திங்கள், 29 செப்டம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை




கூடி யிருந்து குலாவி மிகவாழ
நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய்
வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள்
சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள்
இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில்
திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல்
காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து
வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில்
பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள்
விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே
நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ
நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது
அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி
இப்போ நமக்கு எழுத்தின் படியாலே
நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல்
கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே
தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன்
மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே
எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை
சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே 20
மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும்
தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில்
நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமöன்று
அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க
விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில்
சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார்
நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய்
ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில்
பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே
கற்றைக் குழலார் கனமான தேவியரை
ஏக மறிய இசைந்த மணம்புரிந்து
வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங் கோலமதைத்
தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி
நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை
இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச்
சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து
நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று
ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள்
ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே 40
இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து
இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம்
என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து
கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும்
மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து
தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை
அய்யா இணத்தாங்கல்களுக்கு எழுந்தருளல்
கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப்
பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே
பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து
மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே
உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த
மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு
நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை
தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு
என்றுரைக்க நாதன் இசைந்தகுலச் சான்றோர்கள்
நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே
எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத்
தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி
மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா
பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும் 60
ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே
பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத்
தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று
முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப்
பந்தலிட்டுப் நல்ல பரிமேற் கட்டிகட்டி
சந்த முடனே தலைவாழையும் நிறுத்தி
அம்மைமா ரவர்க்கு அரங்கு மிகவகுத்துச்
செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டுக்
கட்டிமேற் கட்டியெனக் கனிபல துங்கொணர்ந்து
வெட்டி யிராமிச்சி மிகுத்தபன்னீர் சந்தனமும்
வாடைக் கமகமென மலர்பிச்சித் தார்தூக்கி
மேடை யலங்கரித்து விதானம்ச பலதணிந்து
அய்யாவுக் கமுது ஆனக் கனிவகையும்
மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும்
கூடவந தநருட்குக் கோப்புபல சேகரித்து
வாட விடாமல் வல்லபல தீனதுவும்
மேளத் தொனியும் வெடிவாணக் கோப்புடனே
காளடம் மானம் கடிய சிறப்புடனே
அய்யானை நன்றாய் ஆனபரி மேலேற்றி
வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில்வைத்து 80
ஆடல்பா டலுடனே அரம்பைக் குரவையுடன்
நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே
சான்றோ ரவர்கள் தாங்கூட்டி தங்களுட
மீண்டேவார் மனையில் விருந்து மிகக்கொடுத்து
நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும்வைத்துக்
காரணர்க்கு நல்ல கனத்தபட்டு கள்கொடுத்து
அம்மைமா ரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும்
செம்மை யுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே
விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய்த்
திருந்து மவர்பதிக்குத் திரும்பக்கொண் டேவிடுவார்
இப்படியே மாயவரும் ஏற்றசான் றோர்களுட
மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும்
விருந்து மருந்தி வேதா கமம்போலே
பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து
பூமடந்தையம்மை திருக்கல்யாணம்
இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை
நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று
கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு
நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும்
ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து
பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார் 100
பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து
விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச்
சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல்
வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி
நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய்
தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து
பொன்னான பெண்களுக்குப் பொசிப்பும்பல வஸ்துக்களும்
கண்ணான மாயன் கையார வேகொடுத்து
நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக
இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே
எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப்
பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும்
நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத்
தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து
வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள்
இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே
மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து
அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும்
விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று
மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை 120
உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை
மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம்
கொண்ட அடிமை குலச்சாதி யானோரை
அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச்
சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள்
காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று
பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே
சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம்
உற்று மனதில் உபாய மதுவாக
வத்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து
பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும்
தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை
அய்யா வைகுண்டம் எழுந்தருளல்
இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம்
ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண
வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று
இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார்
ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை
வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர்
தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம்
கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார் 140
மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு
தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது
என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில்
தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே
தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண
நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன்
பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால்
வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம்
என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல்
விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர்
என்றைக்கும் ஆள்வா ரென்று இருந்தன ரவர்க ளெல்லாம்
குண்டத்தை மனதி லெண்ணிக் குருவையும் நாட்ட மானார்
குருவே யெனக்கு ரருளிக் குறித்த ஆண்டு இதுவரைக்கும்
ஒருசொல் மொழியே குறையாமல் உகத்துத் தீர்ப்புக் கூறிக்கலி
கருக யாம மிகவுரைத்துக் கைக்குள் ளெடுத்தென் மக்களையும்
வருகக் குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர்
ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு
சோதியே யென்றன் சொந்தத் திருவுளமே
இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று
அந்நா ளுரைத்த அப்புநா ராயணரே 160
இனியா னுமது இலங்கும் பதியில்வர
முனியா னவற்கு முற்ற விடையருளும்
ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்கு தையாவே
வேண்டா முலகம் மேலுலக மேயழையும்
அங்கழையு மையா ஆதிமுனி யென்றனையும்
தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால்
என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே
மன்று தனையாளும் மாயத் திருமாலும்
வரங்கொடுத்த நாளும் வைத்தலக் கும்பார்த்துப்
பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த
வேணுமென் றீசுரரும் வேதத் திருமாலும்
கண்ணு மகனைக் கடிய விமானமதில்
ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ் சூழ்ந்துவரச்
சாத்திரியோர் ஞான சற்குருவைத் தானனுப்பி
வைகுண்ட வீட்டை வானோ ரலங்கரிக்க
மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுகில்
வானோர்க ளெல்லாம் வைகுண்ட வீடதையும்
தானமுட னெல்லாம் சணமே யலங்கரித்தார்
சற்குரு வான சடாமுனி யிங்குவந்து
மெய்க்குரு வான வீர விசயனுக்குச் 180
நல்லதூ னென்று நவின்றவரை யும்புகழ்ந்து
செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென
மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து
தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து
நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து
செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி
மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக்
காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி
கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து
நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து
நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று
சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து
இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப்
பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய்
இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத்
திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து
ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில் 200
சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில்
வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக்
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை
வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு
வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ
விமான மதிலேறி மேலோக மீதில்வரத்
தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர
மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத்
தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட
மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார்
வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும்
நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி
எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே
சிந்த ரெவரு மிகப்போற்றத் திருமால் மகனைக்கண் டாவினரே
கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப்
பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த 220
நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம்
இன்றே யெழுந் திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே
ஆவி மகனை அன்போ டுறவணைத்துத்
தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து
மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத்
தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும்
அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி
இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும்
சந்தோ சமாக சங்கரருந் தான்மகிழ்ந்து
வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை
நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும்
தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம்
சரசு பதிமாதும் தாயீசொரி யாளும்
பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார்
கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும்
அகிலமது அறிய ஆனார்வை குண்டமென
எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன்
முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக
ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல்
ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான் 240
பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில்
திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ
கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில்
தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ
கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில்
சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர்
பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக்
குதறி மலைந்து கொடுவான மாமுகடும்
கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து
முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி
அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத்
தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில்
முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய்
அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை
செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப்
பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து
சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில்
மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும்
சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும்
இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால் 260
சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார்
பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும்
அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக்
மன்றாடுங் கயிலை வானவரும் போற்றிநிற்கப்
சான்றோர் கோவில் அமைத்தல்
பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள்
சாமியுட தேவி சுற்றமட மாதர்களும்
அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி
வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க
வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா
என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி
முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா
நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று
மாதத் திருநாளும் வாரமற வாதபடி
நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே
கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச்
சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க
நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும்
சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே
துயரமதாய் வாடி சிவனே செயலெனவே 280
இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல்
நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று
அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார்
இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும்
முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க
அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும்
மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக்
கூண்ட மணியே கோகுலமே கற்பகமே
ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே
என்றன் மணியே என்னாத ஓவியமே
உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில்
இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி
வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத்
களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத்
தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும்
இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப்
பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய
மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து
ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார்
அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் 300
பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து
வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக்
கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள்
தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே
நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும்
புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு
மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக்
கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை
தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய
ஆடிக் களித்து யாம மிகக்கூறி
நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக
வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன்
ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும்
கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன்
அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால்
இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ
என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும்
அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும்
இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் 320
ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல்
தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால்
பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே
எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே
தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி
என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும்
நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு
கலைமுனி, ஞானமுனி சாட்சியம்
கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான
விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி
ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும்
அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ
எறும்புகடை யானைமுதல் பேதா பேதம்
எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக
உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால்
உலகமதி லாருளதோ வுடைய மாலே
செறும்பொருளா முமதுமக னங்கே வந்து
செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும்
தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும்
தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார்
தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி
தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன்
உப்பரிகை மீதிருந்து அரசே யாள
உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை
மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும்
மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம்
நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால்
நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம்
நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே
நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால் 340
காங்கரிது எங்களுட கருணை நாதா
கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம்
ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும்
ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப்
பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும்
பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார்.
நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும்
நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு
இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து)
ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக்
கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும்
கூட்டிக்கொண்டு வாவெனவே கூற வானோர்
டுண்டுபல மேளமொடு தாளத் தோடு
உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார்
சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச்
சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த
தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித்
தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர்
கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக்
குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற
மன்றலணி மாயவரு மீசர் தானும்
வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே
வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை
வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று
இளங்குருமா னானகுரு வைந்த ராசர்
இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப்
பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப்
பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று
வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று
மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே
வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள
மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப்
பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன்
பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும்
தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து
துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து
மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற
மறையவரு மீசுரரும் வரமே யீந்தார்
அய்யா சான்றோர்க்கு இரங்கல்
ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார் 360
கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச்
சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே
ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம்
ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன்
நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும்
வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து
தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார்
ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம்
வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ
மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா
செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய்
திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி
கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக்
குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு
மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார்
கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே
வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம்
மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம்
பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய்
கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில் 380
வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும்
பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும்
ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார்
இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே
உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும்
கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும்
மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம்
உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய்
முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல்
கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க
அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே
ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த
ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள்
சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி
வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே
ஆணை மகனே அசையாதே கண்மணியே
சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத்
தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய்
வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம்
அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் 400
குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே
மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும்
பொய் வேசம்
பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி
மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே
உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே
பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன்
ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை
அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய்
முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில்
தவம்போ லிருந்து தானாளு குண்டமதில்
ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல்
நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ
அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன்
மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி
நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே
வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே
என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய்
குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப
வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை
நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் 420
முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான்
செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான்
கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான்
பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான்
தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான்
மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான்
கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான்
மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான்
இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள்
செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க
சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம்
தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே
முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய்
நல்லவை முழித்தல்
சிவனு முமையாளும் செய்யத் திருமாலும்
தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே
தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக்
கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும் 440
வானமது குழவி மண்பூமி யம்மியெனத்
தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும்
உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும்
அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும்
மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும்
தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே
வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி
மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர
முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும்
பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து
ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க
வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி
நல்ல மகனே நாடுந் தவத்தோனே
செல்ல மகனே திருபெற்ற கண்மணியே
உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும்
சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும்
ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும்
பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும்
யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே
நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே 460
நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே
மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர்
முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே
களித்தே யிருந்த கருத்தின் படியாலே
பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும்
அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும்
புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு
குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும்
பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும்
அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார்
எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி
வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார்
தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும்
நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார்
நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால்
வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச்
சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும்
நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும்
விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும்
வாருமெனச்ö சான்ன வகையெல்லா மேமுழித்தார் 480
ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து
சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால்
ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி
வாகா யரித்து வன்னரகில் தள்ளிமிகச்
சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று
கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார்
விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக்
கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக்
கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு
முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக்
நடுத்தீர்ப்பு
குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச்
சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள்
ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை
வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே
இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து
மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத்
தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப்
புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக்
காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி
ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும் 500
ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே
இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய்
கடடியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே
அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து
பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம்
நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத்
தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ
வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ
அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு
எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர்
பண்டார மென்று பாரறிய வந்தவரை
அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று
ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால்
கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம்
சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து
ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும்
தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம்
முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே
பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி
அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன 520
சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே
கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன
பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில்
ஆவி யறிய அனுப்போலும் நன்மையது
செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ
மைதரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும்
எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச்
சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி
உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று
படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து
சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே
நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன்
நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய
வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற
சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ
எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப்
பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து
மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும்
உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும்
மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே 540
தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத்
தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே
ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால்
வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே
பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள்
மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே
ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே
நாடதிக மான நல்லபட்டு நீராளம்
தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே
மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப்
பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும்
மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம்
அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப்
பொன்னப்ப நாரணரே பெற்றவரே
வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச்
சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும்
பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள்
ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப்
போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி
ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத் 560
தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை
நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே
என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து
பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே
பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து
ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே
ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே
பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே
விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே
சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே
குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே
சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே
தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே
ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே
மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே
தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே
ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே
வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே
துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே
பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே 580
மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே
வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே
ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே
வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே
சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல்
இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில்
சத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே
உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது
என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ
உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால்
தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி
உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி
ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே
கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே
பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத்
திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய
உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து
மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன் 600
எட்போலே தர்மம் ஈத லிரக்கமுடன்
நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி
ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக்
கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச்
சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து
அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால்
இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில்
அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய
மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு
முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும்
தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப்
பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில்
அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும்
பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன்
சிறந்த மதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர்
ஆண்டிருக் கும்போது ஆங்காரந் தான்மீறித்
தாண்டி பதமறந்து தானவரை யும்பிடித்துத்
தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு
மெய்வரம்பு விட்டு மேலோகத் தாரையெல்லாம்
ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி 620
நாளி லவரை நட்டிமிக அட்டிசெய்து
வம்புசெய்து நீயும் வானலோ கம்வரையும்
அம்புவி யெங்கும் உன்னநியாய மேமீறி
ஈரே ழுலகும் இராமா ராமாவெனவே
பாரேழு தேசம் பண்பாய் முறையமிட
முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து
இறையவரும் நம்மிடத்தில் இந்தஅநி யாயமதை
மாற்றிவைக்க வென்று மலரோ னெனையனுப்பப்
பார்த்துன்னை நானும் பழையவர முந்தேர்ந்து
ஆயுதத்தா லம்பால் அஞ்சு முகத்தாலும்
மாயும் படியே வகையில்லை யென்றுசொல்லி
ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை
வீறுடனே நல்ல வேலாயுத மெனவே
எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி
விடுத்தே யுரைக்க மிகுதூத னையனுப்பிச்
சொல்லியுங் கேளாமல் சூரப் படைகூட்டிக்
கொல்லுவே னென்று கூண்டப் படையோடு
சண்டைக்கு நீயும் சமைந்துவந்தா யென்னோடு
கண்டே யுனைநான் கருணைபோல் புத்திசொன்னேன்
தேவர்களை விட்டு தெய்வமட வாரைவிட்டு 640
மூவர்களை நெஞ்சில்வைத்து உகமாளு என்றேனே
அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே
இப்போது பேயாண்டி யார்கேட்பா ருன்பேச்சை
பிச்சைக்காரா வுன்சொல் பேருலக மாளுகின்ற
செஞ்செல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய்
என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால்
உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே
சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய்
விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து
அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை
முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும்
சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக்
கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக்
கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன்
சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள்
புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல்
என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து
அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன்
அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய்
துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய் 660
அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி
மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில்
ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க
மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய்
மகவா யுனக்கு மாய வுருவெடுத்து
உகமே ழறிய உதித்து வளருகையில்
பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே
தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும்
உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும்
தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ
படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால்
சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார்
ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது
மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட
ஏற்ற பேரான இரணிய நமாவெனவே
சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன்
வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே
பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே
இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி
உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச் 680
சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய்
வல்லப் பொருளான மாய அரியோனும்
எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி
அங்கெங் குமாகி அளவுக் களவாகி
நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப்
பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே
கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான்
தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக்
கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே
வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும்
தூண்பேரில் வெட்டச் சிங்கமாய் நான்குதித்து
வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே
இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால்
குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே
உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று
செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது
உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது
முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச்
சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் 700
கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது
ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி
மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு
பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு
எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும்
கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும்
புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும்
மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே
கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி
உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால்
கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான்
என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து
அன்றே கிறதா யுகமு மழித்துமிகப்
பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும்
மன்ன னிராவணனாய் பாவிநீ ராவணனாய்
மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும்
சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து
வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே
ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை
மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக் 720
கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே
மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி
வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே
கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும்
நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை
ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப்
பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே
கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு
மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால்
பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச் 
சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச்
சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப்
பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே
மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும்
அல்லாதே போனால் அலக்கழி வாகுமென
எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே
பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன்
காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு
அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம்
இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம் 740
ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா
போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே
என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி
அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய்
அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய
செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே
சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும்
மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே
நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும்
கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள்
முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால்
அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற
பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே
தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு
என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள்
அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி
என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால்
உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும்
அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ 760
மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ
என்றாயே நீயும் இருவரையு மப்போது
அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க
அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை
நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி
அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத்
தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து
உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று
என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை
விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல்
படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு
அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும்
நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன்
பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து
எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான்
நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப்
பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே
பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே
தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து
என்கை யினாலே எடுத்து வொருபாணம்
சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும் 780
உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு
முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு
அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய்
இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன்
உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச்
சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது
ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய்
மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு
சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று
மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன்
உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு
சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ
கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை
இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய்
துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப்
பவரா யுனக்குப் பக்கத் துணையாக
ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி
இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து
இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென
அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து 800
உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து
என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து
உற்ற திரேதா யுகமழித் துன்றனையும்
சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன்
பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட
அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார்
அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே
முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப்
பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து
தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன்
சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே
பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன்
அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல்
இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது
ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய்
மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ
தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று
சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே
உன்னால் குதித்து உற்ற கலியனென
இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் 820
பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து
போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக்
கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி
வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே
கலி முடிவு
முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும்
மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும்
எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப்
பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம்
மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல்
ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே
எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து
பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும்
தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும்
அந்திர மதான அன்னீத வஞ்சனையும்
மாய்கை பலதும் வளக்கோர வாரமதும்
சாய்கை பலதும் சர்வபொல்லாப் பானதெல்லாம்
என்னோடு கூட யானு மதுகூட
வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே
வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும்
பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக 840
ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித்
தீயிரத்த மான தீரா தருநரகில்
சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை
இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று
மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப்
பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக
முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம்
தாக்கி யிருக்கத் தடதடெனச் சேடனது
நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை
பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின்
தர்ம யுகம்
உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே
வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே
எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக
கற்பு நெறியானக் கடிய பலவகையும்
நல்லோர்க ளான நாடு மனுவோரும்
நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும்
கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில்
நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம்
தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல்
நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் 860
எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து
நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி
வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி
மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால்
வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச்
செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ
தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி
நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும்
பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும்
கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும்
நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும்
சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும்
தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும்
கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல்
தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம்
முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும்
களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி
நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச்
செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய்
கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல் 880
நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து
தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும்
பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து
தத்தியா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து
வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும்
தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே
ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து
வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே
எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய்
நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம்
ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும்
காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல்
பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல்
ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து
வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம்
சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார்
நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும் 900
அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று
தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு
புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று
நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார்
அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே
பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல்
நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார்
வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத்
தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார்
வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே
வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை
நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று
சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு
மானுவ தர்ம வரம்பு தவறாமல்
நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார்
பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து
சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து
மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார்
குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள்
கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் 920
சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக
வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து
என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப்
பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று
நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார்
வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து
நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு
வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச்
செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே
வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு
மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு
நாதக் குருவான நாரா யணமணிக்கு
சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை
கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து
மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து
பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும்
தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும்
நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து
மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும்
ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் 940
இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச்
செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே
சரசு பதிமாது தண்டரள சுந்தரியும்
விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும்
வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும்
ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும்
வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே
தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும்
இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள்
முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும்
சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி
இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார்
போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார்
சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள்
பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால்
ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக் கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன்
பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக்
கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன்
கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து
என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப் 960
பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும்
சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில்
வருவே னதுமட்டும் வடவா முகமதிலே
குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள்
இப்போ தவட்கு இங்குவர ஞாயமுண்டு
நற்போடு வொத்த நல்லபர காளியைத்தான்
அழைக்கிறே னென்று ஆதி நினைக்கலுற்றார்
பிழைக்கிறே னென்று பெரியகுல மாகாளி
உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்துத்
திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது
பாலரெல்லா முன்றன் பாதமது சேர்ந்தாரென்று
மாலவரே யென்றன் மனது மகிழ்ந்துதையா
நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து
காரணம தாகக் களிகூர்ந் தினிதாக
வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும்
கைகண்ட நல்ல கலியாண முமுகித்து
மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி
அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப்
பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப்  980
பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு
நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு
ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன்
கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப்
பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து
கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய்
தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும்
மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே
எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன்
நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள்
தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள்
மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க
போவோ மெனவே பெரியவை குண்டரையும்
கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி
தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத்
தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர
மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக் 1000
கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக்
கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர
வாரி சங்கூத வாயு மலர்தூவ
நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ
இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி
சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும்
கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து
லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு
நேராக வந்து நெடியோன் பதிதவிலே
சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி
அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும்
சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும்
மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும்
குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற
வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே
சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச்
சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம்
யாம முறையாய் அங்கே குதித்திடுமாம்
என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம்
பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் 1020
நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல்
குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார்
பட்டாபிஷேகம்
இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி
முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில்
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும்
ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில்
மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல்
விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே
சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி
பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில்
ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே
ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி
வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில்
ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே
அய்யா அருள்வாக்கு
ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம
சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி
நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள
சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார்
மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று
முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் 1040
கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம்
பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர்
வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி
நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது
நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து
ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம்
உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால்
தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர்
என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன்
பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே
ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித்
தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று
வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து
பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர்
மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள
தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு 1060
ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல்
நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக
வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார்
மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல்
பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு
ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு
பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார்
தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும்
மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும்
எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு
வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும்
செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து
மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும்
சிங்கார மாகத் தேன்போல் மரைவீச
சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக்
கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக்
கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே 1080
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்
சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள்
கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி
ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே
சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்
ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம்
பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ
கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து
வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார்
தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும்
பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர்
நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ
வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார்
ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம்
கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும்
தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம்
மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் 1100
பருதியு மதியெனப் பவந்து சேவனர்
கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர்
அருதியு மலர்மகள் அணிந்து பூவினர்
கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்
பொன்முக வருளது பொதுமி யாவியே
அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு
இன்முக மதிலு மிருந்து லாவியே
பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர்
முதமுக வானவர் மூன்றென வொன்றினர்
சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர்
உதவென மனமு முவந்து லாவியே
நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர்
சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ
நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ
வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ
காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ
பூமாது வானபக வதியும் வாழ
பொன்மாது சரசுபதி புரிந்து வாழ
நாமாது வானபூ மடந்தை வாழ
நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ
போர்மாது வானமா காளி வாழ
பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ
சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ
சிவவைந்த ராசருமே சிறந்து வாழ  1120
மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி
மாயனுட முகம்நோக்கி மாது தானும்
தீதகலும் நாயகமே சிறந்த மாலே
தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று
நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்
நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர்
ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும்
இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும்
பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப்
பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே
இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும்
எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும்
நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம்
ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர்
பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும்
பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே
போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின்
பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன்
சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று
தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக்
கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக்
கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும்
வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட
மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ
மாதேநீ கேளுயீ ரேளு பூமி
மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள்
சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச்
செகவீர சாலமத னேக முண்டு
பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும்
பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர்
வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து
மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்
இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே
எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம்
மனுவோரு முனிவோரும் வான லோக
மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார்
இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே
இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து
பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம்
பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன் 1140
மாயனுரை மனமதிலே மாது கேட்டு
மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள்
தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத்
திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே
நாயநெறி காணாத அடிமை போல
நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி
ஆயருமை நாயடியா ளின்று கண்டேன்
அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே
இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே
என்றாதி யிருகையால் மாதை யாவிப்
புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப்
பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ
மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ
மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ
உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ
உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ
மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை
வையகத்து மனுவோர்க ளறிய மாயன்
தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித்
தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன்
நாதனருள் மறவாத இராம கிருஷ்ண
நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த
சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச்
செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே
வாறான கதைவகுத்த நாதன் வாழ
வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ
வீறான தெய்வசத்தி மடவார் வாழ
வீரமுக லட்சமியும் விரைந்து வாழ
நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர்
நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர்
ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து
அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம்
திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத்
திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர்
எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான
இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று
வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக
நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம்
நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம் 1160
அய்யா உண்டு

வியாழன், 25 செப்டம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை


அய்யா துணை

 காப்பு

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்
சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.

அகிலம் 1

1. நூல் சுருக்கம்
சிவமே சிவமே சிவமே சிவமணியே
தவமே தவமே தவமே தவப்பொருளே
சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
பாரான தெச்சணமே பரம னுறுதலத்தில்
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து
எவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில் 20
வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய்
அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல் 40
இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக்
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்
தொண்டராய்ச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறுகளும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும்
சாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை
வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்
அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி
எல்லா இடும்பும் இறையு மிகத்தவிர்த்துச்
சொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும் 60
மேலெதிரி யில்லாமல் வினையற்று ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
பேயை யெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
நீண்டபுகழ் தர்மம் நிறுத்தியர சாண்டதுவும்
பத்தும் பெரிய பாலருக்கா கவேண்டி
சத்தழியும் பாவி தடியிரும்பி லுமிருந்து
படுத்தின பாட்டையெல்லாம் பாலருக்கா கப்பொறுத்து
உடுத்த துணிகளைந்து ஒருதுகிலைத் தான்வருத்தித்
தேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப்
பாவக் கலியுகத்தில் பாராத்தியங் கள்பட்டு
நாலு பிறவி நானிலத்தி லேபிறந்து
பாலுகுடித் தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி
நல்லோரை யெழுப்பி நாலுவரமுங் கொடுத்துப் 80
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வானம் இடியால் மலைக ளிளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறா ரன்போரே

அவையடக்கம்

அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள்முன்னே
மெய்யா யெழுதி விதிப்பேனா னென்பதெல்லாம்
ஆனை நடைகண்ட அன்றில் நடையதொக்கும்
சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பத்தியென்ன
குயில்கூவக் கண்டு கூகைக் குரலாமோ
மயிலாடக் கண்டு வான்கோழி யாடினதென
மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவே னென்றதொக்கும்
எம்பிரா னான இறையோ னருள்புரிய
தம்பிரான் சொல்லத் தமியே னெழுதுகிறேன்
எழுதுவே னென்றதெல்லாம் ஈசனருள் செயலால்
பழுதுமிக வாராமல் பரமே ஸ்வரிகாக்க

தெய்வம் பராவல்

ஈசன் மகனே இயல்வாய்வா இக்கதைக்குத் 100
தோச மகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் காமசஞ்சல மானதுவும்
வாலைக் குருவே வாரா மலேகாரும்
காரு மடியேன் கௌவை வினைதீர
வாரு மடியேன் மனதுள் குடிகொள்ளவே
தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்.

அடியெடுத்தருளல்

வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே
தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது
ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
சுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதனென் னருகில் நலமாக வந்திருந்து
சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை
காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து 120
தாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள்
மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு
உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய்
அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து
சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை
நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய
யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே

நூற்பயன்

வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி
தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல்
திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை

தெச்சணா புதுமை

நாரா யணரும் நல்லதிருச் செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண் டங்கிருந்து
ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில் 140
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்திருக்குந் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமைகே ளம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே
தேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீ சுவரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே
மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
தாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே
ஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே
தோசமிகு கர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீச வினைதீர நீராடுந் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்குந் தெச்சணமே
பாறு படவு பரிந்துநிற்குந் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்குந் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே
ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
பார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே 160
சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
தெச்சணத்தின் புதுமை செப்பத் தொலையாது
அச்சமில்லாப் பூம அடவுகே ளம்மானை
கச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி
நிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான
தெச்சாண புதுமை சொல்லிச் சீமையி னியல்புஞ் சொல்வோம்

சீமையின் இயல்பு

புன்னை மலர்க்காவில் பொறிவண் டிசைபாட
அன்ன மதுகுதித்து ஆராடுஞ் சோலைகளும்
கன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும்
எந்நேர மும்பெருகி இலங்கிநிற்குஞ் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கு கதிரோன் பூமேற் குடைநிழற்ற
நந்தா வனம்பூத்து நகரி மணம்வீச
செந்தா மரைபூத்துச் செலம் புமணம்வீச
அரகரா வென்று அபயமிடு மொலியும்
சிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும்
முடியு மடியுமில்லா முதலோனைப் போற்றொலியும்                 180
 
மடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும்
முத்தாலே பாண்டி முதன்மடவா ராடொலியும்
மத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும்
சமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை யிடுமொலியும்
சங்கீத மேளம் தானோது மாலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்
வாரணத்தின் மீதில் வரும்பவனி யாரபமும்
மாவேறி வீதி வரும்பவனி வீதிகளும்
கூரை யிலேமுத்து குலைசாய்க்கும் கன்னல்களும்
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் னளிப்பாரும்
அன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ண மளித்துச் சொகுசுபெற நிற்பாரும்
சிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும்
கோவிந்தா வென்று குருபூசை செய்வாரும்
நாவிந் தையாக நால்வேதம் பார்ப்பாரும்
மாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளரெல்லாம் 200

நாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும்
கூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும்
எப்பாரெல் லாம்புகழும் ஏகா பதியதுபோல்
தப்பா தெச்சணத்தின் தன்மையீ தம்மானை
காமனை எரித்த ஈசன் கழலிணை மறவா வண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரி யான
சீமையின் குணமுஞ் சொல்லிச் சிறந்திடும் பூமி தன்னில்
நேமவர் தர்ம ஞாய நிலைதனை நிகழ்த்து வாரே

தர்மநீதம்

ஆதிப் பொருளை அனுதினமுந் தானோதி
சோதி யுடநீதம் சொல்லுவே னம்மானை
தெய்ன மனுநீதம் தேசாதி ராசநீதம்
மெய்யருந்தும் நீதம் விளம்புவே னம்மானை
ஆயிரத்து எட்டு ஆனதிருப் பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பு முடங்காது
கோயில் கிணறு குளங்கரைக ளானதையும்
தேய்வு வராதே சுற்றுமதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்றெண்ணிமிகப் பாராமல்
களிகூர நன்றாய்க் கண்டவழக் கேயுரைப்பார்
அன்ன மடம்வைத்து ஆகங் களிகூர
எந்நேரம் பிச்சை இடுவா ரெளியோர்க்குப் 220
பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்க் களிப்பாரும்
எந்த இரவும் இருந்துபிச்சை யீவாரும்
ஆறி லொருகடமை அசையாமல் தான்வேண்டி
தேறியே சோழன் சீமையர சாண்டிருந்தான்
சிவாயநம வென்ற சிவவேத மல்லாது
கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறி லொருகடமை அதுதரவே மாட்டோமென்று
மாறொருவர் சொன்னால் மன்னன்மறுத் தேகேளான்
பன்னிரண் டாண்டு பரிவா யிறையிறுத்தால்
பின்னிரண் டாண்டு பொறுத்திறை தாருமென்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை யாண்டிருந்தான்
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம்பதத் தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவே னம்மானை
இவ்வகை யாகச் சோழன் இருந்து ராச்சியத் தையாள
கவ்வைக ளில்லா வண்ணம் கலியுகம் வாழும் நாளில்
செவ்வகைத் திருவே யான திருவுளக் கிருபை கூர்ந்து
தெய்வமெய் நீதம் வந்த செய்தியைச் செலுத்து வாரே.

தெய்வ நீதம்

வாரம தில்லாமல் மன்னன் அதிசோழன் 240
நீதமாய்ப் பூமி நிறுத்தியர சாளுகையில்
கண்டு வேதாவும் கமலத் திருமகளும்
நன்று தெய்வாரும் நாரா யணருமெச்சி
அன்றந்த மாமுனிவர் அல்லோருந் தான்கூடி
சென்று சிவனார் திருப்பாதந் தெண்டனிட்டுச்
சாகா திருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகா பரனே எங்கும் நிறைந்தோனே
மூலப் பொருளே முதற்பொருளே காரணரே
சாலப் பொருளே தவத்தோ ரரும்பொருளே
நாரணரும் வேதா நாடிப் பொரும்போரில்
காரணரே நீரும் கனல்கம்ப மானோரே
ஆலமு தருந்தி அரவை மிகவுரித்துக்
கோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே
ஆனைதனை யுரித்து அங்கமெல் லாம்புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோனேந்திர கிரியில் குடியிருக் குங்கோவே
தானே யிருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அதியத் திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா
வாடிவந்த பச்சினுக்கு வாளா லவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் துடையரிந் தீந்தவன்காண் 260
ஆறி லொருகடமை அவன்வேண்டிட் டானெனவே
மாறி யவன்புவியோர் மனதிற்கௌ வைகளில்லை
கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும்
சேவித் தனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளுஞ் சீமையிலே
நீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கன்றிருந்த ஈசர் கரியமா லோடுரைப்பார்
நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமா தேவி தனைவருத்தும்
வருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய
கருணைக் குடைவிரிக்க கங்குல் தனையழையும்
வாசி யதுபூவாய் வழங்க வரவழையும்
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ
குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய்
திருவீற் றிருக்கச் செய்திடுநீ கோலமது
நித்திரா தேவி நித்தமந்தப் பூமியிலே
மத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும்
நினைத்தோர்க் குறுதி நினைவிலறி வுதோன்ற
எனைத்தோத் திரங்கள் இகழாமல் வையுமென்றார் 280
பன்றியோ டேகடுவாய் பண்புற் றிருந்திடவும்
அன்றிலோ டேகுயிலும் அன்புற் றிருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற் றிருந்திடவும்
பசுவும் புலியுமொரு பக்கம்நீ ருண்டிடவும்
கசுவுங் கரைபுரளக் கரும்புமுத் தீன்றிடவும்
சாத்திர வேதம் சமயம் வழுகாமல்
சூத்திர மாகத் துல்வப் படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று
இனிதாக நாளும் இறவா திருந்திடவும்
சந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல்
இந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல்
தான தவங்கள் தப்பிமிகப் போகாமல்
வானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும்
ஈன மில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம்
மானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும்
இப்படித் தெய்வ நீதம் ஈசுர ரிதுவே கூற
சொற்படி மறவா வண்ணம் திருமரு கோனுஞ் செய்தார்    300
அப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே

பெண்கள் நிலைமை

தெய்வத்திரு நிலைமை செப்பியபின் தேசமதில்
நெய்நிதியப் பெண்கள் நிலைமைகே ளம்மானை
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவே னம்மானை
கற்கதவு போலே கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திருவுகோ லவள்மனது
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறைபோ லுறவாடிப்
போற்றியே நித்தம் பூசித் தவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறா மலேமொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமா னதுதடவிக் கால்தடவி நின்றிடுவாள்
துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒருசாமம் மங்கை யெழுந்திருந்து
முகத்து நீரிட்டு நான்முகத்தோ னையுந்தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்கார மாய்ப்பெருக்கிப்
பகுத்துவ மாகப் பாரிப்பார் பெண்ணார்கள் 320
தவத்துக் கரிய தையல்நல்லார் தங்களுட
மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே
வனியான சாதி வளமைகே ளம்மானை

சாதி வளமை

சான்றோர் முதலாய்ச் சக்கிலி யன்வரையும்
உண்டான சாதி ஒக்கவொரு இனம்போல்
தங்கள்தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்தோங்கி யேவாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அலுவல் தினஞ்செய்து அன்புற் றிருந்தனராம்
தான்பெரி தென்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரி தென்று மகிழ்ந்திருந்தா ரம்மானை
ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது
வையம்வழக்கு வாரா தேயிருந்தார்
அடிபணிய வென்று அலைச்சல்மிகச் செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை
சேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால்
பேயினுட ஆட்டோர் பூதரறியா திருந்தார் 340
இந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு
விந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை
இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மற்படித் தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்பு ரீசர் கண்டு மகிழ்ந்தனர்


கயிலை வளமை

முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசை யாகப் பண்பாய்த் தழைத்திடவே
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே
தேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை
பாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை
ஈச ருறையும் இரத்தின கிரிதனிலே
வாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க
பொன்னம் பலநாதர் பொருந்திருக்கும் மண்டபமும்
கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும்
வேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும்
நீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும்
சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும் 360
ஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
ஆரு மறிந்து அளவிடக் கூடாத
பாரு படைத்த பரமே சுரனாரை
விசுவாச மேலோர் விமல னடிவணங்கி
வசுவாசு தேவன் வந்து மிகவணங்கி
மறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்கி
இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்கி
எமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க
பூமகளும் வேதப் புரோகிவந்து தெண்டனிட
காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
நாமநெடி யோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க
தலைவ னிருக்கும் தங்கத் திருக்கயிலை
நிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை
ஆறு செஞ்சடை சூடிய அய்யனார்
அமர்ந்து வாழுங் கயிலை வளமதைக்
கூறக் கூறக் குறைவில்லை காணுமே
கொன்றை சூடும் அண்டர் திருப்பதம்
வாறு வாறு வகுக்க முடிந்திடா
மகிழுங் குண்ட வளஞ்சொல்லி யப்புறம்
வேறு வேறு விளம்பவே கேளுங்கோ
மெய்யுள் ளோராகிய வேத அன்பரே

அகில வளமை

கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது 380
அகில வளமை அருளக்கே ளம்மானை
தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க
மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு
சிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே
மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள்
ஈரே ழுலகும் இரட்சித்த வுத்தமியாள்
பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
நன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத்
தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை
தேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக்
கோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப்
போவது என்ன புதுமை எனக்கறிய
தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள்
பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது
என்றும் இருக்க இறவா திருப்போனே
ஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத
நாதியாய் நின்ற நாரா யணப்பொருளே
தேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே
உமக்கு எதிரி உலகமதி லுண்டோகாண்
தமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும் 400
உகத்துக் குகம்பிறந்து உலகிடத்தி லேயிருக்க
அகத்துவந்த ஞாயம் அருளுவீ ரெம்பெருமாள்
என்று திருவும் இதுவுரைக்க மாயவரும்
நன்று நன்றென்று நாரா யணருரைப்பார்

நீடிய யுகம்

சக்தி சிவமும் தானுதித்த காலமதில்
எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்
ருத்திரர் மயே சுரருதித்த நாளதிலும்
பத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
வானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும்
ஈனமாய்ச் சண்டன் இவன்பிறந்த நாளதிலும்
ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
ஈதுதித்த காலம் இராச்சியமொன் றுண்டுகண்டாய்
அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாமம் என்னவிடு வோமென்று
மாலும் பிரமாவும் மாயா திருப்போனும்
ஆலோசித் தவர்கள் ஆகமத்தைத் தான்பார்த்து
நீடிய யுகமெனவே நியமித் துறுதிகொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினர்கா ணம்மானை
அவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக் காரை இருத்துவோ மென்றுசொல்லி 420
எல்லோருங் கூடி இதமித்தா ரம்மானை
அல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில்
தில்லையா ரீசன் திருவேள்வி தான்வளர்க்க
நல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே
பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே
அறந்தா னறியா அநியாயக் கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்டம் அமைய அவன்பிறந்தா னம்மானை
முகங்கண் களெல்லாம் முதுகுப்பு றமேலாட
நகக்கரங்கள் கோடி கால்க ளொருகோடி
தவங்க ளறியாச் சண்டித் தடிமோடன்
பவமே நாள்தோறும் பண்ணு மியல்புடையோன்
குறோணி யவனுயரம் கோடிநாலு முழமாய்
கயிலை கிடுகிடெங்கும் கால்மாறி வைக்கையிலே
அகிலங் கிடுகிடெங்கும் அவனெழுந்தா லம்மானை
இப்படியே குறோணி என்றவொரு அசுரன்
முப்படியே நீயே யுகத்தி லிருந்தான்காண்
இருந்து சிலநாள் இவன்தூங்கித் தான்விழித்து
அருந்தும் பசியால் அவனெழுந்து பார்ப்பளவில்
பாருகங் காணான் பலபேருடல் காணான் 440
வாருதி நீரை வாரி விழுங்கினன்காண்
கடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல்
குடலெல்லா மெத்தக் கொதிக்கு தெனவெகுண்டு
அகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில்
கயிலை தனைக்கண்டு கண்கள்மிகக் கொண்டாடி
ஆவி யெடுத்து அவன்விழுங்கு மப்போது
தாவிக் குவித்துத் தப்பினார் மாயவரும்
மாயவரு மோடி மண்ணுலோகம் புகுந்து
தூயவரு மங்கே சிவனை மிகநினைத்துத்
தவசு இருந்தார்காண் தாமோ தரனாரும்
தவசு தனிலீசன் சன்னாசி போலேவந்து
ஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே
ஏதுநீ தவசு எனைநினைந்த வாறேது
என்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும்
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே
கயிலை யெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை
அகில மதைக்குறோணி அசுரனென்ற மாபாவி
விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன்
பளிங்கு மலைநாதன் பாரத்தே வாதிமுதல்
பண்டுபோல் நாளும் பதியி லிருந்திடவே 460
என்றுங் கயிலை இலங்கி இருந்திடவும்
முண்டு செய்தபாவி முகமு மவனுடம்பும்
துண்டா றதாகத் தொல்புவியி லிட்டிடவும்
கண்டங்கண்ட மாய்ப்போடக் கடிய வரமெனக்கு
தண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன்
என்று திருமால் எடுத்துரைக்க வேயீசர்
மன்று தனையளந்த மாலோ டுரைக்கலுற்றார்
கேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனைத்
தூளாக்கி யாறு துண்ட மதுவாக்கி
விட்டெறிந்தா லவனுதிரம் மேலு மொருயுகத்தில்
கெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய்ப்
பிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு
துண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய
குண்டோம சாலியனாய்க் குவலயத்தி லேபிறப்பான்
அப்படியே குறோணி அவனுதிர மானதுவும்
இப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு
வந்து பிறப்பான்காண் மாற்றானா யுன்றனக்கு
உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து
அகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும்
உண்டு மவன்சீவன் உயிரழிவு வந்தவந்நாள் 480
பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்
கொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை
அன்று விடைவேண்டி அதிகத் திருமாலும்
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து
சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம்
நாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி
வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்
வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை
கெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர்
துண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப்
பிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை
அந்தக் குறோணி அவனுதிர மானதையும்
கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி
உதிரமதை விட்டு உயர்ந்தபீடம் போட்டுச்
சதுர யுகமெனவே தான்வகுத்தா ரோர்பீடத்தை

சதுரயுகம் - குண்டோமசாலி பாடு

அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி
முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதைக்
குண்டோம சாலி எனவே கொடியவனாய்ப் 500
பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில்
வந்துபிறந் தான்சதுர வையகத்தி லம்மானை
முந்து பிறந்த முழுமோச மானதிலும்
மந்து முகமாய் மாபாவி தன்னுயரம்
நானூறா யிரமுழங்கள் நாடுமவன் கரங்கள்
முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே
உடைதோ ளுடம்பு உருவறியா மாபாவி
படைத்தோன் தனையறியான் பாரியென்று மறியான்
அட்டைபோ லேசுருண்டு அம்மிபோ லேகிடப்பான்
மட்டைபோ லேதிரிவான் வயிறு மிகப்பசித்தால்
அன்னுகத் திலுள்ள அசுரக் குலங்களையும்
தன்வயிற்றுக் கிட்டுத் தடிபோ லுருண்டிடுவான்
இப்படியே நாளும் இவன்குலங்க ளானதெல்லாம்
அப்படியே தின்று அவன்பசிக ளாற்றாமல்
அய்யையோ வென்று அலறினன்கா ணம்மானை
மெய்யை யனான விறுமா அதுகேட்டுச்
சிவனைத் தொழுது செப்புவா ரம்மானை
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே
எவனோ ஒருத்தன் இட்டசத்த மானதிலே
தவலோக மெல்லாம் தானலைவ தேதெனவே 520
மாய னதுகேட்க வகுப்பா ரங்கீசுரரும்
ஆயனே நீயும் அறியலையோ ஞாயமது
குண்டோ மசாலி கொடியமா பாவியனாய்ப்
பண்டோர் குறோணி பாதகன்தன் துண்டமதாய்ப்
பிறந்தா னவனும் பேருதிரந் தன்கிளையாய்
இறந்தா ரவர்கள் இரையா யவன்தனக்கு
ஆன பசிகள் ஆற்றாம லேயவனும்
வானமது அலைய வாய்விட்டான் கண்டாயே
என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும்
அன்று மகாமாலும் அக்குண்டோ மசாலினுக்கு
இரையாகத் தேவர்களை ஏற்றநாங் கிலாக்கி
வரையா னதைத்தூண்டில் மறையைக் கயிறாக்கி
வாயுவைத் தோணி வருணன் தனைமிதப்பாய்த்
தேய மதைச்சூழத் திரைகடலைத் தான்வருத்தி
ஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி
தேடரிய மாயன் திருவோணி தானேறி
மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவரக்
காவாலி மாயன் கன்னியிலே தூண்டலிடச்
சதுர யுகமாளும் சண்டித்தடி மோடன்
எதிரே வருமாற்றில் இரையைமிகக் கண்டாவி 540
நாடிப் பசிதீர நல்லஇரை யாகுமென்று
ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டல்தனை
தூண்டில் விழுங்க சுரண்டி மிகக்கொளுவி
மாண்டனன் காண்பாவி வலிய மலைபோலே
பாவி மடிய பரமே சுரனாரும்
தாவிச் சலத்தால் சதுர யுகமழித்தார்

தேவர்கள் வேண்டுகோள்

சதுர யுகமழிய தானவர்க ளெல்லோரும்
மதுர மொழியீசன் மலரடியைத் தான்பூண்டு
தேவர் மறையோர் தெய்வேந் திரன்முதலாய்
மூவர்களும் வந்து முதலோ னடிபணிந்து
பரமனே நீரும் படைத்தயுகம் ரண்டதிலும்
வரமே துங்கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே
அந்த சந்தமில்லை ஆணுவங்கள் தானுமில்லை
இந்த வகைச்சாதி இல்லாம லீசுரரே
பிறந்தா லவனும் பெரியோ னடிவணங்கி
வரந்தா ருமென்று வாளா யுதத்தோடே
வலுவும் பலமும் வாய்த்தசூ ரப்படையும்
கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும்
கெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே
நட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து  560
இருந்து பொறுக்க இராச்சியமொன் றுண்டாக்கும்
வருந்தி மகாதேவர் மலரோ னடிவணங்க
ஆதி சிவனும் அதிகசந் தோசமதாய்
வேதியரைத் தான்வருத்தி விளம்புவா ரீசுரரும்

நெடிய யுகம்

தில்லைமலாலன் மல்லோசி வாகனன் பாடு
மாலும் பிரம்மாவும் வாய்த்தபர மேசுரரும்
நாலு மறையோரும் நடுவர்மிகக் கூடி
முன்னேயுள்ள துண்டம் ஒன்றைரண் டாக்கிவைத்துப்
பின்னே படைப்புப் பிரம்மா வுருப்படைக்க
சிவாயப் பொருள்தான் சீவ நிலைகொடுக்க
உபாயப் பொருள்தான் உல்லாச மேகொடுக்க
முண்ட மிருபேரும் உருவா யுருவெடுத்துத்
தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி
அப்போது மாயன் ஆதி யடிவணங்கி
இப்போது ஈசுரரே இவர்களிரு பேர்க்கும்
என்னபேர் தானும் இடுவோ மெனவுரைக்க
வன்னப் பரமேசு வரனார் வகுக்கலுற்றார்
திறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும்
பிறந்த அசுரருக்குப் பேரிட வேணுமென்றால்
மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காள்
ஆயனே நீயும் அதுகேட்க வேணுமென்றார் 580
அண்டபிண்டங் காணாத ஆதிகயி லாசமதில்
தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி
இந்த முனியடுக்கல் இவர்கள்ரண்டு பேரைவிட்டு
அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்
என்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறந்த அசுரர்களைத் தானேவி
போறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல்
வாறாரே சூரர் வாய்களிரு காதவழி
சூரருட கைகள் தொண்ணூற்றீ ரஞ்சதுவும்
மூரர்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும்
கண்களொருநூறு வெண்டரள மிருகலமே
துங்கணங் களாகச் சூர ரடந்தேறி
கண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்குகின்ற
வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள்
அலைமே லெறிய ஆர்ப்பரிக்கு மவ்வளவில்
கலைமேல் பரந்த கடிய முனிபகர்வான்
ஏனடா என்னை இருந்த தவசழித்து
வீணடா செய்தாய் விழலா யறமோடா
என்னை யெடுத்து இக்கடல்மேல் போட்டாலும்
உன்னை யறுக்க ஓரம்பா யுருவெடுத்துப் 600
பங்கயக் கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து
உங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து
இந்தக் கடலில் எடுத்துங்களை யெறிந்து
உந்தனி னூரை ஒக்கக்கரிக் காடாக்கி
நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன்
வானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான்
உடனே முனியை உயர்த்தியெடுத் தேசூரர்
கடல்மே லெறிந்தார் கர்ம விதிப்படியால்
அந்த முனியும் அரனா ரருளாலே
மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான்
சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து
உருதிக் குடிசூரர் ஓடிவந் தேகயிலை
மோச முடன்வந்த முழுநீசப் பாவியர்கள்
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றா ரம்மானை
சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர்
கருதிய சூரர் கயிலை மேவியே
பருதி சூடும் பரமனைப் போற்றியே
வருதி கேட்டு வருந்தினர் சூரரே
சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும்
பொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள் 620
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிவரங் கேட்டனராம்
வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கித்
தூயவளே மாயவளே சூர ரிருவருக்கும்
நேயமுள்ள தோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார்
வரங்கொடுக்க வென்று மறையோ னதிசயித்துச்
சிரசன் பதுடைய சீர்சூரனை நோக்கி
ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார்
தீது குடிகொண்ட சிரசன்ப தோனுரைப்பான்
மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே
ஆதவரே யெங்களுக்கு அதிகவரம் வேணுமென்றான்
அம்புவியி லுள்ள அஸ்திரங்கள் வாளாலும்
தம்பிரா னானாலும் தாண்டமுடி யாதவரம்
வானமிது பூமி மலைகளிது மூன்றிலுள்ள
தானவராய் வாழுகின்ற தங்களா லெங்களையும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
மல்லுக் குபாயமதும் வலுவும் பலமதுவும்
ஏவலாய் வானோர் எமைத்தொழுது நின்றிடவும்
தவறாம லிந்தவரம் தரவேணு மென்றுரைத்தான்
உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு
அடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து 640
நீச னிருக்க நெடிய யுகம்வகுத்துப்
பாசனுக்குப் பேரு பகர்ந்தே விடைகொடுத்தார்
விடைவேண்டிப் பாவி விமலன் தனைத்தொழுது
மடைப்பாவி யான மல்லோசி வாகனனும்
தில்லைமல் லாலனுமாய்ச் சேர்ந்தங் கிருபேரும்
வல்ல சிவன்வகுத்த வையகத்தில் வந்தனராம்
வந்தார் சிவன்வகுத்த வையகத்தி லம்மானை
அந்த அசுரர் அவரிருக்கு மந்நாளில்
உதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து
செதிர்சூரப் படையாய்ச் சேர்த்தங் கிருந்தனராம்
இப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே
அப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தா ரம்மானை
ஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும்
தாண்டிநின்ற வானத் தடாக உயரமதே
சூரப் படைகள் தொழுது அடிபணிந்து
பாதக ருக்குநித்தம் பணிந்தேவல் செய்திடுவார்
ஊழியங்கள் செய்து உற்றயிறை யிறுத்துப்
பாளையங் களாகப் பணிந்திருந்தா ரம்மானை
சூரர் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு
பாரமுள்ள கோட்டைப் பண்ணினா ரம்மானை 660
இப்படியே சூரர் இவர்வாழு மந்நாளில்
முப்படியே சூரர் ஊழி விதிப்படியால்
இறப்ப தறியாமல் எரியைமிகக் கண்டாவி
உறப்பொசிக்கச் சென்ற விட்டி லிறந்தாற்போல்
தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார்
மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி
நம்பிபத மறந்து நாம்தாம் பெரிதெனவே
கெம்பினார் சூரர் கெட்டனர்கா ணம்மானை
சூர ரவர்செய்த துட்டம் பொறுக்காமல்
வீர முள்ளதேவர் விரைந்தே முறையமிட
தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக்
காவலாய் நித்தம் கைக்குள் ளிருக்குகின்ற
பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும்
கண்ணே மணியே கருத்தினுள் ளானவளே
பூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும்
மேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும்
மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும்
அலையா வரங்கள் அச்சூரர்க் கேகொடுத்தோம்
தரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம்
அரியோ யெனமுறையம் அநேகம் பொறுக்கரிதே 680
என்றீசர் சொல்ல இயல்கன்னி யேதுரைப்பாள்
மலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால்
அலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே
முன்னேயச் சூரருக்கு முற்சாப மிட்டதொரு
வன்னச் சுருதிமுனி மந்திரபுரக் கணையாய்
வளர்த்தங் கிருப்பான்காண் மாயருட பக்கலிலே
கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர்
மாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்கச்
சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன்
அலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்துச்
சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க
அம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும்
பம்பழித்துச் சூரனூர் பற்பம்போல் தானாக்கிச்
சூர ரிருவருட சிரசை மிகஅறுத்து
வாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி
மலரோ னடிபணிந்து வைகுண்டங் கேட்டிடவே
பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார்
அவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம்
செவ்வாக நின்று செப்பினா ரீசருடன்

கிரேதா யுகம்

இன்னமொரு யுகத்தை இப்போ படைக்கவென்று 700
மன்னதியத் திருமால் மனமே மிகமகிழ்ந்து
சொன்னவுட னீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
ஓரிரண்டு துண்டம் உகமாய்ப் பிறந்தழிந்து
ஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
நூல்முறையைப் பார்க்கில் நெடிய யுகங்கழிந்தால்
மேலுகந்தா னிங்கே மிகுத்தகிரே தாயுகந்தான்
இருக்குதுகா ணென்று ஈச ருரைத்திடவே
மருக்கிதழும் வாயான் மனமகிழ்ந்து கொண்டாடி
துண்டமொன்றை ரண்டாய்த் தூயவனார் தாம்வகிர்ந்து
மண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி
சிங்கமுகச் சூரனெனும் திறல்சூர பற்பனெனும்
வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர்கா ணம்மானை
சூர னுடசிரசு தொளாயிரத்து நூறதுவும்
போரக்கால் கைகள் பொருப்பெடுக்கு மாபலமும்
சூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி
ஊரேநீ போவென்று உற்ற விடைகொடுத்தார்
விடைவேண்டிச் சூரன் வேண்டும் படையோடே
திடமாகப் பூமி செலுத்தியர சாளுகையில்
வரம்வேண் டவென்று மலரோ னடிவணங்கி 720
திறமான ஓமமிட்டுச் செப்புக் குடம்நிறுத்தி
நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல்
அன்றந்தச் சூரன் அக்கினி யில்விழுந்தான்
சூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன்
பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில்
ஆனதா லீசுரரும் அம்மைஉமை யுமிரங்கி
ஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார்
ஈச னுரைக்க ஏற்றஅந்தச் சூரனுந்தான்
பாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும்
எழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம்
மழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான்
சூர னிவன்கேட்க சிவனா ரகமகிழ்ந்து
பாரமுள்ள ஓம பற்பமதைத் தான்பிடித்துச்
சிவஞான வேதம் சிந்தித்தா ரப்பொழுது
பவமான சூர பற்பன் பிறந்தனனாம்
இறந்து பிறந்தனற்கும் இளையோ னவன்தனக்கும்
சிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது
சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள தோர்வரங்கள்
வீரரே கேளுமென்று வேத னிவையுரைக்க
அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி 740
உன்னாலு மைந்துமுகம் உள்ளவர்கள் தம்மாலும்
உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும்
இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும்
தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்
ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்
முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான்
தாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க
ஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து
கேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத்
தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார்
வரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல்
பரம உமையாளைப் பையஎடுத் தணைத்து
அலைமே லேஆயன் அருகிலே போயிருந்து
மலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள்
கயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும்
அகில முழுதும் அடக்கியர சாண்டனனே
அப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே 760
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும்
மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம்
ஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள்
வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு
ஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத்
தாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார்
வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும்
தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும்
அஞ்சு முகத்தாலும் அழியா தவனுயிரும்
தஞ்சமிட வானோர் தையல்தெய்வக் கன்னிமுதல்
கயிலை முழுதும் கமண்டலங்க ளேழுமுதல்
அகில முழுதும் அடக்கி வரங்கொடுத்தோம்
என்று வேதாவும் இவையுரைக்க மாலோனும்
நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகிப்
பேயனுக் கென்னுடைய பிறப்பைக் கொடுத்தல்லவோ
தேயமதில் நானும் திரிந்தலையக் காரணந்தான்
என்று திருமால் இதுசதையஞ் சொல்லியவர் 780
இன்றந்தச் சூரர் இருவர்தமைக் கொல்லவே

கந்தன் அவதாரம்

ஆறு முகமாய் ஆய னளவிடவே
கூறிடவே சத்திதனைக் கொண்டார்வே லாயுதமாய்
நல்ல சிவனாரை நந்தீ சுரராக்கி
வல்ல பெலமுள்ள வாய்த்ததிக் கெட்டிலுள்ளப்
பாலரையும் வீரர்களாய்ப் பண்ணினா ரெம்பெருமாள்
வாலமுள்ள சன்னாசி மாரைப் பெரும்படையாய்க்
கந்தனெனும் நாமம் கனத்தசடை யாண்டியுமாய்க்
கொந்துகொந்தாய்ப் பீற்றைக் கூறைமிக வணிந்து
வேலு மிகப்பிடித்து வெண்ணீறு மேதரித்து
நாலுரண்டு சிரசில் நல்லருத்தி ராச்சமிட்டுப்
பத்துரண்டு காதில் பசும்பொன்னொவ்வாச் செம்பணிந்து
முத்திரிக ளிட்டுக்கந்தப் பொக்கணங்கள் தோளிலிட்டுச்
சன்னாசி போலே தானடந் தெம்பெருமான்
நன்னாதா னாவெனவே நாலஞ்சுகவி தான்பாடி
வந்து ஒருமலைமேல் வாய்த்தகூ டாரமிட்டுச்
சந்து மிகச்சொல்லி தான்விட்டார் சூரனுக்கு

வீரவாகுதேவர் தாது

சூர னிடத்தில் தூதாநீ சென்றேகிப்
பாரமுள்ள கயிலைச் பருவதமுந் தேவருட
சிறைக ளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பித் 800
திறவா னாயாகச் சீமையர சாளுமென்று
இப்படியே ஆகாட்டால் இன்றுகழித் தெட்டாம்நாள்
அப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும்
சண்டை அன்றென்று தரங்கூறி வாவெனவே
அண்டர்பிரான் தூது அனுப்பினா ரம்மானை
தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே
காதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும்
கந்த சுவாமி கருத்தா யுரைத்ததெல்லாம்
அந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான்
சூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க
ஏராத பாவி இகழ்த்தினா னப்போது
தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப்
பாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான்
ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள்
பாரடா வுன்றன் கந்தன் படுகிறதை
ஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி
மாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ
எமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும்
நவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ
முப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும் 820
நாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ
அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச்
சிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ
உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன்
என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே
ஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும்
கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ
என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான்
அன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான்
நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி
பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை
கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக்
கொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார்
தேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும்
மூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து
உன்னுடைய சேனை உற்றபடை யழித்து
நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி
அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார்
துரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண்
என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் 840
அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான்
ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே
போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ
சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு

சூரன்பாடு

சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக்
காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை
வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ
சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார்
வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை
சூர னவன்கண்டு தோசப் படையணிந்து
மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான்
கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து
பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி
முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப்
பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார்
வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே
தம்பி தலைவன் தளமு மிழவாதே
பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே  860
அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு
கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து
மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது
நன்மை யதுகூட நாடுமே யல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு
மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு
இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப்
புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான்
இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப்
பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு
ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது
ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை
சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப்
பண்டார மென்ற படைக்கார னும்நீயோ
என்னுடைய சேனை எல்லாமிக அழித்து
என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ
என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப்
பண்டார னோடே படையெடுத்தா னம்மானை
சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே 880
வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை
வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள்
பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு
வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே
இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து
வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து
மேலாம் பரனார் விமல னருளாலே
எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே
சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில்
வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து
சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல்
இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே
நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல்
கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே
சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல்
விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே
மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று
பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே
என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற 900
முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால்
என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது
உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால்
வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது
ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை
சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி
வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது
மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம்
தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள்
ஆதியே நாதி அனாதித் திருவுளமே
சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும்
என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க
நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து
சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார்
தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க
அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை

இரணியன் பாடு

சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் 920
தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த
சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து
வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில்
பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை
சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில்
மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து
வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும்
நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து
வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார்
சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில்
ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக்
கொன்னே னானென்று கூறினே னப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய்
வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது
ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல்
வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை
என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன்
பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து
இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது 940
ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே
மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு
உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து
கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது
திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால்
பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும்
முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்
என்று இரணியனை இரணசங் காரமிட்டு
அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை
அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில்
கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை 953

முத்திரிகிணற்றின்" சிறப்புகள்.

தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள். பதிகளில் தலைமைபதியாக திகழும் சுவாமிதோப்பு பதியில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வைகுண்ட அய்யா ஏற்படுத்தினார். அக்கிணறு பல்வகை சிறப்புகளை உடையது. "முத்திரிகிணற்றின்" தோற்றம்: பழங்காலத்தில் பொதுகிணற்றில் நீர் எடுப்பதற்க்கும் குளிப்பற்க்கும் மக்கள் சிலருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட வைகுண்ட அய்யா "முத்திரிகிணற்றை" தன் பதிகளில் ஏற்படுத்தினார். பக்தர்கள் புனிதமாகவும், நோயின்றி வாழவும் அய்யா ஏற்படுத்திய கிணறு "முத்திரிகிணறு" ஆகும். வைகுண்ட அய்யாவின் முன்னேற்றத்தில் பொறாமை கொண்ட கலிநீசர்கள் வைகுண்ட அய்யா ஏற்படுத்திய கிணற்றில் நஞ்சை ஊற்றி கொல்ல முயன்றனர். அய்யா வைகுண்டர் "பால்" என்று அருந்துபவர்களுக்கு "பாலாகவும்"; "நஞ்சு" என்று நினைப்பவர்களுக்கு "நஞ்சாக" இருக்கும் என்று கூறினார். பக்தர்கள் "சிவ சிவ அரகரா" பாடி அந்த முத்திரிபதத்தை அருந்தியதால் அது அவர்களுக்கு இனிய அமிர்தமாக தித்தித்தது.
வழிபடும் முறை: தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணறு" பல்வேறு சிறப்புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் பதம் இட்டு(குளித்து); பதத்தை அருந்தி; அந்த முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்ற வைகுண்ட அய்யாவின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும். "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்: முத்திரிகிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிகிணற்றில் பதம் இடுபவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீறும் என்பது ஐதீகம். அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும். முத்திரிகிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுத்தத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெருவார்கள். அதை அருந்திய பிறகு மனதில் உள்ள மாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் வைகுண்ட அய்யாவை பற்றிய எண்ணங்களே தோன்றும். பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடைடும். பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிபதம்" திகழ்கிறது. உடல் நோய்கள், தோல் நோய்கள், உடல் வலிகள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத் தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உளநோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது. இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிகிணற்றில் அன்பர்கள் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகளை உடையது "முத்திரிகிணறு" அனைவரும் வருக, பதம் இடுக அய்யாவின் அருள் பெருக! அய்யா உண்டு!

மாப்புக் கேட்டல்

அய்யா நாங்கள்
அறிந்து அறியாமல் செய்ததெல்லம்
அய்யா பொறுக்கனும்.
(5 முறை சொல்லவும்)
அய்யா பொறுத்து
அய்யா மாப்புத்தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கனும்
அய்யா பொருமை தரனும்

அய்யா நாங்கள்,
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணுல் கொண்ணு
நிரப்பாயிருக்கணும்.

அய்யா நல்ல புத்தி தரனும்!
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா எங்களை,
யாதொரு நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ் சலம் இல்லாமல்
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!
அய்யா உண்டு

அய்யா வைகுண்டர்

கொல்லம் ஆண்டு 1008க்கு முன்பாக கலியுக கொடுமைகள் தாங்ககாத தேவர்களும், முனிவர்களும் பச்சிபறவை முதல் ஜீவன் தங்களைப்படைத்த பரம்பொருளை வேண்டி கலிகொடுமையில் இருந்து விடுதலைபெற முறையிட்டார்கள். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தை சீர்குலைத்துவந்த அசுரர்களை இறைவன் அவதாரம் எடுத்து வந்து அவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். ஆனால் இந்த கலியுகத்திலே கலியன் உருவம் இல்லாதவனாக தோன்றினான். கலியன் ஒவ்வொருவருடைய எண்ண அலைகளை ஆட்கொண்டான். ஆதலால் இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களும், கலிமாய எண்ணத்தோடு தோன்றிவிட்டன.

கலியை முன்நின்று வெல்ல மூவராலும் இயலாது என்ற நிலையை உணர்ந்த இறைவன் அனைத்து சக்திகளையும் தன்னகப்படுத்தி பிரிவில்லா ஒரு பொருளால் கலியை வெல்லலாம் தர்மத்தை நிலைநாட்டலாம் என்று முடிவுக்கு வந்தனர்.அதுமட்டுல்லாது அகில வேதசட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை தேவர்களை மீண்டும் தர்மயுக ராஜியத்தில் வாழவைக்க எண்ணினார்.அதன் காரணமாக தனக்காகும் பேர்களை அடையாளம் காணவும் அகில வேத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர் களை காத்திடவும்.

உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.