அகிலத்திரட்டு அம்மானை
கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும் தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும் வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள் மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும் இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல் பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன் மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம் ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம் கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம் ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம் தாலம தேறித் தைரியப் பால்வாங்கி 20 மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார் நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும் மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார் சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார் செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார் வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார் இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத் தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே 40 வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே கலியன் பிறப்பு சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான் பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள் நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல் அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன் அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன் தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால் வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம் இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே 60 ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல் மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால் ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும் கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய் ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும் வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான் நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான் நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் 80 உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும் தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும் கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும் சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும் இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார் அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார் முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் 100 தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால் இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும் அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும் குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன் மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும் எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும் நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம் பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து 120 திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார் உடனே சிவமும் உள்ள மிகக்களித்து இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும் அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார் இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும் வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும் தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும் பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார் சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால் தலந்தா னிளகி தான்வந்த தாலேதான் 140 குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில் வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார் நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும் சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம் அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார் சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும் சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார் முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய் மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு விண்தா னுடம்பு விலாசக் குருவோடு சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள் 160 வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப் பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய் வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச் சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர் அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும் கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப் பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர் அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல் கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத் தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான் 180 புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய் சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம் உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும் மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான் வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில் ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும் மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய் ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும் பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும் பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில் குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன் பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது 200 கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான் இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும் அப்படியே நீசம் அடைந்த மனவீடும் உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால் எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும் அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும் சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும் துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும் மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும் விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும் துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும் பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க மருண்ட விழியால் மாகம துகலங்கி மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல் 220 விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல் பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல் சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக் கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம் பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும் சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே 240 கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க உடனே யவனும் உள்ள மிகக்களித்து விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத் தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான் என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன் அன்று மொழிய அமர ரதையறிந்து பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல் எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண் ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண் பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும் நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண் மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல் தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண் இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும் புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான் கலிச்சி தோற்றம் ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே 260 தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த ஆனா லெனதுடைய அளவி லளவாக மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண் என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார் நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார் அப்போது நீசன் அரனார் தனைநோக்கி ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய் அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய் குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய் மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய் யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய் கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய் சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய் தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய் நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய் இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் 280 உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய் அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல் மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச் சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான் அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும் திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார் அப்போது சத்தி ஆதி யடிவணங்கி ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில் விதியாயிடது விலாவி லொருயெலும்பைத் தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே என்று உமையாள் இப்படியே சொன்னவுடன் அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன் 300 பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத் தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால் நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார் மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள் கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன் அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம் கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக் கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான் படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான் பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன் 320 மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால் படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல் தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான் அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப் பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான் என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித் தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம் கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான் கலியன் கேட்ட வரங்கள் அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க 340 வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன் மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும் தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான் அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும் வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான் சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும் தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும் மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம் மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும் காலனின் மூலம் காமாட்சி தன்மூலம் வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம் கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம் துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும் ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம் வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான் அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம் பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும் நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும் துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு 360 அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான் ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும் நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும் ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும் கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும் தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும் லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும் ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும் கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும் ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும் பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும் கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும் மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும் இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும் மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும் 380 இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான் நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத் தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன் வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும் தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும் மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும் தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான் பறக்குங் குளிகை பரனையழைக் குங்குளிகை மறைக்குங் குளிகை மாலைவருத் துங்குளிகை சாலக் குளிகை சத்திவருத் துங்குளிகை வாலைக் குளிகை மறையைவருத் துங்குளிகை காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை கூளிகணத் தைவருத்திக் கொண்டுவரும் நற்குளிகை தேவரையும் வானவரைச் சென்றழைக் குங்குளிகை மூவரை யுமழைத்து மோடிசெய்யுங் நற்குளிகை பழிசெய்தால் வெல்லப் பாரத் தொழில்கள்முதல் சுழிவரைகள் தானறிய சூதானமாய்த் தாரும் மருட்டு விதமும் மாஞாலக் குண்டணியும் உருட்டுங் கொடிய உரம்பேசிய மதமும் வாள்வெடிக ளாயுதங்கள் வாய்தடுக்கத் தந்திரமும் வேழ்வருத்தி வேலைகொள்ள விசையடக்குந் தந்திரமும் 400 துட்ட மிருகம் தூறுவிசங் கொண்டதெல்லாம் கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும் கட்டுச் சுருக்கும் கடியபல வித்தைகளும் நட்டு முட்டுள்ள நவநிதிய வஸ்துக்களும் தந்திந்தப் பெண்ணுடனே சார்ந்துவிளை யாடிருந்து விந்து சனங்கள் மிகுவாகத் தானுதித்துக் கிளையோடே வாழ்வு கெறுவித மாயாண்டு வளையான மாதை மறவாம லெப்போதும் புத்திக் கருத்தும் பெண்பேரி லென்றனக்குச் சற்றும் நெகிழாமல் தாரும்வர மென்றுரைத்தான் அப்படியே வுள்ளவரம் அந்நீச னுக்கருள எப்படித்தா னென்று எண்ணினா ரீசுரரும் எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன் புண்ணிய நாதன் புகலலுற்றா ரம்மானை முப்பத்தி ரண்டறமும் முகித்திருந்த வொண்ணுதலே செப்புத் தனத்தழகு செவ்வே கருங்குயிலே வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு இன்ன விதமென்று இயம்புநீ பெண்மயிலே அப்போது சத்தி ஆதி யடிவணங்கி 420 நற்போது மறவா நல்லகன்னி யேதுரைப்பாள் சாத்திரமும் வித்தைகளும் தந்திரமுங் கேட்டதினால் சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண் டாக்குமென்றாள் அகத்தீசர் பிறப்பு உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும் இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார் அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய் மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும் கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும் கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் 440 அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும் நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம் கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும் வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும் பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும் இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால் எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும் கலியரசன் சத்தியம் என்று அகத்தீசர் இப்படியே தான்கூற அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித் தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம் நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார் தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப் 460 பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள் அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன் பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார் பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய் பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும் சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன் குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான் ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல் வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால் ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 480 தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும் நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும் நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும் ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும் பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும் கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும் இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன் சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார் புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே பண்டார மென்றும் பரதேசி யானவரைத் தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன் ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் 500 நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள் வீணமட நீசன் விளம்புவா னப்போது ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான் அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும் பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும் வீண்டிடறு செய்யேன் எனவேநீ யாணையிட்டால் ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சில்லமிட்டால் வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண் ணார்கள்முதல் பெண்தோற்று நானும் பெற்றவர முந்தோற்று மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்றுச் சேனைத் தளந்தோற்று சீமையரசுந் தோற்று ஆனைப் படைதோற்று அரசுமே டைதோற்று என்னுயிருந் தோற்று என்கிளையோ டேநானும் வன்னரகில் போவேன் என்றேவாக் குரைத்திடுநீ அப்போது நீசன் ஆண்டி யுரைத்தபடி 520 எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால் சொன்னபடி யெல்லாம் தோற்றிறந் தென்னுயிரும் வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன் சக்கராயுதம் பணமாதல் நல்லதுதா னென்று நாட்டமுற்றுச் சன்னாசி வல்ல பெலமுள்ள மாநீசா நீகேளு மந்திரங்க ளாலே மகாகோடி ஆயுதங்கள் தந்திரங்க ளாலே தான்வருத்த லாகிடுமே அப்படியே யொத்த அச்சரங்கள் தானிருக்க இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன நீகேட்ட சக்கரத்தை நிமலனவர் தாராமல் தொனிகெட்ட வெற்றிரும்பைச் சுமவென்று தந்தார்காண் இரும்பைச் சுமந்தால் இல்லைகா ணொன்றுபயன் தரும்பொருள்போ லுள்ள சம்பாத்தியந் தாறேன் மண்டலங்கள் தேசம் வாழ்வுக ளுண்டாவதற்கும் கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம்போல் தருகிறே னுன்றனக்குத் தான்வேண்டு நீயெனவே பருமுறுக் காயாண்டி பகர்ந்தாரே நீசனுக்கு அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை சக்கரத்தை வேண்டி சங்குசரத் தாமன் 540 மிக்கப் பணமாக்கி மிகுத்தசக்க ராயுதத்தைச் சபிக்கவே மாயன் சக்கரா யுதங்கேட்கும் நீச னிடத்தில் என்னைப் பணமாக்கி ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு இப்போ திடுஞ்சாபம் எப்போது தீருமென்று அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே கலிமா றும்போது கடருமென்றா ருன்சாபம் வலியான சக்கரமும் வாய்த்தபண மாகியதே பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக் கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான் பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான் அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம் தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார் முப்போது வுள்ள முறைபோலே மாயவரும் ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன் நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில் 560 கலியுகம் நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான் ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம் என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே வலியான மாதே மாநீசன் கேட்டதுதான் கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார் சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய் இதமான தேவர் எழுதினா ரகமத்தில் கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள் பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில் சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார் மாயனுக்கு ஆணை மாநீச னிட்டதெல்லாம் தூய பெருங்கணக்கில் தொகுத்தெகுதி வைத்தனராம் நீசக் கலியன் நிறைவோன் பதம்போற்றித் தேச மதில்வரவே சென்றான்கா ணம்மானை கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை நல்லவை மறைதல் தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில் 580 நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும் வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய் தள்ளாத சற்பம் தலையைந்து கொண்டதுவும் வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம் வல்லவெண் நரிகள் வளர்ந்துவரும்வெண் காகம் ஆளியொடு சிங்கம் ஆனையி றாஞ்சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள் மிருகமதில் வெள்ளைகொண்ட மேல்மிருக மானதெல்லாம் அறியவே குண்டம் அதுநோக்கிப் போயிடவே பால்நிற மான பட்சிப் பறவைகளும் மேல்பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே வெண்சாரை யைந்துதலை விசஅரவ மானதெல்லாம் துஞ்சாத நாதன் துணைதேடி நாடிடுமாம் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும் பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம் நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும் போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம் 600 முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள் பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம் சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம் கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம் தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம் அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய மாரி மறைய மலர்க்கண் மிகமறைய ஏரி பாழாக எண்ணினதே யம்மானை கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும் பொறுமை யுடைய பெரிய மிருகமதும் நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும் தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும் நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம் நடந்தோர்க ளெல்லாம் நாடி வழிவரவே கடந்தார்கள் வல்ல கலியைவிட்டுக் காடதிலே 620 காடதிலே செல்ல கனத்தபஞ்ச பாண்டவர்கள் வாட லுடவாய் வைகுண்டந் தானேக கண்டாரே தர்மர் கடந்துநின்ற நீதமதைப் பண்டாரத் தர்மர் பகர்ந்தா ரதினோடு நாட்டிலுள்ள நீதமெல்லாம் நடந்துகா ணாதேசென்றால் வீட்டி லுறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப் போவேனோ தர்மம் போனதினால் நாயடியேன் சேர்வேனோ குண்டம் செய்தர்ம மில்லையென்றால் என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல்தர்ம மேதுரைக்கும் பொன்றுவந்து லோகம் பொய்ப்பூண்ட தானதினால் எங்களுக் கங்கே இருந்தா லாகாதெனவே செங்கண்மா லாயனையும் தேடியே போறோமென்றார் அப்போது பாண்டவர்கள் அன்பாய்ப் பதம்பணிந்து இப்போது உங்களையும் இழந்துவிட் டிங்கிருந்தால் கர்மக் கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது தர்மத் தோடங்கே தான்வருவோம் கண்டீரே தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும் வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச் செல்லுகையில் மேலான மாமிருகம் வேதக் காராவுகளும் நாலா மொருதலையும் நல்ல அரவமதும் 640ந வெண்பட்சி யான மேலான பட்சிகளும் இன்பட்சி யெல்லாம் எங்கினிப் போவோமென்று கதறி யழுது கனைத்துநின்றார் காடதிலே பதறி யழுது பறவை மிருகமொடு நிற்கு மளவில் நீலவண்ணர் தானறிந்து பக்குவப் பிராயப் பண்டார மாகிவந்து ஏதுகா ணீங்கள் இந்தவன வாசமதில் ஓதிக் கரைய உங்கள்விதி யானதென்ன செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து அப்போது எல்லாம் அழுதழு தேதுசொல்லும் நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால் தேசமதி லெங்களுக்குச் செல்லவிருப் பில்லையையா என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பா ரன்போரே நன்றுநன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான் பாண்டவரைத் தர்மமதைப் பாரநீ தமதையும் ஆண்ட வைகுண்டம் அடையப்போ மென்றுரைத்தார் தெய்வக் காராவைச் சிறந்தவெள் ளானைகளை மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம் கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம் சம்பு சதாசிவத்தைத் தான்போற்றி யுள்ளிருத்தி 660 நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள வாசமுட னேவரவே வரம்வேண்ட நில்லுமென்று ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி கலியை யழித்துக் கடியதர்ம மாகவேதான் வலியயுக மாளுதற்கு வைகுண்டா வாவெனவே நிற்பாய்த் தவசு நீபோவென அனுப்பி நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறப் பொய்கையிலே வம்பை யழித்து வாய்த்ததர்ம ராச்சியத்தில் அன்பரோ டேயரசு ஆளத்திரு மால்வரவே வேணுமென்று நிட்டை விரும்பிச்செய் யென்றேதான் ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார் அன்னப்பட்சி யான அதிகப் பறவைகளும் பொன்னம்பல கிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார் சாத்திர மாமறையைத் தானெடுத்து மாமுனியும் சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம் 680 கலைமுனி ஞானமுனி தவசு இருத்திஸ்ரீ ரங்கம் ஏகவென் றெம்பெருமாள் கருத்தி லுறயிருத்திக் கட்டாய் வருகையிலே ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன் தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில் கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான் கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண் இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும் தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே காய மிழந்து காணா துருவெடுத்து மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால் சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும் மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும் பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும் 700 உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான் முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும் இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம் துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன் தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார் அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும் இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும் இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும் கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும் கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும் 720 தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர் நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம் வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும் பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து விலகியே போக வேணுமென் றெம்பெருமாள் மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார் இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில் செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில் நந்த கோபால நாராய ணாவெனவே மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய் ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள் ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும் 740 விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும் கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில் போகமுனி தவசு போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில் ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார் மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம் அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான் செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் உன்று வசனம் உரையென்றார் மாமுனியை என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும் அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும் கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா 760 நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால் வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும் நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால் என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித் தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான் நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க மலைப் புதுமை அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான் வேதா விதித்த மேலான ஆகமம்போல் நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான் இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது குழைவான வேதா குறியா யதையறிந்து 780 கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால் பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன் இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால் வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில் கைகண்ட வேதக் கருணாகரக் கடலே என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப் போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார் மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண் ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப் போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார் சலந்தவசு அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன் இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற 800 அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான் நல்லதுதா னென்று நல்ல முனியோடே வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண் கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில் சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும் வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச் சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல் பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும் பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும் என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான் நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும் பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள் அய்யாவே நானும் அதிகயி லாசமதில் மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து 820 வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள் அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக் குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார் படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம் கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன் ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார் என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார் அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும் நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில் தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில் சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில் வீரிய மான வெற்றிவிரு துக்குடையும் தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும் பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும் கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும் மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும் உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான் என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ 840 நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத் தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும் விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத் திடமுடனே போகமுனி தேவி சலமடவும் வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார் சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார் மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப் பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான் சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான் மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான் 860 கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான் வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான் ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான் கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான் மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான் கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான் மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான் வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான் மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான் ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான் அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான் குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான் கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத் தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப் பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை 880 கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம் அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும் தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான் மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள நந்திவரவு தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால் ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன் ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான் செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது பூலோக மேழும் பொன்னுலோக மேழும் தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும் ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம் பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம் 900 சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம் நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில் கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம் தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக் காய மிழந்து காணா துருவெடுத்து ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு 920 மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில் பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும் பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம் சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும் போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக் கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார் வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில் கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில் பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய் ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள் தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப் பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள் ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல் பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித் 940 தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும் வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான் பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார் இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால் ஆனதா லிந்த வழிவழியே யங்குளது போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும் ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும் கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில் ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும் மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால் தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார் மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம் ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே பேய்ப்பிறப்பு அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி இப்போது தானதவம் இல்லையே லோகமதில் தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும் பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க 960 என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான் நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும் இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப் பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார் என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில் சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண் என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும் வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும் பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில் இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார் 980 அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார் இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால் இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல் மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன் கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார் நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார் வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல் கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த் துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும் அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து மந்திர சாலம் மாய்மால மாரணமும் தந்திர சாலம் சர்வதுமே தாருமையா கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும் 1000 ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும் இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார் கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத் தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால் வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள் தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும் ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள் ஞானாந்திர மான நாரத மாமுனியை வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான் பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால் தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில் முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித் துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார் அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி 1020 இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான் தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம் பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும் ஆயனா ரோடே அருளுவா ரன்போரே கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால் அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம் நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப் பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள் மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர் ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை 1036 |
செவ்வாய், 30 செப்டம்பர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்
மாலோ சனையிழந்து மாறியே மானிடவர் சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர் ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய் பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில் மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து ஏரி வழிந்து இராச்சியத்தைத் தானெடுக்க வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனேதா னாளோடி மனுநீதிக் காவலவா வைகையடை யாதிருந்தால் இனித்தேசந் தன்னை யாம்தேட ஞாயமில்லை ஊரை யரித்து உவரிதனில் கொண்டேகும் பாரை மிகஆளும் பத்தியுள்ள சோழமன்னா என்றுகுடி யானவர்கள் இராசனுக் கேவுரைக்க அன்றுதான் வைகை அணையடக்க வேணுமென்று எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும் எண்ணெண்ணக் கூடாத ஏதுவகை யானதெல்லாம் 20 கொண்டுவந் தேயணையில் கூறிட்டுத் தானடைக்க அன்றுஅடை படாமல் அறிவழிந்து சோழமன்னன் அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே சோழன் வினை கோளனென்ற மாநீசக் குலத்தி லுதித்துவந்த ஈழனொரு பொல்லாதான் என்சொல்வா னம்மானை மன்னவனே இந்தவைகை மலையெடுத்து வைத்தாலும் இன்னமிது கேளாது ஏலாது நம்மாலே தெய்வகுலச் சான்றோராய்ச் சித்திர மாகாளி கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார் அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டுவந்து இந்த அணையடைக்க ஏலுமென்றா னம்மானை அப்போது சோழன் அந்நீசக் கலியதினால் இப்போது மயங்கி என்சொல்வான் மன்னவனும் மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி வாருமென்று சொல்லி மன்னவ னேவிடவே சேருமென்று சொல்லச் செவுகர் தாம்விரைந்து அழைத்துவந்தார் சான்றோரை அரசன்மிகக் கொண்டாடித் தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ 40 வைகை தனையடைக்க வழிபாரு மென்றுரைத்தான் செய்கை முடிச்சான்றோர் தேசமன்ன னோடுரைப்பார் நல்லதல்ல மன்னவனே நம்மோ டிதுவுரைக்க இல்லை யிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே வெட்டாப் படையை வெற்றிகொண்டோ மும்மாலே பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன் மாயக் கலியதனால் மன்னவனுங் கேளாமல் ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்கக் கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே என்றுரைக்கச் சான்றோர் இயம்புவா ரம்மானை நன்றுநன்று மன்னவரே நமக்கு அழகல்லவே இவ்வேலை யொன்றும் எங்களோ டீயாமல் எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள் ளதென்றார் கேட்டந்த மன்னன் கிறுக்க முடனிறுக்கித் திட்டினான் சான்றோரைச் சினத்தான்கா ணம்மானை அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார் இப்போது சோழன் ஏதுசொல்வா னம்மானை நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு தான்பாரு மென்று தன்தள கர்த்தருடன் 60 வேலையது கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான் தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள் சூழ வளைந்து துய்யசான் றோர்களையும் வேழம் பலதை விட்டுப் பிடித்திடவே சான்றோ ரடுக்கல் சாரவகை யில்லாமல் மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனனாம் சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே நன்றியுடன் நின்றார் நாடி யவன்பிடித்துக் குட்டையெ டென்றிடவே கூடா தெனவுரைக்கத் தட்டினான் வைகையிலே தலையைச் சாணான்றனக்கு ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழமன்னன் சேனைத் தலைவர் சிறந்தசான் றோர்கள்தம்மில் கொன்றா னொருவனையும் குளக்கரையி லம்மானை பின்னா லொருவனையும் பிடித்துக்கொடு வாருமென்றான் குட்டை யெடென்று கூறினான் மாபாவி திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர் முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான் இன்னமிந்தக் குட்டை யாங்கள்தொடோ மென்றனராம் 80 பின்னுமந்தச் சோழன் பிடித்தொரு வன்தனையும் கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன் கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை அப்போது வித்யா தரமுனிவர் தானறிந்து செப்போடு வொத்த திருமா லருகேகி மாயவரே உம்முடைய மதலையேழு பேரில் காய மழித்தான் கரிகாலச் சோழனவன் என்ற பொழுது எம்பெருமா ளப்போது அன்றுபுட் டேயருந்தி அவளாட்போல் கோலமது கொன்று குமாரர்களைக் குசல்செய்த தும்பார்த்து அன்றுவை கையடைத்து அடிகள்மிகப் பட்டவரும் ஸ்ரீரங் கந்தன்னில் சிறந்தகோ பத்தோடே சாரங்கர் வந்து தானிருந்தா ரம்மானை மாகாளி தானறிந்து மக்களைத்தான் கொன்றதினால் ஓகாளி சோழன் ஊர்வறுமை யாகிடவும் பன்னிரண் டாண்டு பாரில்மழை பெய்யாமல் உன்னினாள் மனதில் உடனே மழைசுவறிப் பெய்யாமல் சோழன் பேருலகம் பஞ்சமதால் அய்யமது ஈயாமல் அறிவழிந்து வாடினனே 100 இறந்தசான் றோர்களுட ஏந்திழைமா ரெல்லோரும் சிறந்த தவம்புரிய சென்றனர்கா ணம்மானை சென்ற தவத்தின் செய்திகே ளன்போரே அழுக்குக் கலையணிந்து அணிந்தபொன் தாளாமல் இழுக்குச் சொல்லீந்த ஈழன் பழிகொள்ளவும் இறந்த மன்னவர்கள் எழுந்திருந் தெங்களையும் சிறந்த மணத்தோடு உடன்சேர வந்திடவும் பழிசெய்த சோழனுசர் பகலநரி ஓடிடவும் அழிவாகிச் சோழன் அவன்மாண்டுப் போயிடவும் வரந்தாரு மென்று மாயவரை நெஞ்சில்வைத்துப் பரமானப் பெண்கள் பாரத் தவசுநின்றார் ஸ்ரீரங்கம் விட்டுச் சுவாமி அனந்தபுரம் ஏகல் இப்படியே மாதர் இங்கே தவசிருக்க அப்படியே மாயன் அவர்ஸ்ரீ ரங்கமதில் இருக்கும் பொழுது இரணியநீ சக்கலியன் கருக்காக லோகம் கண்டவிட மேபரந்து ஸ்ரீரங்க மானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள் நிதங் குளறி நெறிதவறிப் போனதினால் முறைவைத்த பூசை முந்தி முறையெனவே மறையவனும் பூசை வந்தே முகித்திடவே பொறாமல் மற்றொருவன் பூசையெனக் கென்றுசொல்லி 120 மறவாத மாயவரை வணங்கிநிட்டை செய்யவென்று முப்பது வேள்வி மொகுமொகெனத் தான்வளர்த்து இப்போ நான்வீழ்வேன் இதில்மாயன் வாராட்டால் என்றவ னெண்ணி ஏற்றவோ மம்வளர்த்து அன்றவன் வீழ ஆர்ப்பரிக்கு மவ்வளவில் மறையவனை மாயன் வந்தெடுத்துப் புத்திசொல்லி நிறையொத்த மாயன் நெடுமறையோ னைக்கூட்டி ஸ்ரீரங்கம் விட்டுத் திருவனந் தம்நோக்கிச் சாரங்கர் போகத் தானேகும் வேளையிலே நன்றான கேத்திரனும் நல்லமறை வேதியனும் அன்றிளகிச் சென்று அரனார் திருக்கோவில் வந்த பொழுது வானமதி லுள்ளோரும் நந்நகோ பால நாரா யணரிடத்தில் சென்று தொழுது தேவரெல்லாந் தெண்டனிட்டு இன்று பெருமாள் இங்கே யெழுந்தருளி வந்த வகையேது மாயவரே யென்றுசொல்லி அந்தமுனி தேவர்களும் அச்சுதரோ டீதுரைக்க நல்லதென்று அய்யா நாரா யணர்மகிழ்ந்து வல்ல பரமே சுரரை மிகவாழ்த்தி ஈசுரரே யென்றனக்கு இங்கிருக்கக் கூடாமல் 140 தேச மதைப்பார்த்துத் திருவ னந்தமேகி இருக்கவே யென்று எழுந்தருளி வந்தேன்காண் மருக்கிதழு மீசுரரும் மாமுனிவர் தேவர்களும் நீசனாய்த் தோன்றி நிரந்து பரந்திருந்த தேசத் திருவனந்தம் செல்லவகை யேதுவையா அல்லாமல் நீசன் அவனிடத்தில் போயிருந்தால் எல்லா மவன்றனக்கு ஈடாகிப் போகுமல்லோ கைவாய்த்து தென்று கலியனவன் கொண்டாடி மெய்வாய்த்து தென்று மேலாக மாநீசன் பரிகாசங் செய்வானே பார்முழுது மாநீசன் ஆனதா லங்கேக அச்சுதரே ஞாயமில்லை மான மழிந்தாச்சே மாகலியன் வந்ததினால் எல்லாங் கழியை ஈடழிக்கப் பாருமையா இல்லையே யானால் எங்களுக் கிங்கேதான் சென்ற இடமெல்லாம் சிறைபோ லிருக்குதையா என்றுதான் தேவர் ஈசர்முதல் சொல்லிடவே அன்று அவர்களுக்கு அச்சுதரு மேதுரைப்பார் நன்றுநன்று வானவரே நல்லபர மேசுரரே கலியேது நீசம் காணேது வையகத்தில் சலிவேது ராச்சியத்தில் தானேதும் நானறியேன் 160 அனந்தபுரம் போக ஆதியி லென்றனக்குத் தனந்தசுக முனிவன் சாபமுண் டானதினால் கொஞ்சநா ளானாலும் குடியிருக்க வேணுமங்கே வஞ்சகங்க ளில்லாத மாயன்வழி கொண்டனராம் ஈசர்தனை யனுப்பி எம்பெருமா ளச்சுதரும் வாசமுள்ள சேத்திரனும் மறையவனுந் தேவர்களும் சங்க மதுகூடித் தத்திதத்தி யாய்வரவே வங்கத் திருவனந்தம் வழிநோக்கித் தான்வரவே பிரம்ம ரிஷிகள் வழியிலோ ரற்புதந்தான் மாயவனார் கண்டுமிகக் களிகூர்ந் தவருடனே கட்டாக ஏதுரைப்பார் மாமுனியே தேவர்களோ வழியி லொழுங்கொழுங்காய் ஓமுனியே நின்றதையும் உரைப்பீர்கா ணென்றுரைத்தார் அப்போது மாமுனியில் அருண முனிவனொன்று செப்போடு வொத்த திருமாலை யும்பணிந்து மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில் ஆய கலையிருஷி ஐம்பத் தொருநான்கோர் பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத் திவ்விருஷி வரமான புத்தகத்தை மாறாட்டஞ் செய்ததினால் அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச் செறிந்த இருஷிகளைச் சிலைக்கல்லாய்ச் சாபமிட்டார் 180 அப்பொழு திவ்விருஷி அயனைத்துதித் திச்சாபம் எப்பொழு திச்சாபம் ஏகுமென்றார் மாயவரே வேதா தெளிந்து விஷ்ணுஸ்ரீ ரங்கம்விட்டுத் தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார் சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன் தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷி யானோர்க்குப் பேருல கம்படைத்த பிரமன் விடைகொடுத்தார் அந்தப் பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி இந்தக் கற்சிலையாய் இவரிருந் தாரெனவே மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டா ரம்மானை உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத் தடமேலே வீழ்ந்து தானாவி யேகுவித்து அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம் இன்றகல வைத்து இரட்சிக்க வந்தவரே எங்களுக்கு நல்லகதி ஈந்துதா ருமெனவே திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றிநின்றார் நல்லதுதா னென்று நாரா யணர்மகிழ்ந்து வல்ல இருஷிகளே வாழ்வெங்கே வேணுமென்றார் 200 மேலோக வாழ்வு வேணுமோ அல்லவென்றால் பூலோக வாழ்வு போதுமோ வென்றுரைத்தார் அப்போ திருஷியெல்லாம் அவனியி லெங்களுக்கு இப்போ வரங்கள்தந்து ஏகவைத்தால் போதுமையா நல்லதுதா னென்று நல்ல இருஷிகட்கு வல்லத் திருமால் வரங்கொடுப்பா ரம்மானை பிச்சையது வாங்கிப் பெருமை யதாயருந்தி மிச்சமது வைக்காமல் விழிபரந்து பாராமல் சீமைக்கொரு இருஷி செல்லுங்கோ ஆண்டியெனத் தாண்மை பரதேசி தானாகி வீற்றிருந்து பூசை பெலிகள் பீடமிட் டேராதிருந்து ஆசைக் கருத்தை அறுத்து வொருநினைவாய் மாசணு காமல் மனதில் நமைத்துதித்து ஓசை யுடனே உலக மதில்நீங்கள் வைகுண்ட மென்று வையகத்தே வாழுமென்று பொய்குண்டம் நீக்கிப் பூலோக மேயிருங்கோ தந்த வரத்தில் தப்பி நடந்ததுண்டால் வந்தங் கிருந்து வருத்தியுங்கள் தம்மையெல்லாம் அவரவர்கள் செய்த அக்குற்றந் தான்கேட்டு எவரெவர்க்குந் தக்க இயல்பே தருவோமென்றார் 220 நல்லதுதா னென்று நாடி இருஷியெல்லாம் செல்லப்பர தேசிகளாய்ச் சென்றாரே சீமையிலே இருஷி களையனுப்பி எம்பெருமாள் தான்மகிழ்ந்து துரிச முடனனந்த சீமைநோக் கிநடக்கத் தேவர்களும் வானவரும் ஜேஜே யெனநடக்கத் தாவமுட னனந்தம் தானோக்கி மால்நடக்க அனந்த புரம்நோக்கி அச்சுதனா ரேகுகையில் எக்காள துர்க்கை புனந்தனிலோர் பொருப்புப் பூவையுருப் போல்கிடக்கக் கண்டெம் பெருமாள் கால்கொண் டுதைத்திடவே குன்றுபோ லேயுடம்பும் குஞ்சரம்போல் கைகாலும் துண்டு மலைபோல் துய்யமூக்கு முலையும் வாய்கண் ணொருமலையாம் வயிறுமூணு மலையாம் கொண்டை பன்னிரண்டு குறுக்கமுண் டன்போரே பண்டே திருமால் பம்பழித்தத் தாடகைபோல் நின்றாளே யண்டபிண்டம் நிறைந்த சொரூபமதாய் கண்டாரே எம்பெருமாள் கனத்தவி சேடமென்று தேவர்களே வானவரே சேத்திரனே வேதியனே பாவலரே கல்தான் பரும்பெண்ணாய் வந்ததென்ன சொல்லுவீ ரென்று திருமா லுரைத்திடவே வெல்லும் புகழ்தேவர் விளம்புவா ரம்மானை 240 ஏம னிணையான எக்காளத் துர்க்கையிவள் சாமி சிவனார்தன் சொல்லையிவள் தட்டினதால் கோபித் திவளைக் குன்றுபோல் சாபமிட்டார் ஏகி வரும்போது இவள்தானு மீசுரரை வணங்கியிச் சாபமெப்போ மாறுமென்றாள் மாயவரே அணங்குக்கு ஈசர் அருளினது கேளுமையா அனந்த புரமதிலே ஆனநதி மேலே வனந்தமால் பள்ளிகொள்ள வருகின்ற அவ்வழியில் உன்சாபந் தீர்த்து உன்னை உலகதிலே பின்சாப மிட்டுப் போக விடைதருவார் என்று சிவமுரைக்க இப்படியே வந்தவளும் குன்றுபோ லேகிடந்தாள் குருவேயுன் பாதமதால் அவள்சாபந் தீர்ந்து ஆயிழை போல்வடிவாய் இவள்தானும் வந்தாள் எனச்சொன்னார் தேவர்களும் நல்லதென்று நாரணரும் நாரிதனைக் கொண்டாடி வல்லவளே யெக்காள மடந்தையே யுன்றனக்கு ஏதுனக்கு வேணுமென்று என்னோடு கேளுஎன்றார் வாதுக்கு வல்லகியாள் மாய ருடன்கேட்பாள் நாரணரே அய்யாவே நான்தான் முற்காலமதில் பாரமுள்ள செந்திருஷி பாரியாய் நானிருந்தேன் 260 அப்போது என்றனக்கு அழகிது இல்லையையா செப்போடு வொத்த சிவகாமி போலழகு நன்றாக என்னுடைய நல்லபர்த் தாவுடனே ஒன்றாக வாழ்ந்து உறவா டிருக்கையிலே என்பேரி லிச்சை ஏமன்மிகக் கொண்டாடி வம்புசெய் தென்னுடைய மன்னவனைக் கொன்றான்காண் ஆனதா லேமனுக்கு அழிவுவர வேணுமென்று மானத் தவமிருந்து வருந்தினே னீசுரரை அப்போது ஈசுரரும் அடியாள் மனந்திருத்தி இப்போது அந்தகனை இறக்கவைத்தால் ராச்சியத்தில் நருட்பெருத்துப் பூலோக நாடுதரியா தெனவே பொறுத்துக்கோ கொஞ்சம் பூவையே யென்றுரைத்தார் என்னை மனந்திருத்தி ஏமனோடே சேர்த்தாலும் மன்னனை வதைத்ததுதான் மறவாம லெப்போதும் திவசமொரு நேரம் சிவனாரை யானோக்கிப் பவத இயமனுக்குப் பகையாகக் கேட்டிருந்தேன் ஆனதா லீசர் அறிந்தே யெனைநோக்கி ஈன முடன்பேசி இகழ்த்தினா ரீசுரரும் கொஞ்சம் பொறுக்கவென்று கூறினேன் பெண்கொடியே மிஞ்சவல்லோ செய்தாய் எனவெகுண் டாதிபரன் 280 மலைபோ லுடம்பும் வயிறு மிகப்பெருத்து அலைபோற் பரந்த அங்கம் பெரும்புடமாய்க் கல்லது போற்கிடந்து காலனைக் கொல்லும்வகை வல்ல வகையாலும் வருந்திக்கோ என்றுசொல்லிக் கோபித்தார் முன்னே குன்றுபோ லேகிடக்கச் சாபித்தா ரென்னை சாமியுன் பாதமதால் தோன்றினே னென்சாபத் துயரறுத்தேன் மாயவரே வீன்றிய அந்தகனை வேரோ டறுத்திடவே வரந்தா ருமையா மாயவரே யென்றுசொல்லி சிரமுரத்தப் பெண்கொடியாள் தெண்டனிட்டாள் மாயவரை அப்போது மாயவரும் அவளை முகம்நோக்கி இப்போது பெண்கொடியே யான்சொல்லக் கேட்டிடுநீ அந்தகனைக் கொல்லவென்று அருந்தவசு பண்ணிடுநீ வந்த யுகமாறி வலியபெலத் தர்மயுகம் உதிக்கும் பொழுதில் உன்தவ சின்படியே சதிக்குகந்து தானால் சண்டனழி வாகுமென்றார் அப்போது பெண்கொடியும் மானத் தவம்வளர இப்போ விடையருளும் என்றுகேட்டு வேண்டியவள் நின்றாள் தவத்தில் நீலியாய்ச் சண்டனுக்கு வண்டூறிக் கன்னி மன்னன் பழிவாங்க 300 ஆதியைப் போற்றி அருந்தவசு பண்ணிடவே சோதித் திருமால் திருவனந் தம்நோக்கி நடக்கத் திருமால் நளின முடன்மகிழ்ந்து வடக்குக் கயிலாச வழியே வருகையிலே வானோர்க்கு அருளல் தெய்வலோகத் திலுள்ள தேவாதி தேவர்களும் வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும் சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும் தவமான வேதச் சதுர்மறையோன் தன்னுகத்தில் கருதி ரிஷிமுதலாய்க் கட்டாக நாற்புவியில் இருக்கின்ற வானவர்கள் எல்லோரு மெண்ணமுற்று மான வரம்பு மகிமைகெட் டேகுமுன்னே வான மதுவிட்டு வடகயிலை போவோம்நாம் கயிலை வரம்பழிந்து கட்டுமிகத் தப்பினதால் அகில மழிவதற்கு அடையாள மித்தனைதான் அல்லாமல் குறோணிமுதல் அந்நீசக் கலியன்வரை எல்லாஞ் சரியாகி எவ்வோர்க ளானாலும் கல்லாத பொல்லாக் கலியனுட மாய்கையினால் நல்லோராய் மேற்பிறந்து நளினமுற்று வாழ்வரென்று வேதா கணக்கில் விதித்துரைத்தார் முன்னாளில் நாதாந்த வேதம் நழுவிமிகப் போகாதே 320 இப்படியே தேவர் எண்ணமுற்று வாடினரே முப்படியே யுள்ள ஊழிவி தியெனவே கடைச்சாதி யான கலிச்சாதி யானதிலே படையாமல் நம்முடைய பங்குவம்மி சத்தோராய் ஒண்ணா மதுகுலந்தான் உயர்தெய்வச் சான்றோரில் வண்ணமுள்ள வேதா மனுவாய்ப் பிறவிசெய்ய ஒன்றாக நாமளெல்லாம் உவந்துதவஞ் செய்யவென்று நின்றார் தவத்தில் நிறைவோன் பதம்போற்றி தங்கள் குலமான சான்றோர்கள் தங்குலத்தில் எங்கள் தமைப்பிறவி இப்போசெய்ய வேணுமென்று பிறந்திறந்த போதும் பின்னுமந் தப்பிதிரில் மறந்திடா வண்ணம் மனுவி லுதித்திடவும் ஆதிமகா மூலத்து ஆதிநா ராயணரே நாதியா யெங்களையும் நாடிமிக வந்தெடுத்து எங்கள் துயரம் எல்லா மவர்மாற்றி சங்கடங்க ளில்லாத தர்ம பதியருளிக் கிரீடமுஞ் செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும் வீரியமாய்த் தந்து மேலோக முமகிழ எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பதவிதந்து மண்விண் புகழ வரந்தாரு மென்றுசொல்லி 340 நின்றா ரதையும் நெடியோன தையறிந்து கொண்டாடி யேதெனவே கூறினார் தேவருடன் நின்ற நினைவை நெடுமால் தனக்குரைக்க அன்றந்தத் தேவருக்கு அலையாத புத்திசொல்லி நல்லதுதான் தேவர்களே நாடுவது காரியந்தான் வல்ல தவசு மனம்பிரியாச் செய்யுமென்றார் பசுவும் பெண்ணும் அச்சுதரும் தானடந்து அனந்தபுர மேகுகையில் பச்சுடம்பாய் நின்ற பசுவுமோ ரேந்திழையும் நாராய ணாவெனவே நாடித் தவமிருக்கச் சீராய்த் திருமால் சிறந்ததவங் கண்டருளி ஏது பசுவே ஏந்திழையே வுங்களுக்கு நேதுவில்லா வண்ணம் நெடுந்தவசு பண்ணினதேன் அப்போ துபசுவும் அச்சுதருக் கேதுரைக்கும் இப்போது மாயவரே என்னுடைய புத்திரனைக் கொல்லும் படியாய்க் கோதை யிவள்தவசு செல்லும் படியாய்ச் சிந்தை மிகக்கலங்கி புத்திரனு மாண்டால் பிள்ளையா யென்றனக்கு உத்திரக் கன்றாய் உடன்பிறக்க வேணுமென்று நின்றேன் தவசு நீலவண்ண ருண்டெனவே என்றே பசுவும் ஈதுரைக்க ஏந்திழையும் 360 நன்றாகப் பார்த்து நாரா யணருரைப்பார் ஒண்டொடியே உன்றன் உற்றவழக் கேவுரைநீ அப்போது பெண்கொடியும் அச்சுதரைத் தானோக்கிச் செப்போடு வொத்த தேவியுஞ் சொல்லலுற்றாள் அய்யாவே யெனக்கு ஆளான வீரனைப்போல் மெய்யா யொருமதலை விமல னருளினர்காண் மதலை வளர்ந்து வயதுபதினா லாகுகையில் குதலை மொழிகேட்டுக் கொண்டாடி நான்மகிழ்ந்து இருக்குமந் தநாளில் இப்பசுவின் புத்தினர்தான் உருக்கமுட னென்பேரில் உள்ளாசை கொண்டான்காண் அதட்டினே னானதற்கு ஆகட் டெனவுறுக்கி மதட்டி மதலைதனை மாளவைத்தான் மாபாவி ஆனதி னாலடியாள் அறமெலிந்து தான்வாடி போனேன் பிரமா பூசாந்திரக் கணக்கில் உள்ள விதியோ ஊழி விதிப்படியோ கள்ளக் கணக்கன் கண்மாயமோ எனவே பார்த்தேன் மகன்தான் படவிதி யங்குமில்லை ஆர்த்தேன் நான்கோபம் அக்கினிபோ லெமீறி சிவனுக் கபயம் செவியறிய விட்டேனான் இவளுக்கு வேண்வடி ஏதுசெய்வோ மென்றுசொல்லி 380 ஒருவரு மென்னுடைய ஊழிவிதி கேட்கவில்லை வருவது வரட்டெனவே வந்தே தவசுநின்று மகன்பழிதான் வாங்க மாயவரே உம்மருளை அகமிருத்தி நானும் அருந்தவசு செய்தேனான் என்றுரைக்க ஏந்திழையும் எம்பெருமா ளேதுரைப்பார் நன்றுநன்று பெண்கொடியே நல்ல தவம்புரிந்தால் நினைத்த படியே நிறைவேறு மென்றுரைத்துக் கனத்த பசுவேநீ கட்டாய்த் தவமிருந்தால் உன்றனக்குச் சித்திரனும் ஒருகன்றாய்த் தான்பிறந்து உன்றன் மகனார்க்கு ஏவல்செய்ய வைத்திடுவேன் என்று பசுவதுக்கும் ஏந்திழைக்குந் தானுரைத்து அன்று திருவனந்தம் அவர்நோக்கித் தானடந்து சேத்திர பாலனுக்குச் சொன்னது கேத்திரனும் வேதியனும் கிருஷ்ண ரடிபணிந்து மூர்த்திகளுங் காணாத முதலே முதற்பொருளே உன்மகவாய் வந்துதித்த உயர்ந்த குலச்சான்றோர் தன்கமவோ ரங்கே தவித்துமுகம் வாடிருக்க நீசனுட குடியில் நீர்போகக் காரியமோ தேசமெல்லாம் நீசனுட செய்திகேட் டேயிருந்தும் போவதோ தேவரீர் பொல்லா தவன்குடியில் தேவரீ ரும்முடைய சிந்தையெள் போலறியேன் 400 என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று கேத்திரனே நான்சொல்லக் கேட்டிடுநீ சான்றோர்க் குபகாரம் தான்செய்யு முன்னாகப் பொன்றுகலி நீசனுக்குப் புத்திசொல்ல வேணுமென்றும் அல்லாமற் குறோணி அவன்மாய யிவன்வரையும் எல்லாந்தான் சொல்லுக்கு இடறுவை யாதபடி சான்றோர்கள் தம்மிடத்தில் சாங்கமாய்ப் போயிருந்து ஆன்றோர்தா னெங்களையும் அழியவைத்தீ ரென்றுரைப்பான் ஆனதால் நானும் அதற்கிடைகள் வையாமல் ஈன முறுநீசன் இடம்போறே னென்றுரைத்தார் அப்போது கேத்திரனும் அன்பா யகமகிழ்ந்து செப்போடு வொத்த திருமாலைத் தெண்டனிட்டு மாயனே உன்றன் மகிமையதை யாரறிவார் ஆயனே வும்முடைய அளவறியக் கூடாது என்று கேத்திரனும் இயம்புவான் பின்னுமொன்று மன்று தனையளந்த மாயப் பெருமாளே பூசை புனக்காரம் பெரியதீ பத்துடனே நீச னுமக்கு நினைத்துநிதஞ் செய்வானே எந்தனக் கென்ன இலக்குக் குறியெனவே சிந்தை தெளிந்து செப்பி விடைதாரும் 420 என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் இன்றுநீ கேட்டதற்கு இயல்புரைக் கக்கேளு கலிநீசன் மாநிலத்தில் கால்வைத்து அன்றுமுதல் சலிவாகி யென்மேனி தண்ணீ ரறியாது எண்ணை யறியேன் இலட்சுமியை நானறியேன் வண்ணத் துகிலறியேன் மறுபுடவை தானறியேன் பூசை யறியேன் பொசிப்பறியேன் பூவறியேன் ஆசை யறியேன் அக்கக் கிளையறியேன் மெத்தை யறியேன் மேவுஞ் சொகுசறியேன் ஒற்றைபோ லானேன் உட்கார்ந் திருக்கறியேன் மேடை யறியேன் மகிழுஞ் சிரிப்பறியேன் தோழமையை நானறியேன் சுருதி மொழியறியேன் ஆளவை குண்டம் அரசுமே டையறியேன் இத்தனைகள் தானறியா(து) எண்ணமது நானறியேன் புத்தியுள்ள கேத்திரனே பூசைபூ ஏற்பதெல்லாம் மாயக் கலியறுத்து வாய்த்தநா டாள்வார்க்கு ஞாயமுள்ள பட்டம் நான்சூட்டித் தர்மமதாய் இராச்சியத்தை யாளவைத்து இத்தனையு மேற்பதல்லால் அதற்குமுன் பூசை புனக்காரமுத லேற்பதில்லை இதற்குமுன் னேற்பவர்கள் எனக்காகா தேபோவார் 440 என்றந்தக் கேத்திரனுக்(கு) இத்தனையுந் தான்கூறி அன்றந்த நீசன் அவ்வூரி லெம்பெருமாள் புலச்சிக்கு அருளியது நீச னிடத்தில் நீலவண்ணர் வந்ததுதான் தேச மறிய செச்சை புலச்சிகண்டு ஒளித்தா ரொருஇடத்தில் ஊர்தேச முமறிய விழித்தாள் புலச்சி விதமறிந் தெல்லோரும் நீச னறிந்து நெருங்கமணி மேடைவைத்து வீசை முறுக்கி விசையாக அந்நீசன் கோவில் சிவாலயங்கள் கொந்துகொந் தாயமைத்துப் பாவித்துப் பூசை பண்ணத் துணிந்தனனே மேடைக்குக் கால்கள் மிகுத்தத்தங்கத் தால்நிறுத்தி வாடைக் கமகமென வாத்தியங்கள் நின்றதிர தீபம் புலச்சி தீவட்டித் தான்கொடுக்கப் பாவக் குடும்பத்தோர் பண்ணினார் பூசையது நம்பூரி வேதியர்கள் நாடி யகமகிழ்ந்து பம்பைப் பரத்தை பகட்டுக்கை காட்டலோடு நாடி மகிழ்ந்து நல்ல அனந்தபுரம் கோடிநூ றாயிரம்போல் கூண்டரிய தீபமொடு தேடரிய மாமறையோர் சிந்தைகளித் தேயிருக்க நாடதிக மாகி நல்ல அனந்தபுரம் 460 மாத மும்மாரி வருசிக்கத் தான்பொழிந்து வாரமுடன் செந்நெல் மாறாம லேவிளைந்து தென்னங் குலைசிதறித் தேர்ப்போ லலங்கரித்து என்னென்ன பவிசு எல்லா மிகப்பெருத்து ஒப்பில்லாத் தேசம் உற்ற அனந்தபுரம் செப்பத் தொலையாது சிறந்தப் பெருமையது நன்றாகச் சீமை நாடோறு மேவாழ்க அன்றுஸ்ரீ ரங்கர் அங்கே யகமகிழ்ந்து நீசன் நினைத்த நினைவுபோ லெம்பெருமாள் தேசப் பவிசும் சிறப்பு மிகக்கொடுத்து நீசன் தனக்கெதிரி நீணிலத்தி லில்லையென்று தோசக் கலிப்புவியைச் சூட்டியர சாளுகையில் கலியரசன் தவம் மதலைய தில்லாமல் மனஞ்சலித்து மாநீசன் குதலையி னேதுவினால் கொஞ்சஞ் சடைவாகி ஆதித் திருமால் அடியை மிகப்போற்றிச் சோதியே யென்றனக்குச் சிறுவனொன்று தாருமென்றான் அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது உனக்கு இங்கிருந் தால்மதலை கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில் திட்ட முடன்தவசு செய்யப்போ யங்கிருந்தால் 480 மதலையுட துயரம் மாறுங்கா ணுன்றனக்குப் பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்கா ணம்மானை கேட்டந்த நீசன் கெட்டிதா னென்றுசொல்லி நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந் தான்வருத்திப் போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில் சேனா பதிகள் திக்கெங்குஞ் சூழ்ந்துநிற்க நீசன் தவசு நிற்க வொருமறையோன் வாசக் குழலோடு மருவினன்கா ணம்மானை கண்டந்த நீசன் காமம் பொறுக்காமல் தண்டுமீ றிக்காமம் சலத்தில் விழுந்ததுவே இரைநமக் கென்று எட்டியொரு கொக்காவி விரைவாய் விழுங்க மிகுத்தகர்ப்ப முண்டாகித் தண்ணீரில் பிள்ளை தான்பெற்று தம்மானை வெண்ணிற மான மிகுத்தபிள்ளை தான்மிதந்து போகும் பொழுதில் புனலரிஷி மாமுனிவன் தாப முடன்சிசுவை தானெடுத்தா னம்மானை மதலை தனையெடுத்து வளர்த்துப் பருவமதில் குதலை தனையாற்றில் குளியோட நீச்சலதும் தோணியே றுந்தொழிலும் சுருக்குக்கப் பலேற்தொழிலும் ஆணிப்பொன் முத்து அதுவளருந் தலமும் 500 வெள்ளித் தலமும் மிகுத்தபொன் னுத்தலமும் உள்ளவித்தை யான உற்றரச வாதமுதல் கள்ள உபாயக் கபடுபலத் தந்திரமும் வெள்ளை நீசன்தனக்கு விதமா யவர்வருத்திச் செங்கோ மட்டியெனத் தேசநசு ராணிகளில் பெண்கள் ரண்டுபேரைப் பேறாய் மணமகித்து இருத்தினான் மாமுனிவன் ஏற்றசெங் கோமட்டியில் பருத்த வெள்ளைநீசன் பண்பாக அங்கிருக்க நின்ற தவசு நெறியழிந்து மாநீசன் அன்றந்தப் பாவி அனந்தபுரம் வந்தனனே வந்து சடைவாய் மாநீசன் தானிருக்கச் சந்துபயில் மாயவரும் தானறிந் தேதுரைப்பார் மன்னவனே யுன்றனக்கு மதலையது கிட்டினதோ என்ன விதங்காண் ஏகிவந்த தென்றுரைத்தார் அப்போது நீசன் அவனேது சொல்லலுற்றான் இப்போது மாயவரே யான்தவசு நிற்கையிலே மறையவனுந் தேவியோடு மருவினதைக் கண்டாவி இறையவரே யென்றனக்கு இந்திரியந் தானிளகி ஆனதால் தவசு அழிந்தே னதினாலே ஈனமுடன் மதலை இல்லையென்றா ரீசுரரும் 520 மதலையில் லாதிருந்தால் வையகத்துக் கேராது குதலையல்லோ வேணும் குவலயத்தை யாளுதற்குச் செங்கோ லரசு செலுத்தியர சாளுதற்கு முன்கை சிரைத்து முறைகர்மஞ் செய்திடவும் பிள்ளையில்லா தேயிருந்தால் போதுமோ புண்ணியரே வள்ளலந்த மாலும் மறுத்துரைப்பா ரம்மானை சொந்தமுள்ள சோதிரியைச் சுறுக்காய் வரவழைத்து உந்தனக்குப் பிள்ளை உண்டோதா னில்லையென்று வருத்திக்கே ளப்போ வகைசொல்வான் சோதிரிசி பொருத்தமா யாயன் புகன்றாரே நீசனுக்கு மருமக்கள் வழி நல்லதென்று வேதியனை நாடி யவனழைத்துச் சொல்லவென்று நீசன் தொகுத்தவனோ டேகேட்க அப்போது சோதிரிசி அந்நீ சனைப்பார்த்து இப்போது கேள்நீ ஆகமத்தி லுள்ளமுறை பெற்றாலு முன்மகவு பேருலகம் ஆளாது மற்றோர்பெற் றுன்மருகன் ஆளுவான் வையகத்தை என்றேதான் சாஸ்திரமும் இசையுதுகாண் மன்னவனே அன்றேதான் சோதிரியும் அந்நீசனுக் குரைத்தான் நல்லதென்று நீசன் நாடி யகமகிழ்ந்து வல்ல வகையாலும் வைத்தபங்குக் கிட்டுமென்று 540 சோதிரியைத் தானனுப்பித் துயர்நீங்கி யேயிருந்தான் ஆதி முறைப்படியே அவன்மரு கன்றனக்குப் பட்டந்தா னென்று பறைசாற்றி யாண்டிருந்தான் திட்டமுடன் நீசன் தேசமதை யாளுகையில் முன்னீசன் விந்தில் உதித்துவளர்ந் தேயிருந்த அந்நீச னான அசுபக் கிரிவளமை வெண்ணீசன் சொல்லவே நாதன் தொகுத்துக்கே ளன்போரே வல்லசெங் கோமட்டி வையகத்தி லந்நீசன் வெள்ளி மலையும் மிகுத்ததங்கப் பொன்மலையும் கள்ளமில்லா வாதம் கைகண்ட வித்தையதாய் நிதியிற் பெருத்து நெருங்கப் படைகூட்டிப் பரியானை ஒட்டகங்கள் பலபடைகள் சேகரித்து ஆளும் படையும் ஆயுதங்க ளஸ்திரமும் வேழும் பெரிய வெகுவாணு வங்கூட்டித் தன்னோ டினங்கள் சதாகோடி யாய்ப்பெருத்து என்னோ டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து எவர்தா டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து எவர்தா னெதிரியென்று எண்ணமுற்று மாநீசன் நட்சேத் திரத்தை நகட்டிருபத் தெட்டாக்கி வைத்தானே மாதம் வருசமது மாறாய் 560 முன்னீசன் வைத்த முறைமை யிலுங்கூட்டிப் பின்வந்த நீசன் பிரித்தானொன் றேற்றமுடன் அரிநமா வென்ற அட்சரத்தை விட்டவனும் விரியாய் அனாதியென விளம்பினான் வையகத்தில் இப்படியே வைத்த இவன்வேத மானதுக்குள் அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று பணமா னதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரைச் சிணமாக மானிடவர் சேர்ந்தா ரவன்வேதமதில் இப்படியே வேதமொன்று இவன்பலத்தா லுண்டாக்கி அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான் ஆணுவங்கள் சேனை ஆயுதங் கள்வெகுவாய் வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோ ரெம்பரெம்ப படையாலு மற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான் தடைசெய்து நம்மைத் தடுப்பவரா ரென்றுசொல்லி ஆரா ரெதிரியென்று அவன்பார்த் திருக்கையிலே பூராய மாயொருவன் போதித்தா னவன்றனக்குச் சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும் வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே 580 வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில் பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன் மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும் வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல் மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு வந்தானே யந்த மாநீசன் தன்பேரில் செந்தார மாயன் சேனை வருவதையும் அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ் சொல்லலுற்றார் வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி நசுறாணி யான நல்லவெண் ணீசனுக்குத் துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால் 600 எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான் அப்போது அந்த அன்னீத மாநீசன் இப்போது படையை யாம்வெற்றி கொண்டோமென்று கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டித் தாட்டிமையா யுலகில் சட்டமது வைத்தனனே வைக்கும் பொழுதில் மாயவரைத் தானோக்கிச் செய்க்கும் பெரிய திருமாலே யென்றனக்குக் கைக்குள்ளே ஏவல் கருத்தாகச் செய்வதற்கு மெய்க்குணம்போ லுள்ள விதமான சாதியொன்று வருவித்து என்றனுட மணிவாசல் காத்திருக்கத் தருவித்து நல்ல சாதியொன் றென்றுரைத்தான் அப்போது மாயன் அதற்கேது சொல்லலுற்றார் இப்போது உன்றனக்கு ஏவல் தொழில்கள்செய்ய ஆகின்ற பேரை அழைத்துக்கோ என்றுரைத்தார் வேகுன்ற நீசன் விளம்புவா னமைச்சருடன் ஆரைக் கொடுவரலாம் அருகில்விட்டு வேலைசெய்ய ஏரையொத்த மந்திரியே இயம்பு மெனக்கேட்டான் அப்போது மந்திரிகள் அந்நீசனுக் குரைப்பார் இப்போது வேறொருவர் இருந்தாலா காதெனவே 620 நல்லவகை யான நாடுஞ்சான் றோர்களைத்தான் வல்லவகை யாலும் வருவித்து வைப்பீரால் ஆகுமந்தச் சாதியென்று அந்நீசனுக் குரைத்தார் வேகும் பொழுதில் வெற்றிசான் றோர்களுக்கு ஆள்விட்டு வருத்தி அதிக நிதிகொடுத்து வாள்கொடுத்து ஆயுத பாணி மிகக்கொடுத்துப் பட்டயமுங் கொடுத்துப் பாரயிறை கூலிவிட்டுச் சட்டைக்குல் லாகொடுத்துத் தலைப்பா மிகக்கொடுத்து வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள் ஊழி விதியால் உடையோனை நெஞ்சில்வைத்துக் காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார் கலிநீசன் சாபம் அப்படியே காத்திருந்து அவர்வருகும் வேளையிலே முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால் அந்தநீ சன்தனக்கு அழிவுவரும் வேளையிலே இந்தச் சான்றோர்கள் இவர்தூக்கம் வைத்திடவே நீசனுட வம்மிசத்தோர் நேரக்கூறே யறிந்து வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே யவ்வினத்தோர் சீவன்போ கும்வேளைச் செப்புவான் சாபமொன்று காவலாய் நீரிருந்து காட்டிக்கொடுத் தீரேயென்று 640 கோபித்தான் சான்றோரைக் கூறழியப் பேசியவன் சாபித்தான் சான்றோர்க்குச் சத்தியில் லாநீசன் என்குடும்பத் தோர்கள் இராச்சியத்தை யாளுமட்டும் உன்குடும்பத் தோர்கள் ஊழியங்கள் செய்துமிக அழுந்தப்படு வாரெனவும் அந்நீசன் சான்றோர்க்கு விழுந்த மொழியாய் விரைந்துரைத்தா னேநீசன் சொல்லியந்த நீசன் சோர்ந்திறந்தா னவன்றன் வல்லி யுடன்பிறந்த மகன்தேசம் ஆண்டிருந்தான் நீசனுட சாபம் நீணிலத்தில் சான்றோர்க்கு மாய வலையாய் வளைந்ததுகா ணன்போரே தேவ ரதையறிந்து திருமா லிடமேகி மேவலர்கள் வந்து விளம்பினா ரப்போது மாயவரே எங்கள் வழியில்வாழ் சான்றோர்க்குப் பாவிநீ சன்சபித்த பழிசாபங் கேட்டீரோ சாபத்துல்ப மெல்லாம் தானுரைத்தா ரச்சுதற்குத் தாமத் திருமேனி தானுரைப்பார் தேவருக்கு மன்னதியத் தேவர்களே வாய்த்தபுகழ் சான்றோர்க்கு அந்நீசன் சாபம் அதுவுங் குறிதான்காண் வம்புள்ள நீசன் வழக்கெல்லா மேற்பதற்கு அன்புள்ள சான்றோர்க்கு அவனிட்ட சாபமது 660 எத்தனை குற்றம் இவர்செய்து போட்டாலும் அத்தனையும் நீசன் அவனேற்கக் காரியந்தான் நல்லதுகாண் தேவர்களே நாடுஞ்சான் றோர்களுக்குத் தொல்லைவந்தா லுந்தீர தொகைவைத்த லக்குமுண்டு சோழனுக்குச் சான்றோர் செய்தநன்றி மெத்தவுண்டு வேழமிட் டிருப்பேரை வெட்டினான் பாரறிய நீசனுக்குச் சான்றோர் நித்திரைக ளில்லாமல் வாசல்நடை காத்ததற்கோ வலுதுயரச் சாபமிட்டான் எல்லா மறிவார் ஈசர்முதல் லோகம்வரை வல்லாண் மையான வாயத்ததே வாதிகளே நாமென்ன செய்வோம் நாட்டில்விதி வந்ததற்குப் போமென்னத் தேவருக்குப் பெரியோன் விடைகொடுத்து மாயவரு மங்கே மனஞ்சடைத்துத் தானிருந்தார் வாயக் கலிநீசன் வையகத்தை யாண்டிருக்க நீசனிட்ட சாபம் நீதிச்சான் றோர்களுக்கு மாயவினை போலே வளைந்ததுகா ணன்போரே தம்பி தமையனுக்குச் சத்துருப்போல் தானாகி வம்புக்குங் கோளு மாநீச னோடுரைத்து அடிக்கவே கைக்கூலி அவனுக்கே தான்கொடுத்து முடிக்கும் வரையும் முறைமுறைக்கோள் சொல்லிடுவான் 680 இப்படியே சான்றோர் இவர்கள்நிரப் பில்லாமல் அப்படியே நீசனுட அன்னீதத்தால் வேறாய் கலிநீசன் கொடுமை பிரிந்துதான் சான்றோர் பெருத்த கிலேசமுற்றார் அறிந்துதான் நீசர் அவர்கள்தொக் காச்செனவே தாலிக்கு ஆயம் சருகு முதலாயம் காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம் தாலம தேறும் சான்றோ ருக்காயம் தூலமுட னரிவாள் தூருவட் டிக்காயம் தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த ஆலமரம் வரைக்கும் அதிகஇறை வைத்தனனே வட்டிக்கும் ஆயம் வலங்கைசான் றோர்கருப்புக் கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற ஊழியங்க ளெல்லாம் உரைக்கக்கே ளன்போரே பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான் கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான் நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான் வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான் நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான் கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான் 700 சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக் கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான் மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான் வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான் காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும் மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர் கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான் விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும் பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும் சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம் நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே 720 இப்படியே சான்றோர் இவர்தேடுந் தேட்டையெல்லாம் அப்படியே நீசன் அவன்பறித்துத் தின்றாலும் ஞாயமுள்ளச் சான்றோர் நாமமது கேட்டதுண்டால் நீசக்குலத் தோர்விரட்டி நெடுந்தூரங் கொண்டடிப்பார் பின்னுமந்தச் சான்றோரைப் பொல்லாதான் கொள்ளுகின்ற அன்னீத மெல்லாம் அருளக்கே ளாயிளையே உப்பா லுவரா உபய மெடுத்தவரை ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான் குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல் களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான் சாணார்கள் தம்பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம் வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான் வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ளச் சான்றோரைக் கட்டிக் சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து சுமந்து போனாலும் தொகையெண் ணமுங்கேட்டுப் பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான் ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம் வையமது கொள்ளாதே மாதேவுன் னோடுரைத்தால் ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி வாச முடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல் 740 நேசமுள்ள சான்றோர் நெடுநாளு மேபதறி நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போ லேசான்றோர் நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர் கீரியைப்போல் நீசன் கிராணம்போ லேசான்றோர் பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை பண்டுநீ சன்பித்த படுசாபந் தன்னாலே விண்டுரையா வண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார் இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில் லாதபடி அப்படியே சான்றோர் அவனூழி யங்கள்செய்து அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு வல்லாண்மை யான வரிசை யிறைகள்வைத்துக் கரிவிறை பாட்டஇறை கண்டபாட் டஇறையும் தரிசிறை காணாத தரைப்பாட் டஇறையும் ஆமிசங்க ளில்லாத அன்னீத வம்பிறையும் நேமித்து வைத்து நிலையுள்ளச் சான்றோரை அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டுப் பெண்ணா ணுடைய பெருமை மிகக்குலைத்து மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன் 760 சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல் வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிகப் பம்பழித்துச் சாணாரைப் பலசாதி யின்கீழாய்த் தும்பழித்து வேலை தூறுபடக் கொண்டனனே பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம் மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே முக்காலி கட்டி முதுகி லடித்துமிக மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம் ஆனாலுஞ் சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது கோவில் சிவாலயங்கள் கூடங்கள்சிங் காசனங்கள் நாவுலகுங் கள்ளாய் நாடி யிருந்தாலும் சாணான்கள் ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம் வீணாகச் சாணாரை விரட்டி யடிப்பான்காண் சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும் வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத் தோராமல் சாணான்சா ணானெனவே சண்டாள நீசனெல்லாம் கோணா துளத்தோரைக் கோட்டிசெய் தேயடித்தான் தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும் மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல் 780 சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான் றோரமிர்தம் ஈனம தில்லாமல் யாபேர்க்கு மீந்தாலும் பொல்லாத நீசன் பொறுதியுள்ளச் சான்றோரை கல்லாதான் கூடிக் காணவிடா தேயடித்தான் நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம் வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும் எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும் அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல் கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான் உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும் என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும் சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது வாணாள்க் கிடறு வருமடா மாநீசா முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும் உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா 800 ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில் பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில் நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண் அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக் கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண் கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன் பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில் மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும் நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான் கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும் வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார் தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான் அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச் செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன் பத்தத் தலையான பார அரக்கனுக்குத் தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே 820 பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில் மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார் கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச் சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன் தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால் சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக் காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால் அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால் பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய் கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால் அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால் வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும் தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால் 840 கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும் நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால் கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத் தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால் குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால் பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய் என்றுநா ராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே அன்றுஅந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான் 860 மாயவரே நீர்கேளும் வாய்த்தசான் றோர்களைத்தான் ஆயரே நீரும் அபுருவமாய்ச் சொன்னீரே சாதிகட் கீழான சாணார்கள் தங்களுக்கு வீரியமா யித்தனையும் விவரித்துச் சொன்னீரே சாணார்க்கு வைத்த தலைவீத முள்ளஇறை - என் வாணா ளழிந்திடினும் மாற்றிவைக்கப் போறதில்லை என்சீவ னுள்ளளவும் ஏற்றசா ணான்தனக்கு வன்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை நீர்தா னுமிந்த நிலைபேர்ந்து சாணாரின் ஊரா னதிலே உறைந்திருக்கப் போனாலும் கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை என்றந்த நீசன் இத்தனையு மாயருடன் தாவியு ரைக்கச் சாற்றுவா ரச்சுதரும் பாவி யுனது பவிசெல்லாந் தான்மாறி ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போ வென்றனையே ஆனாலுஞ் சாணார்க்கு அடியும்பல ஊழியமும் மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார் 880 அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான் மாலைகா லைநேரம் மாயவனே உன்றனக்குச் சீலமுள்ளப் பூசை செய்துவ ருவதற்கு நித்தமொரு நூறுபொன் நினக்குச் செலவுமுண்டே அத்தனையுங் கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால் அல்லாம லென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன் எல்லாத் திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப் பொன்பதி னாயிரந்தான் போடணுமே சம்பளங்கள் இப்பொன்னுக் கெல்லாம் யானெங்கே போவேனடா அப்பொன்னுக் கெல்லாம் அவனை யடித்தல்லவோ வேண்டித்தா னித்தனையும் விதானிக்க வேணுமல்லோ ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா முன்னெல்லாம் நீதான் உதவியோ யென்றனக்கு இந்நிலத்தை விட்டு எங்கானா லும்போடா அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிச் 900 சொல்லுவார் பின்னும் சீவனம்போ லுள்ளபுத்தி பல்லுயிருக் கெல்லாம் படியளக்கு மாலோனும் இத்தனையும் வேண்டி என்றனக்குப் பூசையது நித்தமும்நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்குத் தேச மறியாதோ செப்பாதோ சாட்சியது ஏற்கா திருப்பதற்கு ஏற்ற அடையாளம் தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங் காணலையோ பின்னுமந்தப் பூசை புனக்கார மானதெல்லாம் பின்னுங் கடைச்சாதி புலச்சிகை யெச்சித்தீதான் அறியலையோ நான்தான் அமுதேற் றிருப்பதுதான் வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான் நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால் என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன போபோ நீதானும் போகு மிடந்தனிலே நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை 920 அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல் போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில் வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும் நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப் பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும் நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித் தாடாண்மை யான சத்தியமா யென்றனையும் ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப் புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன் வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய திரமான வாயு சேடன் முதலறிய வருண னறிய மதியு மிகவறிய தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன் அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால் பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார் 940 என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான் அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய தேசமெல்லாம் நித்திரா தேவி யிருள்மூட ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி வெளுவே ளெனமாரி வெண்டூளி போல்தொளிய வாயு வதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க வீசுவீ சென்று உலாவி யதுவீச வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று மாநீச னிட்டிருந்த வாய்த்தகற் கோட்டையெல்லாம் தேனியீன் கூடதுபோல் செகலிடிந்த தம்மானை கோட்டைத் தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம் உழைந்து மிகவெருவி ஓகோவென வுளறி கழைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே சிப்பாயி யோட சுபேதாருந் தானோட அப்பப்பா வென்று அந்நீசன் தானோட பிராமண நம்பூரி புலம்பிமிகத் தானழுது ஸ்ரீராமனையுங் காணலையே தேசமிரு ளாகுதல்லோ 960 அய்யோ கெடுத்தானே அரசன்நம்மை யென்றுசொல்லி மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள் மாய னனந்த புரத்திலே வாழுமட்டும் நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில் ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன் பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம் என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள் நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோ மென்றுசொல்லி வெம்பிடா வண்ணம் வெளியிலுரை யாதிருந்தார் இப்படியே பூலோகம் எல்லாந் திணுக்கிடவே அப்படியே மாயவரும் ஆனதெய் வாருடனே இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம் ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப் பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப் பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம் இப்போது சும்மா இங்குவர லாமெனவே 980 அன்றந்த சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம் இப்போது சும்மா இங்குவர லாமெனவே அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல் நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித் தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும் மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக் கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை வெடுக்காக அந்த விபரிப்பெல் லாம்நடத்தி வாரிக்கரை யாண்டியென வாய்த்தநா மம்விளங்க நேரியர்கள் சூழ நெடியோ னங்கேயிருந்தார் 988 |
அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை
விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன் வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன் நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப் பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான் மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல் தான மழித்துச் சான்றோரின் கட்டழித்து ஈனகுலச் சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்துப் பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்துக் கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்துச் சாதி வரம்பு தானழித்து மாநீசன் மூதி முன்னீசன் மும்முடி யுந்தவிர்த்து நவ்வா முடியெனவே நாடிவன்நா டாகவேதான் எவ்வோ ரறிய இவன்தேசந் தானாக்கி ஆளாகமுன் னீசனையும் அவனைநா டாளவைத்துப் பாழாக நீசன் பழையசட்ட முமாற்றி நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டுத் தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது மானம் வரம்பு மகிமைகெட்டுச் சான்றோர்கள் ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே 20 தேவர் முறையம் தேவர்க ளெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி மூவரொரு மித்தனுக்கு முறையிட்டா ரம்மானை ஆதி முதற்பொருளே அய்யாநா ராயணரே சோதியே யெங்கள் துயரமெல்லாந் தீருமையா இத்தனை நாளும் இருந்தோமொரு மானுவமாய்க் கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது சாதிக்கட்டை யெல்லாம் தலையழித்து மாநீசன் மேதினிக ளெல்லாம் மேவினா னையாவே தான மழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின் மான மழிந்தாச்சே வரம்பெல்லாங் கெட்டாச்சே பூப்பியமுங் குலைத்துப் புரசியோ டொப்பமிட்டுக் காப்பிலிய னேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள் இத்தனை நாளும் யாங்கள்முறை யிட்டதுபோல் புத்தி தனில்வைத்தால் பொறுக்கஇனிக் கூடாதே தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல் சம்பி முகம்வாடித் தலைகவிழ்ந் திருப்பதென்ன மக்களு டதுயரம் மனதிரங்கிப் பாராமல் பக்கமாய் நீரும் பாரா திருப்பதென்ன சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப் பாராமல் ஆண்டோரே நீரும் அயர்ந்தே யிருப்பதென்ன 40 இதெல்லா மெங்களைநீர் ஏற்றசான் றோர்பிறப்பாய் முதலெல்லாஞ் சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால் பாவியந் தநீசன் படுத்துந் துயரமெல்லாம் தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும் பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே மறுக்க மதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு உகத்துக் குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம் அகற்றி யருள்தந்த அச்சுதரும் நீரல்லவோ மக்களா யெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால் இத்தனை பாடும் எங்களுக் கென்றோதான் புத்திரரா யெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ தாங்களுக்கு நெஞ்சம் சற்று மிரங்கலையோ இப்படியே தேவர் எல்லோரு முறையமிட அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே அம்மை உமை இரங்கல் நல்ல உமைதிருவும் நன்றா யெழுந்தருளி வல்ல பொருளான வாய்த்தநா ராயணரின் அடியி லவள்வீழ்ந்து அழுதுகரைந் தேதுரைப்பாள் முடியுமடி யில்லா முதலே முதற்பொருளே 60 அரிஹரிநா ராயணரே அண்ணரே அச்சுதரே கரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால் அலச்சல்செய் தெங்களையும் அகற்றிவைத்துப் போனீரோ பாவிக் கலியனுட பழிசாபச் சூட்சியினால் பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும் சலிவாகி மேனி சடல மிகத்திமிர்த்து இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறா ரீசுரரும் உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும் நின்னயமில் லாக்கலியன் நீசன் பிறந்ததினால் என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும் வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய் நானும்பர மேசுரரும் நலநஷ்டமுந் தெரியோம் பேசிப் பழக்கமிட்டுப் பெருத்தநா ளுண்டுமண்ணே தோசிக் கலியனுட சூட்சியினால் நாங்கள்படும் பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன நாட்டைக் கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன் அல்லாமல் நம்முடைய அருமைச்சான் றோர்கள்படும் பொல்லாங்கை யெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும் 80 வரமீறியக் கலியன் மாய்கையி னேதுவினால் பிரமன் பிறப்புப் பிசகித் தலைமாறி முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில் லாப்பிறவி பிண்டப் பிறவி பேருறுப் பில்லாப்பிறவி தலையுடம் பில்லாத சடலப் பிறவியைப்போல் நிலைதவறி வேதா நினைவுதடு மாறினனே சீவன் கொடுக்கும் சிவனுக் கிருநினைவாய்ப் பாவக் குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும் படியளக்க நீரும் பண்புற் றிருக்காமல் குடிகேடு மாச்சே குடிக்கக் கிடையாமல் இத்தனை யுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே சங்கடங்க ளெல்லாம் தான்சொல்லக் கூடாது கயிலை சிவனார் காணாம லும்மையுந்தான் அகிலமதைப் பாராமல் அயர்ந்திருக்கி றாரெனவே ஆனதா லென்னுடைய அண்ணரே அங்கேகி மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குச் சொல்வாரும் என்றுமையா ளிப்படியே இன்பமாய்ச் சொல்லிடவே அன்று பெருமாள் அவள்முகம்பார்த் தேதுரைப்பார் 100 சிவனாரும் நீயும் தேசமதி லில்லாட்டால் எவனுக்கு மலைச்சல் இல்லையே ராச்சியத்தில் உங்களால் யானும் உகத்துக் குகங்கிடந்து சங்கடங்க ளுற்றுத் தவிக்கத் தலைவிதிதான் நீங்களில்லை யானால் எனக்கும் அலைச்சலில்லை ஏனுங்க ளோடே இப்பாடு யான்படத்தான் அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டு மென்றனக்குக் கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு ஏனிந்தப் பாடு யான்படக் காரணந்தான் மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும் கைப்பிடித்த நாள்முதலாய்க் கலந்துவிளை யாடறியேன் மெய்ப்பிடித்த மான மெல்லியரு மங்கிருக்க இரப்பனைப் போல்லோகம் எல்லாந் திரிந்தலையப் பரப்பிரம னம்மைப் படைத்ததுமி தற்கோவென எல்லையில்லாப் பாடு யான்பட்ட துபோதும் நல்லகுலச் சான்றோரை நான்பெற்று வைத்தேனே வைத்த தெல்லோரும் மனதறியப் பார்த்திருக்க பொய்த்தலைவ னீசனையும் பிறவிசெய்ய ஞாயமுண்டோ நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும் பாசக் கயிறிட்டுப் பந்தடிக்கச் செய்தாரே 120 தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும் வெட்டா வெளியாய் விரட்டிப் பிடிக்குமல்லோ காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார் மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே மோசக் கலியனையும் முடிக்கவகை யாரறிவார் வாளா யுதத்தாலே மாளானே மாகலியன் தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான் முப்பிறவி யாறும் முடித்த வலுமையெல்லாம் இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை உகத்துக் குகம்பிறந்து ஓடித்திரிந் தவனென்றே அகத்துக்கொஞ்சம் வைய்யாமல் அவர்மூப்பாய்ச் செய்தாரே ஆனதா லின்னமினி அங்குவர வேணுமோகாண் தானம்வைத்துப் பாராமல் சங்கை யழித்தாரே எங்கே யானாலும் இறந்திடுவே னானிதற்குச் சங்கையுள்ள சாணார்க்குத் தங்குமிடம் வேறிலையே தாய்தந்தை யில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல் மாயக் கலியனினால் வாடுவரே சான்றோர்கள் தகப்பனில்லாப் பிள்ளை சாணார்க ளென்றுசொல்லி அகப்படுத்திச் சான்றோரை அடிப்பானே மாநீசன் 140 தாயுந் தவமிருந்து சடைப்பாளெனைக் காணாமல் ஆயுங் கலைதெரிந்த ஆயிளையும் வாடுவளே இப்படியே ஞாயம் இருப்பதா லென்றனக்கு அப்படியே வேறு வழியல்லவே யானதினால் எங்கினிப் போவேன் என்றெண்ணுது என்மனது உங்களுட ஊருக்கு ஒண்ணுதலே போநீயெனக் கோபத்தால் தங்கையுடன் கூறினா ரித்தனையும் வேகத்தா லம்மை விழியிட் டழுதனளே கயிலைக்கு நீர்தான் கால்வைக்கா தேயிருந்தால் அகிலம தொன்றாய் அழியு மொருநொடியில் நல்லகுலச் சான்றோர் நாடுங் கலியனினால் தொல்லைமிகப் பட்டுத் துயருற்று வாடுவரே நானுமென்றன் ஈசுரரும் நல்ல கயிலையிலே மானுங் கலைபோல் மறுகி யிருப்போமே கயிலை முனிதேவர் கட்டழிந்து வாடுவரே மயிலனைய ஈசர்சொல்லை மறந்து மிருந்தாரே கன்னிப்பெண் ணார்களென் கற்பனையைத் தான்மறந்து உன்னுதலாய்ப் பெண்கள் ஒருவர்க்கோர் மூப்பாச்சே ஐயோ கயிலை அங்கே வரம்பழிந்து பையரவம் பூணும் பரமன்மௌ னமாச்சே 160 அண்ணரே கோவே அடியாள் தனக்கிரங்கி எண்ணமில்லாக் கயிலைக்கு எழுந்தருள வேணுமையா என்று அறம்வளர்த்தாள் இறங்கியண்ணர் கால்தனையும் சென்று பிடித்துச் செய்யத்தாள் தான்வணங்கி மனதிரங்கி எம்பெருமாள் மார்போடு தங்கையரைத் தனதில் பிரியமுற்றுத் தங்கையரோ டேதுரைப்பார் திருமால் திருக்கயிலை ஏகல் உன்னோடு பிறந்த ஊழிவிதி யானதினால் நன்னாடோ டேவாழ நமக்குவிதி யில்லையே உன்றனக் காகவல்லோ ஊருக்கூரே திரிந்து சந்தோச மற்று சடைக்க விதியாச்சே என்று பெருமாள் ஏற்ற பிறப்போடு இன்று கயிலைக்கு எழுந்தருள வேணுமென்று தேவர் முனிவரோடு திருக்கனனி மாரோடு மூவருட நடுவன் மகமலர்ந் தேகூடி நடக்கவே ணுமெனவே நளினமுற் றெம்பெருமாள் கடற்கரையில் வந்து காலமே தெனப்பார்த்தார் இந்தச் சொரூபமதாய் இங்குவிட் டெழுந்தருளிச் சிந்தர் குடியிருக்கும் சீமையி லேகுமுன்னே கலிமூழ்கி நாமள் கரையேறப் போறதில்லை பொலிவாக வேசம் புதுப்பிக்க வேணுமென்று 180 என்ன சொரூபம் எடுப்போம்நா மென்றுசொல்லி அன்னப் பெருமாள் ஆலோ சனையாகி மேலெல்லாம் வெண்ணீற்றை மிகஅணிந் தெம்பெருமாள் பாலொக்கும் நெஞ்சம் பரம னொருநினைவாய் மாமோக ஆசை மயக்க வெறியறுத்துத் தாமோ தரனார் சடைக்கோல மேபுனைந்து காலில் சிவநினைவைப் கழராமல் தானிறைத்து மார்பிலைந்து பூமணியை வகிர்ந்தார வேடமிட்டுக் கண்ணில் மனோன்மணியைக் கண்ணாடி யாய்ப்பதித்து எண்ணரிய தங்கை இன்பமுட னேவளர்த்த முப்பத்தி ரண்டறத்தை உடலெல்லா மேபொதிந்து செப்பமுடன் கந்தை செய்யவெண் கலையணிந்து தண்டரள மானத் தடியொன்று கைப்பிடித்து அண்டர்களும் போற்றி அரகரா என்றுவர தேவர்களுங் கூடிச் சிவசிவா சிவனேயென்று தாவமுள்ள தேவரெல்லாம் தாரமி டேத்திவர அம்மை உமையாளும் அவளுஞ் சடைவிரித்துச் செம்மையுள்ள மாதும் சிவசிவா என்றேத்தி எல்லோ ருடனே எம்பெருமாள் தானடந்து வல்லோர் புகழும் வாழ்கயிலை வந்தனராம் 200 கயிலை தனில்வரவே காரிருளுந் தான்மறைய மயிலையொத்த ஈசர் மாயவரைக் கண்டாவிச் சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல் வந்தந்த ஈசுரரும் மார்போ டுறவணைத்து இத்தனை நாளும் யானும்மைக் காணாமல் புத்திரனுந் தாயைப் போகவிட்டாற் போலிருந்தேன் மாரி காணாத வாய்த்த பயிர்போலும் ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன் இனம்பிரிந்த மான்போல் இருந்தே னுமைத்தேடித் துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன் என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும் சென்றாவிக் கொண்டு சிணுங்கி யழுதுசொல்வார் இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே துணையு மெனைமறந்து தூரநீர் போனதென்ன என்னைவிட்டு நீரும் எழுந்தருளு மன்றுமுதல் வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன் துணையிழந்த அன்றிலைப்போல் தினமு முமைத்தேடிக் கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே உயிர்த்தோ ழமைபோல் உறவுகொண்ட நாரணரே மெய்த்தோ ழமையை விட்டுப் பிரிந்தமுதல் 220 பிரிந்து மலைத்தேன் பச்சை நிறமாலே சரிந்துபள்ளி கொண்டு சதாவருட மாச்சுதல்லலோ இத்தனைநாளும் என்னைமிகப் பாராமல் மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன கயிலைக்கு மென்றனக்கும் கட்டான மந்திரிதான் அகில மீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான் நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே தானீ தமான சர்வபர நாரணரே இந்த விதமாய் இகபர விதத்தோடும் உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ அப்படியே நீரும் ஆதிநா ராயணராய் முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும் ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும் கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர் மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும் வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும் நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும் இப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக் கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல் 240 சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம் எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும் வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச் செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது எல்லா முமது இச்சையது போல்நடத்தும் சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப் பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார் எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள் முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால் பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப் பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண் யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு 260 மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில் சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும் மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில் இனிதிருக்கும் போது என்னை நினையாமல் மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார் ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய் வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல் வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால் கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும் 280 ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர் சிறைப்பிடித்தப் பாவிகளைச் செயித்ததுவே றாருமுண்டோ நாலாம் யுகத்தில் நன்றிகெட்டச் சூரபற்பன் ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே நாட்ட முடனே நாடும் படையோடு கோட்டை யதிட்டுக் கொடியமா பாவியனாய்க் கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்துத் தேட்டமுடன் கயிலை சீமையது வுங்கொடுத்து இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி உருக்கமுடன் நானிருந்த உவரியி லேகிவந்தீர் தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால் மூவர்முத லும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால் என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லிச் சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே விட்டவுட னவனோடே வெகுநாளா யுத்தமிட்டுப் பட்டபா டெல்லாம் பகர எளிதாமோ உயுத்தமிட் டவனை ஒக்கத் தரமறுத்துச் செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே இரணிய சூரனென்று எனக்கெதிரி யாய்ப்பிறந்து 300 தரணியி லவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான் பின்னு மவன்றனக்குப் பிள்ளையாய் நான்பிறந்து கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம் பத்துத் தலையோடு பாவியவன் பிறந்து உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்துக் குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப் பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே தேவியும் நானும் தேசமதி லேபிறந்து அவனை யழித்து அந்தயுக முங்கருக்கிச் சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு சதியாந்துரி யோதனனாய்த் தான்திரும்ப வெபிறந்து மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல் அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால் கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம் கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு 320 சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால் சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும் பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான் மற்றப் பிறவி யாக வகுத்தாலும் இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம் தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன் வீண்டிடறு தீர்ந்துமக்கள் விளங்குவது எக்காலம் ஆறு பிறவி அழித்ததுவு மென்றனக்கு நீறுபோ லெண்ணுதுகாண் நிற்கலியைப் பார்க்கையிலே என்ன விதத்தால் இவனை யழிப்போமென்று வன்னச் சிவனாரே மனதுவேறே ண்ணுதுகாண் நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு 340 வீடாச்சு குண்டம் மேதினிக ளங்காச்சு தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான் மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண் பலபேர்க ளாட்டும் பாம்புபோ லென்னையுந்தான் அலைவிதமா யென்னை அழைத்ததென்ன சொல்லுமென்றார் அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தான்பார்த்து இப்போது நானும் இயம்புகிறேன் கேளுமென்று முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்குப் பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே அன்றுசா பம்பகர்ந்த அதுகேட்டுக் கொண்டருளும் குறோணி யொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து சுறோணித மாயவரே தொல்புவியெல் லாமுழுங்கி என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரை யும்விழுங்க நின்னோடு மாயவரே நீயொருவன் தப்பிமிக என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில் தென்னவனே நீயும் செய்தத் தவமதினால் எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன் குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி கேட்டாயே சூரனுடல் கீறித்துண் டாறாக்கித் தாட்டாண்மை யாகத் தரணிதனில் விட்டெறிய 360 வரந்தாரு மென்று வாகாகக் கேட்டவுடன் தரந்தரமே துண்டம் தரணிக்கெல் லாம்பிறந்து மாற்றா னாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும் சீற்றத் துடனே செடமெடுக்கு மென்றுசொல்லித் தந்த வரத்தின் தன்மையா லிந்தமுறை எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப் போறீர்காண் என்றந் தஈசர் இப்படியே சொன்னவுடன் அன்று மகாமால் ஆகங் களிகூர்ந்து ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்க ளானாலும் மானாபர ஞாய வரம்பழித்துப் போட்டீரே இதற்குமுன் னேதாலும் என்னையறி யாதவண்ணம் ஒதுக்கிலிருந் தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ மும்முறைபோ லென்னை உவந்துக் கெணியாமல் அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே என்னைக் கெணியாமல் இக்கலியைச் செய்ததினால் நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது நம்மாலே யொன்றும் நடவாது ஈசுரரே சும்மாவென் னோடிருந்து சோலிபண்ண வேண்டாங்காண் 380 உகத்துக் குகங்கள் ஓடித்திரிந் தலைந்து மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது ஏங்கிமிக வாடுதப்பா என்திருவைக் காணாமல் பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில் ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ் சோருதையா அந்தமுழுப் பாவிகளில் அதிகமுழுப் பாவியிவன் சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்துநின் றேவல்செய்தால் கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்ச மோயிவன்தான் முடியுமோ பாவி யுத்தமிடச் சென்றதுண்டால் தன்ம மறியாத சண்டித்தடி மூடர்கையில் நம்மைப் பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண் பட்ட அடிவூறப் படுத்திருக்கப் போறேனான் ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண் என்றாதி நாரா யணர்தானு மிப்படியே அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச் சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன் புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால் எப்படித்தா னானும் ஏகம தாளுவது 400 சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம் நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால் ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம் கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம் பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச் சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார் வீசுபுக ழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும் என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந் தாரெனவே சொன்னவரை யெல்லாம் சுறுக்காகத் தானழையும் 420 என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன் அன்றந்த ஈசுரனார் அழைத்தா ரவர்களையும் உடனேதான் தேவர்முனி ஒக்கப் பயமடைந்து தடதடென ஓடிவந்து தாழ்ந்துநமஸ் காரமிட்டு அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்துச் செப்புகிறா ரையா திருக்கண் பொறிபறக்கக் கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து விண்க ளதிர வெடுவெடெனக் கோபமுற்றுத் தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற மூவர் திணுக்கிடவே உரைக்கிறா ரெம்பெருமாள் மண்திண் ணெனவே மலைகள் பொடிபடவே திண்திண் ணெனவே தேவர் மிகப்பதறச் சிவனுங் கிடுகிடெனச் சிவனுமை யும்பதற நமனும் பதற நாரா யணருரைப்பார் தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே மூவரே நானும் ஒளித்ததெங்கே சொல்லுமென்றார் ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கே யில்லையென்று கோளுரைத்த ரீசர் குருமுன்னே நீங்களெல்லாம் சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச் சொன்னதிட்டச் சூத்திரத்தை யெல்லாம் சொல்லுமென்றா ரெம்பெருமாள் 440 சொல்லநா வில்லாமல் சோர்ந்துமிகத் தேவரெல்லாம் பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல் விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கிநின்றா ரன்போரே நின்ற நிலையறிந்து நெடியபர மேசுரரும் அன்றெந் தனோடே அறம்பாடிச் சொன்னதெல்லாம் இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச் சொல்லாமல் நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன பேச்சுப்பே சுங்கிளிக்குப் பின்பூனை நாட்டமுற்றால் சீச்சுக்கீச் சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன் அன்றுநீர் சொன்னமொழி அயர்த்துமிகப் போனதென்ன இன்றுநான் கண்டிலனே இதற்குமுன் னுள்ளதிறம் இப்படியே ஈசர் எடுத்துரைக்கத் தேவரெல்லாம் எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார் எல்லா மறிந்து எடுத்துரைப்பா ரெம்பெருமாள் பொல்லாதார்க் கெல்லாம் பிறப்பொன் றிசைந்திருக்கு சொல்லுகிறேன் நானுமொன்று சொல்லுவதைக் கேட்பீரோ நல்லதுதா னென்று நாட்டமுற் றெல்லோரும் அப்போது எம்பெருமாள் ஆதிசிவ மோடுரைப்பார் இப்போது கேட்பீரோ யான்சொல்லும் நியாயமது 460 சிவன் திருமால் ஐக்கியம் என்றுதிரு மாலுரைக்க எடுத்துரைப்பா ரீசுரரும் மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே வாரு மெனஅழைத்து மாலோன் தனையிருத்திச் சீருடனே வேதாவும் சிவனும் உமையாளும் எல்லோருங் கூடி இருந்தந்த மாயவரின் நல்லா யருகிருத்தி நவிலுவார் சத்தியமாய் இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்துக் கதுக்காக வும்முடைய கருத்தின் படியாலே நடக்கும்படிச் சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோங்காண் அடக்குடக் கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண் இன்றுமுத லும்முடைய இச்சைபோ லேநடத்தி என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து சட்டமெல் லாமுமக்குத் தந்தோ மினிநீர்தான் இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண் உம்மை நினையாமல் உக்கலியைச் செய்ததினால் நம்மை வரைநீர்தான் நடத்தும் படிநடத்தும் என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும் அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும் சத்திய மாகத் தானுரைத்தார் நாரணர்க்கு மத்திய நாதன் மனமகிழ்ந் தேதுசொல்வார் 480 நல்லதுதா னென்று நாட்டமுற் றெம்பெருமாள் வல்ல பரமே சுரரோ டேவகிர்வார் கன்மம்போ லொத்தக் கலிப்பிறப் பானதினால் நம்மள் முதல்மாறிப் பிறக்கநா ளாகுதுகாண் ஆனதா லீசுரரே அருளுகிறேன் நீர்கேளும் ஈனமுள்ள பாவி இயன்றதுரி யோதனனைக் கொன்றே னவனைக் குருநாடை வர்க்கீந்து முன்னே மறையோன் மொழிந்தசா பத்தாலே தேவர்முதல் வானோர் தேவமுனி தான்வரையும் மூவ ருறையும் உற்றதெய்வ லோகமேழும் மேலோர்க ளெல்லாம் மேதினியி லென்றனக்குப் பூலோகந் தன்னில் பிள்ளையென வேபிறக்க வேணுமென்று மாமுனிவன் விட்டசா பத்தாலே தாணுவே நீரறியத் தாம்பிறந்தார் சாணாராய் ஏழுலோ கமதிலும் ஏற்றமுள்ள வித்தெடுத்துக் கீழுலகில் பெற்றேன் கீர்த்தியுள்ள சாணாராய்ப் பெற்றுவைத்து ஸ்ரீரங்கப் பூமியிலே போயிருந்தேன் மற்றுஞ்சில நாட்கழித்து வாழுந் தியதிதனில் அனந்த புரம்நோக்கி யானேகும் வேளையிலே புனந்தனிலே நின்று புலம்பலுற்றார் தேவர்களும் 500 தெய்வலோ கத்திலுள்ள தேவதே வாதிகளும் வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும் சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும் தவமான வேதாவின் தன்னுகத்தில் வாழ்பவரும் வடகயி லாசமதில் வந்திருந்தார் வாட்டமதாய் நடக்கும் வழியில் நானவரைக் கண்டேதான் தாது கரமணிந்த தானவரே தர்மிகளே ஏதுகா ணீங்கள் இங்குவரக் காரணமேன் என்றவரோ டேகேட்டேன் ஈசுரரே கேட்டருளும் அன்றவர்க ளென்னோடே அருளினதை நீர்கேளும் கலியன் பிறந்ததினால் கட்டழிந்து மானுபங்கள் சலிவாகி எங்களுட தானதவங் குன்றினதால் இனியிருந்தா லென்னபலன் என்றுமிக எண்ணமுற்றுக் கனிந்து வுமைத்தேடிக் காணவந்தோ மென்றுரைத்தார் அப்போது வுங்களுக்கு ஆகவேண் டியவளம் இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன் சொல்லுகிறா ரந்தத் தேவர்கள்தா மீசுரரே நல்லதுதா னிந்த நாட்டில்கலி வந்ததினால் கலிக்குமுன் னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும் அலிக்கிய மானதினால் அக்கலிமா ளும்போது 520 சிவசத்தி தான்முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும் தவமுனிவ ராகிடினும் தரணி புற்பூண்டுவரை மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும் திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம் மேனி யழுக்கறுத்து மேன்மூ டிருளறுத்து யோனிப் பிறப்பும் உற்றலிங் கப்பிறப்பும் அவரவர்க் குள்ள அதிகப் பிறப்போடும் எவரெவர்க்கும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ ஆகும் பிறப்பும் ஆகுவது மிந்நாளில் சாகும் பிறப்புத் தவறுவது மிந்நாளில் அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால் எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே ஆனதா லெங்களுட அக்கமதி லிப்போது மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றா ரீசுரரே கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந் தேன்முன்னமே இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகி லுள்ளோரைப் பிறவிசெய்ய ஞாயமுண்டு பிள்ளைமொழி சொன்னதினால் திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார் அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான் 540 நீர்நினைத்த துபோலே நிச்சயித்துக் கொள்ளுமென்றார் பாரனைத்துங் காக்கும் பரமே சுரருரைத்தார் அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும் முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார் தேவலோகத்தார் மனுப்பிறப்பு தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும் பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல் மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும் உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி நல்லதுகாண் நாரணரே நாங்கள்பிழைத் தோமெனவே பிறக்கவே போவோம் பிறந்தா லடியார்க்கு இறக்கவிதி யாகுமல்லோ இழிகலிய னேதுவினால் இறந்தால் பின்னுமந்த இனத்திலடி யார்பிறக்க வரந்தாரு மென்று வணங்கிநின்றா ரையாவை அப்போது அய்யா அரிநமோ நாரணரும் செப்பரிய நல்லகுலத் தேவர்களுக் கேதுரைப்பார் மக்களே நீங்கள் வையகத்தி லேபிறந்தால் வக்கலிய னேதுவினால் மாயமுங்க ளைச்சூழ்ந்து 560 என்பேரு மீசர் ஏற்றஉமை யாள்பேரும் தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான் ஆனதால் சாவுவரும் ஆனாலு முங்களுயிர் மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும் இப்படியே வுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும் எப்படியு முங்களுயிர் இதில்விட் டகலாதென்றார் நல்லதுகா ணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம் வல்ல வகையான வாய்த்தசா ணாரினத்தில் தேவ ருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம் மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம் சம்பூர்ணத்தேவன் - பரதேவதை தவசு போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில் தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன் பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில் உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித் தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய் மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால் நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா 580 என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய் உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா பூனை யொடுவந்து புல்குமோ - பூனை நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா ஈயோடு சேர்மோ இசல் ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில் ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான் காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண் 600 எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத் தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும் தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம் என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால் வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல் தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல் நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம் அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான் பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும் 620 நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார் அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும் எமலோகத்தார் மனுப்பிறப்பு ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத் தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார் உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால் ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர் இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில் போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில் இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார் சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே 640 நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால் இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய் வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால் காலக் கலிதான் கட்டழித் தென்மகவு மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால் நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில் மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய் வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம் நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம் போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு பிரமலோகத்தார் மனுப்பிறப்பு பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார் வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே ஏதுங்கள் ஞாயம் என்னோ டுரையுமென்றார் அப்போது நல்ல அந்தரிஷி யேதுரைப்பார் இப்போது அய்யாவே எங்களைப்பூ லோகமதில் படைக்கவே ணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல் நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது 660 முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய் அல்லாம லெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே பொல்லாத குற்றம் பிரமனுக்குச் செய்ததினால் அன்பத்தினா லொன்றிரிஷி அவனிதனில் போகவென்று இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம் ஆனதா லவர்கள் அவனிதனி லேதிரிய ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால் இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில் கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார் நல்லதுதா னென்று நாரா யணருரைப்பார் வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று மதுக்குகந்த மன்னன் வழுத்துவா ரன்போரே சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப் பூமிதனில் மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே என்ன விதமாய் இருப்பாரென் றேயினமாய் துன்னயமாய் நீங்கள் துணிந்துநன்றாய்க் கேட்டிங்கோ மான்தோ லிலேயிருப்பான் வானமதைத் தான்பார்த்துத் தீன்சோ றருந்தாமல் செலங்குடித்து நாடோறும் 680 கற்பமுண்டோ மென்று கலியில்மிகப் பட்டுழன்று அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும் வரம்வைத் தவனை வதைத்துப்பின் னுன்னினத்தில் படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும் ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும் நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும் மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள் ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும் கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள் மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச் சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள் மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும் இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள் உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து 700 அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார் கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர் கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும் உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர் புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர் புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர் தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர் பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால் காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார் உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள் இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய் அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார் சோழக் குருநாடு தேசமது நன்னாடு ஆளவை குண்டர் அவர்வளரும் நன்னாடு இந்நாட்டில் வாழும் இராச ருடவளமை சொன்னால் தொலையாது சொல்ல எளிதல்லவே 720 இப்புவியில் வாழும் என்றன்வை குண்டரிடம் எப்புவியில் வாழும் இருஷிகன் னாசியெல்லாம் வரம்வைக்கச் சொல்லி வதைக்கவந்த வைகுண்டர்காண் பரம்பெரிய வைகுண்டப் பதியாள வந்தவர்காண் சன்னாசி யெல்லாம் தலைவீதம் வாழுகின்ற மின்னான சீமை விரிக்கக்கேள் நீங்களெல்லாம் பாண்டிய னான பரிகொங்கை நன்னாட்டில் ஆண்டிருப்பான் சன்னாசி அவனொருவன் கேட்டிருநீ வருஷ மொருநேரம் மாறிப் பிறந்தேனென்று புருஷனென வந்தெடுத்தால் பிள்ளையுண் டென்றுசொல்லி இருப்பான் சிலநாள் இவனொரு சன்னாசி சிங்கள நன்னாட்டில் சீகண்டன் ராச்சியத்தில் புங்கம்பா லுண்டு பூவையரைப் பாரோமென்று ஆடை யுடுக்காமல் அவனிருப் பானொருவன் கோரக்க நாடு குருக்கேத்திரன் ராச்சியத்தில் சூரக்கோல் கைப்பிடித்துச் சூலா யுதமேந்தி தன்மதத்தால் பேசித் தானிருப்பா னேசிலநாள் கன்மத்தால் சாவான் கடியமூன் றாம்பேர்தான் இப்படியே யைம்பத் தாறூ ரிவைகளுக்கும் அப்படியே தானிருக்கும் ஆனசன் னாசிகட்கு 740 ஒண்ணொண் ணடையாளம் உரைக்கிறேன் சீக்கிரமாய் துண்ணெனவே நீங்கள் துணிந்துமிகக் கேளுமென்று நாலாஞ் சன்னாசி நயன மிமையாதிருப்பான் காலைக் கைகொண்டு கட்டிறுக்கி யேயிருப்பான் அஞ்சாஞ் சன்னாசி அன்னங் குடியாமல் பிஞ்சிரு மிச்சியிலை பிசைந்துதின் றேயிருப்பான் ஆறாஞ் சன்னாசி ஆனகஞ் சாகுடித்து நீறாக்கித் தேகமதை நிஷ்டைபோல் தானிருப்பான் ஏழாம் சன்னாசி இடுப்பிலொரு சீலைகட்டிப் பாழாகப் பட்சி பறவைதின்றே யிருப்பான் எட்டாஞ் சன்னாசி இருந்துமிகக் கண்மூடி கட்டாய்ச் சுவாசமதைக் கவர்ந்துகவர்ந் தேயிருப்பான் ஒன்பதாஞ் சன்னாசி உமிழ்நீ ரிறக்காமல் இன்ப விறுவிறுத்து ஈரவம்போல் கண்வெளுத்துத் தூங்கினாற் போலே சூழச்சூழ விழித்துப் பாங்குகள் தேடிப் பதிந்திருப்பான் கண்டீரே பத்தாஞ் சன்னாசி பதிவாக நாள்தோறும் சிற்றா மணக்கிலையில் துயிலுவான் கண்டீரே பதினொராஞ் சன்னாசி பவளமணிக் கோர்வையிட்டுத் துதியா யொருமூலம் சொல்லித்தினம் சேவித்து 760 உரிய உளுந்தும் ஓயாமல் கஞ்சாவும் சதமென்று நம்பி தானிருப்பான் கண்டீரே பன்னிரண்டாஞ் சன்னாசி பாரக்கல் கோர்வையிட்டு உந்திக்(கு) இலுப்பையிலை உழக்குச்சா றுகுடித்து இருப்பான் பதிமூன்றான் இவனினத்தைக் கேட்டிருநீ பருப்பா னவலும் பழமுந் தினமருந்தி கோவை யிலையும் கொடுப்பையிலை யும்புசித்துச் சேவைபண்ணி நித்தம் செய்திருப்பான் கண்டாயே பதினாலாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு துதியா யொருமூலம் சொல்லித் தினஞ்சேவித்துக் கையிறை கொண்டேதான் கட்டிக்கொண் டேயிருப்பான் பதினைந்தாஞ் சன்னாசி பார்க்கெந்த மாலையிட்டு மதியகத்தே வுண்டு மலர்ந்துதுயின் றேகிடப்பான் பதினாறாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு ஆடை யுடுக்க அறிவுசற்று மில்லாமல் கோடை குடித்துக் குலைவான் பதினாறான் கள்ளிதனைத் தின்று காய்க ளிலையருந்தி கொள்ளித் தழல்காய்வான் கொடிய பதினேழான் நல்லத்திக் காயருந்தி நாமமணி யும்பூண்டு கொல்லத்தி போலே குலைந்துகுலைந் தேதிரிவான் 780 இவன்பதி னெட்டான் என்றே யினமறிநீ எவனு மறிவான் ஈரெட்டு மூன்றானை மான்தோலின் மேலிருப்பான் மற்றிருபான் மீசையுள்ளான் தான்தெரியு மற்றிருபத் தொன்றா னினங்கேளு நாகத்தின் முள்ளை நல்லதலை மேலணிந்து கூகத்தைச் சுற்றிக் கும்பிட்டுத் தான்திரிவான் இருபத்தி ரண்டான் இனங்கேளு நன்றான மதுவைத்து நித்தம் வணங்குவான் மந்திரத்தை இருபத்தி மூன்றான் இருப்பான் மயிர்வளர்த்துச் சருவைத்துப் பால்பழத்தில் தந்திரத்தை யோதிடுவான் இருபத்தி னாலான் எங்கு மிகத்திரிந்து உருவேற்றி நித்தம் உடல்வாட லாயிருப்பான் இருபத்தியைந் தாமிருஷி எருக்கலம் பாலருந்தி பருவமாய் ஓவியஞ்செய் ததிலே படுத்திருப்பான் கள்ளுக் குடித்துக் கறியுப்புக் கூட்டாமல் புள்ளித்தோல் மேலிருப்பான் புகழிருபத் தாறானும் நீரைத் தியானமிட்டு நித்திரைக்குத் தானோதி பாதை வழியேகான் பத்துரண் டேழானும் கோண முடிமுடித்து குறுத்தடியுங் கைப்பிடித்து நாணமில்லா தேதிரிவான் நல்லிருபத் தெட்டானும் 800 சூலம் பிடித்துச் சுழியெழுத்தை மேலூன்றி கோலமிட் டேதிரிவான் கூறிருபத் தொன்பானும் முப்பதாஞ் சன்னாசி முச்சந்தி தான்பார்த்து அப்புச் சிரங்குபற்றி அவன்கிடப்பான் சந்தியிலே ஓர்முப்பத் தொன்றான் ஊமையென வேதிரிந்து கூர்மையுள்ள காது கொஞ்சமுங்கேளாத் திரிவான் முப்பத்தி ரண்டான் உயர்ந்ததிடில் தான்பார்த்து சர்ப்பத்தின் நஞ்சு தானுண்டோ மென்றிருப்பான் நன்றா யறிந்திடுநீ நல்லமுப்பான் மூன்றானையும் கண்டா லறிந்திடலாம் கண்ணில் வெளுப்புமுண்டு தொண்டையில் சடம்புகட்டித் தொல்புவியி லேதிரிவான் மண்டை வகுப்புமுண்டு வாய்த்தமுப்பத் தினாலான் முப்பத் தைந்தானும் முயலகன்போ லுண்டாகி எய்ப்பிளைப்பார் போலே இவன்திரிவான் கண்டாயே செப்பமுள்ள முப்பத்(து) ஆறான் செய்தியைக்கேள் புஸ்பமீதிற் படுத்து பூவையர்கள் தாலாட்ட அற்பமுட னாடை அணியாமல் தானிருப்பான் முப்பத்தி யேழாஞ் சன்னாசி யானவனும் அகத்தி யிலையருந்தி ஆனைத்தோல் மேலிருந்து மகத்துவமாய்ப் பேசி மாள்வான் முப்பத்தேழான் 820 கொல்ல மிளகு குறுணியொரு நாளருந்தி பல்லைமினுக் காதிருப்பான் பார்முப்பத் தெட்டானும் சோறு குழையவைத்துச் செவ்வலரிப் பூவிலிட்டு ஆறுமுன் பூவோடு அருந்துவான் முப்பத்தொன்பான் நாக்கிலோ ராணிதனை நல்லவிந்தை யாய்க்கொருத்து மூக்கிலே கட்டி முனங்குவான் நாற்பதானும் சிறுபயறை மாவாக்கித் தேங்கா யதனிலிட்டு முறுக்கா யதையருந்தி முழுங்குவான் நாற்பத்தொன்றான் அறைக்கீரை வித்தை அருந்தித் தினந்தோறும் சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான் நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும் நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண் நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான் பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும் எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து 840 நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும் மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே இருளான போது இந்தநினை வாயிருப்பான் காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும் புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும் அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான் மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான் அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும் புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான் நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான் சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும் ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக் கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான் வழிவிட்டு விலகி வழிநடப்பா னைம்பத்தஞ்சான் இப்படியே யைம்பத்(து) அஞ்சு இருஷிகளும் 860 அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறுசெய்து இருப்பா ரவர்கள் இராச்சியத்துக் கொன்றாக பருப்பா ரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில் ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க் கொண்டுவந்து வைக்கச்செய் வேன்வரத்தை மனுவறி யச்சிலரைச் செயிப்பேன் பலபேரைச் செகமெல்லா மறிய வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தி யேதருவேன் ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய் ஈனமில்லா துங்கள் இனத்தில் பிறந்திருங்கோ வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால் பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில் நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன் என்று பிரம இராச்சியத் தோர்களையும் அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண் வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு அந்தப் பிறவி அவர்செய் தனுப்பிவைத்துச் சொந்தப்பிறவி சிவவைகுண் டத்தோரை வாருங்கோவென்று வரவழைத் தெம்பெருமாள் 880 ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை அப்போது தர்மியெல்லாம் அரியோ னடிவணங்கி எப்போது மெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே ஆண்டவை குண்டம் ஆண்டிருந்தோ மித்தனைநாள் தாண்டவரே யினியுமது தயவி னருளாலே என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில் வன்னத் திருமாலே வகுத்தா லதுமனதாம் என்றுதர்மி யெல்லாம் இசைய ஆதிநாரணரும் நன்றுபிள்ளா யுங்களுட நல்வளமை சொல்லுகிறோம் இல்லா தெளியோர்க்கு எனைநினைந்து தர்மமிட்டுப் பல்லுயிர்க் குன்னயிராய்ப் பார்த்தீ ரொருப்போலே நீத நிலையை நிறுத்தி யெனைநினைந்து சீதமாய்ப் பூமி செலுத்தியர சாண்டிருந்து வந்தீர்கள் கூட்டோடு வைகுண்ட மானதிலே சேர்ந்தீர்க ளாகிடினும் செய்தநன்றி தான்பார்த்து உங்களுக்கின் னாள்வரையும் உதவிதர வில்லையல்லோ தங்களுக்கு நன்மை தரவேணு மானாக்கால் இன்னமொரு பிறவி என்மகவி லேபிறவும் வன்னப் பிறவியென் மகவழியில் தான்பிறந்தால் ஏழு யுகக்கணக்கும் யான்கேட் டுங்களுக்கு 900 மாளுவ தில்லாமல் மறுபிறப் புமறுத்து நம்முடைய சொத்தும் நாடியுங் களுக்கீந்து மும்மடங்காய்த் தர்மம் ஓங்கிவளர்ந் தேயிருப்பீர் என்றுதர்மி தங்களுக்கு எம்பெருமா ளீதுரைக்க அன்றந்தத் தர்மிகளில் ஐபேர்க ளேதுரைப்பார் ஆயரே எங்களுட ஆதிநா ராயணரே மாயரே எங்களைநீர் மறந்தெங்கே போனீர்காண் காணாம லும்மையெங்கள் கண்கள் மிகத்தவித்து வாணா ளயர்ந்து மறுகிநொந்து வாடினோமே என்றுதர்ம பாண்டவர்கள் இப்படியே சொல்லிடவே நன்றுநன் றென்று நாரா யணர்மகிழ்ந்து முன்னமே நீங்கள் உகத்துக் குகங்கூட என்னைவிட் டகலாது இருந்தீர்க ளென்னுயிர்போல் ஆனதா லிப்பிறவி அய்யாநா ராயணராய் மானமாய்த் தர்மம் வளர்ந்தோங்க எந்நாளும் நிச்சித்து ஒன்றாய் நிலைநிறுத்தித் தற்சொரூபம் மெச்சித்து நானினித்தான் மேல்பிறக்கப் போவதினால் என்மகவாய் நீங்கள் ஏழி லொருவனுமாய்க் கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ என்றேதான் தர்மிகட்கு எம்பெருமா ளீதுரைக்க 920 அன்றேதான் தர்மி எல்லோரு மேதுரைப்பார் தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம் மானுவங்க ளில்லா மாளுங் கலியுகத்தில் பேய்நீச வையகத்தில் பிறக்கப்போ வென்றீரே நாங்கள் முன்செய்த ஞாயநடுப் போய்விடுமே ஏங்கக் கலியனுட இருளினா லையாவே நாயநடுக் கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே ஆனதால் நீரும் அன்றுநடுக் கேட்கையிலே மானமில்லை யானால் வழக்கென்ன சொல்லிடுவோம் என்றுரைக்கத் தர்மி ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள் என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம் நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம் ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன் நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும் 940 தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும் தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி நானுங்க ளாலே நல்ல தவசிருந்து மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில் தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில் பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும் நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து அன்று பிறவி அமையுமென்றா ரப்படியே நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில் மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார் 955 |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)