திங்கள், 29 செப்டம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-16




மாதுநல்லா ளேழ்வரையும் மணமுகித்து மாயவரும்
தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார்
கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி
பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி
நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று
சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை
எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும்
முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென
நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச்
செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால்
குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே
சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே
வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து
சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது
நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும்
வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும்
கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம்
விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும்
பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள்
குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம் 20
அய்யா திருநாள் இகனை நடத்துதல்
அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து
இப்போ திருநாள் இகனைநடத்த வென்று
நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள்
தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால்
இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப்
பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை
ஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமெனத்
தேச மதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள்
பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும்
மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும்
கொழுந்துபன்னீர் சந்தமமும் குலுங்கா விடலைகளும்
தென்னங்காய் மாம்பழமும் திகட்டாப் பலாக்கனியும்
வாழைக் கனியிலையும் வகிர்ந்தகமு கின்குலையும்
நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமென
இத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்குப்
பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக்
காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டு
மாதுக் கியல்வாய் வளர்கோர் வையுமணிந்து
பெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப் பொட்டுமிட்டுக்
கட்டன்ன மும்பொதிந்து கண்ணர்திரு நாட்கெனவே 40
மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன்
சிக்கெனவே நாதன் திருநாட்கும் போவோமென
வருவார் கிழமை மாதந் தவறாமல்
திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்தக்
கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டுப்
பட்டால் மேற்கட்டி பழங்கனிகள் தாந்தூக்கிப்
பிச்சிமா லைதூக்கிப் பெருவாடை தான்தொளித்து
மிச்சம்பழந் தூக்கி மிகுவாடை தான்தொளித்து
சந்தனங் கஸ்தூரி சவ்வாது புனுகுடனே
சிந்தரெவ ரும்போற்றத் தேன்கனிகள் மாங்கனிகள்
வெற்றிலை பாக்கு மிகுவாய்ப் பழங்களுடன்
தத்திதத்தி யாகச் சதாகோடி யாய்க்குவித்துப்
பாலாயி தங்கள்வைத்துப் பாவித்து நற்பதிக்குள்
மாலா யிருந்து மகிழ அலங்கரிப்பார்
தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்து
மருவினிய மாதர் மகாகுரவை மலமலென
டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள்
மும்மான முளக்கம் போலே மிகமுழங்க
கன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டு
பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு 60
நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு
மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர
எந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம்
கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு
கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும்
மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து
உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு
மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து
பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச்
சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக்
கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து
மெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக்
கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு
மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு
அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத்
துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம்
காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு
நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே
ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும்
நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத் 80
தங்கரத்தினத் தொட்டில் சுவாமி மிகஇருந்து
பெண்கள் மிகநன்றாய்ப் பெருகக் குரவையிட
சங்கு தொனிக்கச் சகலோர் மிகப்போற்ற
சிங்கமுக லெட்சுமியும் திருமுகத்தில் நின்றிலங்க
சான்றோர்கள் தொட்டில் தண்டாய முஞ்சுமந்து
ஆன்றோர் பதியை அலங்கிருத மாகிவரக்
கன்னிமார் நாதன் கைக்குளொழுங் காய்வரவே
மின்னும் பதித்தெருவும் மிக்கஇந் தப்பவிசாய்
உலாவி வரவே உற்றதெய்வ வானோர்கள்
குலாவி மகிழ்ந்து கிருபையுள்ள நாரணர்க்கு
பூமாரி பொன்மாரி பெரிய சலமாரி
நாமாரி வானோர் நாடி மிகத்தொளிக்க
எல்லோரும் பார்த்து இத்திருநாள் நல்லதென்று
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்தா ரம்மானை
நல்ல திருநாள் ஞாயிறாழ்ச்சை முழுதும்
செல்ல மறுநாள் திங்க ளுதித்தவுடன்
காட்சி நடத்திக் கரிய திருமாலும்
நாச்சிமார் கூட நாதன் பதிபுகுந்தார்
நாதன் பதிபுகுந்து நருட்கு விடைகொடுத்து
மாதரோடு நாரணரும் மகிழ்ந்திருந்தா ரம்மானை 100
இப்படியே திருநாள் இகனை மிகநடத்தி
நற்புடனே நாதன் நாயகிமார் தம்மோடு
கூடி யிருந்து குலாவி யிருக்கையிலே
வேடிக்கை யாக விதியின் படியாலே
நல்லபுகழ் சீதா லட்சுமிக்கு நாரணரும்
செல்லப்பட் டானதுவும் சிவந்ததங்கக் காறையதும்
இட்டுக் கலியாணம் இலட்சுமியைச் செய்யவென்று
மட்டநிக ரில்லா மாயன் மனதிலுற்றார்
தங்கத்தால் காறை தானதியப் பட்டதுவும்
அங்கே மிகவருத்தி ஆயிழைக்குத் தான்கொடுத்துத்
திருநா ளிகனைத் திடிமன் முழக்கமொடு
பெருமாளும் லட்சுமியைப் பேறாய் மணமுகித்துத்
தெருவலங்கள் சுற்றிச் சிறந்த பதிபுகுந்து
மருவினிய நாதன் மாதரோடு வீற்றிருந்தார்
நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலே
வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார்
ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே
வைய மளந்த மாயத் திருமாலே
எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய
மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார் 120
அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார்
இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு
நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில்
வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார்
அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ
இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்
சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள்
வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக
வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும்
ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார்
நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து
காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார்
நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க
எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி
சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத்
தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார்
தெய்வமு மவராய்த் திருவுள முமவராய்
வைய மகிழ மனுப்போலு மிருந்தார் 140
வத்துவகையும் மாடாடு சொத்துக்களும்
ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார்
அம்மை மார்களுக்கு மதலை ஈதல்
இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே
நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி
மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள்
குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார்
ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து
நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி
வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க
ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க
பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும்
வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே
கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும்
விண்ணாண மாக வீரநா ராயணரை
கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா
இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக
விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்
மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்
நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே
மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே 160
இப்போ மதலை எடுத்து மிகத்தாரும்
செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார்
நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய
முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த
மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும்
குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன்
பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக்
கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர்
என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால்
பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ
தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து
மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு
ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து
மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான்
தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை
ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல்
மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன்
மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து
சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று
பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத் 180
துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன்
வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன்
பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச்
சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக்
கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து
அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப்
பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான்
சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக்
கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான்
பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென
இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து
சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம்
பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான்
பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும்
மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது
என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும்
மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார்
பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ
வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த
காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ 200
பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே
ஆரு மொருதர் ஆராட்டங் காணாத
மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும்
ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல்
கரிய அவரவர்கள் காடு வடவுகளில்
உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக்
கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றி
ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று
மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து
பாச மறுத்துப் பக்கத் துணைமறந்து
வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து
காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து
மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக்
குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப்
பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்
ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை
நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்
பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி
முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து 220
வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து
கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று
கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்
ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்
தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும்
பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த
உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ
நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை
தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து
பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம்
வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும்
தந்து புவியாளத் தலைவரே யும்முடைய
விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும்
தாருமென மாதரெல்லாம் தாழ்மையுட னீதுரைக்க
ஆருநிக ரொவ்வா அச்சுதரு மேதுரைப்பார்
மாதேநா னிந்த வையகத்தில் வந்தவுடன்
பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தம்வழியில்
தேர்ந்துந்தன் மக்களிலே சீசனென நான்தெரிந்து
கூர்ந்தெந்தன் கையதுக்குள் கொள்ளுகிறேன் வேலையது
இன்னாபா ரென்று ஏழுபேரையு மெடுத்து 240
நன்னகரி பார்க்க நாத னிடுப்பில்வைத்து
வட்டமிட்டு ஆடி மாதரொவ் வொருவர்க்கொரு
கிட்டவிட்டுக் காட்டிக் கிளிமொழிமார் கைக்கொடுத்தார்
பாலரையும் பார்த்துப் பாவையரைப் பார்த்தவுடன்
சீலமுள்ள லெட்சணமும் சிற்றிடையு மொப்பனையும்
ஒப்பமென் றெல்லோரும் உம்பருந் தாமகிழ்ந்தார்
செப்பமுள்ள மாதர் சிரித்து மனமகிழ்ந்து
அன்றுபெற்ற பிள்ளை ஐந்திரண் டானதிலே
மன்றுதனை யாளும் மாபாவிச் சோழனவன்
கொன்றானிரு பேரைக் கூடைதலை மீதில்வைத்து
சொன்னீரே சுவாமி தோன்றியிப்போ வந்தாரோ
தேன்மொழியே மாதே சொன்னபிள்ளை ரண்டுடைய
மானதிய மக்களென மாயவருந் தானுரைக்க
அப்போது பெண்கள் அச்சுதரைத் தான்பார்த்து
இப்போ வரவில்லையே எப்போ வருவார்கள்
மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரே
செப்பினீரே நீங்கள் சென்றமக்க ளெப்போவென்று
பொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்து
நல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்குகையில்
நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில் 260
கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும்
ஆக்கினைகள் செய்து ஆழநர கமதிலே
தாக்கியும் மக்களைநான் சடத்தோ டெழுப்பிமிகத்
தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களே
மருவினிய மாதே வாக்கிதுவே தப்பாது
என்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம்
நன்றாய் மகிழ்ந்து நாடிமக்க ளையெடுத்து
மடிமீதில் வைத்து மலர்ந்முகத் தோடணைத்துக்
கண்ணோ மணியோ கரடரா சன்மகனோ
விண்ணோர்கள் மெச்சும் வேதப் பரஞ்சுடரோ
தோணார்க் கரியத் துய்யதிரு மாலீன்ற
சாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோ
தெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோ
வையம் புகழவந்த மக்களே என்றுசொல்லிச்
சந்தோச மாகத் தார்குழலா ரேழ்பேரும்
புந்தி மகிழ்ந்து பூரித் தகமகிழ்ந்தார்
நாங்கள்செய் ததவத்தில் நாலிலரைப் பங்குவரம்
வாங்கினோ மையா மாயவரே யின்னமுண்டு
நாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டு
தாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து 280
என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்று
இன்று வரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமெனச்
சீதைக்கு நல்ல சிறந்தமக னையெடுத்து
மாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோருங் காண
மணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும்
குணமுடனே காட்டிக் கொடுத்தாரே யெம்பெருமாள்
நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள்
வல்ல கதிரோனும் வந்ததுகா ணம்மானை
கதிரோனுந் தோன்றிக் கங்குலவெளி யாகுகையில்
திருநா ளிகனை செய்து நிறைவேற்றி
மக்களெல்லாஞ் சூழ வந்து மிகப்பணிந்து
மிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித் தாம்போனார்
கைக்குள்ளே நிற்கும் கரியச் சன்மாரும்
மைக்குழல் மாரோடும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
பின்னுஞ் சிலநாள் பெரியதிரு நாள்நடத்தி
மன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார்
பெண்க ளவரவர்க்குப் பெரிய அரங்குவைத்துத்
தங்கள் தங்களுக்குச் சாமான்க ளுங்கொடுத்துப்
பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய்
மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி 300

இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்தி
அன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டு
பின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்து
அன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில்
பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும்
துள்ளியே மாயன் திருவிளையாட் டுமாடி
மங்கையர்கள் காணாமல் மறுமனைக ளும்புகுந்து
கொங்கைமட வாரோடு கூடிவிளை யாடிடுவார்
மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால்
வாய்ந்த வுலகில் வளர்ந்தபனை யோலையில்லை
கூடி மடவாரோடு குவிந்துவிளை யாடுகையில்
நாடி மடவார்கள் நாயகிமார் தங்களுக்குள்
ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்து
திருமருக ரோடே தெய்வமட வார்வெகுவாய்ச்
சண்டை பிடிப்பார் தந்ததுபோ ராதெனவே
கண்டமட வாரோடும் கனிவாகப் போறீரென
அவள்வீட்டில் போறீர் அவளோ டதிகமுமாய்
உபகாரஞ் செய்யுகிறீர் உள்ளாகத் தானிருந்து
என்னோடு பேச்சு இப்படியே செய்வீரென
மின்னோ வியங்கள் வெகுவாகக் கத்திடுவார் 320
சாமியொடு வெகுவாய்த் துரைத்தனங்க ள்தான்பேசி
நாமகலப் போவோம் எனநடந்து மக்களுட
வீட்டி லவர்போவார் வீரமால் தானறிந்து
கூட்டி வரப்போவார் குளிர்ந்த மொழியுரைத்து
அள்ளித் தருவேன் அனந்தவரா கன்பணமும்
வெள்ளியும் பொன்னும் மேன்மையுள்ள சீலைகளும்
உந்தனக்குப் போதும் உடைமை மிகத்தருவேன்
அந்தப்பெண் ணார்களுக்கு அதுக்கதுபோ லேகொடுப்பேன்
எழுந்திருநீ யென்று எட்டிமிகக் கைப்பிடித்துக்
குளிர்ந்தநய வார்த்தைக் கோதைமின்னார் தாங்கேட்டுச்
சிரித்து மகிழ்ந்து தேற்றலிது நன்றெனவே
உருத்துமிகச் செய்வதெல்லாம் ஓவிய முமறிவேன்
ஏன்காணு மும்முடைய இந்திரசால மெல்லாம்
கோன் கிரிவேந்தே கொஞ்சமெனக் குத்தெரியும்
மருட்டா தேயுங்காண் மாய்மால முந்தெரியும்
உருட்டா தேயும்போம் உமதுதொழி லுந்தெரியும்
எனக்கேற்ற வார்த்தை இதமதிமாய்ப் பேசிடுவீர்
தனக்கேற்க நெஞ்சம் தானறியா தேயிருக்கும்
கன்னி யுமதுடைய கருத்தெல்லாம் நானறிவேன்
நின்னு சடையாதேயும் நீர்போவு மென்றுரைப்பாள் 340
அப்போது மாயன் அதுக்கினிய வார்த்தைசொல்லி
இப்போது நீயும் எழுந்திருந்து வாவெனவே
மாய னழைக்க மாது மெழுந்திருந்து
நாயன் பிறகே நடந்து மிகவருவான்
வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார்
சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய்
இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி
ஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலே
செந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்து
முந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில்
சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்து
மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும்
நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்து
வான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச்
செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து
தெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடி
வருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத்
திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென
சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று
நம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக் 360
கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்று
அஞ்சலெனச் சாமளா தேவிதனை யழைத்துக்
கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு
என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே
கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி
மஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்று
விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள்
திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியே
கன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவி
மின்னி னொளிமதலை வீரத் தனமாக
நாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவி
உடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத்
தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார்
அவதாரத் தின்படியே அன்றமைத்த பெண்கொடியை
உபகார மாமணங்கள் உடையவரே நீரருளி
வையகத்தோ ரெல்லாம் மனமகிழ்ந் திருக்கையிலே
செய்யஇந்த மாயம் செய்வாரோ மாயவரே
ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான்
போரா வழியானப் பொல்லாப்புச் செய்தாரோ
ஆதியே யவர்கள் அநியாயஞ் செய்ததென்ன 380
சோதியே யென்று தொழுதார் மடவார்கள்
அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன்
சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்து
அன்றைப் பொழுது அவன்வந் தடிதொழுது
நன்றினிய எங்கள் நாரணரே நாயகமே
பத்துநா ளுண்டும்நான் படுத்திருக்கு மவ்வளவில்
பெற்றுச் சழிந்தவர்போல் பெரியபூவண் டர்வடிவாய்
வந்தென் றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார்
சந்தமுடன் நானுரைத்தச் சட்டமற வாதபடி
கொஞ்சநாள் தோப்பு குளிர்ந்தபதி யானதிலே
அஞ்சிரண் டாண்டு அதில்வாழ்ந் திருந்துபின்னும்
மூலகுண்டப் பதியில் மிகஇகனை செய்யெனவே
ஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதி லில்லாமல்
பெண்களைக் கண்டவுடன் பூத்தான மாய்மகிழ்ந்து
கண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்கு
நினைவு மயர்ந்து நிலைபேர்ந் திருக்குகிறான்
நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்கு
கோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிக
எண்ணி யிருக்குகிறான் இப்போது அங்கேசென்று
நண்ணிமூ லப்பதியில் நாடிவரச் சொல்லிவிடு 400
வரவில்லை யானால் மாதருடன் மக்களையும்
சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீ
என்றுசொல்லி நாளும் எட்டுரண் டாச்சுதையா
அன்று வுரைக்க அய்யாமிகக் கோபமுற்று
பாவிப் பயலே பகராம லித்தனைநாள்
மேவி யிருந்தாயே மெல்லி யிழந்தேனே
தீட்டிவைத்த சொற்பனத்தைச் சொல்லா திருந்ததினால்
கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத் தோற்றேனே
முந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால்
என்ற னிளமயிலை இழந்துமிக வாடேனே
பூவண்ட ரானால் பெரிய பிதாவல்லவோ
மாவண்டப் பயலே வந்துசொல் லாதிருந்தாய்
அய்யா மூலகுண்டப்பதி எழுந்தருளல்
இப்போ பதிக்கு எழுந்தருள வேணுமென்று
மைப்போடு வொத்த மாதரொடு மக்களுமே
கூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில்
தேடிமூ லப்பதியின் சிறப்பெல்லாந் தான்பார்த்து
ஏலமே இப்பதியில் எட்டுநாட் குள்ளேவந்தால்
மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதே
கெடுத்தானே சொர்ப்பனந்தான் கெணித்தவுடன் சொல்லாமல்
கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும் 420
இப்பதியில் வந்தால் எள்ளளவுந் தோசமில்லை
எப்பதியு மிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லி
எல்லோ ருடனே எம்பெருமா ளுமகிழ்ந்து
அல்லல் வினைதீர்ந்து அதில்வாழ்ந் திருந்தனராம்
தோப்புப் பதிபோல் தொட்டிக்கட் டம்பலமும்
கோப்புப் புரையும் குளிர்ந்த மணியரங்கும்
பள்ளி யறையும் பார்சவுககை மண்டபமும்
துள்ளி யிகனை சுகசோ பனம்வரவே
பூம்பந்த லும்பெரிய புகுவீர மேடைகளும்
ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும்
சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்து
குணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார்
வாழ்ந்து திருநாள் வாரஞ்செவ் வாச்சைமுதல்
ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன்
கும்மி யிகனை குவலயத் தீர்ப்புரைத்துத்
தம்மியல்பு கொண்டு சுவாமிவெண் பட்டுடுத்தித்
தங்கக்குல் லாஅணிந்து தாமரிய நீராளம்
எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்து
ஆயிழைமா ரவர்க்கு அழகுவெண் பட்டுடுத்தி
வாயிதமாய் மாயன் மகிழ்ந்துமிகக் கொண்டாடி 440
மங்களமா யிகனை மகாயிகனைத் தான்கூறி
சங்க மகிழ சுவாமிதிரு நாள்நடத்தி
பாக்கியங் களோடே பவிசா யிருக்கையிலே
தாக்கமிக மாயன் சந்தோச மாய்மகிழ்ந்து
பொல்லாக் கலிநாடு பொன்றிவருங் காலமதில்
வல்லாமை யான வாய்த்த பகவதிக்கும்
மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும்
தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும்
கலிமுடியு முன்னே கலியுகத்தோர் கண்காண
வலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்று
முன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற் படியாலே
நன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று
அய்யா கன்னிபகவதி பதியேகல்
உன்னித் திருமால் உள்ளில் மிகஅடக்கி
வள்ளலந்த மாகுமரி வாழும் பகவதியை
மாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லி
உபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார்
கிழவனா கச்சமைத்து கிருதஞ்செய்ய வேணுமென்று
தளதளெனத் தேகம் தன்னுடம் புமினுக்காய்
மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய்
கக்க லிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி 460
தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டுப்
பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளே
கண்ணு மயிலே கனகவொளி மாமணியே
பெண்ணும்பிள்ளாய்ப் பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடு
என்றுசொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும்
குன்றுமணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரே
பேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும்
காதில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்து
ஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான்
பாரழியும் நாளோ பையரங்குக் குள்ளேவந்தாய்
எங்கிருந்து நீதான் எவ்வூ ருன்பேரேது
கிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தா னோவுரைநீ
அம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியே
சும்மா மயங்காதே சூட்சமொன்று மில்லையம்மா
பரமார்த்த மம்மா பழனிமலை யென்றனக்கு
விதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லை
இலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்தி
திலாடம திலிருந்து தீர்த்தமிங் காடவந்தேன்
வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பி யிங்கேதான்
உந்தன் திருப்பதியை ஒருஅகர மென்றிருந்தேன் 480
மகளே யென்பேத்தி மாஞால மொன்றுமில்லை
செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனா னிவ்வயதுள்
உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன்
பின்னுமொரு பேச்சு பேசுகிறா ரிவ்வுலகில்
இன்றுந் தன்பதியில் இருந்திந்த ராவிடிந்தால்
நின்றுநின்று போயாலும் நிச்சயம்பார்த் தேமகிழ்ந்து
என்னுடைய வூருக்கு ஏகவே ணும்பேத்தி
பொன்னு மகளே பேத்தியெனப் போத்திசொன்னார்
பேத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப்
போத்தியே யுமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன்
ஏற்றுநீ ரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும்
சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போத்தி
அம்மா நீசொன்ன அருமை யெனக்கதிகம்
மும்மால்க்கு மேற்று முகுந்தன் பதம்பெறுவாய்
தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மா
தேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார்
பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரி
காலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள்
தாக மதுதீர்ந்து தானிருக்கு மப்பொழுது
நாகரீகக் குமரி நாயகியு மேதுரைப்பாள் 500
போற்றி யுமக்குப் போதவய தானதினால்
நாற்றிசைக ளெங்கும் நடமாட்ட மாயிருக்கும்
ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளது
மாதோடே சொல்லும் மாபெரிய போத்தியென்றாள்
உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவே
மடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான்
கன்னி மாகுமரி காசித்தீர்த்தம் நிகராம்
பின்னு மற்றதெல்லாம் பிரமாண மப்படிதான்
இப்போ தொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார்
எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம்
என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள்
விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள்
அப்போது கிழவன் ஆச்சரிய மாய்மகிந்து
இப்போது வேணும் இவளை மிகஇளக்க
என்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்து
மன்றுதனில் கேட்ட வளமைகே ளென்றுசொல்லி
ஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம்
வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்து
வைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்து
கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம் 520
தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம்
மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம்
தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம்
புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம்
குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும்
கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம்
மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம்
மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித்
தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம்
தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும்
வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம்
நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள்
மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம்
டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம்
இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம்
காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும்
பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம்
இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால்
எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம் 540
அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே
சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த்
தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமென
அச்சமறப் பேச்சென்று ஆதியிலே கேட்டதுண்டு
அந்த முறைதானோ அவனியிலே கேட்கிறது
எந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்தி
போய்ப்பார்த் தால்தெரியும் பொன்மகளே பேத்தியென்றார்
வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்து
கண்ணரிய  போத்தி காரணத்து நற்போத்தி
திண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும்
தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று
வையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்தி
மாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்கு
ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர்
கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்தி
பூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன்
செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன்
செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள்
அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார்
இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன் 560
ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம்
கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது
பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு
வீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவு
கக்க லிருமல் கால்பெலக்க வொட்டாது
சிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும்
இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன்
சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால்
ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும்
பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு
நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென
நீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார்
அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள்
நற்போடு வொத்த நம்முடைய பேராநீர்
வேறாட்கள் கூடவெளியேறப் போகாது
வீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும்
உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்கு
எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும்
பைய இருந்திருந்து பாதை மிகநடந்து
நெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும் 580
பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள்
சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்து
அப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில்
பொற்பணிவே லைபுரியும் பெண்ணா ரறியாமல்
இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல்
கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம்
போக வென்றாலும் பொழுது புறப்படுமுன்
ஏகவேணும் நாமென்று இயல்பா யுரைத்தனராம்
அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்று
இப்போ தெழுந்திரியும் இதுகடந்து போவோமெனச்
சொல்லிக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லகா ரியமெனவே நாம்போவோ மென்றுவுன்னி
அரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றுயென்று
கரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்று
குன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்து
உன்னி யிருப்பும்விட்டு உடனே வெளியில்வந்து
சன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடிப்
பின்னே விழுவார்போல் போத்திமுவ் னிற்கையிலே
மாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்துக்
கேது விளைத்துவந்த கிழவன்பின் னாலேகி 600
வந்தவளை யழைத்து வாவா பிறகெனவே
சந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார்
முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்க
அன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியே
முட்டாங்கு மிட்டு முகந்தெரியா வண்ணமவள்
கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும்
கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்க
மலர்மாரி தூவ வாயு மரைவீச
பூமி குலுங்காமல் பொருப்பு மசையாமல்
காமி குமரி காலசையா மல்நடந்தாள்
நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார்
வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்பு
தெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும்
பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட
திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி
முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென
வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக்
காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச்
சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள்
அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ 620
வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால்
வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள்
பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி
இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால்
தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும்
நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடி
கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம்
விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம்
என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலே
அறைந்த வாரி அதற்கு வடபுறமாய்
இடம்மான வோசை டகுடகா வென்றுமிக
இடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச்
சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே
மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக்
குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப்
பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப்
பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச்
சற்று வடக்கேறி தான்பார்த்துப் போவோமென
என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும்
நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே 640
தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடி
கெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோ லேயுரைத்தாள்
குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் கோலூன்றி
மின்னிடையே பையவென்று மெல்லவடக் கேறினராம்
வடக்கேறி மாதை வலம்விட்டுத் தான்கூட்டி
நடக்கையிலே ஆளிரச்சல் நாடி மிக்ககேட்டு
அன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகி
சின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள்
கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்தி
நண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்தியைக்கேள்
சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால்
எனைக்கூட்டிக் கொண்டு இதில்விட் டகலாதேயும்
திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரே
பக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமே
கைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டிப்
பைக்குள் வைத்துக்கொண்டு பகலோ னுதிக்குமுன்னே
என்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால்
பொன்பதி னாயிரத்தால் புனைந்தவொரு தாவடந்தான்
உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே
எம்முடைய மானம் இருக்குதுகா ணும்மிடத்தில் 660
ஒருவ ரறியாமல் உபாயமாய்க் கொண்டுவென்னை
திருவனப் பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள்
பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்துவைப்பேன்
காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன்
மலங்கா தேபேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்க
கலங்கா தேசேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன்
என்றுரைக்கப் போத்தி இளவரசி யுமகிழ்ந்து
அன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்து
ஆளுக் கிடைநடுவே ஆயிழையும் பேத்தியுமாய்த்
தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம்
வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும்
சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும்
செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும்
புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே
போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும்
சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ  லுண்டு மென்று
பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம்
சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள்
உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்று
மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி 680
குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கி
நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார்
பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள்
சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர்
ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக்
சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள்
ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும்
நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம்
செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும்
நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா
என்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார்
நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும்
இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன்
பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக்
கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடி
நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே
காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை
பகவதிக்குச் சச்சிதானந்த வடிவைக் காண அருளல்
பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது
சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும்
பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் 700
நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூ பம்போலே
தண்டை யணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும்
தெண்டையக்கண் மாலும் கிரணவொளி ரத்தினம்போல்
செம்பவள வாயும் சிறந்தபீதாம் பரத்துடனே
அம்பலத்தே நின்று ஆனந்த மேபுரிய
ஆனந்த மான அழகு பகவதியும்
தானந்த மான சச்சிதானந் தவடிவைக்
கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கே
நின்று அவள்பார்த்து நெஞ்சந்தடு மாறினதை
கிழவ ரறிந்து கிளிமொழியை விட்டகல
பழவ ரொருசொரூபம் பாச மிகஎடுத்துக்
கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில்வந்தார்
மைவளைய மாது மாறிமன தேதிரும்பிப்
பார்த்தா ளருகில் பண்பாக நின்றதொரு
கூத்தாடித் தாதனையும் கோதைமிகக் காணாமல்
பாவிக் கிழவன் பாதங்கள் செய்தானே
லாவிலாவிக் கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள்
அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மை
மெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானே
எங்கே யினிக்கண்டு என்பதியில் போவேனான் 720
திங்க ளுதிக்குதல்லோ சேவல்குர லாகுதல்லோ
நிலவெளிச்ச மாகுதல்லோ நிற்கிழவனையுங் காண்கிலையே
குலமுழிவ தாச்சே குவலயங்கே டாகுதல்லோ
மான மழிந்தாச்சே வையகமும் பேசாச்சே
தான மழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சே
இக்கிழவ னம்மை இளக்கியிங்கே கொண்டுவந்து
மொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோ
என்னபோ லாச்சு என்தலையி கூறிதுவோ
அன்னம்போல் வார்த்தை ஆசார மாயுரைத்துச்
சந்தியில்பந் தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்று
சுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கி
புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும்
சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம்
என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று
பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள் 740
தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமென
உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து
இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி
மனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல்
பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று
சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள்
மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள்
சாருமிட மற்றார்போல் தனியே புலம்பலுற்றாள்
கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள்
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள்
தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்று
வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள்
சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப்
போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி
உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும்
எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான்
சங்குள் பிறந்த சமயத்திருமணியும்
எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும்
தனியே யிருந்து தனதுள் ளகமடக்கி
மனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள்
கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக்
களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள்
கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும்
காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே
ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே 760
சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோ
அன்னபட்சி மாமரங்காள் ஆவினங்கா ளூர்வனங்காள்
என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித்
தாரீரோ என்றனுட சந்தபதி நான்போக
வாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்கு
என்று புலம்பி இளங்குழலித் தேடுகையில்
குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம்
வேளை யறிந்து மெல்லி பொன்வண்டதுபோல்
சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய்
இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபக லேகும்வரைத்
தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்து
பகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன்
சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாட
ஆடிக் களித்து அகமகிழ்ந்தா ரச்சுதரும்
கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார்
நாட்டை யழிக்க நமக்கு வொருமுகூர்த்தம்
பேட்டைதர்மந் தோணப் பொகுதின் றென்றனக்கு
என்று கும்மிபோட்டு இளங்குழலை யும்பார்த்து
இன்று இருவென்று எம்பெருமா ளுமாட
நல்ல பகவதியாள் நாடிப்பொன் வண்டதுபோல் 780
செல்லப் பதுங்கித் திசைமயக்க மாயிருந்தாள்
பகற்பொழுது மாறி பகவா னடைந்தபின்பு
உகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகி
பத்து வயசுப் பிராயம்போ லேசமைந்து
சித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள்
இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகி
பண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையே
நாலுதிசை யுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையே
கோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும்
சற்றுந் தெரியலையே தலையிலெழு துஞ்சிவனே
முற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோ
நரைக்கிழவ னம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான்
உரைத்திடுவா ரிந்த ஊரி லொருவசனம்
மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழ வன்கூட
போய்ப்பிழைத்தா ளென்று புவனஞ்சொல் வாரிதுவே
நம்முடைய மட்டும் நாயன் விதித்தானோ
சும்மாயிந் தக்கிழவன் சோலிபண்ண வந்தானோ
படைத்த பரனே பாவியே யென்றலையில்
நடத்தை யெழுதி நவின்றதுவு மிப்படியோ
பரதவித்து மாது பலபலவா யெண்ணிமிக 800
விரதமுற்று மாது மெல்லி யிளமயில்போல்
ஆளுக் கிடையே அன்னம்போ லேதிரிந்து
கூழு குடித்தக் குறுங்கிழவ னைத்தேடி
திரியும் பொழுது செய்யதிரு மாலவரும்
பரியேறும் பெருமாள் பகவதியைக் கண்டவரும்
இனியிவளை யிந்த ராச்சியத்தில் நம்முடைய
மனிதப்பெண் கூட்டிலிட்டு மாலையிட வேணுமென்று
நினைத்துப் பெருமாள் நேரிழையைத் தான்மயக்கி
புனைத்தொரு பெண்ணுடைய பொற்கூட்டுக் குள்ளடைத்து
தாண்டவ மாடுஞ்சபையில் சனங்களெல்லோ ருமறிய
காண்ட மிகப்படித்துக் கன்னிப் பகவதியை
மனுவறிய அண்ட வானலோ கமறிய
இனிமணங்க ளிவளை யாம்புரிய வேணுமென்று
நிச்சித் தொருபெண் நிலையுங் குறிபார்த்து
எச்சரிக்கை யான இளமயிலாள் தன்கூட்டில்
அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய்ப்
படைத்தோ ரருளால் பாரீரேழு மயங்கப்
பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும்
நாடி யவள்படித்த நற்காண்ட மானதுதான்
புகன்றா லுலகம் பொடிப்போ லுதிர்ந்திடுமே 820
உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது
மனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கி
தனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்து
ஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத்
தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச்
சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித்
தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து
பகவதியம்மை காண்டம் படித்தல்
பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள்
ஆவி மறுக அவனிதனி லெங்களையும்
சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய்
போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே
பொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச்
சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும்
வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுட
மெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப்
பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்து
தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே
இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால்
பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியை
என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய் 840
உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயே
என்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீ
பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோ
பொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ
எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போ
மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ
வேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல்
பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும்
சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும்
ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்று
அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ
மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ
இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம்
சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ
ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ
பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே
போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு
ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே
என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு 860
மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்
புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய
நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே
நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள்
நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணக் குயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா
உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று
துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள்
சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு
தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு
வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன் 880
சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும்
அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்
தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே
உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும்
மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே
அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கி
இப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன்
சோலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப்
பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடு
தோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாது
எங்கள் கண்மயக்கம் எல்லா மிகத்தெளித்து
தங்கள்தங்கள் பதிக்குத் தானேக விட்டுவிடு
கேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண்
உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல்
எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல்
போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல்
ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே
மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப் 900
வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும்
வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதே
நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும்
மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம்
உபாய மறிய ஒருவரா லேலாது
என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன்
நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார்
பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலே
கண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதே
அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி
குமுதவாய்ப் பெண்ணே குமரிப் பகவதியே
தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே
மானே குயிலே மரகதப்பெண் ணோவியமே
கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலே
செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே
பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை
கலியழிய வயது காலஞ்சரி யானதினால்
வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான்
பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து 920
சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்து
நாடாள நமக்கு நல்லபல னானதினால்
தாடாண்மை யான சத்தி பகவதியே
உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு
தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான்
கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும்
மயிலனையா ளான மாது சரஸ்வதியும்
மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள்
சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள்
மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள்
குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரை
பூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள்
பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல்
எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில்
வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு
கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும்
திலிய னவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனே
வருகுமந்த வேளையிலே  மாமுன சீராமரிஷி
திருஉமையாள் பங்கரோடு சென்றுநின் றேதுரைப்பார்
நல்லபர மேசுரரே நாட்டிலிந் தக்கலியன் 940
வெல்லக்கூ டாதவரம் வேண்டியிவன் போறதினால்
எக்கால மையா இவன்முடி வாவதுதான்
அக்கால மெல்லாம் அருளுமென்றா னீசுரரை
நல்லபர மேசுரரும் நாடிமுனி கேட்டதற்குச்
சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்துக் கேட்டிடுநீ
சிவன் ரோமரிஷிக்கு அருளியது
மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும்
தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளு
பொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவ(து)
எல்லா மறிய இலக்கறியக் கூறினராம்
இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம்
சிவஞான நினைவு செல்லாது தேசமதில்
கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்
தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார்
நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில்
போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார்
பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகை யாயிருக்கும்
கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம்
கூடி யுடன்பிறந்த கோதையரைப் பெண்ணெனவே
நாடி யவரெண்ணி நாணியிறப் பார்கோடி
வாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள் 960
மாரி மறைந்துவிடும் வாயுவது நோய்வீசும்
கீழ்ச்சாதி யெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர்
மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார்
வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும்
அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும்
மனுவதிலே கற்பிகழா மாதர்கற் பேயழந்து
தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்
தெய்வ நிலைகள் தேசமதில் காணாது
மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது
இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது
பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார்
தெய்வ மடவார் தேசமதி லேவருவார்
வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார்
பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும்
சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க்
கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம்
உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடி
வாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனே
தாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான்
இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே 980
அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும்
பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான்
துன்னுபுக ழீசுரரே தெய்வமட வார்களெல்லாம்
கலியுகத் திலவர்கள் கட்டா யொருதலத்தில்
சலிவில்லா தேவாழ்ந்து சந்ததிகள் வாழ்வுடனே
வாழ்ந்திருப்பா ரென்று வகுப்புரைத்த ரீசுரரே
கூர்ந்திவர்கள் தம்மைக் கோலமணஞ் செய்கிறதார்
யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான்
தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளு
நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக்
கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத்
தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து
மெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத்
தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும்
பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால்
நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம்
தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுது
ஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால்
திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம்
என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று 1000
நன்று நன்றையா நல்லகா ரியமெனவே
சந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசே
முந்தோர் மொழிந்த முறைநூற் படியாலே
வந்ததுகா ணிந்தவிதி மங்கையரே யுங்களுக்கு
எந்ததுகா ரியம்பெண்ணே என்னையொன்றுஞ் சொல்லாதே
தலையில் விதிபிள்ளாய்த் தங்கடங்க விட்டுவிடு
கிலேச மதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடு
கொண்டுவந்தேன் பெண்ணே குவிந்தவதி எந்தலைக்குள்
பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரே
பெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக் கண்ணரசே
கண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்து
வாடி யிருந்தேனடி மங்கையுனைக் காணாமல்
கோடி யிருந்தேனடி குமரியுனைக் காணாமல்
தாபத்தா லுன்னைத் தவமிருந்து கண்டேனடி
கோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதே
என்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிகக்
கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்க
அம்மை பகவதியாள் ஆகங் களிகூர்ந்து
நம்மைப் படைத்தது நாயன்முன்னா ளென்றுசொல்லி
இருந்த பதியை எண்ணிöண்ணி மாதுநல்லாள் 1020
பொருந்தும் விழியாள் பெருமிமிக நீருவிட்டு
அழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக
ஒழுகாக நிற்கும் உலக நருளழவே
மாமரங்க ளெல்லாம் பூத்துச் சொரிந்தழவே
ஐயோ நானிருந்த அம்பலமும் வீதிகளும்
வையா வழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனே
சிங்கா சனமும் செகல்த்துறையும் வாவிகளும்
மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனே
இலாடக் கிழவன் இராத்திரியில் வந்துநம்மைக்
கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனே
பொன்னா பரணமும் பெட்டகமுந் தோற்றேனே
முன்னா ளெழுத்தோ முத்துமண்ட பமிழந்தேன்
ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந் தோற்றேனே
வேண்டும் நருட்கள்வந்து விழுந்திறைகள் தோற்றேனே
தண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனே
துணைக்கிள்ளை யானத் தோழியரைத் தோற்றேனே
பணப் பெட்டகமும் பைம்பொன்னரிய பட்டுகளும்
நவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனே
செகமெல்லாங் கூடிச் சேவிப்பதுந் தோற்றேனே 1040
இத்தனைநா ளுமிருந்து இந்தக்கெதி யோஎனக்கு
முத்திபெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோ
அய்யோநான் பிறந்த அன்றுமுத லின்றுவரை
வெய்யோன் முகம் வரையும் செல்லியறியேனே
பாவிக் கிழவன் பரிகாசஞ் செய்வானென்று
ஆவி யறிந்திலனே அங்கமது வாடுதையோ
மூன்றுபொழு தாச்சே ஊறும்நீர் தானருந்தி
மீண்டென் சரீரம் விழலா யெரியுதையோ
பாலு பழமும் பருந்தேனுஞ் சர்க்கரையும்
நாலு ரண்டான நல்ல ருசியதுவும்
பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோ
ஆவிதடு மாறுதையோ ஆதிபர மேசுரரே
என்று பகவதியாள் எண்ணமுற்றுத் தானழவே
மன்று தனையளந்த மாலுமிக அமர்த்தித்
தேனினிய கண்ணே தேவி பகவதியே
நானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய்
நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமோ
மேன்மைய தாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன்
பொன்பணங்க ளானப் பெட்டக முந்தருவேன்
என்பதி யுந்தருவேன் ஏறும்பல் லாக்கருள்வேன் 1060
தண்டாய மேறிச் சனங்கள்மிகப் போற்றிவரக்
கொண்டாடும் நல்ல குருபாக்கி யந்தருவேன்
திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன்
அருள்ஞானப் பெண்ணே அங்கிருந்த சீரதிலும்
அய்யிரட்டி யாக அணிவே னுனக்குடைமை
பொய்யென் றிராதே பொன்முடியின் தன்னாணை
என்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக்
குன்று தனமின்னாள் குமரி மனமகிழச்
சத்தியஞ் செய்து தலையைத் தொட் டாணையிட்டுப்
புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள்
நாதனுட தஞ்சமென நாடி யகமகிழ்ந்து
மாது குமரி வாயுரை யாதிருந்தாள்
பகவதி திருக்கல்யாணம்
அப்போ திருமால் ஆனந்த மேபெருகி
இப்போ பகவதியை ஏற்றமணஞ் செய்யவென்று
உன்னித் திருமால் ஒருசொரூபங் கொண்டனராம்
மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டு
எக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம்
அக்காலத் தேவர் ஆகாய மீதில்நின்று
பந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்கச்
சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ 1080
தெய்வரம்பை மாதர் திருக்குரவைத் தான்பாட
ஞாய மனுவோர் நற்குரவைத் தான்பாட
பகவதிக்கு நல்ல பாரமணக் கோலமிட்டுச்
சுகபரனு மாலைமணச் சொரூப மெடுத்தவரும்
பிச்சிமா லைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்து
மிச்சமுடன் வெள்ளி விரலாளியோ டரைஞாண்
பொன்தா வடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை
மின்தா வடம்பூண்ட மெல்லி பகவதிக்குக்
கண்ணானத் தாலி காரணத்து நற்தாலி
விண்ணோர்கள் மெய்க்க விறலோன் மிகத்தரித்தார்
கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்கு
இன்று மணம்புரிந்தார் இறையவர்தா னென்றுசொல்லிக்
கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார்
தொண்டான சான்றோர் துதித்து மிகப்போற்றிக்
கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்குச்
சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவே
எல்லோருங் கொண்டாடி இருந்தார்கா ணம்மானை
நல்லநா ராயணரும் நாடி யகமகிழ்ந்து
செல்லமட வாரோடு சேர்ந்துவிளை யாடிருந்தார்
அந்தந்தப் பெண்களுக்கு அழகுசொரூ பம்வேறாய்ச் 1100
சொந்த விளையாட்டுத் தோகையரோ டாடினராம்
ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும்
நாடி யுகத்தீர்ப்பும் நல்லமக்க முக்கறிவும்
சொல்லி யாமங்கூறிச் சோபனங்கள் தான்பாடி
நல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே
பார்வதி திருக்கல்யாணம்
ஈசுரனுக் கேற்ற ஏந்திழையாள் பார்வதியை
வீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக் காட்டாளை
மாமணங்கள் செய்ய மனதிலுற் றெம்பெருமாள்
பூமணங்கள் னானப் பொன்னுநல்ல பார்வதிக்கும்
மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்துத்
திங்கள் சடையணிந்து சிவவேட முந்தரித்து
மாத்திரைக் கோல்பிடித்து மார்பில்தா வடம்பூண்டு
காத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார்
மாதுமைக்கு மங்களங்கள் மயேசு ரன்கூற
சீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்துக்
கருத்தா யிருந்து காண்டமது சொல்லியவர்
உருத்தா யிருந்துஓதுவார் மோகமதாய்ப்
பெண்ணே யென்பார்வதியே பேரான மாதுமையே
கண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமே
கூட்டுக் கிளியே கொடியிடையே நிங்களெல்லாம் 1120
நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோ
தனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவது
கனியேயென் மாமணியே கருத்தி லறியீரோ
உள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டு
தள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோ
ஊணுறக்க மில்லை உங்களைநா னெண்ணியெண்ணிக்
கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனே
வாரீரோ பெண்காள் வயிறுபார்த் தன்னமிடப்
பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோ
அன்னங்காய் வைத் அமுதருந்து மென்றுசொல்லி
முன்னிங்கே வந்து முத்தமது தாரீரோ
வாழை பழங்கனிகள் மாம்பழம் பாலக்கனிகள்
கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோ
கண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லா தோவியங்காள்
பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியே
எண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியே
கண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோ
என்றுபர நாதனுமோ இவ்விசைகள் தான்கூற
மன்றல்குழ லுமையாள் வாய்த்தகுலப் பார்வதியாள்
வந்துதிருப் பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து 1140
முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர்
அய்யோஈ  தென்ன அடிமாறு காலமதோ
பொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம்
இப்பா ருலகில் இப்படியே வந்ததென்ன
முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
பொல்லாக் கலியுகந்தான் பொடிப்பட்டுப் போறதற்கோ
வல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான்
என்றந்த மாதர் இதுகூற மாயபரன்
நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்த துபோலே
வந்தீரே யின்று மணம்புரிய வேணுமென்று
புந்தி யயர்ந்து பூவை முகங்கோடி
அண்ணர்நா ராயணரும் அவனிதனில் வந்தாரென்று
பெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்று
வந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள்
அண்ணரது நீயென்றாய் ஆயிழையே யிவ்வுகத்தில்
இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமே
மனதயர்ந்து மாதர் வாயுரைக்கக் கூடாமல்
தனதுள் முகங்கோடி தலையில் விதியெனவே
நின்றார் மடவார் நினைவு தடுமாறிப்
பண்டார மாகப் பரமன் வடிவெடுத்துத் 1160
தாலி மிகத்தரித்தார் தாமனந்தப் பெண்ணார்க்கு
ஆலித்துப் பார்வதியை அரவியுட னீராட்டி
சந்தோ சமாகத் தாலி மிகத்தரித்தார்
வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாட
வையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாட
செய்யத் திருமால் செய்சடங்கு கள்முடித்து
வாழ்ந்திருந் தார்பெண்களுடன் மாய பரநாதன்
தாழ்ந்து மடவார் சரண மிகப்பூண்டு
பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிக
வேண்டும்பல பாக்கியத்தோ(டு) இருந்துமிக வாழ்ந்தார்
இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள்
நற்புடைய தேர்திருநாள் நாளுங் குறையாமல்
செய்து இகனை சிவசோ பனம்புரிந்து
பைதுவளை மாதரோடு பண்பாக வேயிருந்தார்
மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய்த்
தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந் திருந்தனராம்
வாழ்ந்திருக்கும் நாளில் மாதுகன்னி மார்களோடும்
சேர்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்து
கூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்கு
சோபனங்கள் கூறி சுத்தமங்க ளம்பாடி 1180
சேவரசி யான மெல்லியரை நாமணந்தான்
மோகினி வேடம்
புரிவதற்குக் கோலம்புகழ்ந்தணிய வேணுமென்று
மதிபெரிய மாதை மயக்கமிகச் செய்திடவே
மாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொரு
சீதுகந்த மாதரென செம்பவள மாயவரும்
காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்து
மார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக் காலிலிட்டுச்
சேலை யுடுத்துச் சிவந்தகொசு கமுடித்து
மாலை யணிந்து மார்பில் கலையணிந்து
கோர்வை யணிந்து குழலு மிகமுடித்துத்
தோர்வை படாதே தோகையென வேசமைந்து
மஞ்சணையும் பூசிபிச்சி மாலை மிக அணிந்து
செஞ்சொல் மதனைச் சிந்தைக்குள் ளேயிருத்தி
எடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமது
கடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்று
சொல்லி மகிழ்ந்து தோழிநா மென்றுசொல்லி
முல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந் தொழுவார்
நாட்டி லுள்ளோரும் நாரணர்பெண் ணானாரென்று
தாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்துநிற்பார்
இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும் 1200
பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக் காட்டாளை
மயக்கிக் கொடுவரவே மாமோகப் பெண்ணேவ
இச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொரு
சச்சு ரூபமாகத் தான்கண் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் பேர்பெரிய நாயகமே
கண்ணே யென்மாமணியே கனகவொளி மாதவமே
கலியுகத்தி லேபெரிய கண்காட்சை தன்னுடனே
வலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும்
நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும்
சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனே
சத்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும்
புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும்
கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்து
கொங்கை மடவார் கூடி மிகப்புரிந்து
கும்மி யடித்துக் குரவை மிகக்கூறி
எம்வடிவு போலே ஏலங் குழலார்கள்
ஆடிப் படித்து அலங்கிருத மாகியவர்
சாடிக் குலாவி சனங்கள்வெகுக் கூட்டமுடன்
பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையை
மேலுக் குகந்தவளே விடுத்துரைக்கக் கூடாது 1220
என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும்
அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடு
கூடி நடந்து கூண்டரிய நற்பதியில்
ஆடிக் களிக்கும் ஆதியிகனைச் சுபையில்
வந்தாளே மாய்கை மண்டைக்காட் டாளுடைய
சிந்தை யதற்குள்ளே சென்று மிகவிருந்து
திக்குத்திசைகள் தெரியாமல் தான்மயங்கி
பக்குவ மாது பறிகொடுத்தப் பேர்களைப்போல்
புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே
வலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்தி
மணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்றுக்
குணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப்
பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்று
சுகபதியா ளந்தச் சோதி பகவதிக்குள்
உள்ளாக்கிக் கொண்டு உற்ற திருச்சபையில்
துள்ளாட்ட மாகித் தொகுத்தகாண் டம்படித்தாள்
வையகத்தோர் காண வாழும் பகவதியாள்
செய்யமண்டைக் காட்டாள் சிறந்தகாண் டம்பிடித்தாள்
மண்டைக் காட்டம்மை காண்டம் படித்தல்
அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந் திங்குவரப்
பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான் 1240
இங்கே யிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும்
சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகிப்
பெண்ணாய்ச் சமைந்து பேராசையு மருளிக்
கண்ணான என்றன் கற்பு மழிந்தேனே
என்றுமா தேவி இப்படியே சொன்னவுடன்
ஒன்றுமறி யாதவர்போல் உள்ளந் தனிலடக்கிப்
பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்கக்
கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமது
எடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன்
முடுத்துந்த னூரில் முறைமயக்க வந்தேனோ
எனக்குப்பெண் ணில்லையென்று இரந்துகொள்ள வந்தேனோ
தனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோ
நாமிருப் பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோ
சோமவா ரமணிந்த சுவாமியுட கற்பனையோ
என்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள்
குன்றெடுத்த மாயக் கோபாலா வுன்சூட்சம்
எவரா லளவெடுக்க ஏலுங்கா ணுன்மாயம்
கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரே
இராமனாய்த் தோன்றி இராவணசங் காரமது
சிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்துப் 1260
போரில்நீர் நின்று பெருதுகின்ற வேளையிலே
மேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்து
ஆகாயத் தேகி அந்தரங்க மேகமதில் தூள்மூடக் கண்டு தேவர் மீகப்பதறி
வேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில்
போரிலும்நீர் நின்றுப் பொருது சரம்விளைக்க
வாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரே
ஆய்ப்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடிச்
சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்கப்
பேயையெல்லா மோட்டி பெரும்பூத மாயிருந்து
ஆயர்கள் பார்த்திருக்க அங்குபூ சாரியுமாய்த்
தின்றாயே யத்தினையும் சிலபூத மாயிருந்து
தொட்டிலா யர்மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்து
மட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்து
விளையாடி நீயும் வேறா ரறியாமல்
குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டி லேகிடந்து
சிறுகுழவி போலே சீறி மிகஅழுவாய்ப்
பருவதங்க ளுமெடுப்பாய்ப் பாலன்போ லேகிடப்பாய்
உன்சூட்ச வேலை உரைக்க எளிதாமோ
தன்சூட்ச மெல்லாம் தானுரைக்கக் கூடாது 1280
பலவேசங் கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய்க்
குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோ
ஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமே
பாரோ டுதித்துவந்த பாவையொடு செல்லாது
என்றுமண்டைக் காட்டாள் இசைந்தமொழி தான்கேட்டு
நன்றுநன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை
மண்டைக்காட்டம்மை திருக்கலியாணம்
பெண்ணேயுன் றன்பேரில் பேராசை ரெம்பவுண்டு
கண்ணே யுனையிப்போ கலியாணஞ் செய்வதற்கு
வேளையி தாகும் மெல்லியரே யென்றுரைக்க
மானதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறித்
தலையி லெழுத்தெனவே சத்தமுரை யாடாமல்
சிலைநுதலிக் கன்னி சொல்லுரையா தேயிருந்தாள்
இருந்த நினைவை ஏகமூர்த்தி யறிந்து
பொருந்து மதியானப் பிரமாதி வேசமதாய்
வேச மெடுத்து மேளத் தொனியுடனே
வாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க
தேச நருளறியத் தெய்வமட வாரறிய
மாய பரனும் மகாபெரிய நூல்முறையாய்
வாசக் குழலாளை மாலையிட்டா ரம்மானை
மாலையிட்டு நாதன் வாய்த்தசடங் குங்கழித்துச் 1300
சாலையத் துள்ளேகித் தானிருந்தா ரம்மானை
வள்ளி திருக்கல்யாணம்
மணமுகித்து நல்ல மணவறையக லுமிருந்து
துணைபெரிய மாயன் சுருதி முறைப்படியே
ஆகமத் திகனை அலங்கிருத மாய்ப்புரிந்து
நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே
கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்று
சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து
கேட்டு வரையாள் கோதைவள்ளி நாயகியைக்
கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து
எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை
மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே
வேலையிட்ட மான வேண்டுஞ் சடங்குசெய்து
நாளிட்டு வந்து நாளேழு மேகழித்து
வாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்து
மாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானை
தாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம்
பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம்
கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார்
வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில் 1320
ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம்
பாலராண் பெண்ணும் பாவையர்கள் பெற்றுமிகக்
கோலமுடன் வாழ்ந்திருந்தார் கூண்டரிய செல்வமோடு
பாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல்
நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார்
நாரா யணர்க்கு நல்லமுது தான்படைத்து
காரணரு மமுது கலந்துமிக வுண்டிருந்தார் 1327

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை




கூடி யிருந்து குலாவி மிகவாழ
நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய்
வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள்
சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள்
இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில்
திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல்
காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து
வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில்
பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள்
விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே
நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ
நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது
அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி
இப்போ நமக்கு எழுத்தின் படியாலே
நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல்
கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே
தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன்
மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே
எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை
சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே 20
மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும்
தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில்
நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமöன்று
அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க
விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில்
சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார்
நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய்
ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில்
பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே
கற்றைக் குழலார் கனமான தேவியரை
ஏக மறிய இசைந்த மணம்புரிந்து
வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங் கோலமதைத்
தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி
நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை
இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச்
சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து
நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று
ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள்
ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே 40
இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து
இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம்
என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து
கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும்
மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து
தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை
அய்யா இணத்தாங்கல்களுக்கு எழுந்தருளல்
கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப்
பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே
பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து
மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே
உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த
மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு
நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை
தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு
என்றுரைக்க நாதன் இசைந்தகுலச் சான்றோர்கள்
நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே
எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத்
தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி
மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா
பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும் 60
ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே
பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத்
தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று
முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப்
பந்தலிட்டுப் நல்ல பரிமேற் கட்டிகட்டி
சந்த முடனே தலைவாழையும் நிறுத்தி
அம்மைமா ரவர்க்கு அரங்கு மிகவகுத்துச்
செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டுக்
கட்டிமேற் கட்டியெனக் கனிபல துங்கொணர்ந்து
வெட்டி யிராமிச்சி மிகுத்தபன்னீர் சந்தனமும்
வாடைக் கமகமென மலர்பிச்சித் தார்தூக்கி
மேடை யலங்கரித்து விதானம்ச பலதணிந்து
அய்யாவுக் கமுது ஆனக் கனிவகையும்
மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும்
கூடவந தநருட்குக் கோப்புபல சேகரித்து
வாட விடாமல் வல்லபல தீனதுவும்
மேளத் தொனியும் வெடிவாணக் கோப்புடனே
காளடம் மானம் கடிய சிறப்புடனே
அய்யானை நன்றாய் ஆனபரி மேலேற்றி
வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில்வைத்து 80
ஆடல்பா டலுடனே அரம்பைக் குரவையுடன்
நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே
சான்றோ ரவர்கள் தாங்கூட்டி தங்களுட
மீண்டேவார் மனையில் விருந்து மிகக்கொடுத்து
நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும்வைத்துக்
காரணர்க்கு நல்ல கனத்தபட்டு கள்கொடுத்து
அம்மைமா ரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும்
செம்மை யுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே
விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய்த்
திருந்து மவர்பதிக்குத் திரும்பக்கொண் டேவிடுவார்
இப்படியே மாயவரும் ஏற்றசான் றோர்களுட
மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும்
விருந்து மருந்தி வேதா கமம்போலே
பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து
பூமடந்தையம்மை திருக்கல்யாணம்
இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை
நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று
கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு
நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும்
ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து
பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார் 100
பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து
விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச்
சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல்
வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி
நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய்
தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து
பொன்னான பெண்களுக்குப் பொசிப்பும்பல வஸ்துக்களும்
கண்ணான மாயன் கையார வேகொடுத்து
நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக
இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே
எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப்
பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும்
நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத்
தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து
வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள்
இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே
மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து
அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும்
விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று
மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை 120
உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை
மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம்
கொண்ட அடிமை குலச்சாதி யானோரை
அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச்
சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள்
காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று
பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே
சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம்
உற்று மனதில் உபாய மதுவாக
வத்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து
பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும்
தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை
அய்யா வைகுண்டம் எழுந்தருளல்
இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம்
ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண
வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று
இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார்
ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை
வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர்
தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம்
கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார் 140
மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு
தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது
என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில்
தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே
தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண
நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன்
பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால்
வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம்
என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல்
விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர்
என்றைக்கும் ஆள்வா ரென்று இருந்தன ரவர்க ளெல்லாம்
குண்டத்தை மனதி லெண்ணிக் குருவையும் நாட்ட மானார்
குருவே யெனக்கு ரருளிக் குறித்த ஆண்டு இதுவரைக்கும்
ஒருசொல் மொழியே குறையாமல் உகத்துத் தீர்ப்புக் கூறிக்கலி
கருக யாம மிகவுரைத்துக் கைக்குள் ளெடுத்தென் மக்களையும்
வருகக் குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர்
ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு
சோதியே யென்றன் சொந்தத் திருவுளமே
இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று
அந்நா ளுரைத்த அப்புநா ராயணரே 160
இனியா னுமது இலங்கும் பதியில்வர
முனியா னவற்கு முற்ற விடையருளும்
ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்கு தையாவே
வேண்டா முலகம் மேலுலக மேயழையும்
அங்கழையு மையா ஆதிமுனி யென்றனையும்
தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால்
என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே
மன்று தனையாளும் மாயத் திருமாலும்
வரங்கொடுத்த நாளும் வைத்தலக் கும்பார்த்துப்
பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த
வேணுமென் றீசுரரும் வேதத் திருமாலும்
கண்ணு மகனைக் கடிய விமானமதில்
ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ் சூழ்ந்துவரச்
சாத்திரியோர் ஞான சற்குருவைத் தானனுப்பி
வைகுண்ட வீட்டை வானோ ரலங்கரிக்க
மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுகில்
வானோர்க ளெல்லாம் வைகுண்ட வீடதையும்
தானமுட னெல்லாம் சணமே யலங்கரித்தார்
சற்குரு வான சடாமுனி யிங்குவந்து
மெய்க்குரு வான வீர விசயனுக்குச் 180
நல்லதூ னென்று நவின்றவரை யும்புகழ்ந்து
செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென
மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து
தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து
நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து
செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி
மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக்
காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி
கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து
நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து
நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து
உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று
சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து
இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப்
பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய்
இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத்
திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து
ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில் 200
சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில்
வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக்
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை
வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு
வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ
விமான மதிலேறி மேலோக மீதில்வரத்
தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர
மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத்
தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட
மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார்
வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும்
நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி
எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே
சிந்த ரெவரு மிகப்போற்றத் திருமால் மகனைக்கண் டாவினரே
கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப்
பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த 220
நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம்
இன்றே யெழுந் திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே
ஆவி மகனை அன்போ டுறவணைத்துத்
தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து
மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத்
தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும்
அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி
இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும்
சந்தோ சமாக சங்கரருந் தான்மகிழ்ந்து
வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை
நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும்
தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம்
சரசு பதிமாதும் தாயீசொரி யாளும்
பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார்
கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும்
அகிலமது அறிய ஆனார்வை குண்டமென
எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன்
முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக
ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல்
ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான் 240
பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில்
திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ
கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில்
தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ
கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில்
சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர்
பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக்
குதறி மலைந்து கொடுவான மாமுகடும்
கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து
முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி
அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத்
தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில்
முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய்
அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை
செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப்
பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து
சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில்
மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும்
சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும்
இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால் 260
சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார்
பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும்
அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக்
மன்றாடுங் கயிலை வானவரும் போற்றிநிற்கப்
சான்றோர் கோவில் அமைத்தல்
பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள்
சாமியுட தேவி சுற்றமட மாதர்களும்
அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி
வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க
வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா
என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி
முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா
நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று
மாதத் திருநாளும் வாரமற வாதபடி
நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே
கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச்
சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க
நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும்
சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே
துயரமதாய் வாடி சிவனே செயலெனவே 280
இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல்
நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று
அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார்
இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும்
முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க
அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும்
மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக்
கூண்ட மணியே கோகுலமே கற்பகமே
ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே
என்றன் மணியே என்னாத ஓவியமே
உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில்
இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி
வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத்
களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத்
தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும்
இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப்
பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய
மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து
ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார்
அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் 300
பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து
வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக்
கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள்
தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே
நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும்
புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு
மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக்
கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை
தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய
ஆடிக் களித்து யாம மிகக்கூறி
நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக
வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன்
ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும்
கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன்
அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால்
இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ
என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும்
அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும்
இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் 320
ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல்
தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால்
பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே
எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே
தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி
என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும்
நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு
கலைமுனி, ஞானமுனி சாட்சியம்
கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான
விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி
ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும்
அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ
எறும்புகடை யானைமுதல் பேதா பேதம்
எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக
உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால்
உலகமதி லாருளதோ வுடைய மாலே
செறும்பொருளா முமதுமக னங்கே வந்து
செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும்
தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும்
தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார்
தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி
தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன்
உப்பரிகை மீதிருந்து அரசே யாள
உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை
மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும்
மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம்
நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால்
நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம்
நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே
நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால் 340
காங்கரிது எங்களுட கருணை நாதா
கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம்
ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும்
ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப்
பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும்
பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார்.
நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும்
நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு
இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து)
ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக்
கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும்
கூட்டிக்கொண்டு வாவெனவே கூற வானோர்
டுண்டுபல மேளமொடு தாளத் தோடு
உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார்
சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச்
சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த
தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித்
தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர்
கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக்
குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற
மன்றலணி மாயவரு மீசர் தானும்
வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே
வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை
வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று
இளங்குருமா னானகுரு வைந்த ராசர்
இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப்
பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப்
பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று
வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று
மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே
வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள
மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப்
பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன்
பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும்
தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து
துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து
மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற
மறையவரு மீசுரரும் வரமே யீந்தார்
அய்யா சான்றோர்க்கு இரங்கல்
ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார் 360
கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச்
சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே
ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம்
ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன்
நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும்
வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து
தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார்
ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம்
வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ
மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா
செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய்
திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி
கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக்
குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு
மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார்
கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே
வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம்
மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம்
பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய்
கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில் 380
வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும்
பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும்
ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார்
இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே
உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும்
கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும்
மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம்
உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய்
முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல்
கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க
அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே
ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த
ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள்
சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி
வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே
ஆணை மகனே அசையாதே கண்மணியே
சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத்
தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய்
வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம்
அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் 400
குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே
மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும்
பொய் வேசம்
பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி
மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே
உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே
பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன்
ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை
அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய்
முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில்
தவம்போ லிருந்து தானாளு குண்டமதில்
ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல்
நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ
அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன்
மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி
நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே
வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே
என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய்
குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப
வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை
நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் 420
முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான்
செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான்
கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான்
பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான்
தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான்
மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான்
கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான்
மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான்
இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள்
செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க
சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம்
தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே
முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய்
நல்லவை முழித்தல்
சிவனு முமையாளும் செய்யத் திருமாலும்
தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே
தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக்
கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும் 440
வானமது குழவி மண்பூமி யம்மியெனத்
தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும்
உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும்
அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும்
மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும்
தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே
வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி
மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர
முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும்
பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து
ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க
வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி
நல்ல மகனே நாடுந் தவத்தோனே
செல்ல மகனே திருபெற்ற கண்மணியே
உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும்
சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும்
ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும்
பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும்
யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே
நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே 460
நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே
மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர்
முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே
களித்தே யிருந்த கருத்தின் படியாலே
பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும்
அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும்
புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு
குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும்
பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும்
அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார்
எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி
வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார்
தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும்
நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார்
நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால்
வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச்
சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும்
நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும்
விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும்
வாருமெனச்ö சான்ன வகையெல்லா மேமுழித்தார் 480
ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து
சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால்
ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி
வாகா யரித்து வன்னரகில் தள்ளிமிகச்
சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று
கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார்
விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக்
கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக்
கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு
முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக்
நடுத்தீர்ப்பு
குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச்
சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள்
ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை
வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே
இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து
மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத்
தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப்
புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக்
காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி
ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும் 500
ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே
இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய்
கடடியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே
அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து
பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம்
நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத்
தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ
வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ
அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு
எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர்
பண்டார மென்று பாரறிய வந்தவரை
அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று
ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால்
கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம்
சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து
ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும்
தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம்
முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே
பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி
அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன 520
சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே
கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன
பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில்
ஆவி யறிய அனுப்போலும் நன்மையது
செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ
மைதரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும்
எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச்
சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி
உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று
படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து
சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே
நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன்
நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய
வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற
சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ
எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப்
பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து
மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும்
உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும்
மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே 540
தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத்
தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே
ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால்
வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே
பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள்
மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே
ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே
நாடதிக மான நல்லபட்டு நீராளம்
தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே
மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப்
பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும்
மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம்
அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப்
பொன்னப்ப நாரணரே பெற்றவரே
வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச்
சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும்
பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள்
ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப்
போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி
ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத் 560
தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை
நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே
என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து
பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே
பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து
ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே
ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே
பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே
விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே
சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே
குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே
சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே
தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே
ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே
மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே
தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே
ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே
வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே
துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே
பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே 580
மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே
வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே
ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே
வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே
சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல்
இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில்
சத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே
உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது
என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ
உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால்
தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி
உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி
ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே
கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே
பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத்
திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய
உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து
மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன் 600
எட்போலே தர்மம் ஈத லிரக்கமுடன்
நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி
ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக்
கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச்
சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து
அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால்
இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில்
அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய
மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு
முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும்
தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப்
பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில்
அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும்
பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன்
சிறந்த மதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர்
ஆண்டிருக் கும்போது ஆங்காரந் தான்மீறித்
தாண்டி பதமறந்து தானவரை யும்பிடித்துத்
தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு
மெய்வரம்பு விட்டு மேலோகத் தாரையெல்லாம்
ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி 620
நாளி லவரை நட்டிமிக அட்டிசெய்து
வம்புசெய்து நீயும் வானலோ கம்வரையும்
அம்புவி யெங்கும் உன்னநியாய மேமீறி
ஈரே ழுலகும் இராமா ராமாவெனவே
பாரேழு தேசம் பண்பாய் முறையமிட
முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து
இறையவரும் நம்மிடத்தில் இந்தஅநி யாயமதை
மாற்றிவைக்க வென்று மலரோ னெனையனுப்பப்
பார்த்துன்னை நானும் பழையவர முந்தேர்ந்து
ஆயுதத்தா லம்பால் அஞ்சு முகத்தாலும்
மாயும் படியே வகையில்லை யென்றுசொல்லி
ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை
வீறுடனே நல்ல வேலாயுத மெனவே
எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி
விடுத்தே யுரைக்க மிகுதூத னையனுப்பிச்
சொல்லியுங் கேளாமல் சூரப் படைகூட்டிக்
கொல்லுவே னென்று கூண்டப் படையோடு
சண்டைக்கு நீயும் சமைந்துவந்தா யென்னோடு
கண்டே யுனைநான் கருணைபோல் புத்திசொன்னேன்
தேவர்களை விட்டு தெய்வமட வாரைவிட்டு 640
மூவர்களை நெஞ்சில்வைத்து உகமாளு என்றேனே
அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே
இப்போது பேயாண்டி யார்கேட்பா ருன்பேச்சை
பிச்சைக்காரா வுன்சொல் பேருலக மாளுகின்ற
செஞ்செல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய்
என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால்
உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே
சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய்
விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து
அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை
முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும்
சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக்
கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக்
கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன்
சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள்
புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல்
என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து
அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன்
அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய்
துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய் 660
அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி
மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில்
ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க
மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய்
மகவா யுனக்கு மாய வுருவெடுத்து
உகமே ழறிய உதித்து வளருகையில்
பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே
தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும்
உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும்
தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ
படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால்
சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார்
ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது
மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட
ஏற்ற பேரான இரணிய நமாவெனவே
சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன்
வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே
பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே
இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி
உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச் 680
சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய்
வல்லப் பொருளான மாய அரியோனும்
எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி
அங்கெங் குமாகி அளவுக் களவாகி
நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப்
பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே
கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான்
தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக்
கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே
வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும்
தூண்பேரில் வெட்டச் சிங்கமாய் நான்குதித்து
வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே
இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால்
குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே
உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று
செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது
உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது
முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச்
சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் 700
கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது
ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி
மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு
பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு
எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும்
கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும்
புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும்
மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே
கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி
உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால்
கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான்
என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து
அன்றே கிறதா யுகமு மழித்துமிகப்
பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும்
மன்ன னிராவணனாய் பாவிநீ ராவணனாய்
மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும்
சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து
வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே
ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை
மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக் 720
கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே
மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி
வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே
கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும்
நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை
ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப்
பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே
கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு
மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால்
பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச் 
சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச்
சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப்
பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே
மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும்
அல்லாதே போனால் அலக்கழி வாகுமென
எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே
பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன்
காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு
அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம்
இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம் 740
ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா
போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே
என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி
அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய்
அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய
செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே
சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும்
மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே
நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும்
கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள்
முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால்
அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற
பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே
தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு
என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள்
அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி
என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால்
உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும்
அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ 760
மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ
என்றாயே நீயும் இருவரையு மப்போது
அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க
அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை
நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி
அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத்
தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து
உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று
என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை
விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல்
படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு
அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும்
நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன்
பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து
எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான்
நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப்
பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே
பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே
தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து
என்கை யினாலே எடுத்து வொருபாணம்
சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும் 780
உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு
முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு
அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய்
இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன்
உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச்
சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது
ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய்
மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு
சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று
மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன்
உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு
சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ
கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை
இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய்
துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப்
பவரா யுனக்குப் பக்கத் துணையாக
ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி
இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து
இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென
அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து 800
உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து
என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து
உற்ற திரேதா யுகமழித் துன்றனையும்
சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன்
பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட
அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார்
அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே
முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப்
பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து
தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன்
சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே
பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன்
அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல்
இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது
ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய்
மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ
தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று
சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே
உன்னால் குதித்து உற்ற கலியனென
இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் 820
பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து
போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக்
கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி
வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே
கலி முடிவு
முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும்
மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும்
எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப்
பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம்
மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல்
ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே
எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து
பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும்
தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும்
அந்திர மதான அன்னீத வஞ்சனையும்
மாய்கை பலதும் வளக்கோர வாரமதும்
சாய்கை பலதும் சர்வபொல்லாப் பானதெல்லாம்
என்னோடு கூட யானு மதுகூட
வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே
வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும்
பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக 840
ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித்
தீயிரத்த மான தீரா தருநரகில்
சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை
இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று
மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப்
பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக
முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம்
தாக்கி யிருக்கத் தடதடெனச் சேடனது
நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை
பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின்
தர்ம யுகம்
உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே
வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே
எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக
கற்பு நெறியானக் கடிய பலவகையும்
நல்லோர்க ளான நாடு மனுவோரும்
நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும்
கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில்
நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம்
தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல்
நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் 860
எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து
நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி
வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி
மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால்
வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச்
செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ
தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி
நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும்
பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும்
கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும்
நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும்
சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும்
தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும்
கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல்
தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம்
முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும்
களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி
நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச்
செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய்
கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல் 880
நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து
தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும்
பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து
தத்தியா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து
வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும்
தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே
ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து
வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே
எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய்
நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம்
ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும்
காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார்
பட்சி பறவை பலசீவ செந்துகட்கும்
அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல்
பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல்
ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து
வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம்
சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார்
நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும் 900
அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று
தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு
புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று
நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார்
அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே
பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல்
நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார்
வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத்
தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார்
வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே
வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை
நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று
சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு
மானுவ தர்ம வரம்பு தவறாமல்
நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார்
பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து
சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து
மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார்
குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள்
கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் 920
சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக
வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து
என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப்
பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று
நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார்
வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து
நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு
வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச்
செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே
வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு
மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு
நாதக் குருவான நாரா யணமணிக்கு
சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை
கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து
மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து
பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும்
தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும்
நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து
மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும்
ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் 940
இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச்
செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே
சரசு பதிமாது தண்டரள சுந்தரியும்
விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும்
வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும்
ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும்
வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே
தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும்
இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள்
முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும்
சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி
இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார்
போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார்
சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள்
பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால்
ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக் கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன்
பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக்
கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன்
கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து
என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப் 960
பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும்
சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில்
வருவே னதுமட்டும் வடவா முகமதிலே
குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள்
இப்போ தவட்கு இங்குவர ஞாயமுண்டு
நற்போடு வொத்த நல்லபர காளியைத்தான்
அழைக்கிறே னென்று ஆதி நினைக்கலுற்றார்
பிழைக்கிறே னென்று பெரியகுல மாகாளி
உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்துத்
திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது
பாலரெல்லா முன்றன் பாதமது சேர்ந்தாரென்று
மாலவரே யென்றன் மனது மகிழ்ந்துதையா
நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து
காரணம தாகக் களிகூர்ந் தினிதாக
வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும்
கைகண்ட நல்ல கலியாண முமுகித்து
மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி
அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப்
பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப்  980
பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு
நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு
ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன்
கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப்
பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து
கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய்
தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும்
மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே
எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன்
நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள்
தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள்
மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க
போவோ மெனவே பெரியவை குண்டரையும்
கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி
தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத்
தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர
மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக் 1000
கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக்
கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர
வாரி சங்கூத வாயு மலர்தூவ
நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ
இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி
சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும்
கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து
லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு
நேராக வந்து நெடியோன் பதிதவிலே
சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி
அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும்
சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும்
மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும்
குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற
வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே
சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச்
சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம்
யாம முறையாய் அங்கே குதித்திடுமாம்
என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம்
பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் 1020
நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல்
குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார்
பட்டாபிஷேகம்
இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி
முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில்
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும்
ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில்
மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல்
விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே
சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி
பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில்
ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே
ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி
வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில்
ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே
அய்யா அருள்வாக்கு
ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம
சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி
நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள
சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார்
மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று
முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் 1040
கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம்
பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர்
வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி
நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது
நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து
ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம்
உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால்
தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர்
என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன்
பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே
ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித்
தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று
வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து
பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர்
மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள
தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு 1060
ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல்
நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக
வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார்
மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல்
பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு
ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு
பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார்
தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும்
மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும்
எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு
வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும்
செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து
மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும்
சிங்கார மாகத் தேன்போல் மரைவீச
சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக்
கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக்
கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே 1080
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்
சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள்
கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி
ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே
சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்
ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம்
பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ
கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து
வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார்
தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும்
பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர்
நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ
வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார்
ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம்
கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும்
தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம்
மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் 1100
பருதியு மதியெனப் பவந்து சேவனர்
கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர்
அருதியு மலர்மகள் அணிந்து பூவினர்
கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்
பொன்முக வருளது பொதுமி யாவியே
அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு
இன்முக மதிலு மிருந்து லாவியே
பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர்
முதமுக வானவர் மூன்றென வொன்றினர்
சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர்
உதவென மனமு முவந்து லாவியே
நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர்
சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ
நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ
வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ
காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ
பூமாது வானபக வதியும் வாழ
பொன்மாது சரசுபதி புரிந்து வாழ
நாமாது வானபூ மடந்தை வாழ
நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ
போர்மாது வானமா காளி வாழ
பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ
சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ
சிவவைந்த ராசருமே சிறந்து வாழ  1120
மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி
மாயனுட முகம்நோக்கி மாது தானும்
தீதகலும் நாயகமே சிறந்த மாலே
தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று
நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்
நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர்
ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும்
இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும்
பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப்
பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே
இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும்
எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும்
நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம்
ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர்
பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும்
பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே
போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின்
பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன்
சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று
தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக்
கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக்
கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும்
வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட
மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ
மாதேநீ கேளுயீ ரேளு பூமி
மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள்
சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச்
செகவீர சாலமத னேக முண்டு
பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும்
பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர்
வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து
மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்
இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே
எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம்
மனுவோரு முனிவோரும் வான லோக
மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார்
இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே
இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து
பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம்
பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன் 1140
மாயனுரை மனமதிலே மாது கேட்டு
மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள்
தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத்
திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே
நாயநெறி காணாத அடிமை போல
நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி
ஆயருமை நாயடியா ளின்று கண்டேன்
அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே
இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே
என்றாதி யிருகையால் மாதை யாவிப்
புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப்
பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ
மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ
மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ
உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ
உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ
மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை
வையகத்து மனுவோர்க ளறிய மாயன்
தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித்
தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன்
நாதனருள் மறவாத இராம கிருஷ்ண
நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த
சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச்
செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே
வாறான கதைவகுத்த நாதன் வாழ
வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ
வீறான தெய்வசத்தி மடவார் வாழ
வீரமுக லட்சமியும் விரைந்து வாழ
நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர்
நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர்
ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து
அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம்
திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத்
திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர்
எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான
இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று
வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக
நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம்
நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம் 1160
அய்யா உண்டு