் வந்தீரோ
என்று மடவார் இப்படி யேயிசையப்
பண்டு முறைபோல் பிரப்பிரம மாயிருக்கும்
எண்ணித் திருமால் இருதயத்தி லேயடக்கி
மண்ணி லுள்ளோர்கள் வந்துமிகக் கூடிநிற்க
மேலோகத் தார்கள் இறைஞ்சிமிகப் பார்த்துநிற்கப்
பூலோக மெல்லாம் புதுமையெனப் பார்த்துநிற்க
அப்போது மாயாதி ஆகமத் தின்படியே
செப்போடு வொத்த தேசத் திருப்பதியில்
வாழுகின்ற தேவரையும் வாகாய் வரவழைத்து
நாளுக்கு நான்சொன்ன ஞாய முறைப்படியே
நடத்தாம லிப்போ ஞாயமீறி நீங்கள்
அடத்தமாய்ச் செய்வதென்ன எல்லோருஞ் சொல்லுமென்றார்
உடனே யெல்லோரும் உள்ள மிகத்தளர்ந்து
திடமே குளறிச் சொல்லவா யில்லாமல்
புத்தி மயங்கிப் பொறியழிந்து தேவரெல்லாம்
சத்திகெட்டார் போலே தானே விறுவிறுத்து
நின்ற நிலையை நெடியதிரு மாலறிந்து
குன்றுதனில் கொண்டு கொழுவிலங்கில் தான்சேர்த்து
மன்று ஒருகுடைக்குள் வைகுண்டம் ஆளவரும் 520
இன்றுமுதல் லக்குவரை இருங்கோ பாராவதிலே
வைத்தாரே நல்ல வடவா முகமதிலே
செய்த்தான் விதியெனவே தேவரெல்லா மிருந்தார்
அந்த அவதாரம் அதிக முடனடத்திச்
சந்தான மான சப்தகன்னி மாரையினி
மாமணங்கள் செய்து மாதரேழு பேர்களுக்கும்
தாமதங்க ளின்றி சந்ததிகள் தாங்கொடுத்து
இராச்சிய முங்கொடுத்து ஏற்றபவி சுங்கொடுத்(து)
இராச்சிய மாளச் செய்யவே ணுமெனவே
நினைத்துத் திருமால் நின்றிதயத் தேயடக்கித்
தனத்தனங்கள் பாடித் தந்தனங்கள் போடலுற்றார்
தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்
சத்தகன்னிமார் வருகை
முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால்
பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பே யேறி முனிகையினால்
சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில்
மின்னா ரிவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோ மவ்வனத்தில்
வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்க ளேழும் பெறவருளிப்
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே 540
மீண்டோங் கயிலைக் கிருந்துபின்னும் மெல்லி யிவர்கள் தவம்பார்க்க
ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே
முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென
நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து
ஆடரம்பை மாரை அருமைமணஞ் சூட்டவென்று
வேடம திட்டார் வீரநா ராயணராய்
நாரா யணராய் நல்லதிரு வேடமிட்டுச்
சீரான காவிச் சீலை மிகப்புரிந்து
ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்ச மாலைகளும்
துரித முடன்சிரசில் துளசிமா லைபுனைந்து
கையிற் பிரம்பும் கனத்தசுரைக் கூடுடனே
மெய்யில் வெண்பதமும் உத்திராட்ச மாயணிந்து
மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து
ஆகமத்தி லுள்ள அறிவுஞா னம்பேசிப்
பாகமதில் நிற்கும் பாலதியச் சான்றோரைப்
பார்த்து அருகழைத்துப் பச்சைமா லேதுரைப்பார்
நாற்றிசை யுமறிய நல்லகுலச் சான்றோரே 560
உங்களுட தாய்மார் உற்றகன்னி மார்களைநான்
எங்க ளுடவிதியால் இப்போமணஞ் சூட்டுதற்கு
விதிவந் திருக்குதுகாண் வேளையி தானதினால்
பெரியவுங்கள் தாய்மாரைப் பேயழைத்து வாருமென்றார்
நால்திசையும் நீங்கள் நடந்துமிக சத்தமிட்டு
மாலதியப் பெண்ணை வரவழைத்து வாருமென்றார்
சீரான நூல்முறைக்கு தேனெயெங்கள் தாய்மாரே
நாரா யணர்க்கு நல்லமணஞ் சூட்டுதற்கு
நாளான நாளிதுவாம் நன்னுதலே தாய்மாரே
தாழாமல் வாருமென்று சத்தமிட் டழையுமென்றார்
இப்படியே சொல்லி ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
அப்படியே சொல்லி அழைத்தாரே சத்தமிட்டுப்
பாலருட சத்தம் பாவையர்கள் கேட்டுமிகச்
சீல முடனெழுந்து தெய்வமட மாதர்வந்தார்
வந்துமிக நாரணரை வாழ்த்தி மிகவணங்கி
சந்துஷ்டி யாகத் தங்கள்தங்கள் வாக்கில்நின்று
முன்முறைகள் சொல்லி மொழிந்துமிகப் படித்தார்
தென்பதிக ளான தெச்சணா பூமியிலே
நான்வந் திருந்து நானிலத் துள்ளவர்க்குத்
தீனம் பலதீர்த்து ஸ்ரீபண்டா ரமெனவே 580
நாம மிகக்கூறி நாட்டிலிருப் போமெனவே
சொல்லி யெங்கள்தம்மைத் தொல்புவியில் வாருமென்று
நல்லவராய்ச் சான்றோருள் நாடிப் பிறவிசெய்தீர்
பிறந்து வளர்ந்து என்பேரு கேட்டவுடன்
மறந்திடா வண்ணம் வாருங்கோ என்றுசொல்லிப்
பிறவிசெய்த நாயகரே பெரியவரே வந்தீரோ
கங்கை திரட்டி கறைகண்டர் தன்சிரசில்
பெண்க ளேழுபேரும் பிரியமுடன் வாழ்ந்திருந்து
எங்கள்கற் பெல்லாம் ஈடழிய வேதுணிந்து
சங்கை யழித்த தலைவனேநீர் வந்தீரோ
எங்களுட பிள்ளை ஏழு மினவழியும்
அங்கங் குறையாமல் அவ்வழிகள் தாமுழுதும்
கொத்தோ டேசேர்த்துக் குடும்பத்தோ டேயடக்கிப்
பெற்றோர்க்கு எல்லாம் பெருவாழ்வு தான்வகுத்து
எங்களையுஞ் சேர்த்து இரட்சிய முமருளி
மங்களமாய் வாழ்வோமென்ற மாதவரே வந்தீரோ
இனியிப்போ தேழ்வரையும் ஏற்ற மணம்புரிந்து
வனிதவழு மாயவரே வைத்தாளு மென்றுசொல்லிப்
பாடியே மாமடவார் பாதம் பணிந்துநிற்க
நாடியே யெம்பெருமாள் நல்லதா கட்டெனவே 600
அருகில் மிகநிற்கும் அன்பான சான்றோரை
வருக அழைத்து வார்த்தைமிகக் கூறலுற்றார்
எந்தனக்கு முன்னமைத்த இளங்குழலா ரேழ்பேரும்
வந்தன ரேயிவர்கள் வளப்பமென்ன சொல்லுமென்றார்
கன்னிதானோ யிவர்கள் கள்ளிகளோ பாருமென்று
உன்னி மனதுள் உபாயமாய்த் தானுரைத்தார்
நடையுடைகள் பேச்சு நாரியர்கள் தங்குணங்கள்
மடமயிலின் சாடை மாதிரியைப் பாருமென்றார்
அப்போது சான்றோர் எல்லோரு மேமகிழ்ந்து
இப்போது எங்களுக்கு ஏதுந் தெரியாது
படைத்தவர்க் கேதெரியும் பாவையரின் தங்குணங்கள்
செடத்தமெல்லா மெங்களுக்குத் தெரியா தெனவுரைத்தார்
மாயவர் தான்பார்த்து மாதுகளைத் தாநோக்கித்
தூயவர் தான்வார்த்தைச் சொல்லுவார் பெண்களுடன்
நானெப்போ துங்களையும் நடுவனத்தில் கண்டதுதான்
தானெப்போ வந்தேன் தார்குழலே நானறியேன்
காட்டிலே வந்ததெப்போ கற்பை யழித்ததெப்போ
பேட்டிசெய்து பிள்ளை பெற்றதெப்போ நானறியேன்
ஒன்றுந் தெரியாது உங்களைநான் கண்டதில்லை
பெண்டுகளே யிப்பேச்சுப் பேசாதே போய்விடுங்கோ 620
மாயமாய் நீங்கள் மருட்டி விழியாதுங்கோ
பாயமா யுங்கள் பகட்டி லடங்கேனான்
பண்டாரத் தோடே பழிமொழிகள் பேசாதே
அண்டாது உங்கள்மொழி அகலநின்று போய்விடுங்கோ
என்று அடாத்தியமாய் இவர்தான் மிகமொழிந்தார்
நின்று நினைத்து நேரிழைமா ரெல்லோரும்
அடந்து மடவார் ஆகத்திரண் டேகூடித்
தொடர்ந்து நெருங்கித் தொட்டுப் பிடிக்கவென்று
தார்குழலில் மூத்த சாத்திரத்தா ளேதுரைப்பாள்
வாரணியுங் கூந்தல் மடவா ரென்தங்கையரே
கள்ளக் கவுலாய்க் கண்மாயஞ் செய்துஅன்று
மெள்ள நெகிழ்ந்த மெக்குவாய்த் தாதனையம்
சென்று பிடித்துச் செய்தியென்ன கேளுமென்று
தன்றுபுகழ் சாத்திரத்தாள் தங்கையரைக் கண்காட்ட
மடவார்க் ளெல்லாம் மாகோப மாய்வெகுண்டு
அடவாக மாயவரை அடர்ந்து பிடிக்கலுற்றார்
தேன்மொழி மாரே யென்றன் சித்திரத் தங்கை மாரே
கான்வன மதிலே நம்மைக் கைகலந் திழிவு செய்த
மான்முனி தன்னைக் கண்டோம் வார்த்தையில் குழைக்கார் சோற்றை
வான்முனி தன்னை நீங்கள் வளையுங்கோ சிணமே யென்றாள் 640
செப்பிட மூத்த கன்னி தேவிய ராறு பேரும்
அப்படி ஒன்று போலே அவர்வளைந் தாதி தன்னை
முப்படி யெங்கள் தம்மை மொய்வன மதிலே வந்து
கற்பினை இகழச் செய்தக் கள்வரே யென்று சூழ்ந்தார்
சூழ்ந்தே நமது துகிலைமுன்னம் சுழியஞ் செய்த மாமுனியைப்
பூந்தே நெருங்கித் துகிலுரியப் பிடித்தே யிழுத்து நாமீன்ற
சாந்தோர் மக்க ளேழ்வரையும் தரவே யென்ன செய்தியென்று
ஓர்ந்தே கேட்போ மென்றுசொல்லி ஒன்றுபோலே வளைய லுற்றார்
வளைந்த போது மாயவரும் மனது ளுபாய மொன்றெடுத்து
இளந்த மொழிகள் சொன்னாக்கால் இளப்ப மிதுவே யாகுமென்று
குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழு மினவழியும்
நுழைந்தே யெடுத்து நொடிப்பொழுதில் நேரேகொண்டு தாறோ மென்றார்
தரு (பல்லவி)
பிள்ளையை நாம்தா றோம்-நீங்கள்பெற்ற
பிள்ளையை நாம்தா றோம்
அனுபல்லவி
பிள்ளையை நாம்தாறோம் கிள்ளை மடவாரே
கள்ள மொழியில்லை உள்ளதைச் சொல்லுகிறோம் (பிள்ளை)
சரணம்
காட்டு வனத்திலே கண்டுங்கள் தம்மையும்
லோட்டுகள் பார்த்துநீ ருடுகலை தோற்றதும்
மேட்டுக ளாயென்னை யெரிக்கத் துணிந்ததும்
பூட்டுகள் சொல்லாமல் பெண்ணேநீர் பெற்றிடும் (பிள்ளை) 660
அருவன மீதினி லமிர்தவாழ் கெங்கையில்
சொரூபமாய் நீங்கள் சுனையாடும் வேளையில்
வரும்வழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு
கருவது கொண்டுநீர் காட்டினி லீன்றிடும் (பிள்ளை)
உறுவன மீதிலென் உபாயத்தை யறியாமல்
முறுவல்செய் தென்னைநீர் மொழிந்தது கண்டுநான்
இறுவான மேலோக எழுபுவி உயிரெனப்
பெறுகநான் செய்திடப் பேணியே நீர்பெற்றப் (பிள்ளை)
மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருக்க வேண்டாம்
தொடவும்நீர் ஞாய மில்லை தூரவே யகல நின்று
அடவதில் பெற்ற பிள்ளைக்(கு) அடையாள மறியச் சொன்னால்
உடனிப்போ மதலை தந்து உலகமு மருள்வோ மென்றார்
அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதி யான
மெய்யனே வொப்பில் லாத வேதநன் மணியே கேள்மோ
வெய்யநல் மதலை யீன்று வெட்கமு மிகவே யாகிக்
கையது தப்பி யோடக் கண்டமோ மதலை யென்றார்
தரு(பல்லவி)
மதலையைத் தாருமையா-நாங்கள் பெற்ற
மதலையைத் தாருமையா
அனுபல்லவி
மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது
குதலைமொ ழிகள்கேட்டுக் கொஞ்சிக் குழைந்திருக்க (மதலை) 680
சரணம்
பெற்றநா ளின்றுவரைப் பிள்ளைதனைக் காணாமலே
மெத்தம னதுநொந்து மெய்யந்த ளருதையோ (மதலை)
வாலைப்ப ருவத்திலே வனத்தில்ம யக்கமிட்டுக்
கோலம ழித்தவேத கோலகால மாமுனியே (மதலை)
பாலர்பெற்ற நாள்முதலாய்ப் பன்னிரண்டு ஆண்டுவரைக்
காலதி ழகாமலே காட்டில்த வசிருந்தோம் (மதலை)
ஊணுஉ றக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை
மூணுநாலு காலம்வரை மூண்டத்த வசிருந்தோம் (மதலை)
சிங்கங்க ரடிபுலி திரியும்வ னத்தினூடே
நங்கைமா ரேழ்பேரும் நாடித்த வசிருந்தோம் (மதலை)
இத்தனைநா ளுந்தவ மிருந்துபின் னாங்களெல்லாம்
பெற்றநல் மனுவயிற்றில் பிறந்துவு தித்துவந்தோம் (மதலை)
முன்னிருந்த செல்வமென்ன மூதூர்சி றப்புமென்ன
மன்னுகந்த மாதுமையை மறந்துக லியில்வந்தோம் (மதலை)
ஆண்டச்சி றப்புமென்ன அருஞ்சுனை யாடலென்ன
காண்டம்நிறை வேறுதற்கோ கலியிலு தித்துவந்தோம் (மதலை)
உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுகில் ஞாயமென்ன
கொண்டிருந்த விதிப்பயனோ கூறுகலி மீதில்வந்தோம் (மதலை)
பந்தடிக்கும் வீரமென்ன பூத்தொடுக்கும் சாரமென்ன
முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலி மிதில்வந்தோம் (மதலை) 700
கன்னிய ழியுமன்னே காதல்தனைப் பெற்றதினால்
நின்னுபிள்ளைப் பாராமலே நெடுகந டந்துவிட்டோம் (மதலை)
கண்டுபிள்ளைத் தானெடுத்துக் கமலமுகத் தோடணைத்துப்
பெண்டேழும் பால்கொடாமல் பெருகவ னத்தில்சென்றோம் (மதலை)
பாலிளகி நல்லமிர்தம் பாலாய்ச்சொ ரியுதையோ
மாலழகா எங்களுட மனக்கவ லையைத்தீர்க்க (மதலை)
வர்ணநி றமதுவும் மக்களுட சாயலதும்
கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை)
அங்கமெல்லாஞ் சோருதையோ ஆவிமெத்த வாடுதையோ
தங்கமணி நாங்கள்பெற்ற தவமணியை எங்கள்கையில் (மதலை)
மங்காத தெய்வகுல மக்களேழு மேழ்வழியும்
சிங்கார மாகஇப்போ சீக்கிரம்நீர் தாருமையா (மதலை)
மதலையுந் தந்து எங்கள் மனச்சட வெல்லா மாற்றிக்
குதலைகள் தமக்கு இந்தக் குருமுடி சூட்டித் தர்மப்
பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்ன ராக
நிதமிருந் தரசே யாள நின்மக்கள் தருவீ ரென்றார்
தருவீ ரெனவுரைக்கு மடமாதே நீங்கள்
சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும் 720
பெருகியே வாழ்ந்திருப்பா ரங்கே சென்று
பெற்றிடத்தைப் பார்க்குகையி லுண்டு மங்கே
மருவி யென்னைக் கேளாதே காட்டினூடே
வாழ்ந்திருப்பார் கண்டுகொள்வீர் திட்டஞ் சொன்னோம்
சருவியென்னை நெருங்காதே மடவீ ரெல்லாம்
சந்ததியைத் தேடிவனஞ் செல்லு வீரே
செல்லுவீ ரெனமொழிந்த தேனே கண்ணே
சீமானே நாமாது புரக்கு மாலே
பல்லுயிரு மிகப்படைத்தப் பாக்கிய வானே
பருவனத்தி லெங்களைநீர் பற்றி வந்து
தொல்லைவினை செய்துநாம் சுமந்து பெற்ற
சுத்தகுல மானதெய்வச் சான்றோர் தம்மை
இல்லிடத்தி லிப்போது தருகி லானால்
இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே
சந்தியி லேற்றுவோ மென்ற மாதேகேளு
தருவதுண்டோ முன்கடன்கள் தந்த துண்டோ
பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும்
பகருவே னுங்களைப் பார்பழித்துப் பேச
முந்தியிதை யுரைத்திட்டே னோடிப் போங்கோ
உலகநருள் அறிந்தாக்கால் சிரிக்க லாகும்
சிந்தனைக்கே டாகும்வரை நிற்க வேண்டாம்
தேன்மொழியே மறுவிடம்போய்த் தேடு வீரே
தேடுவீ ரெனமொழிந்த இந்திர ஜாலம்
தெய்வமட மாதரொடு செலுத்த வேண்டாம்
நாடுபதி னாலறியு முமது கள்ள
ஞாயமது எங்களொடு நவில வேண்டாம்
வீடுவழி தோறும்விருந் துண்டு முன்னே
மெல்லிமட வார்சிலரைக் கொள்ளை கொண்டு
பாடுபட்ட பாட்டையினி நாங்கள் சொன்னால்
பாரிலுள்ளோ ருமைப்பேசிப் பழிப்பர் காணும்
பழிப்ப ரெனச்சொன்ன இளம்பாவை மாரே
பாரிலுள்ளோ ரறிவார்கள் பச்சை மாலின்
களிப்பதுவுங் காண்டமுறை நூல்கள் தோறும்
காரணத்தைச் சொல்வார்கள் கருதிக் கேளு
சுழிப்பதுவு மமைப்பதுவும் நமக்குள் ளாகும்
தோகையரே யிதுஎனக்குச் சொந்த வித்தை
குளிப்பதுவில் சுனையாடி மதலை யீன்றக்
கோலமதைச் சொன்னாக்கால் குறைவ தாமே
குறைவதா மெனச்சொன்னக் குறவா கேளும்
கோவேங் கிரிவாழுங் குலமா மாதர்
மறைமுதல்வ னானசிவ னார்க்கு நாங்கள்
வந்துசுனை யாடிகெங்கைத் திரட்டி யேகத் 740
துறையறியாக் களவாண்டுத் தேய்ந்த கள்வா
தொல்புவிக ளறியாதோவுன் சுத்தக் கள்ளம்
இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும்
ஏமாளிக் கள்ளரென எவருஞ் சொல்வார்
கள்ளரெனச் சொல்லிவந்த மாதே நீங்கள்
களவாண்டீர் கயிலையதி லீசர் முன்பில்
வெள்ளமது திரளாமல் கள்ளத் தாலே
வெம்மருண்டு நின்றவித வெட்கங் கண்டு
வள்ளல்சிவ னாரறிந்துக் கலியில் சான்றோர்
மேல்வழியில் பிறக்கவென்று சபித்தார் முன்னே
உள்ளதெல்லாஞ் சொல்லிடுவே னோடிப் போங்கோ
ஓகோகோ வெனச்சொல்லி யுறுக்கி னாரே
உறுக்கிநீ ருரைத்தசுணை யுமக்கே யல்லால்
ஓவியங்க ளேழ்பேர்க்கு முண்டோ சொல்லும்
இறுக்கிவைத்த நீரிளகச் சேய்த கள்ளம்
ஈசர்முத லெல்லோருஞ் சொல்லு வார்கள்
சிறுக்குமிடை மாதருட வீட்டில் வெண்ணெய்த்
திருடியுண்டக் கள்வரெனச் சொல்வா ரும்மை
பொறுக்கஇனி மாட்டோங்கா ணுமது ஞாயம்
புகன்றிடுவோ மினியண்டம் பொடியத் தானே
பிட்டுக்காய் மண்சுமந்து வைகை தன்னில்
பிரம்படிகள் பட்டதுவும் போதா தென்றோ
கெட்டுமிகப் பட்டீரே இடைச்சி கையால்
கேள்வியில்லா முப்பரத்தில் கிழவன் போலக்
குறுங்கண்ணி போட்டிழுத்துக் குனிய வைத்தப்
பொட்டதுவுங் குலைத்திடுவோம் நாங்கள் பெற்றப்
பிள்ளைதனை தந்துபுவி யான வைப்பீர்
ஆடெடுத்தக் கள்வரல்லோ வுமக்குச் சூடு
அணுவளவுந் தோற்றாம லலைந்து எந்த
நாடடுத்த இடமெல்லாம் வேசம் போட்டு
நாணமதொன் றில்லாமல் நாரி மார்தம்
வீடடுத்த மனைதோறு மிரட்டிக் கொஞ்சி
வேசியொடு கூடிவிளை யாடுங் கள்ளக்
கூடெடுத்த மறையல்லோ எங்கள் தம்மைக்
குவலயத்தில் கள்ளியெனக் கூறி னீரே
இன்னமுண்டு வுமக்குவெகு பங்கந் தானும்
எடுத்துரைத்தா லிப்போது இளப்ப மாகும்
முன்னமைத்தப் பாலரையு மினத்திற் சேர்க்கை
முழுவதையுந் தந்துபுவி யாள வைப்பீர் 760
இன்னிமிப்போ தாராம லிருந்தீ ரானால்
ஈரேழு யுகமறிய இழுத்து உம்மை
அன்னமது அருந்தாம லிழுத்துக் கொள்வோம்
அதுவறிந்து பாலரைத் தந்தாளு வீரே
பாலரைத்தந் தாளுவீ ரெனமொழிந்த பாவைமாரே
பகற்பொழுது கழித்துவெள்ளி யுதிக்கும் நாளை
காலமேநீ ரெல்லோரும் வந்தீ ரானால்
கதிரவனும் போயடைந்து கங்கு லாகும்
சீலமுடன் தென்றலுக்கு மழைக்கும் நானோர்
சீட்டெழுதித் தேவரையும் வருத்தி யிங்கே
கோலமண முங்களைநான் புரிந்து கொள்வேன்
குடிலதுக்குப் பேயமுது குடித்து வாரும்
அகிலத்திரட்டு அம்மான




திருக்கல்யாணம்
வாருமென மங்கையர்க்கு விடையருளி மாயன்
வருணனுக்குந் தென்றலுக்கும் வான லோக
ஊருமிக அறிவதற்கு ஓலை தானும்
உடனெழுதி அழைச்சிடவே வந்தார் வானோர்
பாருடனே சங்கமது திரண்டு கூடிப்
பாவாணர் கீதமுறைப் பாடி நிற்க
சீருடனே கதிரவன் போயடைந்து மீண்டு
தினகரனு முதித்துவெள்ளி தோன்றிற் றன்றே
தோன்றிய பொழுதே வானோர் ஈசர்மாது
துதிமுகனும் நான்முகனுந் தொல்வி மாதும்
கூன்றிருஷி தேவரிஷி வேத மானக்
குணயிருஷி கிணயிருஷி குலமா மாது
தான்றுசர சோதிபக வதிமா மாது
சதாகோடி தேவரம்பை சங்க மாக
மன்றுபுகழ் நாரணர்க்குந் தெய்வ கன்னி
மடவார்க்கு முகூர்த்தமென வந்தா ரங்கே
வானமதில் டம்மான முழக்கத் தேவர்
மலர்மாரி சலமாரி வானோர் தூவ
நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற
நாரிமார் குரவையிட நமனு மாற
தானமுறை மாமடவார் சமனங் கூறத்
தரணிதனில் நாரணர்க்குந் தைய லான
மேனமுகில் மாதருக்கு மணமா மென்று
மேலோகப் பந்தலது விண்ணோ ரிட்டார்
பந்தலுக்கு நமனாதி கால தாகப்
பக்கம்பதி னைந்தும்வளை பரப்ப தாகச்
சந்தமுடன் மேற்கட்டி மறைய தாகச்
சாருமேல் மேய்ந்ததுவே சமய மாக
அந்தமுறை சூரியனும் விளக்க தாக
அலங்கிருதம் வானக்கா யதுவே யாகச்
சொந்தமுள்ள சிவமதுவே பீட மாகத்
தேவரெல்லாஞ் செய்துபந்தல் சிறப்பித் தாரே
சிறப்பித்தோ மென்றுமகா தேவ ரெல்லாம்
திருமாலி னடிபணிந்து சொல்வா ரப்போ
பிறப்பித்தப் பெம்மானே யெவர்க்கு மாய்ந்துப்
பேணியமு தளித்துவுயி ரனைத்துங் காக்கும்
உறப்பித்த மாலோனே அய்யா வுந்தன்
உதவியினால் பந்தலது விதானஞ் செய்தோம்
நிறப்பித்த மணமதுக்கு நாங்கள் செய்யும்
நிசவேலை யின்னதென நிகழ்த்து வீரே 20
தேவருரை யதனைமிகக் கேட்டு மாயன்
திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார்
மூவருரை மாறம லெனக்கு முன்னே
மொழிந்ததெய்வ மாதர்களை முகூர்த்தஞ் செய்ய
நாவதுரை வருணனொடு வாயு தானும்
நளினமலர் தூவியது குளிர வீச
தேவருரை செய்துமிக நில்லு மென்று
தெய்வமட வார்வரவே சிந்தத் தாரே
சிந்தித்த வுடனே யுந்தத் தேன்மொழி மாத ரெல்லாம்
வந்தவ ரடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற
சந்ததி யேழு பேரும் தன்னுட கிளைக ளொக்கத்
தந்துநற் புவியை யாளத் தருவீரென் தலைவா என்றார்
தருவீரென மொழிந்தகுல மாதே பெண்ணே
தலைவருங்கள் மக்களையுந் தருக வுங்கள்
மருவினியக் கருவதிலே யுதிக்க ஈன்ற
மனுவழியை யென்முன்னே வருகச் செய்தால்
தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு
தாறதுவுங் கொடுப்பதுவுங் சபையிற் பேசி
பெருகவுங்கள் தம்மை மணஞ் செய்துநீங்கள்
பெற்றபிள்ளை தந்துபுவி யாள வைப்பேன்
புவியாள வைப்பேனென வுரைத்தீ ரெங்கள்
பொன்மானே கண்மணியே புரந்த மாலே
கவிஞோர்கள் போற்றுமதக் கன்றே தேனே
காயாம்பு மேனியரே கடவு ளாரே
இவிலோகக் கலியதிலே பிறந்த தாலே
இதுநாளும் வரையன்ன மீந்த பேர்கள்
செவியாலுன் பதமடைந்தா லவர்க ளேது
செய்வார்க ளெங்களொடு சேர்க்கை தானோ
சேர்க்கையுண்டோ எனமொழிந்த மானே பொன்னே
தேன்மொழியே யுங்களுக்குத் தெரியா வண்ணம்
வார்த்தையிது சொல்லாதே நமது வாழ்வும்
மக்களுட வாழ்வதுவு மொன்று போலே
மார்க்கமுடன் வைத்தரசு ஆள நானும்
மனமதிலே நினைத்திருக்கும் வளமை யாலே
கோர்கையிது அவர்கொடுக்கல் வாங்கல் தன்னை
கூறிமிகக் கேட்டுமணங் கூடு வேனே 40
மணங்கூடு னேனென வுரைக்க மாயன்
மனுவழியி லுதித்தகுலச் சான்றோ ரெல்லாம்
அணங்குஇன வழிபோலே யவர்கள் வந்து
ஆயனடிப் போற்றிமிக அன்பாய் நிற்கக்
குணங்குறிகள் கண்டுமிக அரியோன் மெச்சிக்
கொடுப்பதென்ன இவர்களைநான் மணங்கள் செய்தால்
பணங்கள்மிகப் பொன்காசு ரெம்ப ரெம்பப்
பாவையர்க்குச் சீதனங்கள் பகரு வீரே
பகருவீ ரெனமொழிந்த அய்யா நீரும்
பரிசமென்ன எங்களுக்குப் பண்பா யீவீர்
உகருமெனச் சொல்லிடவே சான்றோ ரெல்லாம்
உடையகுலச் சொக்கருமே உரைப்பார் பின்னும்
தகருமோ நான்தருகுந் தங்கக் காசு
சதாகோடி யெண்ணமது தாணோ இல்லை
நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தை யெல்லாம்
நினக்கறியச் சொல்லிடுங்கோ நிசமா யென்றார்
ஆண்டவரே யிப்பரிசந் தருவீ ரானால்
யாமடியா ராளுகின்ற வஸ்து வெல்லாம்
கூண்டபண்டம் பொன்னுடைமை யாடு மாடு
குருபரனே யாங்கள்வரை யுமக்குச் சொந்தம்
மீண்டடிமை முக்காலு முமக்கு நாங்கள்
விலையடிமை யானோங்காண் விரைய மாலே
பாண்டவரைக் காத்துரெட்சித் தாண்டாப் போலே
பாவையரு மக்களுமும் பக்கந் தானே
பக்கமது என்றவுடன் மாயன் தானும்
பதறாதே உங்களையுங் காத்துக் கொள்வோம்
ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வோம்
ஒன்றுபோ லிருந்துபுவி யாள்வோம் நாமும்
தக்கமதொன் றில்லையப்பா இந்த வார்த்தை
தந்ததுவு மீந்ததுவுந் தவறோ இல்லை
மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய
மெல்லிகையைப் பிடித்தெனக்கு விடுகு வீரே
கைப்பிடித்துத் தாருமென வுரைத்தீ ரையா
கணவரல்லோ முன்னவர்க்குக் கருணை மாலே
மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவி யல்லோ
மேதினிக ளறியஅவ தாரஞ் செய்தீர்
எப்படித்தா னாங்கள்கையைப் பிடித்து ஈய
இவ்வுலகி லவதார இகனை தானோ
எப்படியோ அறியோங்கா ணென்று சொல்லி
ஏந்திழைமார் கைப்பிடித்தங் கீய லுற்றார் 60
திருமுகூர்த்தம்
ஈந்திடவே மாயவருந் தங்கத் தாலே
இரத்தின வொளி போல்வீசுந் தாலிதன்னை
மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ
மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ
ஏந்துபுவி தர்மமது தழைத்து வாழ
ஈசர்முத லெல்லோரு மிருந்து வாழ
சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ
தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி
தாலிமிகத் தரிக்குகையில் மாத ரோடு
தமனியநா தன்மகிழ்ந்து தானே சொல்வார்
கேலிமிக வுரையாதீ ரெனக்கு இன்னம்
கெணிமடவா ரநேகமுண்டு மணங்கள் செய்ய
சோலியல்லோ ஆச்சுதென்று நினையா துங்கோ
தொல்புவியை யரசாள்வீர் நிசமே சொன்னோம்
மாலினுட சூட்சமகா கோடி யுண்டு
மனதுசடை யாமல்மிக வாழுவீரே
வாழுவீர் கூடுவிட்டுக் கூடு பாய்வேன்
மறுவூரு பாய்ந்துவுங்கள் மனதில் வாழ்வேன்
மாளுவேன் முழித்துப்பின் வருவே னுங்கள்
மனதலைந்து எனைஇகழ்ந்து மாளா துங்கோ
தோழிலே யிருந்துபல சூட்சஞ் செய்வேன்
தோகையரே நீங்களெல்லா மெனது பாயம்
நாளிலே யறிந்துமிகக் கண்டு கொள்ளும்
நாரணரி னடப்பிதுவே ஞாயஞ் சொன்னோம்
சொன்னமொழி தனைமறந்து நீங்க ளெல்லாம்
தூசணித்து எனைக்கபட மெண்ணா துங்கோ
என்னுடையத் தொழிலிதுவே உங்க ளோடு
இருந்துதர்ம முடிசூடி யாளு மட்டும்
பொன்னுடைய நாடதற்கு வானோர் தம்மைப்
போகவிடை கொடுக்கஅவர் போனா ரங்கே
கன்னிமட வார்கையைப் பிடித்துக் கொண்டு
கருணைபதித் தெருவீதி வருகின் றாரே
சிந்து
தெருவீதி நாம்வருவோம்-எந்தன்
தேவியரே கன்னிநாயகமே
மருவினிய கன்னியரே-பதி
வலங்கள்சுற்றி நாம்வருவோம்
கண்மணியே காரணரே-ஓகோ
காயாம்பு மேனியரே
மண்ணேழ ளந்தவரே-ஓகோ
மாயவரே பதிவலம்வருவோம்  80
பெண்ணரசே மாமயிலே-நமது
பொறுமைப்பதி வலம்வருவோம்
தண்ணமுள்ளத் தேவியரே-நமது
தருமபதி வலம்வருவோம்
ஆண்டமணி நாயகமே-உலகு
ஆண்டருளு மெங்கண்மணியே
காண்டம்நிறை வேற்றவந்த-எங்கள்
கணவனாரே நாம்வலம்வருவோம்
பொறுமைப்பதி வலம்வருவோம்-கலிப்
பொடியயாமம் போட்டிடுவோம்
தருமமது தழைக்கச்செய்வோம்-பதி
தானேவலம் நாம்வருவோம்
பொல்லாத வகையழித்து-சுவாமி
புதுப்பூமி தோணவைத்துக்
கல்லாதார் கருவறுத்து-சுவாமி
கதியபதி வலம்வருவோம்
நாடும்பதி தலங்கள்வாழும்-பெண்ணே
நம்முடைய இனங்கள்வாழும்
கேடுகலி கோடுஅறும்-பெண்ணே
கிளர்ந்தபதி வலம்வருவோம்
ஆகாத பேரையெல்லாம்-சுவாமி
அக்கினிக்கு விருந்தளித்து
வாகாகத் தர்மபதி-சுவாமி
வாழும்பதி வலம்வருவோம்
முன்குறோணி உதிரமதால்-பெண்ணே
உதித்துவந்தக் குலங்களெல்லாம்
தன்குணத்தால் மாண்டுபோக-பெண்ணே
தர்மபதி வலம்வருவோம்
மாற்றானொ ழியவேணும்-சுவாமி
மக்களெல்லாம் வாழவேணும்
காத்தோரைக் கைவிடாமல்-நாமள்
கருணைபதி வலம்வருவோம்
தெண்டமிறை பொய்களவு-பெண்ணே
செய்யும்வண்டக் குலங்களெல்லாம்
கொண்டகலி கூடமாண்டு-குரு
நாதர்பதி வலம்வருவோம்
வீணான கலியுகத்தை-சுவாமி
வெய்யோனுக் கமுதளித்துச்
சாணாரை வைத்தாள-சுவாமி
தர்மபதி வலம்வருவோம்  100
நாடும்பதி துலங்குதடி-பெண்ணே
நல்லசிலை குதிக்குதடி
ஆடுமாடு அருகுதடி-கர்த்தா
ஆவினங்கள் தோணுதடி
நல்லபதி துலங்கணுமே-சுவாமி
நாடுதர்ம மாகணுமே
பொல்லாப்பது ஒழியணுமே-சுவாமி
புத்தியொன்றாய்க் குவியணுமே
கோவில்தெரு துலங்கணுமே-நம்மள்
கோட்டைவெளி யாகணுமே
தேவருட நல்திருநாள்-பெண்ணே
தினமும்வந்து கூடணுமே
தங்கத்தொட்டில் தண்டாயமும்-சுவாமி
தாண்டும்பதி வீதிகளும்
சங்கமுடன் டம்மானமும்-சுவாமி
தலத்தில்வந்து தோணணுமே
கோட்டையிட்டுக் கொடியுங்கட்டி-பெண்ணே
கொத்தளமாய் மேடைசெய்து
நாட்டையெல்லாம் தான்கிலுக்கி-பெண்ணே
நமக்குப்பதி யேறணுமே
நம்பினோரைக் காக்கணுமே-சுவாமி
நாடுகட்டி யாளணுமே
அல்பலங்க ளேறணுமே-சுவாமி
அவதாரங்கள் நடத்தணுமே
சிங்காசன மேறணுமே-பெண்ணே
தீவட்டிகள் போடணுமே
கண்காட்சை காணணுமே-நானும்
கன்னியரைக் கைப்பிடித்தால்
பாக்கியங்கள் பெருகணுமே-சுவாமி
பாரிலுள்ளோர் காணுதற்கு
ஆக்கிநாங்கள் படைக்கணுமே-சுவாமி
அமுதருந்தி வாழணுமே
மக்கள்பெற்று வாழணுமே-பெண்ணே
வந்துவென்றான் கால்பிடித்து
ஒக்கல் நின்றோ ராடணுமே-பெண்ணே
உற்றபள்ளி மெத்தைசூழ
பால்பவிசு பெருகணுமே-சுவாமி
பஞ்சணையில் கொஞ்சணுமே
தூலருமை யறியாமலே-கலி
தொல்புவியு மயங்கணுமே  120
சமுசாரி யாகணுமே-பெண்ணே
தலையிற்சோறு சுமக்கணுமே
ஓவுதாரி யாகணுமே-பெண்ணே
உங்களைநா னடிக்கணுமே
அயலூரு போகணுமே-சுவாமி
அழைக்கநீரும் வரவேணுமே
கயல்விழிமா ரொருவர்க்கொரு-சுவாமி
கத்துதல்கள் கொள்ளணுமே
நானும்வந்து நிரத்தணுமே-பெண்ணே
நல்லமொழி சொல்லணுமே
தேனும்பாலும் போலநாமள்-பெண்ணே
தேசமதில் வாழணுமே
கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி
களிப்புச்சொல்லி யேசணுமே
பெண்டுகட்கு விங்கியென்று-சுவாமி
பொல்லாப்பய லேசணுமே
காரணத்தை யறியாமலே-பெண்ணே
கலிப்பயல்கள் தானகைத்தால்
மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்
செம்பவள நற்பதியின்-சுவாமி
தெருவலங்கள் சுற்றிவந்தோம்
பொன்பதிக்குள் நாமள்புக்கி-மறு
பொழுதுவந்தால் வருவோமையா
சோபனம்
சோபனமே சோபனமே-சுவாமி திருநடன சோபனமே
தேவர்குரு நாரணர்க்கும்-அவர் தேவியர்க்கும் சோபனமே
பூமலர்ந்த ஈசுரர்க்கும்-அவர் பொன்தேவி மாமதுமைக்கும்
காமனந்த நாரணர்க்கும்-தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே
பூமடந்தை நாயகிக்கும்-நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும்
பார்மடந்தை நாயகிக்கும்-சிவ பகவதிக்குஞ் சோபனமே
தெய்வானை நாயகிக்கும்-நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும்
அய்வர்குல நாரணர்க்கும்-கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே 140
துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே 144

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-16




மாதுநல்லா ளேழ்வரையும் மணமுகித்து மாயவரும்
தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார்
கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி
பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி
நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று
சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை
எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும்
முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென
நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச்
செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால்
குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே
சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே
வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து
சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது
நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும்
வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும்
கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம்
விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும்
பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள்
குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம் 20
அய்யா திருநாள் இகனை நடத்துதல்
அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து
இப்போ திருநாள் இகனைநடத்த வென்று
நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள்
தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால்
இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப்
பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை
ஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமெனத்
தேச மதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள்
பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும்
மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும்
கொழுந்துபன்னீர் சந்தமமும் குலுங்கா விடலைகளும்
தென்னங்காய் மாம்பழமும் திகட்டாப் பலாக்கனியும்
வாழைக் கனியிலையும் வகிர்ந்தகமு கின்குலையும்
நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமென
இத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்குப்
பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக்
காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டு
மாதுக் கியல்வாய் வளர்கோர் வையுமணிந்து
பெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப் பொட்டுமிட்டுக்
கட்டன்ன மும்பொதிந்து கண்ணர்திரு நாட்கெனவே 40
மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன்
சிக்கெனவே நாதன் திருநாட்கும் போவோமென
வருவார் கிழமை மாதந் தவறாமல்
திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்தக்
கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டுப்
பட்டால் மேற்கட்டி பழங்கனிகள் தாந்தூக்கிப்
பிச்சிமா லைதூக்கிப் பெருவாடை தான்தொளித்து
மிச்சம்பழந் தூக்கி மிகுவாடை தான்தொளித்து
சந்தனங் கஸ்தூரி சவ்வாது புனுகுடனே
சிந்தரெவ ரும்போற்றத் தேன்கனிகள் மாங்கனிகள்
வெற்றிலை பாக்கு மிகுவாய்ப் பழங்களுடன்
தத்திதத்தி யாகச் சதாகோடி யாய்க்குவித்துப்
பாலாயி தங்கள்வைத்துப் பாவித்து நற்பதிக்குள்
மாலா யிருந்து மகிழ அலங்கரிப்பார்
தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்து
மருவினிய மாதர் மகாகுரவை மலமலென
டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள்
மும்மான முளக்கம் போலே மிகமுழங்க
கன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டு
பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு 60
நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு
மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர
எந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம்
கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு
கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும்
மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து
உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு
மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து
பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச்
சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக்
கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து
மெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக்
கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு
மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு
அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத்
துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம்
காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு
நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே
ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும்
நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத் 80
தங்கரத்தினத் தொட்டில் சுவாமி மிகஇருந்து
பெண்கள் மிகநன்றாய்ப் பெருகக் குரவையிட
சங்கு தொனிக்கச் சகலோர் மிகப்போற்ற
சிங்கமுக லெட்சுமியும் திருமுகத்தில் நின்றிலங்க
சான்றோர்கள் தொட்டில் தண்டாய முஞ்சுமந்து
ஆன்றோர் பதியை அலங்கிருத மாகிவரக்
கன்னிமார் நாதன் கைக்குளொழுங் காய்வரவே
மின்னும் பதித்தெருவும் மிக்கஇந் தப்பவிசாய்
உலாவி வரவே உற்றதெய்வ வானோர்கள்
குலாவி மகிழ்ந்து கிருபையுள்ள நாரணர்க்கு
பூமாரி பொன்மாரி பெரிய சலமாரி
நாமாரி வானோர் நாடி மிகத்தொளிக்க
எல்லோரும் பார்த்து இத்திருநாள் நல்லதென்று
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்தா ரம்மானை
நல்ல திருநாள் ஞாயிறாழ்ச்சை முழுதும்
செல்ல மறுநாள் திங்க ளுதித்தவுடன்
காட்சி நடத்திக் கரிய திருமாலும்
நாச்சிமார் கூட நாதன் பதிபுகுந்தார்
நாதன் பதிபுகுந்து நருட்கு விடைகொடுத்து
மாதரோடு நாரணரும் மகிழ்ந்திருந்தா ரம்மானை 100
இப்படியே திருநாள் இகனை மிகநடத்தி
நற்புடனே நாதன் நாயகிமார் தம்மோடு
கூடி யிருந்து குலாவி யிருக்கையிலே
வேடிக்கை யாக விதியின் படியாலே
நல்லபுகழ் சீதா லட்சுமிக்கு நாரணரும்
செல்லப்பட் டானதுவும் சிவந்ததங்கக் காறையதும்
இட்டுக் கலியாணம் இலட்சுமியைச் செய்யவென்று
மட்டநிக ரில்லா மாயன் மனதிலுற்றார்
தங்கத்தால் காறை தானதியப் பட்டதுவும்
அங்கே மிகவருத்தி ஆயிழைக்குத் தான்கொடுத்துத்
திருநா ளிகனைத் திடிமன் முழக்கமொடு
பெருமாளும் லட்சுமியைப் பேறாய் மணமுகித்துத்
தெருவலங்கள் சுற்றிச் சிறந்த பதிபுகுந்து
மருவினிய நாதன் மாதரோடு வீற்றிருந்தார்
நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலே
வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார்
ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே
வைய மளந்த மாயத் திருமாலே
எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய
மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார் 120
அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார்
இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு
நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில்
வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார்
அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ
இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்
சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள்
வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக
வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும்
ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார்
நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து
காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார்
நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க
எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி
சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத்
தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார்
தெய்வமு மவராய்த் திருவுள முமவராய்
வைய மகிழ மனுப்போலு மிருந்தார் 140
வத்துவகையும் மாடாடு சொத்துக்களும்
ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார்
அம்மை மார்களுக்கு மதலை ஈதல்
இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே
நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி
மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள்
குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார்
ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து
நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி
வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க
ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க
பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும்
வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே
கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும்
விண்ணாண மாக வீரநா ராயணரை
கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா
இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக
விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்
மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்
நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே
மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே 160
இப்போ மதலை எடுத்து மிகத்தாரும்
செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார்
நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய
முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த
மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும்
குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன்
பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக்
கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர்
என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால்
பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ
தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து
மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு
ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து
மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான்
தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை
ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல்
மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன்
மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து
சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று
பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத் 180
துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன்
வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன்
பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச்
சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக்
கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து
அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப்
பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான்
சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக்
கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான்
பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென
இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து
சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம்
பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான்
பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும்
மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது
என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும்
மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார்
பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ
வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த
காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ 200
பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே
ஆரு மொருதர் ஆராட்டங் காணாத
மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும்
ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல்
கரிய அவரவர்கள் காடு வடவுகளில்
உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக்
கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றி
ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று
மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து
பாச மறுத்துப் பக்கத் துணைமறந்து
வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து
காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து
மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக்
குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப்
பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்
ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை
நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்
பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி
முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து 220
வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து
கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று
கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்
ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்
தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும்
பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த
உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ
நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை
தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து
பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம்
வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும்
தந்து புவியாளத் தலைவரே யும்முடைய
விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும்
தாருமென மாதரெல்லாம் தாழ்மையுட னீதுரைக்க
ஆருநிக ரொவ்வா அச்சுதரு மேதுரைப்பார்
மாதேநா னிந்த வையகத்தில் வந்தவுடன்
பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தம்வழியில்
தேர்ந்துந்தன் மக்களிலே சீசனென நான்தெரிந்து
கூர்ந்தெந்தன் கையதுக்குள் கொள்ளுகிறேன் வேலையது
இன்னாபா ரென்று ஏழுபேரையு மெடுத்து 240
நன்னகரி பார்க்க நாத னிடுப்பில்வைத்து
வட்டமிட்டு ஆடி மாதரொவ் வொருவர்க்கொரு
கிட்டவிட்டுக் காட்டிக் கிளிமொழிமார் கைக்கொடுத்தார்
பாலரையும் பார்த்துப் பாவையரைப் பார்த்தவுடன்
சீலமுள்ள லெட்சணமும் சிற்றிடையு மொப்பனையும்
ஒப்பமென் றெல்லோரும் உம்பருந் தாமகிழ்ந்தார்
செப்பமுள்ள மாதர் சிரித்து மனமகிழ்ந்து
அன்றுபெற்ற பிள்ளை ஐந்திரண் டானதிலே
மன்றுதனை யாளும் மாபாவிச் சோழனவன்
கொன்றானிரு பேரைக் கூடைதலை மீதில்வைத்து
சொன்னீரே சுவாமி தோன்றியிப்போ வந்தாரோ
தேன்மொழியே மாதே சொன்னபிள்ளை ரண்டுடைய
மானதிய மக்களென மாயவருந் தானுரைக்க
அப்போது பெண்கள் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போ வரவில்லையே எப்போ வருவார்கள்
மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரே
செப்பினீரே நீங்கள் சென்றமக்க ளெப்போவென்று
பொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்து
நல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்குகையில்
நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில் 260
கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும்
ஆக்கினைகள் செய்து ஆழநர கமதிலே
தாக்கியும் மக்களைநான் சடத்தோ டெழுப்பிமிகத்
தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களே
மருவினிய மாதே வாக்கிதுவே தப்பாது
என்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம்
நன்றாய் மகிழ்ந்து நாடிமக்க ளையெடுத்து
மடிமீதில் வைத்து மலர்ந்முகத் தோடணைத்துக்
கண்ணோ மணியோ கரடரா சன்மகனோ
விண்ணோர்கள் மெச்சும் வேதப் பரஞ்சுடரோ
தோணார்க் கரியத் துய்யதிரு மாலீன்ற
சாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோ
தெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோ
வையம் புகழவந்த மக்களே என்றுசொல்லிச்
சந்தோச மாகத் தார்குழலா ரேழ்பேரும்
புந்தி மகிழ்ந்து பூரித் தகமகிழ்ந்தார்
நாங்கள்செய் ததவத்தில் நாலிலரைப் பங்குவரம்
வாங்கினோ மையா மாயவரே யின்னமுண்டு
நாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டு
தாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து 280
என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்று
இன்று வரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமெனச்
சீதைக்கு நல்ல சிறந்தமக னையெடுத்து
மாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோருங் காண
மணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும்
குணமுடனே காட்டிக் கொடுத்தாரே யெம்பெருமாள்
நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள்
வல்ல கதிரோனும் வந்ததுகா ணம்மானை
கதிரோனுந் தோன்றிக் கங்குலவெளி யாகுகையில்
திருநா ளிகனை செய்து நிறைவேற்றி
மக்களெல்லாஞ் சூழ வந்து மிகப்பணிந்து
மிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித் தாம்போனார்
கைக்குள்ளே நிற்கும் கரியச் சன்மாரும்
மைக்குழல் மாரோடும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
பின்னுஞ் சிலநாள் பெரியதிரு நாள்நடத்தி
மன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார்
பெண்க ளவரவர்க்குப் பெரிய அரங்குவைத்துத்
தங்கள் தங்களுக்குச் சாமான்க ளுங்கொடுத்துப்
பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய்
மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி 300

இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்தி
அன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டு
பின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்து
அன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில்
பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும்
துள்ளியே மாயன் திருவிளையாட் டுமாடி
மங்கையர்கள் காணாமல் மறுமனைக ளும்புகுந்து
கொங்கைமட வாரோடு கூடிவிளை யாடிடுவார்
மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால்
வாய்ந்த வுலகில் வளர்ந்தபனை யோலையில்லை
கூடி மடவாரோடு குவிந்துவிளை யாடுகையில்
நாடி மடவார்கள் நாயகிமார் தங்களுக்குள்
ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்து
திருமருக ரோடே தெய்வமட வார்வெகுவாய்ச்
சண்டை பிடிப்பார் தந்ததுபோ ராதெனவே
கண்டமட வாரோடும் கனிவாகப் போறீரென
அவள்வீட்டில் போறீர் அவளோ டதிகமுமாய்
உபகாரஞ் செய்யுகிறீர் உள்ளாகத் தானிருந்து
என்னோடு பேச்சு இப்படியே செய்வீரென
மின்னோ வியங்கள் வெகுவாகக் கத்திடுவார் 320
சாமியொடு வெகுவாய்த் துரைத்தனங்க ள்தான்பேசி
நாமகலப் போவோம் எனநடந்து மக்களுட
வீட்டி லவர்போவார் வீரமால் தானறிந்து
கூட்டி வரப்போவார் குளிர்ந்த மொழியுரைத்து
அள்ளித் தருவேன் அனந்தவரா கன்பணமும்
வெள்ளியும் பொன்னும் மேன்மையுள்ள சீலைகளும்
உந்தனக்குப் போதும் உடைமை மிகத்தருவேன்
அந்தப்பெண் ணார்களுக்கு அதுக்கதுபோ லேகொடுப்பேன்
எழுந்திருநீ யென்று எட்டிமிகக் கைப்பிடித்துக்
குளிர்ந்தநய வார்த்தைக் கோதைமின்னார் தாங்கேட்டுச்
சிரித்து மகிழ்ந்து தேற்றலிது நன்றெனவே
உருத்துமிகச் செய்வதெல்லாம் ஓவிய முமறிவேன்
ஏன்காணு மும்முடைய இந்திரசால மெல்லாம்
கோன் கிரிவேந்தே கொஞ்சமெனக் குத்தெரியும்
மருட்டா தேயுங்காண் மாய்மால முந்தெரியும்
உருட்டா தேயும்போம் உமதுதொழி லுந்தெரியும்
எனக்கேற்ற வார்த்தை இதமதிமாய்ப் பேசிடுவீர்
தனக்கேற்க நெஞ்சம் தானறியா தேயிருக்கும்
கன்னி யுமதுடைய கருத்தெல்லாம் நானறிவேன்
நின்னு சடையாதேயும் நீர்போவு மென்றுரைப்பாள் 340
அப்போது மாயன் அதுக்கினிய வார்த்தைசொல்லி
இப்போது நீயும் எழுந்திருந்து வாவெனவே
மாய னழைக்க மாது மெழுந்திருந்து
நாயன் பிறகே நடந்து மிகவருவான்
வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார்
சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய்
இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி
ஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலே
செந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்து
முந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில்
சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்து
மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும்
நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்து
வான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச்
செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து
தெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடி
வருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத்
திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென
சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று
நம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக் 360
கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்று
அஞ்சலெனச் சாமளா தேவிதனை யழைத்துக்
கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு
என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே
கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி
மஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்று
விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள்
திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியே
கன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவி
மின்னி னொளிமதலை வீரத் தனமாக
நாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவி
உடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத்
தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார்
அவதாரத் தின்படியே அன்றமைத்த பெண்கொடியை
உபகார மாமணங்கள் உடையவரே நீரருளி
வையகத்தோ ரெல்லாம் மனமகிழ்ந் திருக்கையிலே
செய்யஇந்த மாயம் செய்வாரோ மாயவரே
ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான்
போரா வழியானப் பொல்லாப்புச் செய்தாரோ
ஆதியே யவர்கள் அநியாயஞ் செய்ததென்ன 380
சோதியே யென்று தொழுதார் மடவார்கள்
அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன்
சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்து
அன்றைப் பொழுது அவன்வந் தடிதொழுது
நன்றினிய எங்கள் நாரணரே நாயகமே
பத்துநா ளுண்டும்நான் படுத்திருக்கு மவ்வளவில்
பெற்றுச் சழிந்தவர்போல் பெரியபூவண் டர்வடிவாய்
வந்தென் றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார்
சந்தமுடன் நானுரைத்தச் சட்டமற வாதபடி
கொஞ்சநாள் தோப்பு குளிர்ந்தபதி யானதிலே
அஞ்சிரண் டாண்டு அதில்வாழ்ந் திருந்துபின்னும்
மூலகுண்டப் பதியில் மிகஇகனை செய்யெனவே
ஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதி லில்லாமல்
பெண்களைக் கண்டவுடன் பூத்தான மாய்மகிழ்ந்து
கண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்கு
நினைவு மயர்ந்து நிலைபேர்ந் திருக்குகிறான்
நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்கு
கோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிக
எண்ணி யிருக்குகிறான் இப்போது அங்கேசென்று
நண்ணிமூ லப்பதியில் நாடிவரச் சொல்லிவிடு 400
வரவில்லை யானால் மாதருடன் மக்களையும்
சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீ
என்றுசொல்லி நாளும் எட்டுரண் டாச்சுதையா
அன்று வுரைக்க அய்யாமிகக் கோபமுற்று
பாவிப் பயலே பகராம லித்தனைநாள்
மேவி யிருந்தாயே மெல்லி யிழந்தேனே
தீட்டிவைத்த சொற்பனத்தைச் சொல்லா திருந்ததினால்
கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத் தோற்றேனே
முந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால்
என்ற னிளமயிலை இழந்துமிக வாடேனே
பூவண்ட ரானால் பெரிய பிதாவல்லவோ
மாவண்டப் பயலே வந்துசொல் லாதிருந்தாய்
அய்யா மூலகுண்டப்பதி எழுந்தருளல்
இப்போ பதிக்கு எழுந்தருள வேணுமென்று
மைப்போடு வொத்த மாதரொடு மக்களுமே
கூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில்
தேடிமூ லப்பதியின் சிறப்பெல்லாந் தான்பார்த்து
ஏலமே இப்பதியில் எட்டுநாட் குள்ளேவந்தால்
மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதே
கெடுத்தானே சொர்ப்பனந்தான் கெணித்தவுடன் சொல்லாமல்
கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும் 420
இப்பதியில் வந்தால் எள்ளளவுந் தோசமில்லை
எப்பதியு மிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லி
எல்லோ ருடனே எம்பெருமா ளுமகிழ்ந்து
அல்லல் வினைதீர்ந்து அதில்வாழ்ந் திருந்தனராம்
தோப்புப் பதிபோல் தொட்டிக்கட் டம்பலமும்
கோப்புப் புரையும் குளிர்ந்த மணியரங்கும்
பள்ளி யறையும் பார்சவுககை மண்டபமும்
துள்ளி யிகனை சுகசோ பனம்வரவே
பூம்பந்த லும்பெரிய புகுவீர மேடைகளும்
ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும்
சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்து
குணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார்
வாழ்ந்து திருநாள் வாரஞ்செவ் வாச்சைமுதல்
ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன்
கும்மி யிகனை குவலயத் தீர்ப்புரைத்துத்
தம்மியல்பு கொண்டு சுவாமிவெண் பட்டுடுத்தித்
தங்கக்குல் லாஅணிந்து தாமரிய நீராளம்
எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்து
ஆயிழைமா ரவர்க்கு அழகுவெண் பட்டுடுத்தி
வாயிதமாய் மாயன் மகிழ்ந்துமிகக் கொண்டாடி 440
மங்களமா யிகனை மகாயிகனைத் தான்கூறி
சங்க மகிழ சுவாமிதிரு நாள்நடத்தி
பாக்கியங் களோடே பவிசா யிருக்கையிலே
தாக்கமிக மாயன் சந்தோச மாய்மகிழ்ந்து
பொல்லாக் கலிநாடு பொன்றிவருங் காலமதில்
வல்லாமை யான வாய்த்த பகவதிக்கும்
மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும்
தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும்
கலிமுடியு முன்னே கலியுகத்தோர் கண்காண
வலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்று
முன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற் படியாலே
நன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று
அய்யா கன்னிபகவதி பதியேகல்
உன்னித் திருமால் உள்ளில் மிகஅடக்கி
வள்ளலந்த மாகுமரி வாழும் பகவதியை
மாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லி
உபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார்
கிழவனா கச்சமைத்து கிருதஞ்செய்ய வேணுமென்று
தளதளெனத் தேகம் தன்னுடம் புமினுக்காய்
மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய்
கக்க லிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி 460
தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டுப்
பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளே
கண்ணு மயிலே கனகவொளி மாமணியே
பெண்ணும்பிள்ளாய்ப் பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடு
என்றுசொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும்
குன்றுமணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரே
பேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும்
காதில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்து
ஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான்
பாரழியும் நாளோ பையரங்குக் குள்ளேவந்தாய்
எங்கிருந்து நீதான் எவ்வூ ருன்பேரேது
கிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தா னோவுரைநீ
அம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியே
சும்மா மயங்காதே சூட்சமொன்று மில்லையம்மா
பரமார்த்த மம்மா பழனிமலை யென்றனக்கு
விதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லை
இலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்தி
திலாடம திலிருந்து தீர்த்தமிங் காடவந்தேன்
வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பி யிங்கேதான்
உந்தன் திருப்பதியை ஒருஅகர மென்றிருந்தேன் 480
மகளே யென்பேத்தி மாஞால மொன்றுமில்லை
செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனா னிவ்வயதுள்
உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன்
பின்னுமொரு பேச்சு பேசுகிறா ரிவ்வுலகில்
இன்றுந் தன்பதியில் இருந்திந்த ராவிடிந்தால்
நின்றுநின்று போயாலும் நிச்சயம்பார்த் தேமகிழ்ந்து
என்னுடைய வூருக்கு ஏகவே ணும்பேத்தி
பொன்னு மகளே பேத்தியெனப் போத்திசொன்னார்
பேத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப்
போத்தியே யுமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன்
ஏற்றுநீ ரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும்
சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போத்தி
அம்மா நீசொன்ன அருமை யெனக்கதிகம்
மும்மால்க்கு மேற்று முகுந்தன் பதம்பெறுவாய்
தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மா
தேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார்
பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரி
காலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள்
தாக மதுதீர்ந்து தானிருக்கு மப்பொழுது
நாகரீகக் குமரி நாயகியு மேதுரைப்பாள் 500
போற்றி யுமக்குப் போதவய தானதினால்
நாற்றிசைக ளெங்கும் நடமாட்ட மாயிருக்கும்
ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளது
மாதோடே சொல்லும் மாபெரிய போத்தியென்றாள்
உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவே
மடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான்
கன்னி மாகுமரி காசித்தீர்த்தம் நிகராம்
பின்னு மற்றதெல்லாம் பிரமாண மப்படிதான்
இப்போ தொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார்
எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம்
என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள்
விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள்
அப்போது கிழவன் ஆச்சரிய மாய்மகிந்து
இப்போது வேணும் இவளை மிகஇளக்க
என்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்து
மன்றுதனில் கேட்ட வளமைகே ளென்றுசொல்லி
ஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம்
வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்து
வைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்து
கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம் 520
தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம்
மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம்
தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம்
புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம்
குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும்
கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம்
மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம்
மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித்
தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம்
தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும்
வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம்
நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள்
மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம்
டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம்
இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம்
காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும்
பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம்
இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால்
எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம் 540
அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே
சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த்
தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமென
அச்சமறப் பேச்சென்று ஆதியிலே கேட்டதுண்டு
அந்த முறைதானோ அவனியிலே கேட்கிறது
எந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்தி
போய்ப்பார்த் தால்தெரியும் பொன்மகளே பேத்தியென்றார்
வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்து
கண்ணரிய  போத்தி காரணத்து நற்போத்தி
திண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும்
தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று
வையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்தி
மாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்கு
ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர்
கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்தி
பூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன்
செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன்
செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள்
அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார்
இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன் 560
ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம்
கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது
பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு
வீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவு
கக்க லிருமல் கால்பெலக்க வொட்டாது
சிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும்
இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன்
சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால்
ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும்
பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு
நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென
நீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார்
அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள்
நற்போடு வொத்த நம்முடைய பேராநீர்
வேறாட்கள் கூடவெளியேறப் போகாது
வீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும்
உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்கு
எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும்
பைய இருந்திருந்து பாதை மிகநடந்து
நெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும் 580
பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள்
சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்து
அப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில்
பொற்பணிவே லைபுரியும் பெண்ணா ரறியாமல்
இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல்
கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம்
போக வென்றாலும் பொழுது புறப்படுமுன்
ஏகவேணும் நாமென்று இயல்பா யுரைத்தனராம்
அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்று
இப்போ தெழுந்திரியும் இதுகடந்து போவோமெனச்
சொல்லிக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லகா ரியமெனவே நாம்போவோ மென்றுவுன்னி
அரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றுயென்று
கரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்று
குன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்து
உன்னி யிருப்பும்விட்டு உடனே வெளியில்வந்து
சன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடிப்
பின்னே விழுவார்போல் போத்திமுவ் னிற்கையிலே
மாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்துக்
கேது விளைத்துவந்த கிழவன்பின் னாலேகி 600
வந்தவளை யழைத்து வாவா பிறகெனவே
சந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார்
முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்க
அன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியே
முட்டாங்கு மிட்டு முகந்தெரியா வண்ணமவள்
கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும்
கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்க
மலர்மாரி தூவ வாயு மரைவீச
பூமி குலுங்காமல் பொருப்பு மசையாமல்
காமி குமரி காலசையா மல்நடந்தாள்
நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார்
வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்பு
தெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும்
பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட
திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி
முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென
வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக்
காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச்
சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள்
அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ 620
வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால்
வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள்
பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி
இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால்
தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும்
நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடி
கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம்
விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம்
என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலே
அறைந்த வாரி அதற்கு வடபுறமாய்
இடம்மான வோசை டகுடகா வென்றுமிக
இடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச்
சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே
மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக்
குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப்
பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப்
பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச்
சற்று வடக்கேறி தான்பார்த்துப் போவோமென
என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும்
நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே 640
தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடி
கெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோ லேயுரைத்தாள்
குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் கோலூன்றி
மின்னிடையே பையவென்று மெல்லவடக் கேறினராம்
வடக்கேறி மாதை வலம்விட்டுத் தான்கூட்டி
நடக்கையிலே ஆளிரச்சல் நாடி மிக்ககேட்டு
அன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகி
சின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள்
கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்தி
நண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்தியைக்கேள்
சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால்
எனைக்கூட்டிக் கொண்டு இதில்விட் டகலாதேயும்
திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரே
பக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமே
கைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டிப்
பைக்குள் வைத்துக்கொண்டு பகலோ னுதிக்குமுன்னே
என்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால்
பொன்பதி னாயிரத்தால் புனைந்தவொரு தாவடந்தான்
உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே
எம்முடைய மானம் இருக்குதுகா ணும்மிடத்தில் 660
ஒருவ ரறியாமல் உபாயமாய்க் கொண்டுவென்னை
திருவனப் பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள்
பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்துவைப்பேன்
காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன்
மலங்கா தேபேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்க
கலங்கா தேசேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன்
என்றுரைக்கப் போத்தி இளவரசி யுமகிழ்ந்து
அன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்து
ஆளுக் கிடைநடுவே ஆயிழையும் பேத்தியுமாய்த்
தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம்
வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும்
சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும்
செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும்
புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே
போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும்
சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ  லுண்டு மென்று
பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம்
சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள்
உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்று
மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி 680
குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கி
நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார்
பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள்
சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர்
ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக்
சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள்
ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும்
நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம்
செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும்
நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா
என்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார்
நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும்
இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன்
பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக்
கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடி
நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே
காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை
பகவதிக்குச் சச்சிதானந்த வடிவைக் காண அருளல்
பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது
சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும்
பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் 700
நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூ பம்போலே
தண்டை யணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும்
தெண்டையக்கண் மாலும் கிரணவொளி ரத்தினம்போல்
செம்பவள வாயும் சிறந்தபீதாம் பரத்துடனே
அம்பலத்தே நின்று ஆனந்த மேபுரிய
ஆனந்த மான அழகு பகவதியும்
தானந்த மான சச்சிதானந் தவடிவைக்
கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கே
நின்று அவள்பார்த்து நெஞ்சந்தடு மாறினதை
கிழவ ரறிந்து கிளிமொழியை விட்டகல
பழவ ரொருசொரூபம் பாச மிகஎடுத்துக்
கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில்வந்தார்
மைவளைய மாது மாறிமன தேதிரும்பிப்
பார்த்தா ளருகில் பண்பாக நின்றதொரு
கூத்தாடித் தாதனையும் கோதைமிகக் காணாமல்
பாவிக் கிழவன் பாதங்கள் செய்தானே
லாவிலாவிக் கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள்
அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மை
மெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானே
எங்கே யினிக்கண்டு என்பதியில் போவேனான் 720
திங்க ளுதிக்குதல்லோ சேவல்குர லாகுதல்லோ
நிலவெளிச்ச மாகுதல்லோ நிற்கிழவனையுங் காண்கிலையே
குலமுழிவ தாச்சே குவலயங்கே டாகுதல்லோ
மான மழிந்தாச்சே வையகமும் பேசாச்சே
தான மழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சே
இக்கிழவ னம்மை இளக்கியிங்கே கொண்டுவந்து
மொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோ
என்னபோ லாச்சு என்தலையி கூறிதுவோ
அன்னம்போல் வார்த்தை ஆசார மாயுரைத்துச்
சந்தியில்பந் தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்று
சுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கி
புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும்
சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம்
என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று
பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள் 740
தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமென
உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து
இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி
மனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல்
பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று
சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள்
மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள்
சாருமிட மற்றார்போல் தனியே புலம்பலுற்றாள்
கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள்
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள்
தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்று
வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள்
சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப்
போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி
உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும்
எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான்
சங்குள் பிறந்த சமயத்திருமணியும்
எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும்
தனியே யிருந்து தனதுள் ளகமடக்கி
மனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள்
கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக்
களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள்
கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும்
காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே
ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே 760
சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோ
அன்னபட்சி மாமரங்காள் ஆவினங்கா ளூர்வனங்காள்
என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித்
தாரீரோ என்றனுட சந்தபதி நான்போக
வாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்கு
என்று புலம்பி இளங்குழலித் தேடுகையில்
குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம்
வேளை யறிந்து மெல்லி பொன்வண்டதுபோல்
சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய்
இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபக லேகும்வரைத்
தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்து
பகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன்
சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாட
ஆடிக் களித்து அகமகிழ்ந்தா ரச்சுதரும்
கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார்
நாட்டை யழிக்க நமக்கு வொருமுகூர்த்தம்
பேட்டைதர்மந் தோணப் பொகுதின் றென்றனக்கு
என்று கும்மிபோட்டு இளங்குழலை யும்பார்த்து
இன்று இருவென்று எம்பெருமா ளுமாட
நல்ல பகவதியாள் நாடிப்பொன் வண்டதுபோல் 780
செல்லப் பதுங்கித் திசைமயக்க மாயிருந்தாள்
பகற்பொழுது மாறி பகவா னடைந்தபின்பு
உகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகி
பத்து வயசுப் பிராயம்போ லேசமைந்து
சித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள்
இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகி
பண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையே
நாலுதிசை யுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையே
கோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும்
சற்றுந் தெரியலையே தலையிலெழு துஞ்சிவனே
முற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோ
நரைக்கிழவ னம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான்
உரைத்திடுவா ரிந்த ஊரி லொருவசனம்
மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழ வன்கூட
போய்ப்பிழைத்தா ளென்று புவனஞ்சொல் வாரிதுவே
நம்முடைய மட்டும் நாயன் விதித்தானோ
சும்மாயிந் தக்கிழவன் சோலிபண்ண வந்தானோ
படைத்த பரனே பாவியே யென்றலையில்
நடத்தை யெழுதி நவின்றதுவு மிப்படியோ
பரதவித்து மாது பலபலவா யெண்ணிமிக 800
விரதமுற்று மாது மெல்லி யிளமயில்போல்
ஆளுக் கிடையே அன்னம்போ லேதிரிந்து
கூழு குடித்தக் குறுங்கிழவ னைத்தேடி
திரியும் பொழுது செய்யதிரு மாலவரும்
பரியேறும் பெருமாள் பகவதியைக் கண்டவரும்
இனியிவளை யிந்த ராச்சியத்தில் நம்முடைய
மனிதப்பெண் கூட்டிலிட்டு மாலையிட வேணுமென்று
நினைத்துப் பெருமாள் நேரிழையைத் தான்மயக்கி
புனைத்தொரு பெண்ணுடைய பொற்கூட்டுக் குள்ளடைத்து
தாண்டவ மாடுஞ்சபையில் சனங்களெல்லோ ருமறிய
காண்ட மிகப்படித்துக் கன்னிப் பகவதியை
மனுவறிய அண்ட வானலோ கமறிய
இனிமணங்க ளிவளை யாம்புரிய வேணுமென்று
நிச்சித் தொருபெண் நிலையுங் குறிபார்த்து
எச்சரிக்கை யான இளமயிலாள் தன்கூட்டில்
அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய்ப்
படைத்தோ ரருளால் பாரீரேழு மயங்கப்
பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும்
நாடி யவள்படித்த நற்காண்ட மானதுதான்
புகன்றா லுலகம் பொடிப்போ லுதிர்ந்திடுமே 820
உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது
மனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கி
தனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்து
ஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத்
தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச்
சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித்
தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து
பகவதியம்மை காண்டம் படித்தல்
பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள்
ஆவி மறுக அவனிதனி லெங்களையும்
சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய்
போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே
பொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச்
சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும்
வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுட
மெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப்
பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்து
தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே
இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால்
பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியை
என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய் 840
உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயே
என்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீ
பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோ
பொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ
எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போ
மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ
வேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல்
பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும்
சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும்
ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்று
அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ
மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ
இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம்
சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ
ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ
பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே
போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு
ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே
என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு 860
மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்
புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய
நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே
நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள்
நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணக் குயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா
உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று
துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள்
சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு
தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு
வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன் 880
சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும்
அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்
தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே
உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும்
மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே
அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கி
இப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன்
சோலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப்
பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடு
தோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாது
எங்கள் கண்மயக்கம் எல்லா மிகத்தெளித்து
தங்கள்தங்கள் பதிக்குத் தானேக விட்டுவிடு
கேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண்
உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல்
எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல்
போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல்
ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே
மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப் 900
வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும்
வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதே
நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும்
மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம்
உபாய மறிய ஒருவரா லேலாது
என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன்
நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார்
பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலே
கண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதே
அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி
குமுதவாய்ப் பெண்ணே குமரிப் பகவதியே
தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே
மானே குயிலே மரகதப்பெண் ணோவியமே
கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலே
செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே
பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை
கலியழிய வயது காலஞ்சரி யானதினால்
வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான்
பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து 920
சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்து
நாடாள நமக்கு நல்லபல னானதினால்
தாடாண்மை யான சத்தி பகவதியே
உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு
தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான்
கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும்
மயிலனையா ளான மாது சரஸ்வதியும்
மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள்
சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள்
மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள்
குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரை
பூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள்
பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல்
எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில்
வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு
கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும்
திலிய னவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனே
வருகுமந்த வேளையிலே  மாமுன சீராமரிஷி
திருஉமையாள் பங்கரோடு சென்றுநின் றேதுரைப்பார்
நல்லபர மேசுரரே நாட்டிலிந் தக்கலியன் 940
வெல்லக்கூ டாதவரம் வேண்டியிவன் போறதினால்
எக்கால மையா இவன்முடி வாவதுதான்
அக்கால மெல்லாம் அருளுமென்றா னீசுரரை
நல்லபர மேசுரரும் நாடிமுனி கேட்டதற்குச்
சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்துக் கேட்டிடுநீ
சிவன் ரோமரிஷிக்கு அருளியது
மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும்
தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளு
பொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவ(து)
எல்லா மறிய இலக்கறியக் கூறினராம்
இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம்
சிவஞான நினைவு செல்லாது தேசமதில்
கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்
தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார்
நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில்
போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார்
பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகை யாயிருக்கும்
கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம்
கூடி யுடன்பிறந்த கோதையரைப் பெண்ணெனவே
நாடி யவரெண்ணி நாணியிறப் பார்கோடி
வாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள் 960
மாரி மறைந்துவிடும் வாயுவது நோய்வீசும்
கீழ்ச்சாதி யெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர்
மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார்
வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும்
அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும்
மனுவதிலே கற்பிகழா மாதர்கற் பேயழந்து
தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்
தெய்வ நிலைகள் தேசமதில் காணாது
மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது
இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது
பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார்
தெய்வ மடவார் தேசமதி லேவருவார்
வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார்
பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும்
சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க்
கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம்
உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடி
வாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனே
தாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான்
இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே 980
அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும்
பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான்
துன்னுபுக ழீசுரரே தெய்வமட வார்களெல்லாம்
கலியுகத் திலவர்கள் கட்டா யொருதலத்தில்
சலிவில்லா தேவாழ்ந்து சந்ததிகள் வாழ்வுடனே
வாழ்ந்திருப்பா ரென்று வகுப்புரைத்த ரீசுரரே
கூர்ந்திவர்கள் தம்மைக் கோலமணஞ் செய்கிறதார்
யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான்
தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளு
நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக்
கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத்
தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து
மெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத்
தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும்
பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால்
நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம்
தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுது
ஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால்
திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம்
என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று 1000
நன்று நன்றையா நல்லகா ரியமெனவே
சந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசே
முந்தோர் மொழிந்த முறைநூற் படியாலே
வந்ததுகா ணிந்தவிதி மங்கையரே யுங்களுக்கு
எந்ததுகா ரியம்பெண்ணே என்னையொன்றுஞ் சொல்லாதே
தலையில் விதிபிள்ளாய்த் தங்கடங்க விட்டுவிடு
கிலேச மதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடு
கொண்டுவந்தேன் பெண்ணே குவிந்தவதி எந்தலைக்குள்
பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரே
பெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக் கண்ணரசே
கண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்து
வாடி யிருந்தேனடி மங்கையுனைக் காணாமல்
கோடி யிருந்தேனடி குமரியுனைக் காணாமல்
தாபத்தா லுன்னைத் தவமிருந்து கண்டேனடி
கோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதே
என்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிகக்
கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்க
அம்மை பகவதியாள் ஆகங் களிகூர்ந்து
நம்மைப் படைத்தது நாயன்முன்னா ளென்றுசொல்லி
இருந்த பதியை எண்ணிöண்ணி மாதுநல்லாள் 1020
பொருந்தும் விழியாள் பெருமிமிக நீருவிட்டு
அழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக
ஒழுகாக நிற்கும் உலக நருளழவே
மாமரங்க ளெல்லாம் பூத்துச் சொரிந்தழவே
ஐயோ நானிருந்த அம்பலமும் வீதிகளும்
வையா வழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனே
சிங்கா சனமும் செகல்த்துறையும் வாவிகளும்
மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனே
இலாடக் கிழவன் இராத்திரியில் வந்துநம்மைக்
கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனே
பொன்னா பரணமும் பெட்டகமுந் தோற்றேனே
முன்னா ளெழுத்தோ முத்துமண்ட பமிழந்தேன்
ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந் தோற்றேனே
வேண்டும் நருட்கள்வந்து விழுந்திறைகள் தோற்றேனே
தண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனே
துணைக்கிள்ளை யானத் தோழியரைத் தோற்றேனே
பணப் பெட்டகமும் பைம்பொன்னரிய பட்டுகளும்
நவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனே
செகமெல்லாங் கூடிச் சேவிப்பதுந் தோற்றேனே 1040
இத்தனைநா ளுமிருந்து இந்தக்கெதி யோஎனக்கு
முத்திபெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோ
அய்யோநான் பிறந்த அன்றுமுத லின்றுவரை
வெய்யோன் முகம் வரையும் செல்லியறியேனே
பாவிக் கிழவன் பரிகாசஞ் செய்வானென்று
ஆவி யறிந்திலனே அங்கமது வாடுதையோ
மூன்றுபொழு தாச்சே ஊறும்நீர் தானருந்தி
மீண்டென் சரீரம் விழலா யெரியுதையோ
பாலு பழமும் பருந்தேனுஞ் சர்க்கரையும்
நாலு ரண்டான நல்ல ருசியதுவும்
பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோ
ஆவிதடு மாறுதையோ ஆதிபர மேசுரரே
என்று பகவதியாள் எண்ணமுற்றுத் தானழவே
மன்று தனையளந்த மாலுமிக அமர்த்தித்
தேனினிய கண்ணே தேவி பகவதியே
நானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய்
நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமோ
மேன்மைய தாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன்
பொன்பணங்க ளானப் பெட்டக முந்தருவேன்
என்பதி யுந்தருவேன் ஏறும்பல் லாக்கருள்வேன் 1060
தண்டாய மேறிச் சனங்கள்மிகப் போற்றிவரக்
கொண்டாடும் நல்ல குருபாக்கி யந்தருவேன்
திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன்
அருள்ஞானப் பெண்ணே அங்கிருந்த சீரதிலும்
அய்யிரட்டி யாக அணிவே னுனக்குடைமை
பொய்யென் றிராதே பொன்முடியின் தன்னாணை
என்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக்
குன்று தனமின்னாள் குமரி மனமகிழச்
சத்தியஞ் செய்து தலையைத் தொட் டாணையிட்டுப்
புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள்
நாதனுட தஞ்சமென நாடி யகமகிழ்ந்து
மாது குமரி வாயுரை யாதிருந்தாள்
பகவதி திருக்கல்யாணம்
அப்போ திருமால் ஆனந்த மேபெருகி
இப்போ பகவதியை ஏற்றமணஞ் செய்யவென்று
உன்னித் திருமால் ஒருசொரூபங் கொண்டனராம்
மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டு
எக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம்
அக்காலத் தேவர் ஆகாய மீதில்நின்று
பந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்கச்
சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ 1080
தெய்வரம்பை மாதர் திருக்குரவைத் தான்பாட
ஞாய மனுவோர் நற்குரவைத் தான்பாட
பகவதிக்கு நல்ல பாரமணக் கோலமிட்டுச்
சுகபரனு மாலைமணச் சொரூப மெடுத்தவரும்
பிச்சிமா லைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்து
மிச்சமுடன் வெள்ளி விரலாளியோ டரைஞாண்
பொன்தா வடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை
மின்தா வடம்பூண்ட மெல்லி பகவதிக்குக்
கண்ணானத் தாலி காரணத்து நற்தாலி
விண்ணோர்கள் மெய்க்க விறலோன் மிகத்தரித்தார்
கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்கு
இன்று மணம்புரிந்தார் இறையவர்தா னென்றுசொல்லிக்
கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார்
தொண்டான சான்றோர் துதித்து மிகப்போற்றிக்
கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்குச்
சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவே
எல்லோருங் கொண்டாடி இருந்தார்கா ணம்மானை
நல்லநா ராயணரும் நாடி யகமகிழ்ந்து
செல்லமட வாரோடு சேர்ந்துவிளை யாடிருந்தார்
அந்தந்தப் பெண்களுக்கு அழகுசொரூ பம்வேறாய்ச் 1100
சொந்த விளையாட்டுத் தோகையரோ டாடினராம்
ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும்
நாடி யுகத்தீர்ப்பும் நல்லமக்க முக்கறிவும்
சொல்லி யாமங்கூறிச் சோபனங்கள் தான்பாடி
நல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே
பார்வதி திருக்கல்யாணம்
ஈசுரனுக் கேற்ற ஏந்திழையாள் பார்வதியை
வீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக் காட்டாளை
மாமணங்கள் செய்ய மனதிலுற் றெம்பெருமாள்
பூமணங்கள் னானப் பொன்னுநல்ல பார்வதிக்கும்
மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்துத்
திங்கள் சடையணிந்து சிவவேட முந்தரித்து
மாத்திரைக் கோல்பிடித்து மார்பில்தா வடம்பூண்டு
காத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார்
மாதுமைக்கு மங்களங்கள் மயேசு ரன்கூற
சீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்துக்
கருத்தா யிருந்து காண்டமது சொல்லியவர்
உருத்தா யிருந்துஓதுவார் மோகமதாய்ப்
பெண்ணே யென்பார்வதியே பேரான மாதுமையே
கண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமே
கூட்டுக் கிளியே கொடியிடையே நிங்களெல்லாம் 1120
நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோ
தனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவது
கனியேயென் மாமணியே கருத்தி லறியீரோ
உள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டு
தள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோ
ஊணுறக்க மில்லை உங்களைநா னெண்ணியெண்ணிக்
கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனே
வாரீரோ பெண்காள் வயிறுபார்த் தன்னமிடப்
பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோ
அன்னங்காய் வைத் அமுதருந்து மென்றுசொல்லி
முன்னிங்கே வந்து முத்தமது தாரீரோ
வாழை பழங்கனிகள் மாம்பழம் பாலக்கனிகள்
கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோ
கண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லா தோவியங்காள்
பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியே
எண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியே
கண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோ
என்றுபர நாதனுமோ இவ்விசைகள் தான்கூற
மன்றல்குழ லுமையாள் வாய்த்தகுலப் பார்வதியாள்
வந்துதிருப் பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து 1140
முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர்
அய்யோஈ  தென்ன அடிமாறு காலமதோ
பொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம்
இப்பா ருலகில் இப்படியே வந்ததென்ன
முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
பொல்லாக் கலியுகந்தான் பொடிப்பட்டுப் போறதற்கோ
வல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான்
என்றந்த மாதர் இதுகூற மாயபரன்
நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்த துபோலே
வந்தீரே யின்று மணம்புரிய வேணுமென்று
புந்தி யயர்ந்து பூவை முகங்கோடி
அண்ணர்நா ராயணரும் அவனிதனில் வந்தாரென்று
பெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்று
வந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள்
அண்ணரது நீயென்றாய் ஆயிழையே யிவ்வுகத்தில்
இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமே
மனதயர்ந்து மாதர் வாயுரைக்கக் கூடாமல்
தனதுள் முகங்கோடி தலையில் விதியெனவே
நின்றார் மடவார் நினைவு தடுமாறிப்
பண்டார மாகப் பரமன் வடிவெடுத்துத் 1160
தாலி மிகத்தரித்தார் தாமனந்தப் பெண்ணார்க்கு
ஆலித்துப் பார்வதியை அரவியுட னீராட்டி
சந்தோ சமாகத் தாலி மிகத்தரித்தார்
வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாட
வையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாட
செய்யத் திருமால் செய்சடங்கு கள்முடித்து
வாழ்ந்திருந் தார்பெண்களுடன் மாய பரநாதன்
தாழ்ந்து மடவார் சரண மிகப்பூண்டு
பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிக
வேண்டும்பல பாக்கியத்தோ(டு) இருந்துமிக வாழ்ந்தார்
இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள்
நற்புடைய தேர்திருநாள் நாளுங் குறையாமல்
செய்து இகனை சிவசோ பனம்புரிந்து
பைதுவளை மாதரோடு பண்பாக வேயிருந்தார்
மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய்த்
தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந் திருந்தனராம்
வாழ்ந்திருக்கும் நாளில் மாதுகன்னி மார்களோடும்
சேர்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்து
கூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்கு
சோபனங்கள் கூறி சுத்தமங்க ளம்பாடி 1180
சேவரசி யான மெல்லியரை நாமணந்தான்
மோகினி வேடம்
புரிவதற்குக் கோலம்புகழ்ந்தணிய வேணுமென்று
மதிபெரிய மாதை மயக்கமிகச் செய்திடவே
மாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொரு
சீதுகந்த மாதரென செம்பவள மாயவரும்
காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்து
மார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக் காலிலிட்டுச்
சேலை யுடுத்துச் சிவந்தகொசு கமுடித்து
மாலை யணிந்து மார்பில் கலையணிந்து
கோர்வை யணிந்து குழலு மிகமுடித்துத்
தோர்வை படாதே தோகையென வேசமைந்து
மஞ்சணையும் பூசிபிச்சி மாலை மிக அணிந்து
செஞ்சொல் மதனைச் சிந்தைக்குள் ளேயிருத்தி
எடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமது
கடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்று
சொல்லி மகிழ்ந்து தோழிநா மென்றுசொல்லி
முல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந் தொழுவார்
நாட்டி லுள்ளோரும் நாரணர்பெண் ணானாரென்று
தாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்துநிற்பார்
இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும் 1200
பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக் காட்டாளை
மயக்கிக் கொடுவரவே மாமோகப் பெண்ணேவ
இச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொரு
சச்சு ரூபமாகத் தான்கண் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் பேர்பெரிய நாயகமே
கண்ணே யென்மாமணியே கனகவொளி மாதவமே
கலியுகத்தி லேபெரிய கண்காட்சை தன்னுடனே
வலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும்
நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும்
சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனே
சத்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும்
புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும்
கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்து
கொங்கை மடவார் கூடி மிகப்புரிந்து
கும்மி யடித்துக் குரவை மிகக்கூறி
எம்வடிவு போலே ஏலங் குழலார்கள்
ஆடிப் படித்து அலங்கிருத மாகியவர்
சாடிக் குலாவி சனங்கள்வெகுக் கூட்டமுடன்
பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையை
மேலுக் குகந்தவளே விடுத்துரைக்கக் கூடாது 1220
என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும்
அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடு
கூடி நடந்து கூண்டரிய நற்பதியில்
ஆடிக் களிக்கும் ஆதியிகனைச் சுபையில்
வந்தாளே மாய்கை மண்டைக்காட் டாளுடைய
சிந்தை யதற்குள்ளே சென்று மிகவிருந்து
திக்குத்திசைகள் தெரியாமல் தான்மயங்கி
பக்குவ மாது பறிகொடுத்தப் பேர்களைப்போல்
புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே
வலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்தி
மணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்றுக்
குணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப்
பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்று
சுகபதியா ளந்தச் சோதி பகவதிக்குள்
உள்ளாக்கிக் கொண்டு உற்ற திருச்சபையில்
துள்ளாட்ட மாகித் தொகுத்தகாண் டம்படித்தாள்
வையகத்தோர் காண வாழும் பகவதியாள்
செய்யமண்டைக் காட்டாள் சிறந்தகாண் டம்பிடித்தாள்
மண்டைக் காட்டம்மை காண்டம் படித்தல்
அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந் திங்குவரப்
பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான் 1240
இங்கே யிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும்
சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகிப்
பெண்ணாய்ச் சமைந்து பேராசையு மருளிக்
கண்ணான என்றன் கற்பு மழிந்தேனே
என்றுமா தேவி இப்படியே சொன்னவுடன்
ஒன்றுமறி யாதவர்போல் உள்ளந் தனிலடக்கிப்
பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்கக்
கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமது
எடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன்
முடுத்துந்த னூரில் முறைமயக்க வந்தேனோ
எனக்குப்பெண் ணில்லையென்று இரந்துகொள்ள வந்தேனோ
தனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோ
நாமிருப் பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோ
சோமவா ரமணிந்த சுவாமியுட கற்பனையோ
என்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள்
குன்றெடுத்த மாயக் கோபாலா வுன்சூட்சம்
எவரா லளவெடுக்க ஏலுங்கா ணுன்மாயம்
கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரே
இராமனாய்த் தோன்றி இராவணசங் காரமது
சிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்துப் 1260
போரில்நீர் நின்று பெருதுகின்ற வேளையிலே
மேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்து
ஆகாயத் தேகி அந்தரங்க மேகமதில் தூள்மூடக் கண்டு தேவர் மீகப்பதறி
வேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில்
போரிலும்நீர் நின்றுப் பொருது சரம்விளைக்க
வாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரே
ஆய்ப்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடிச்
சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்கப்
பேயையெல்லா மோட்டி பெரும்பூத மாயிருந்து
ஆயர்கள் பார்த்திருக்க அங்குபூ சாரியுமாய்த்
தின்றாயே யத்தினையும் சிலபூத மாயிருந்து
தொட்டிலா யர்மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்து
மட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்து
விளையாடி நீயும் வேறா ரறியாமல்
குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டி லேகிடந்து
சிறுகுழவி போலே சீறி மிகஅழுவாய்ப்
பருவதங்க ளுமெடுப்பாய்ப் பாலன்போ லேகிடப்பாய்
உன்சூட்ச வேலை உரைக்க எளிதாமோ
தன்சூட்ச மெல்லாம் தானுரைக்கக் கூடாது 1280
பலவேசங் கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய்க்
குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோ
ஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமே
பாரோ டுதித்துவந்த பாவையொடு செல்லாது
என்றுமண்டைக் காட்டாள் இசைந்தமொழி தான்கேட்டு
நன்றுநன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை
மண்டைக்காட்டம்மை திருக்கலியாணம்
பெண்ணேயுன் றன்பேரில் பேராசை ரெம்பவுண்டு
கண்ணே யுனையிப்போ கலியாணஞ் செய்வதற்கு
வேளையி தாகும் மெல்லியரே யென்றுரைக்க
மானதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறித்
தலையி லெழுத்தெனவே சத்தமுரை யாடாமல்
சிலைநுதலிக் கன்னி சொல்லுரையா தேயிருந்தாள்
இருந்த நினைவை ஏகமூர்த்தி யறிந்து
பொருந்து மதியானப் பிரமாதி வேசமதாய்
வேச மெடுத்து மேளத் தொனியுடனே
வாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க
தேச நருளறியத் தெய்வமட வாரறிய
மாய பரனும் மகாபெரிய நூல்முறையாய்
வாசக் குழலாளை மாலையிட்டா ரம்மானை
மாலையிட்டு நாதன் வாய்த்தசடங் குங்கழித்துச் 1300
சாலையத் துள்ளேகித் தானிருந்தா ரம்மானை
வள்ளி திருக்கல்யாணம்
மணமுகித்து நல்ல மணவறையக லுமிருந்து
துணைபெரிய மாயன் சுருதி முறைப்படியே
ஆகமத் திகனை அலங்கிருத மாய்ப்புரிந்து
நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே
கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்று
சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து
கேட்டு வரையாள் கோதைவள்ளி நாயகியைக்
கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து
எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை
மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே
வேலையிட்ட மான வேண்டுஞ் சடங்குசெய்து
நாளிட்டு வந்து நாளேழு மேகழித்து
வாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்து
மாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானை
தாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம்
பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம்
கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார்
வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில் 1320
ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம்
பாலராண் பெண்ணும் பாவையர்கள் பெற்றுமிகக்
கோலமுடன் வாழ்ந்திருந்தார் கூண்டரிய செல்வமோடு
பாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல்
நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார்
நாரா யணர்க்கு நல்லமுது தான்படைத்து
காரணரு மமுது கலந்துமிக வுண்டிருந்தார் 1327