சனி, 31 மார்ச், 2018

அய்யா வைகுண்டரின் அருள் பிரதாபங்களை அனுபவித்து உணர்ந்த எல்லா மக்களும், வைகுண்டரை ‘அய்யா’ என்று வணங்கி மகிழ்ந்தனர்; மகிழ்கின்றனர்.

இவ்விரு நூல்கள் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக தற்போது, அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் ஆறாயிரத்திற்கும் மேல் உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் கோபுரமும், மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப்பெற்ற ஆலயம் சென்னை மணலிப்புதுநகர், வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள தர்மபதியாகும். அய்யா ஆலயங்களிலேயே, சாமிதோப்பு தர்மபதியைப் போல நித்தமும் வாகன உலா, இங்கு இருக்கிறது. அதேபோல் எங்கும் இல்லாத வகையில் நித்திய அன்னதானமும் இங்கே உண்டு.

அய்யா வழிபாட்டு ஆலயங்களில் முதல் ராஜகோபுரம் கண்ட மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கியது. 10 நாள் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், இரவு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், பல்லக்கு வாகன பவனியும், திருக்கொடி அமர்தலும் விமரிசையாக நடைபெறும்.

ரூபா அரூவ வழிபாடு :

ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் என்று சொல்லப்படும் மூலஸ்தானத்தை, அய்யா வழியில் பள்ளியறை என்று சொல்வார்கள். அதனுள் சிலைகள் கிடையாது. காவி வஸ்திரத்தலான ரூபா அரூவ வடிவம் அமைத்து, ருத்ராட்சம், துளசி மாலைகள், மலர் மாலை சூட்டப்பட்டிருக்கும். அதை மூலவர் என்றும், பள்ளியறை எழுந்தருளல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. அதன் பின் பாகத்தில் ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். அது ஏனெனில் கண்ணாடி சுத்தமாக இருந்தால், அதன் எதிரில் உள்ளதெல்லாம் அதில் தெரிவது போல, நம்முடைய மனதைச் சுத்தமாக வைத்திருந்தால், அதில் இறைவன் வாசம் செய்வதோடு, உலக இயல்புகளை எல்லாம் உணர்வதற்கான ஞானத்தையும் பெறலாம் என்ற தத்துவ அடிப்படையிலாகும்.

இறைவன் உருவமில்லாதவன் என்பதால், அரூவமான இறைவனை, அரூவமாகவே வழிபட வேண்டும் என்பதே அய்யா வழி கோட்பாடாகும். ஆனால் மக்கள் இவ்வழிபாட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், தற்போது ரூபா அரூவ வழிபாடு நடைபெற்று வருகிறது. வாகனங்களில் பவனி வரும் உற்சவரும், வஸ்திரங்களாலும், மலர் மாலைகளாலும் அலங்கரிப்பட்ட ரூபா அரூவ வடிவமாகவே அய்யா வைகுண்டர் எழுந்தருள்கிறார். 

உகப்படிப்பு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையப்பெற்ற வாகைப் பதியில் துவையல் தவமிருந்த மக்களுக்கு, அய்யா ஞான போதகமாக அருளியதே ‘உகப்படிப்பு’. அது ஒரு வரி, இரு வரி, மூவரி பாடல்களாக மொத்தம் ஏழு பாடல்கள் கொண்டது. அதில் ஆறு பாடல்களை பதினொரு முறை வீதம் பாடியபின் ஏழாவது பாடலை ஒரு முறை மட்டும் வசன கவியாக சொல்லி நிறைவு செய்ய வேண்டும். 

பதினொரு முறை வீதம் பாடுவதற்கான காரணம் யாதெனில், உடல், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்திற்கும், பாலுறுப்பு, கை, கால், மலவாயில், சொல் ஆகிய கர்மேந்திரங்கள் ஐந்திற்கும் மனதிற்கும் சேர்த்து மொத்தம் ஒவ்வொரு பாடலையும், பதினொரு முறை வீதம் புறச் சிந்தனைகளுக்கு இடம் தராமல் பாடினால், பாடியவர்களின் முயற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், அவர்தம் ஞான தாகம் நிறைவேறுவதற்கும், முக்திக்கும், இந்த யுக முடிவுக்கும், தம் ஞானேந்திரியம், கர்மேந்திரியம், மனம் ஆகியவற்றின் நலத்திற்கும் வலுசேர்க்கும் என்பது அய்யாவின் அருளுரையாகும். இந்த உகப்படிப்பை எப்போதெல்லாம் இறைவழிபாடு செய்கிறோமோ, அப்போதெல்லாம் பாடலாம். கூட்டு வழிபாடு என்றால், ஒருவர் பாடியபின் மற்றவர்களெல்லாம் சேர்ந்து பாட வேண்டும். 

உச்சிப்படிப்பு :

வாகை பதியில் துவையல் தவமிருந்த மக்களுக்கு, அய்யா ஞானபோதகமாக அருளிய மற்றொன்று இந்த உச்சிப்படிப்பு. இது முப்பத்து ஐந்து ஒற்றை வரிகளையும், பதிமூன்று தவ வார்த்தல் வாக்கியங்களையும் கொண்ட பாடலாகும். இதை வரிசையாக தினமும் மதியம் 12 மணிக்கு ஒரு முறை நின்ற படியே பாடி வழிபடலாம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் பாடுவதானால், ஒரு முறை நின்று கொண்டும், ஆறுமுறை அமர்ந்து இருந்த நிலையிலும் பாட வேண்டும். இவ்வாறு உச்சிப்படிப்பை பாடி வழிபட்டு வந்தால், நம்மை அறியாமல் நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்கள் அன்றாடம் அகன்றுபோகும் என்பது அய்யாவின் அறிவுரையாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக