வியாழன், 3 செப்டம்பர், 2020

“மானமாக வாழ்ந்தால் மாளும் கலி தன்னாலே

 “மானமாக வாழ்ந்தால் மாளும் கலி தன்னாலே”


என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். வரும் தர்மயுகத்தில் “தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு, வாங்குகிற பேர்கள் இல்லை” என்ற நிலை வரும் எனவும், தர்ம யுகத்தை நீங்கள் எல்லோரும் அடைய வேண்டுமானால் தான் படைத்த எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து வாழவேண்டும் எனவும், ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலி இட்டு இறைவனை வணங்கும் நம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்கவேண்டும் என்று இறைவழி பாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். இதனால் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் வளர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றனர். 

வைகுண்ட சுவாமியின் உபதேசங்களாலும், ஆசிர்வாதத்தினாலும், வழிகாட்டல்களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. தர்மத்தின் வளர்ச்சி மற்றும் பிரபலத்தால் சுவாமி தோப்பில் “சமதர்ம சாம்ராஜ்யம்” ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறதே என்று மனம் தவித்தவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள்.   

இதைக் கேட்ட மன்னன், ஏதோ ஒரு சூட்சம் தெரிகிறது என சாஸ்திரியை வருத்தி ஆருடம் கேட்க, அதற்க்கு சாஸ்திரியும் “அரசே! கர்மக் கலிதோசம் மண்டலம் ஏழும் சுற்றிப் பரந்தது, அதனால் கர்த்தர் அரிநாராயணர் கடிய கோபம் கொண்டு பூமியிலே வந்து பிறக்கிறார். கலி தோசத்தைத் தர்மத்தாலே அழித்து நற்பூமி ஆக்குகிறார். நாடெங்கும் சொல்லொன்றுக்குள் ஆள நாராயணர் மனுவாய் பிறந்து வைகுண்டம் என்று சொல்லி வருகிறார். நல்லோரை எல்லாம் நாடி மிக எடுத்து வரங்கள் கொ டுத்து ஆள வருகிறார், அவர் வரும் நாளிதுதான்” என்று சாஸ்திரியும் சாஸ்திரத்தைப் பார்த்து உரைத்தான். 

அதற்க்கு குறோணிதன் கொடியால் வந்த நீசனான சுவாதி திருநாள் மன்னன் “ஸ்ரீமன் நாராயணர் பிறக்க வேண்டுமென்றால் எப்படி தாழ்த்தப்பட்ட சாணார் குலத்தில் அவதரிக்க முடியும்?” என நினைத்து தனது சாவினை அறியாது சாடி படை ஏவி வைகுண்டரைப் பிடிக்க எண்ணினான். அப்போது யாதவ குலத்தில் பிறந்த கோனாரான பூவண்டர் குறிக்கிட்டு, அரசே! “ஆதிநாதன் எதையும் இழிகுலமென பார்க்கவே மாட்டார். அழிவது கலியுகத்தாச்சு என்றால் திட்டமாக வருவார்”. இருமூன்று யுகங்கள்தன்னில் ஒப்புடன் மனுப்போல் தோன்றி, உவமைகள் பலதும் செய்துள்ளார். 

சாணெனக் குலத்தில் மாயன் சார்வாரோ? என்றென்ன வேண்டாம். பாணனாய் தோன்றி நிற்பார்; பறையனாய் தோன்றி நிற்பார்; தூணிலும் தோன்றி நிற்பார்; தோலனாய் தோன்றி நிற்பார்; ஆணெனவும் தோன்றி நிற்பார்; அவருரு கேட்டறியவில்லையோ!

நாராயணர் குசவனின் குலத்தில் வந்தார், குறவனின் குலத்தில் வந்தார், மசவெனக் குலத்தில் வந்தார், மாடெனக் குலத்தில் வந்தார், விசுவெனக் குலத்தில் வந்தார், வேடெனக் குலத்தில் வந்தார், அசுவெனும் குலத்திலும் அவதரித்துள்ளார்; அவர் உரு கேட்டதில்லையோ!

எவ்விடமும் தானாய் மேவி இருப்பவர்க்கு எந்த சாதி? எவ்விடமும் ஆகாதென்று அவர் தள்ளமாட்டார். செம்மை ஆக்குவோன் சூட்சத்தை சொல்லி முடியாதையா! என்று புத்திமதி கூறினார். பூவண்டரின் அறிவுரையை கேட்க மறுத்த நீசன், “நன்கு கற்ற மேல்குலம் அதிலே மாயன் நற்குணமாகப் பிறக்காமல், சிறுகுலம் புக்குவாரோ? என நினைத்து வைகுண்டரை சிறை பிடித்து திருவனந்தப்புரத்தில் அமைந்துள்ள சிங்காரத்தோப்பு சிறையில் வைத்து கொடுமைகள் செய்தான். சாராயத்தில் விஷத்தைக் கலந்து குடிக்கக் கொடுத்தான். சுண்ணாம்பு காள வாயில் வைத்து நீற்றினான். விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்துவர செய்தான்.

வைகுண்டரை விஷமோ ஒன்றும் செய்யவில்லை. நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெடியோனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டுப் புலியை பிடித்து வந்து மூன்று நாள் பட்டினிபோட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இரையாக்க வைகுண்டரை தள்ளினான். பசித்த புலியோ இவ்வுலகைப் படைத்த இறைவனைக் கண்டதும் அந்த பரம்பொருளின் பாதார விந்தங்களை வணங்கி நின்றது. இந்நேரம் தன் மீது ஏவப்படும் கொடுமைகளைப் பார்த்து கலங்கிக்  கொண்டிருந்த நல்மக்களைப் பார்த்து வைகுண்டர் கூறுவார்.


நாட்டுக் கரிவிதிநான் நாராயணனும் நான், பட்சி பறவை பலசீவ செந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும் நான், மண்ணேழளந்த மாயப் பெருமாள் நான், விண்ணேழளந்த விஷ்ணு திருவுளம்நான்,

ஏகம் படைத்தவன் நான், எங்கும் நிறைந்தவன் நான், ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால் நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ, சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ,

இந்நீசரெல்லாம் என்னை அறியாவிடினும், இந்நிலத்தில் நான் படைத்த மிருகமறியாதோ..?”

கலங்க வேண்டாம் கண்ணுமக்காள் சான்றோர்களே என்றார். இந்த அற்புதங்களைக் கண்டதும், இந் நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதனே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர். உடனே உலகளந்த மாயனாகிய வைகுண்டரை 110 நாட்களாக கொடுக்கப்பட்ட சிறை தண்டனையிலிருந்து கொல்லம் ஆண்டு 1014 பங்குனி மாதம் 14-ஆம் தியதி (26th March C.1839) செவ்வாய்கிழமை விடுதலை செய்தனர். இவ் இகனைகளின் மூலம் பண்டாரத்தை சீண்டியதால் கலிநீசனின் வரங்கள் பறிக்கப்பட உள்ளதாக அகிலத்திரட்டு கூறுகிறது.

சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சுவாமி தோப்பிற்கு வர நினைத்த வைகுண்டர், உலகில் பலபெயர்களில் காவல் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பஞ்சதேவர்களை மனதில் நினைத்தார். உடனே பஞ்சத் தேவர்களான கருடன், சிமிழன், கத்திக்காரன், சிப்பாயி, முரடன் எனும் ஐந்து பேரும் வைகுண்டரிடம் வந்து சேர்ந்தனர். உடனே மண்ணளந்த மாயனாகிய வைகுண்டர் ஐந்துபேருக்கும் நல்வரமும் கொடுத்து தன்னுடன் ஏற்றுக்கொண்டார். இவர்கள் அன்றுமுதல் “சிவாய்மார்கள்” என்றழைக்கப்படுகின்றனர். சான்றோர்கள், சிவாய்மார், மற்றும் சீடர்கள் சூழ தெட்சணம் வந்த வைகுண்டர் தம் மக்களை தவவலிமை மிக்கவர்களாக்க எண்ணி பல நூறு குடும்பத்தார்களை துவையல் தவசு செய்யச் செய்தார். “தாணுமாலயனும் நானே, ஒரடியால் உலகளந்த உண்மைகளையும், பத்தவதாரம் பிறந்த பாதைகளையும் சொல் மகனே” என சீடர்களுக்கும், திருத்தொண்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து இவர்களின் மூலம் ஊர், ஊராக தம் வழிபாட்டு ஆலயங்களை ஏற்படச்செய்தார். அப்போது மாயவனார் ஆனந்தமே பெருகி நித்த திருநாள் இகனைதனை தம் “பதி”களில் நடத்தலுற்றார். தாணுமாலயனாகிய நாராயணர் “சிவநாரயணராக” இருந்து உலகில் உள்ள அனைத்து தெய்வசக்திகளையும் திருக்கல்யாண இகனை மூலம் தன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இனி இக்கலியுகத்தை அழித்து, தர்மயுகம் என்னும் புது யுகத்தை வருத்தி கலிநீசனின் வரங்களைப் பறித்து ஏழு யுகக்கணக்கையும் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்து ஆகாத பேர்களையெல்லாம் அழித்து நரகத்தில் தள்ளி நரக வாசலை அடைத்து விட்டு, நல்லோர்களை எழுப்பி நாலு வரமும் கொடுத்து சாகாத வாழ்வளித்து, தர்மமாகத் தரணியோர் குடைக்குள் ஆள சகலரும் புகழவரும் தர்மராசாவாக, சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டி பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டி துவாரகையில் மக்களை எல்லாரையும் வைத்து துவரயம் பதி இருந்து அரசு பாவிக்க தாம் வருவதாகவும், அதற்குண்டான காலத்தையும் தீர்க்கதரிசனமாக அருளினார். இவ்வாறு மக்களை இரட்சிக்க பண்டாரமாக அவதரித்த நாராயணர் காெல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தியதி (2nd June C.1851) திங்கள் கிழமை பூச நட்சத்திரத்தில் பகல் பன்னிரண்டு மணிக்கு வைகுண்ட லோகம் சென்றதாக அகிலத்திரட்டு கூறுகிறது


ஈசன் மொழிந்த முன்மொழிபடியே இனி இக்கலியுகம் முடியும் தருவாயில் நம்மை வாழவைக்க சிவனும் உமையாளும், நாராயணரும் லெட்சுமியும், நான்முகனும் சரசுபதியும், வேத நல்மறையோரும் ஆகமத்தின் தன்மை அதன் படியே கலியுகத்தில் தோன்ற போகின்றனர். இக்கலியில் குதித்தவர்களுக்கு கொடுத்த கணக்கின்படி கலியுகத்தை அழிக்க வானமது குழவியாகவும், மண்பூமி அம்மியாகவும், தானமது நிரப்பாய் தன்னால் இருந்திடவும். உண்டான தெல்லாம் உடன் கரிந்து போயிடவும், அண்டர் உலகம் வரை அசைந்து முழிக்க போகிறது.

நாராயணர் புதுயுகத்திற்கான வழிகளை நினைக்கப் போகிறார். அப்போது புதுப்பூமி, புதுநிலவு, புதுவானம், புதுவாய்வு, புதுமையான தங்க பொன்பதியும் தோன்ற போகிறது. அய்யா நினைத்தப்படி வம்பரொல்லாம் மாள்வர், நல்லவர்கள் முழித்து வருவார்கள். ஆழிதனை வருத்தி சுத்தயுகத்தை சுற்றி வருத்துமென்று கர்த்தாதி கர்த்தன் விடை கொடுக்க கமலயுகம் சுத்திபண்ணியபின் கடலும் மிகப் பணிய போகிறது.

அப்போது நாராயணர் முன்பு குறோணியின் உயிரைக் கொண்டு வந்து நிறுத்தப்படும். அவனிடம் அய்யா நடுத்தீர்ப்பு கேட்டு “பாவி சொல்லடா உத்தரங்கள்? ஏழுபிறவி இதுவரையுஞ் செய்து உன்னை “வாழு நீ” என்று வரமருளிப் பார்த்தேன். இக்கலியில் நானும் இரப்பனை போல வந்திருந்து உலகறிய வெறிப்பேயையும் எரித்தேன். தண்ணீரால் மானிடர்க்கு சகல நோய் தீர்த்தேன். தருமம் புரிந்தவர்க்கு புண்ணியம் மிக அருளினேன். காணிக்கை, கைக்கூலி நிறுத்தல் செய்தேன். உறுதியாக யாவரையும் ஒருதலத்தில் விட்டு புத்தி சொன்னேன். இருபுத்தியாய் நீயும் பிடித்தடித்தாய், கட்டி என்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே! ஆண்டியாய் நானிருந்ததால் உன்னை எதிர்க்கவில்லை யல்லவோ?

பண்டாரமாக பார் மீதில் அன்பரிடம், நன்றாக பிச்சை நான் வேண்டியே குடித்துத் தர்மமாய் அல்லவோ மக்களுக்கு நோய், பிணி தீர்த்தேன். நீ வர்மமாய் என்னை வந்தடிக்க ஞாயம் உண்டோ? அது அல்லாமல் முன்னே தன்னிடத்தில் இராட்சியத்தில் யாரொருவர் பண்டாரமென்று பாரறிய வந்தவரை அண்டேன்; அவரை அட்டி மிக செய்யேன். ஆண்டிகளுக்கு நானும் துன்பங்கள் செய்ததுண்டால் என் குடும்ப பந்துக்களோடு கட்டோடு அழிந்து போவேன். எங்களது பெண்ணோடே எல்லோரும் தன்னால் இறந்து சளநரகம் போயிடுவோம்” என்று நீ மொழிந்தாயே, இப்போது பண்டாரந்தன்னை வாழ விடாதபடி நீயும் அடித்ததின் ஞாயமென்ன?  சொல்லடா? சொன்ன முறைப்படி நீ தான் நடந்தாயோ? பாவி நீ ஏழ்பிறவி பார் மீதில் தோன்றியதில் அவனியறிய அணுப்போலும் நன்மையது செய்ததுண்டோ? இரப்பனைப் போல் எளிய குலத்தில் வந்த என்னை, நீ செய்த அநியாயம்  சொல்ல வென்றால் வையம் ஈரேழும் வழிந்து நிரம்பிடுமே!.

தன்னாலே தான் கெட்டுப் போவார்கள் என்றப்படி உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி. மேலும் முந்தைய யுகத்தில், மேன்மையாய் உன்னை ‘தன்னால் பிறந்து தன்னால் அழிவை’ என்று சொன்னேன் நான். சொன்ன மொழிப்படியே நீ உதித்து, உற்ற கலியனென இந்நாள் வரைக்கும் பார்மீதில் இருந்தாய். உன் கர்மவயது காலம் சரியாகியதால் வர்மம் வந்து மூடி தன்னாலே மாண்டாய். முன் உனக்குத் தந்த அரசாளும் முடியும், என் சக்கரமும், உனக்கு தந்த வரங்களும், மிகத் தத்துவங்களும் எல்லாம் இப்போது எடுத்து வைத்துவிடு, பொல்லாதவனே நீ நரகம் புக்கிவிடு என்கிறார் நாராயணர். மாறி உரைக்க வாய் மொழிகள் இன்றி கலியன் அனைத்து வரங்களையும் வைக்கப் போகிறான். வரம் வைத்ததும் அவனை தீநரகில் புழுக்குளிக்குள்ளாக்கி தள்ளுவார்கள்.

அய்யாவின் ஆட்சி வரும் தர்மயுகத்தில்: ஏகம் படைத்துக் காக்கும் நாராயணர் புதுயுகத்திற்கான வழிகளை நினைத்து ஒரு சங்கு ஊதுவார், வெற்றிச் சங்கு ஓசை எத்திசையும், ஈரேழு உலகும் மிகக் கேட்கும், நல்லோர்களான நல்லதை நாடும் மனுவோர்களும், நற்பூமிக்குரிய நல்விருச்சம், நல் மிருகம், ஊர்வனமும் கற்பு நெறியுயை பலவகையும் தோன்றப் போகிறது. எல்லாம் பச்சைமால் நாராயணரைக் கண்டு போற்றும், தர்ம வைகுண்டசுவாமி வந்தாரே என்கும். நன்னதிக பட்சிகளும், நல்வேதம், நீதங்கள் நாடுகினற சாத்திரம், சமுத்திரத்து நல்வகையும், கங்கை கண்ணாளும், கமலப் பூவாணியும், தர்மமதுவும் சுவாமி எனத் தொழுது போற்றும். நாராயணர் முழித்த மனுக்களுக்கு களிப்பான ஞான ஔி அருளி நாலுவரமும் கொடுப்பார். தர்மபுவியில் வயது பதினாறு என எல்லோரும் ஒரு இனமாய் வாழுங்கோ என்றும், பட்சி, பறவை பலசீவ செந்துகட்கும் அச்சமில்லாமல், புவியில் அல்லல் வினையில்லாமல் ஒத்துமிகக் கூடி, தர்ம வையகத்தை சார்ந்து வாழ்ந்திருங்கோ என்று விடை கொடுக்கப் போகிறார். இப்படியே யாமம் நிறைவேறி, முப்பத்திரண்டறத்தால் முகித்த சிங்க சிம்மாசனத்தில், செப்பொத்த மாணாக்கர் இருபுறமும் சேவிக்க, ஒப்பற்ற பொற்பதியான துவாரகா பதியின் உயர்ந்த சிங்காசனத்தில், மறுமன்னர் எதிரி வையகத்தில் இல்லாமல், வெற்றி வைகுண்டராசர் சிங்காசனம் மீதிருந்து தெய்வச் செங்கோல் நடத்தி பொங்கரமான புவிதர்ம இராட்சியத்தில் ஆதி ஆகமப்படியே ஆளுவார்.

“இருபத்து நாலில் ஒன்று ஏற்பதும் எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து ஈரேழு உலகமெல்லாம் ஒரு குடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா” – அருள் நூல்

இக்கலியுகத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் எனப் பிரிந்து கிடந்த ஆன்மீக உலகில் சிவநாராயணமாக இருந்து அனைத்து தெய்வசக்திகளையும் திருக்கல்யாண இகனை மூலம்  தனக்குள்ளடக்கி “அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா” என்ற அகண்ட நாம மந்திரத்தை உச்சரித்து வழிபடும் “ஒரே தெய்வ வழிபாட்டு” முறையை ஆண்டவர் உருவாக்கிக் கொடுத்தார். அன்புக்கொடி மக்களின் வழிபாட்டுமுறை சைவ, சித்தாந்திகளையும், நெற்றியில் ஒன்றை திருநாமம் இட்டு கொள்ளும் முறை வைணவர்களையும் கவர்ந்து ஈர்த்தது. எனவே இன்று உலகளந்த ஆண்டவனின் ஆலயங்களான  “அய்யா” வழிபாட்டு ஆலயங்கள் உலகம் முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து தோன்றி உள்ளது. சுவாமி விவேகானந்தர் தன் வாழ்நாளில் 1892 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்னியாகுமரிக்கு வருகைதந்த போது நாராயணரின் “வைகுண்டர்” அவதாரத்தை கேள்விப்பட்டு சுவாமிதோப்பு பதிக்கு வந்ததாகவும், அன்றிலிருந்து அவர் தன் தலையில் தலைப்பாகை அணியத் தொடங்கியதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகையால் நாம் ஆண்டவனின் வழி நடப்போம்; வாழ்வில் வெற்றிப் பெற்று தருமயுக வாழ்வை பெறுவோம்!

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக