திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தரணியில் உள்ளோர்க்குக் 
கர்மமது தீரக் கணக்கு எடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் எழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச் சேவிப்பதுவும்
தொண்டராகச் சான்றோர் சூழ்ந்துநின்ற ஆறதுவும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
---------
உரை
---------
இப்பூவுலகில் உள்ளோரின் முன் வினைக் கருமங்கள் தீரத் தரும வைத்தியமாக அவர்களின் முன்வினைப் பாவக் கணக்குகளை எடுத்துப் பார்த்ததுவும்; ஏகாபுரிக் கணக்கும்; ஏழு யுகங்களின் கணக்கும்; காளி வளர்த்த சான்றோர் மக்கள் வைகுண்டர் பாதத்தைக் கண்டு தொழுததுவும்; அவர்கள் கைகளைக் கட்டிக்க கொண்டு பணிவிடை செய்ததுவும்; அப்பணிவிடைகளை இறைத்தொண்டராக வைகுண்டரைச் சூழ்ந்து நின்று செய்த முறைகளையும்; திருமாலும் ஏழு கன்னிகளும் சேர்ந்து பெற்ற சான்றோர்கள் வைகுண்டரைப் போற்றிக் கொண்டாடிச் சுத்தமான பதத்தில் குழித்துத் தங்களுடைய ஆடைகளைத் துவைத்ததுவும்; ....


சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக்கு இனிது இருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியே 
பாரேழும் அளந்த பரமேசுவரி தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகர் ஒவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயாய் உதிக்கச் செடம் எடுத்தது போலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து ஆறு மேல் பெரிய தவம்புரிந்து
சிறந்து குழலான் சீதை சிறையதுபோல்
---------
உரை
---------
சரசுவதிதேவியே, குளிர்ச்சி பொருந்திய மணி போன்றவளே, இந்நாட்டை அரசு புரிய என்னை இருத்தும் பெரியவளே, அம்பிகையே, பதினான்கு உலகங்களையும் காக்கின்ற உத்தமதேவியே, இவ்வேழு உலகங்களையும் அளந்து அறிந்த பரமேசுவரி தாயே, நான் இந்நூலை எழுத அருள் புரிவீராக.
பத்துத் தலைகளையுடைய பாவியாகிய இராவணனை வெற்றி கொள்வதற்காகவும், ஒருவருக்கும் நிகரில்லாத தசரத மன்னனுக்குக் குழந்தையாய் உதிப்பதற்காகவும் மாயன் உருவெடுத்தார். அது போல, மாலதி சூட்சம மாயன் ""இக்கலியுகத்தில் பிறந்து ஆறு வருடங்கள் அரிய பல தவங்கள் செய்ததுவும், சிறந்த கூந்தலை யுடைய சீதை சிறையில் அனுபவித்த துன்பத்தைப் போன்று, தாம் எடுத்த மனித அவதாரம் மூலம் பல துன்பங்களை அனுபவித்ததுவும்; பல வகையான மாய சூட்சுமத் தன்மையுள்ள அற்புதங்கள் செய்ததுவும், மருந்தானது தண்ணீர் திருமண் கொடுத்து வைத்தியங்கள் செய்து நோய் தீர்த்ததுவும்;
---------------------


வம்பால் அநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்காக இரக்கமதாய்
அருகரத்தோன் வாழும் ஆழிக்கரை ஆண்டி 
நறுகரத்தோன் ஆன நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாளும் உலகம் ஏழும் தழைக்கத்
திருவெடுத்து கோலம் சிவனார் அருள்புரிய
ஈசன் அருள்புரிய இறையோன் அருள்புரிய
மாயன் அருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புலிமாது போர்மாது
நாமாது இலட்சுமியும் நன்றாய் அருள்புரிய
---------
உரை
---------
அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில் உள்ள வம்புகளையும், அநியாயங்களையும் மாதேவராகிய நாராயணர் அழியச் செய்வதையும்;
இவ்வுலகில் உயர்வு பொருந்திய கரங்களையுடைய முருகன் வாழும் திருச்செந்தூர்க் கடற்கரையில் வாழ்ந்த கடற்கரை ஆண்டியாகிய ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, சான்றோர் குலத்தில் மனிதனாய் உருவெடுத்து, எப்போதும் இவ்வுலகம் ஏழும் தழைத்து நிற்க உருவான வைகுண்ட அவதாரத்தைப் பற்றியும்;
நான் இந்த நூலில் எழுத எல்லாம் வல்ல சிவனும், மாயனும், நாவில் வாழும் சரசுவதிதேவியும், இலட்சுமிதேவியும், பூமாதேவியும் நல்ல முறையில் அருள் புரிவார்களாக.
---------------------


தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக்
கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம்
பறந்திடும் நிசமே சொன்னோம்.
மூலம்: முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி ஈரஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏதும் வராது தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்ததே பணியும் தீசாதியான துரியோதனன் முதலாய் அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து எவ்வுகமும் காணாது ஏகக்குண்டம் ஏகிப் பொல்லாத நீசன் பொருள் அறியா மாபாவி கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்....
பொருள்: முன்பு குறோணிமுதல் சூரன்வரை உள்ளவர்களின்
உடல்களை அழித்து, பின்பு இரணியனுடைய
உடலை இரண்டாகப் பிளந்து, இரு கூறுகளாக்கி,
பத்துத் தலைகளையுடைய இராவணனையும்
எதிர்த்து வெற்றி கொண்டு, வீரம் காட்டிய மூர்க்கரின்
எதிர்ப்புகளை எல்லாம் அழித்து, எல்லாத் தேசத்தில்
உள்ளவர்களும் தலை கவிழ்ந்து, பணிந்து,
கீழ்ப்படியும்வண்ணம் வாழ்ந்த தீய சாதியைச்
சார்ந்த துரியோதனன் முதலாக அந்த யுகத்தில்
உள்ள தீயோர் எல்லாரையும் வதைத்து
, எந்த யுகத்தில் உள்ளவர்களும் காண முடியாத
வைகுண்டம் சென்றதையும். பொல்லாத தன்மை
வாய்ந்த நீசனும், மெய்ப்பொருளை அறியாத மாபாவியும்,
கல்லாத குறுகிய தன்மை உள்ளவனும் ஆகிய
அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில்... -------------------------- அய்யா உண்டு --------------------------


முன்னாள் குறோணி முற்சூரன் உடல் துணித்து
பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரையும் செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் இடைதவிர்த்து ஏதும் வராது
தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்ததே பணியும்
தீசாதியான துரியோதனன் முதலாய்
அவ்வுகத்தில் உள்ள அல்லோரையும் வதைத்து
எவ்வுகமும் காணாது ஏகக்குண்டம் ஏகிப்
பொல்லாத நீசன் பொருள் அறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில்....
பொருள்:
முன்பு குறோணிமுதல் சூரன்வரை உள்ளவர்களின் 
உடல்களை அழித்து, பின்பு இரணியனுடைய உடலை
 இரண்டாகப் பிளந்து, இரு கூறுகளாக்கி, பத்துத் 
தலைகளையுடைய இராவணனையும் எதிர்த்து வெற்றி
 கொண்டு, வீரம் காட்டிய மூர்க்கரின் எதிர்ப்புகளை எல்லாம் 
அழித்து, எல்லாத் தேசத்தில் உள்ளவர்களும் தலை கவிழ்ந்து
, பணிந்து, கீழ்ப்படியும்வண்ணம் வாழ்ந்த தீய சாதியைச் சார்ந்த
 துரியோதனன் முதலாக அந்த யுகத்தில் உள்ள தீயோர்
 எல்லாரையும் வதைத்து, எந்த யுகத்தில் உள்ளவர்களும்
 காண முடியாத வைகுண்டம் சென்றதையும். பொல்லாத
 தன்மை வாய்ந்த நீசனும், மெய்ப்பொருளை அறியாத 
மாபாவியும், கல்லாத குறுகிய தன்மை உள்ளவனும் 
ஆகிய அக்கலியன் வாழும் கபடமான கலியுகத்தில்...
---------------------
அய்யா உண்டு 





அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

அவையடக்கம்**********
அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே
மெய்யாய் எழுதி விரிப்பேன் நான் என்பதெல்லாம் 
ஆணை நடைகண்டு அன்றில் நடையது ஒக்கும்
சேனை சரிவது என்ன சிற்றெறும்பு பத்தி என்ன
குயில்கூவக் கண்டு கூகைக் குரல் ஆமோ
மயில் ஆடக் கண்டு வான்கோழி ஆடினது ஏன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசம் அறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யான் அடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்த பிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பது ஒக்கும்
---------
உரை
---------
அய்யா திருவாய் மலர்ந்தருள அவ்வுண்மைகளை நான் எழுதி அய்யாவின் பக்தர்களாகிய உங்கள் முன்னே விரித்துரைப்பேன் என்பது, யானையின் நடையைக் கண்ட அன்றில் பறவை யானையைப் போன்று நடக்க முயல்வதைப் போன்றது ஆகும். சேனையின் பெரிய கூட்டத்தைச் சிற்றெறும்புக் கூட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? குயிலின் இனிமையான குரலைக் கேட்ட கூகை அதைப் போன்று குரல் கொடுக்க முடியுமா? மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி அதைப்போல ஆட முயன்றது ஏன்?
இராணித்தேனீயின் ஆட்சியின் கீழ் உள்ள தேனீக்கள் சேர்த்த தேன் ரசத்தின் சுவையை அறிந்து, கடந்தைகள் தாமும் அச்சுவையுள்ள தேனைத் தயாரிக்க எண்ணித் தாடேற்றிக் கூடு கட்டிய சிரிப்பிற்குரிய கதையைப் போல, அய்யாவின் அடியேனாகிய நான், ""ஏழு யுகங்களும் நீதி நியாயங்களைக் கேட்டு நீதி பரிபாலனம் செய்ய வந்த வைகுண்ட பிரானாகிய அந்த உயர்வுடையோன் திருக்கதையை எழுதுவேன்"" என்று கூறுவது ஒக்கும்.
---------------------


தானும் தவம் அதுவாய்ச் சாயுச்சியமே புரிந்து
நல்லோரை எழுப்பி நாலு வரமும் கொடுத்து
பொல்லாரை நரகில் போட்டுக் கதைவடைத்து 
வானம் இடியால் மலைகள் இளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவும் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.
---------
உரை
---------
..... புலன் இறந்து (அகக்) கடலில் மறைந்து வாழ்ந்ததையும், சாயுச்சிய நிலையில் தவம் புரிந்து வெற்றி கண்டதையும்;
நல்லவர்களை ஆத்ம விழிப்புக் கொண்டு எழச் செய்து அவர்களுக்குப் பல வரங்களைக் கொடுத்து, தீயவர்களை நரகில் தள்ளிக் கதைவடைத்ததையும்; வானத்தில் உருவாகின்ற இடிகளால் மலைகள் இளகிடும் என்றும், காடு நாடாகி விடும் என்றும், இவற்றைக் காணுகின்ற நிலையில் சூரியன் தெற்கு வடக்காகத் திசைமாறி தன்னுடைய இயக்கத்தைப் பெற்று நிற்கும் என்றும், இவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து அய்யா வைகுண்டநாதன் உரைக்கின்றார். அன்பர்களே, நீவிர் கருத்துடன் கேட்பீராக.
--நூல் சுருக்கம் பகுதி இத்துடன் நிறைவு பெறுகிறது. இனி தொடர்வது அவையடக்கம்
---------------------


மேல் எதிரி இல்லாமல் வினை அறுத்து ஆண்டதுவும்
இந்நாள் விவரம் எல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே 
நாரணரும் வந்து நடத்தும் வளமைதனைக்
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக உள்வினைநோய் தீரும் என்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே
பேயை எரித்துப் புதுமை மிகச்செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்...
---------
உரை
---------
தமக்கு வேறு எதிரிகள் இல்லாது தீய நினைவு உடையவர்களை அழித்து அருள் புரிந்ததையும்; மேலும் இன்றைய நிகழ்ச்சிகளையும் வியாகர முனி முன்னரே தமது நூலில் உரைத்துள்ளார்.
அதற்கு ஏற்ப, நாராயணராகிய வைகுண்டரும் இப்பூவுலகில் வந்து நடத்துகின்ற நடப்புகளை மிகுந்த விருப்பமுடன் எழுதி, இந்நூலைக் கதை போன்று படிப்பவர்களுக்கு தீர்க்க முடியாத உள்வினை நோயாகிய "பிறவி நோய்" நிச்சயமாகத் தீர்ந்து விடும் என்று திருமால் இச்சிறந்த கதையைத் திருவாய் மலர்ந்து அருளுகின்றார். அன்பர்களே.
மேலும், பேய்களை எரித்துப் புதுமையான செயல்கள் செய்தவையும்; ஆயர் குலத்தில் அவதாரம் எடுத்து அக்குலத்தை ஆட்கொண்டதையும்;
சான்றோர் குலத்தைக் காத்துக் கொண்ட நிகழ்ச்சியையும்; ......
---------------------


கண்டு மாபாவி கலைத்து அடித்ததுவும்
சாணார் இனத்தில் சுவாமிவந்தார் என்றவரை
வீணாட்டமாக வீறு செய்த ஞாயமதும் 
மனிதனோ சுவாமி வம்பு என்றுதான் அடித்துத்
தனு அறியாய் பாவி தடிஇரும்பில் இட்டதவும்
அன்பு பார்த்து எடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை அழித்து யுகம் வைகுண்டம்தான் ஆகி
எல்லா இடும்பும் இரையும் மிகத்தவிர்த்து
சொல் ஒன்றால் நாதன் தொல்புவியை ஆண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும்...
---------
உரை
---------
.....இவற்றைக் கண்டா கலியன் அவர்கள் ஒற்றுமையாய்ச் சேராவண்ணம் விரட்டி அடித்ததையும்;
"சாணார் இனத்தில் சுவாமி வந்து உதித்தார்" என்று கூறியவரை எந்தவிதக் குற்றமுமின்றித் துன்புறுத்திய அநீதியையும்; "இந்த மனிதனா சுவாமி? இது வம்பாகும்" என்று அடித்து, வைகுண்டரின் பொன் உடலின் உண்மையை அறியாத நீசன், பலம் பொருந்திய இரும்புச் சங்கிலியால் அவரைக் கட்டியதையும்; அன்புள்ளம் கொண்டோரை அருள் பாலித்துத் தேர்ந்தெடுத்துத் தம்முடைய தொண்டரடிமையாகக் கொண்டதையும்; வம்பான முன் யுகங்களை அழித்து, கலியுகத்தில் வைகுண்டராக அவதரித்ததையும்; சான்றோரின் எல்லாத் துன்பங்களையும், வீணாகச் சான்றோர் கொடுக்கின்ற வரிகளையும், தவிர்க்கச் செய்தவையும்; தமது ஒரே சொல்லின் கீழ் வைகுண்டநாதன் இந்தப் பழமை பொருந்திய பூவுலகினை அரசாண்ட நிகழ்ச்சியையும்; ஏழு யுக மக்களுடைய நீதிக் கணக்கினை நியாயம் தீர்த்த முறையையும்; ........
---------------------
அய்யா உண்டு 
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

தெச்சணத்தின் பெருமை ***********
நாராயணரும் நல்ல திருச்செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளி கொண்டு அங்கிருந்து 
ஆண்டு ஆயிரத்து அ என்னும் இலக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரை ஊர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்து இருக்கும் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமை கேள் அம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்கும் தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீசுவரரும் அமர்ந்திருக்கும் தெச்சணமே ....
---------
உரை
---------
உலகத்தோர் ஆச்சரியப்படத்தக்க வகையில் திருச்செந்தூர்க் கடலில் பள்ளி கொண்டிருந்த நாராயணரும், 1008 ஆம் ஆண்டு, மாசி மாதம், நல்ல முகூர்த்த நாளில், சான்றோர்கள் வளர்ந்து வருகின்ற தாமரையூராகிய நல்ல பதியில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்றுபேரும் சோதி வடிவாக (தாணுமாலயனாக) உறைந்து இருக்கும் தெச்சணாபூமியில் வந்திருந்தார். அந்தத் தெச்சணாபூமியின் பெருமைகளை இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் உறைந்து இருப்பதும் இந்தத் தெச்சணாபூமி ஆகும். தேவர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதுவும் இப்பூமியாகும். வேதபி புரோகிதர்கள் புகழோடு விளங்கி இருந்ததுவும், நாதாந்த வேதத்தை நாடுபவர்கள் வாழ்ந்ததுவும். அகத்தியர் ஈசுரரின் கட்டளைப்படி அமர்ந்து இருந்ததுவும்.......
---------------------

**நூல் பயன்***********
வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா 
பழித்தோர் நகைத்தோர் பதில் எதிரியாய்ப் பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியும் இக்கதையை மகாவிருப்பத்தோடு இளகித்
தளம் அளந்தோனை நாடிதான் கேட்பாளாமாகில்
என் ஆணை பார்வதியாள் ஏகாபரத்தின் தன் ஆணை
உன் ஆணை மதலை உடனே கிடைக்குமடா
கூட்டமது கொண்டோர் குணம் வைத்துக் கேட்பாராகில்
திட்டமது சொன்னோம் தீரும் திரு ஆணை
---------
உரை
---------
இந்த அகிலத்திரட்டு அம்மானை நூலை வாசித்தும், (அல்லது) வாசிப்பதைக் கேட்டு மகிழ்ந்தும், அதில் திளைத்தும் இருக்கும் ஆன்மீக அன்பர்கள், எல்லோரும் விரும்புகின்ற சாகாநிலையை அடைவர்.
இந்நூலின் கருத்துக்களைப் பழித்தவர்களும், நகைத்தவர்களும், எதிர் மறையான பதில்களைக் கூறியவர்களும், இந்நூல் படிக்காத தகாது என்று ஒதுக்கியவர்களும் வறுமையுற்று நரக நிலையில் அமிழ்ந்து விடுவார்.
இக்கதையை அதிக விருப்பத்தோடு மனம் இளகி, நாராயணரை நாடிய வண்ணம் மலடியான ஒரு பெண் கேட்பாளானால் அவளுக்கு உடனடியாகக் குழந்தை உண்டாகும். என்மேல் ஆணை; பார்வதியாள்மேல் ஆணை; ஏகாபரனாகிய ஈசுவரன்மேல் ஆணை; உன்மேல் ஆணை.
குட்டநோயைக் கொண்டவர்களே, ஒரே நிலையான மனத்துடன் இக்கதையை கேட்பீரானால், உங்கள் குட்டநோய் குணம் அடையும்; இலட்சுமிமேல் ஆணையாக நிச்சயமாகக் கூறுகின்றோம்.
---------------------



சீதமுடன் எழுப்பிச் செப்பினாரே காரணத்தை
காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகைத்திறந்து
தாற்பரியமாகச் சாற்றினார் எம்பெருமாள் 
மகனே இவ்வாய் மொழியை வகுக்கும் காண்டம் அதுக்கு
உகமோர் அறிய ஊனு நீமுதல் காப்பாய்
அதன்மேல் நடப்பு உன்னுள்ளே அகமிருந்து
சரிசனமாய் நான் வகுப்பேன்தான் எழுது காண்டமதை
நான் உரைக்க நீ எழுதி நாடு பதினாலு அறிய
யான் உரைக்க நீ எழுதி காண்போர்கள் தங்கள் முன்னே
---------
உரை
---------
.....மெதுவாய் என்னை எழுப்பி தாம் வந்த காரணம் பற்றிக் கூறலானார்.
காப்புப் பகுதியில் ஏரணியில் எனும் ஒரு சீரை தெளிவாக வெளிப்படுத்தி விளக்கமாக உரைத்தார் "மகனே, எனது வாய்மொழியை தொகுக்கும் காண்டங்களுக்கு, பாதினான்கு உலகங்களும் அறியும்படியாக, காப்புப் பகுதியில் முதல் சீராக நீ எழுது அதன் பிறகு வருகின்ற காரியங்களை உன் மனம் புரியும்படியாக நான் உனக்குச் சரிசமமாக அமர்ந்திருந்து வகுத்துத் தருவேன். அதையும் நீ எழுது இவ்வாறு நான் உரைக்கின்றவற்றை நீ எழுதி, பதினான்கு உலகங்களும் அறிய அன்பர்களுக்குத் தெரியப்படுத்த" என்று அருளினார்.
---------------------


*வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்*****
தோத்திரம் என்று சுவாமிதமைத் தொழுது
இராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே 
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டனைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக் கியான இலக்கமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து.....
---------
உரை
---------
ஒரு நாள் இறைத்துதி செய்துவிட்டு, இரவுபொழுதில் இன்பமாக அறிதுயில் கொண்டிருந்தேன். அவ்வேளையில் , கொல்லம் 1016 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நாளில் ஞானம் வெளிப்படும் சிறந்த முகூர்த்தத்தில், வைகுண்டநாதன் என் அருகில் அமைதியாக வந்திருந்து....
---------------------



.தர்மயுகம் ஆக்கித் தாராணியை ஆளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்த கதை
சாகாது இருக்கும் தர்ம அன்புள்ளோர் முன் 
வாகாகத் தர்ம அம்மானைதான் வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பித்தவத்துக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே.
---------
உரை
---------
இக்கலியுகத்தை அழித்துத் தருமயுகமாக்கி, இப்பூவுலகை ஆட்சி புரிய கலியுகத்தில் வைகுண்டர் வந்த கதையைச் சாகாநிலை பெற்றிருக்கும் தரும சிந்தனையுள்ள அன்புள்ளோர் முன்னிலையில் வெளிப்படுத்த ஒழுங்கான முறையில் தரும ஞாயமுள்ள இந்த அம்மானையை நாராயணர் வகுத்தார்.
இதை வகுத்த நாராயணருக்கும், என் தாய், தந்தையருக்கும், இதைத் தொகுத்துக் கூறிய வைகுண்டராகிய என் குருவுக்கும், என் வணக்கங்கள்.


இறைதுதி****************
எம்பிரானான இறையோன் அருள் புரிய
தம்பிரான் சொல்லத் தமியோன் எழுதுகிறேன் 
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்
பழுது ஒன்றும் வாராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாய் வா இக்கதைக்கு
தோசம் அகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் கர்ம சஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வராமலே காரும்
காரும் அடியேன் கௌவை வினைதீர
வாரும் அடியேன் மனதில் குடிகொளவே.......
---------
உரை
---------
எம்பிரானாகிய இறையோன் அருள் புரிய தம்பிரானாகிய அய்யா திருவாய் மலர்ந்தருள அடியேன் இந்நூலை எழுதுவேன் என்பது முழுவதும் ஈசருடைய அருள் செயலே ஆகும். இந்த எழுத்துக்களில் எவ்வித குறையும் வராமல் பரமேசுவரி காப்பாளாக. ஈசனுடைய மகனே, முருகா இக்கதை இயல்புடன் அமைய துணை இருப்பீராக.
குண்டலனி சக்திக்கு குருவாக இருக்கின்ற கணபதியே கால மாற்றத்தை நிகழ்த்துகின்ற கிரகத்தின் தீய வினைகள் முன் வினையினால் உருவாகும் மனச் சஞ்சலங்கள் ஆகிய கடினமான வினைகள் என்னைச் சூழ்ந்து வராதவண்ணம் காத்தருள்வீராக. அடியேன் பணியில் பழிச்சொல் எழாத வகையில் காத்தருள என் உள்ளத்தில் குடி கொள்ள வருவீராக.....


அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

வாரணத்தின் மீதில்வரும் பவனி ஆரவமும்
மாவேறி வீதிவரும் பவனி வீதிகளும்
கூரையிலே முத்துக்குலை சாய்க்கும் கன்னல்களும் 
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் அளிப்பாரும்
அன்னமிடும் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ணம் அளித்துச் சொகுசு பெற நிற்பாரும்
சிவனே சிவனே என்று சிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிது எனவே தவநிலைகள் செய்வாரும்
கோவிந்தா என்று குருபூசை செய்வாரும்
நாவிந்தையாக நால்வேதம் பார்ப்பாரும்...
---------
உரை
---------
யானையின் மீது பவனி வருகின்றபோது எழுகின்ற ஆரவார ஒலியும், குதிரையின் மீது ஏறிப் பவனி வருகின்ற வீதிகளும், வீடுகளின் மேற்கூரையில் தாம் ஈன்ற முத்துக் குலைகளைத் தாங்க முடியாது சாய்த்துக் கொண்டிருக்கும் கரும்புகளும் அங்கு ஏராளம் உள்ளன.
வழிப் பாதைகளில் காணுகின்ற அந்தணர்களுக்குப் பொன்னினை அளிப்பார்களும் அங்கு உள்ளனர். பசித்தோருக்கு அன்னம் இடுகின்ற சாலைகளும் பக்தர்களுக்கு ஆலயங்கள் உருவாக்குபவர்களும், ஏழைகளுக்குப் பொன் அளித்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவாரும் 'சிவனே, சிவனே' என்று சிவன்மேல் ஒரே கருத்தாய் நிற்கின்றவர்களும்.
தவமே உயர்ந்தது என்றெண்ணித் தவங்களைச் செய்கின்றவர்களும், ""கோவிந்தா"" என்று சொல்லிக் குரு பூசை செய்கின்றவர்களும், மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் ரிக், யஜுர் , சாமம், அதர்வணம், ஆகிய வேதங்களை ஆராய்பவர்களும் அங்கு உள்ளனர்.
---------------------


சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும்
முடியும் அடியும் இல்லா முதலோனைப் போற்றும் ஒலியும்
முத்தாலே பாண்டி முதன் மடவார் ஆடல் ஒலியும் 
மத்தாலே மோரு மடமட என்னும் பேரொலியும்
சமுத்திரத்து முத்துதான் கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை இடும் பேரொலியும்
சங்கீத மேளம்தான் ஓதும் ஆலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்.....
---------
உரை
---------
....சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும், மடியில் இருந்த பணத்தை இறைவன் முன்னில் போட்டு விட்டுத் தன்னை ஆட்கொள்ள வேண்டி மார்பில் குத்திக் கொள்ளுகின்ற ஒலியும், அடி முடி காண முடியாத முதல்வனைப் போற்றும் ஒலியும், பெண்கள் முத்துக்களைக் கொண்டு 'பாண்டி' விளையாடும்போது எழுகின்ற ஒலியும், மோரை மத்து கொண்டு 'மடமட' என்று கடைகின்ற ஒலியும், கடலில் உள்ள முத்துக்கள் கரை சேருகின்ற ஒலியும், திரள் திரளாகப் பெண்கள் இனிமையாகக் குரவையிடும் ஒலியும், சங்கீத மேளத்தோடு மந்திரங்கள் ஓதுகின்ற ஆலயங்களும், மங்கள கீதங்களைக் கற்பிக்கின்ற ஆலயங்களும், வேத விளக்கத்தினை விளக்கிக் கல்வி கற்பிக்கும் ஆலயங்களும்.....
---------------------


தெச்சணத்தின் இயல்பு*********
புன்னை மலர்க்காவில் பொறி வண்டு இயல்பாட
அன்னமது குதித்து ஆராடும் சோலைகளும் 
கன்னல் கதலி கரும்புப் பலாச்சுளையும்
எந்நேரமும் பெருகி இலங்கி நிற்கும் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கும் கதிரோன் பூமேல் குடை நிழற்ற
நந்தாவனம் பூத்து நகரி மணம்வீச
செந்தாமரை பூத்துச் சிலம்பி மணம்வீச
அரகரா என்று அபயம் இடும் ஒலியும் .....
---------
உரை
---------
புன்னை மலர்க்காட்டில் பொறிவண்டுகள் இன்னிசை பாட அன்னம் குதித்து விளையாடும் சோலைகளும்; கரும்பும், கதலி வாழைப் பழமும், கரும்பின் சுவை போன்று இனிமையான பலாச்சுளையும் எப்பொழுதும் பெருகிக் கிடக்கின்ற சோலைகளும் அங்கு உள்ளன. எல்லா இடமும் இனிய நாதம் முழங்கும் ஒலியும் அங்குக் கேட்டுக் கொண்டிருக்கும். காலையில் பொங்கி எழுகின்ற கதிரோன் தனது ஒளியைப் பூ மொட்டுகளின் மேல் குடை போன்று பரந்து நுண்மையான சக்தி கொடுத்து நந்தாவனம் பூத்து மலரச் செய்யவும், அப்பூக்கள் பட்டினம் முழுவதும் இனிமையான மணம் வீசவும், செந்தாமரைகளும் பூத்து ஒலி செய்து மணத்தை வீசவும் தெச்சணாபூமி இயற்கை வளம் கொழித்துக் கொண்டிருக்கும். 'அரகரா' என்று அபயமிடும் ஒலியும்...
---------------------


விருத்தம்**********
கச்சணி தனத்தாளோடு கறைமிடற்று அண்ணல் ஈசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத்தேவி 
நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான
தெச்சணா புதுமை சொல்லிச் சீமையின் இயல்பும் சொல்வாம்
---------
உரை
---------
கச்சையணிந்த மார்பையுடைய பார்வதியோடு நீலநிறக் கறையை கழுதிலுடைய ஈசர், பச்சை நிறத்திருமால், முனிவர்கள், தேவர்கள், தாமரைப் பூவில் இருக்கும் இலட்சுமிதேவி திடமான கற்பில் சிறந்த பகவதியாள் ஆகியவர்களும் கூடுகின்ற தெச்சணாபூமியின் இயல்புகளைச் சொல்லுவார்.
---------------------


..ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
பார்வதியாள் வந்து ஆடுகின்ற தெச்சணமே
சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே 
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
தெச்சணத்தின் புதுமை செப்ப முடியாது
அச்சமில்லாப் பூமி அடைவு கேள் அம்மானை.
---------
உரை
---------
......ஆகமத்தில் கூறப்படுகின்ற விளையாட்டுகள் விளையாடப்படுவதுவும், பார்வதிதேவி வந்து அமர்ந்து இருப்பதுவும் , பார்வதியை ஈசன் திருமணம் புரிந்ததுவும், திருமால் மாயனாகத் தோன்றி வந்து அமர்ந்து இருந்ததுவும் இந்தத் தெச்சணாபூமியிலே ஆகும்.
விஷ்ணு திருவிளையாடல்களை நடத்தியதுவும் இத்தேசணப்பூமி ஆகும். இதன் பெருமைகளைச் சொல்லுவது முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்தது இப்பூமியாகும். இனி எவ்வித அச்சமுமின்றி வாழுகின்ற மக்களுடைய இத்தெச்சணாபூமியின் இயல்புகளை நான் கூறப் போகின்றேன், கேட்பாயாக.
---------------------


.மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
தாணுமால் வேதன் தாமசிக்கும் தெச்சணமே
ஆணுவம் சேர் காளி அமர்ந்திருக்கும் தெச்சணமே 
தோசம் மிககர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீசவினை தீர நீராடும் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்கும் தெச்சணமே
பாறு படவு பரிந்து நிற்கும் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்கும் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே......
---------
உரை
---------
.......மாமுனிகள் வாழ்ந்து வருவதுவும் இத்தெச்சணாப்பூமியே.
தாணுமாலயன் வாழ்ந்து வருவதுவும், இனிமைத் தன்மை வாய்த்த காளிதேவி அமர்ந்திருப்பதுவும், மிகுதியான பாவத் தோசைக்கு கர்ம வினைகளைத் தொலைக்கச் செய்வதுவும், நீசத்த தன்மையுள்ள செயல்களின் பாவம் தீர்வதற்குத் தீர்த்தமாடுவதும் இந்தத் தெச்சணாபூமியே ஆகும்.
குமரிப் பகவதியம்மை மகிழ்ந்திருப்பதுவும், மரக்கலங்கள் அலங்காரமாக நிற்பதுவும், யானைப்படைகள் அலங்கரிப்பதுவும், சேனைப் படைத்தளங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கின்றதுவும்.....
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*தெய்வ நீதம்***************
வாரமது இல்லாமல் மன்னன் அதிசோழன்
நீதமாய்ப் பூமி நிறுத்தி அரசு ஆளுகையில் 
கண்டு வேதாவும் கமலத் திருமகளும்
நன்று தெய்வாரும் நாராயணரும் மெச்சி
அன்று அந்த மாமுனிவர் எல்லோரும் தாம்கூடிச்
சென்று சிவனார் திருப்பாதம் தெண்டனிட்டு
சாகாது இருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகாபரனே எங்கும் நிறைந்தோனே
மூலப்பொருளே முதற்பொருளே காரணரே
சாலபொருளே தவத்தோர் அரும்பொருளே...
---------
உரை
---------
அதிசோழன் எவ்வித ஓரவஞ்சக நியாயமும் இல்லாமல் நடுநிலைமையாய் நீதியை நிலை நாட்டித் தெச்சணாபூமியை அரசாண்டு வந்தான்.
இதைக் கண்டு பிரம்மனும், தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமிதேவியும், நல்ல தேவர்களும், நாராயணரும், அங்கிருந்த மாமுனிவர்களும் சோழநாட்டின் தருமநீதியைப் புகழ்ந்து, எல்லாரும் கூடிச் சிவனிடம் சென்றனர்.
சிவனிடம் திருப்பாதங்களை வணங்கி, "சாகாநிலையில் இருக்கும் சகலவற்றுக்கும் மூலத திருப்பொருளே, யாரும் அடைய முடியாத பரம்பொருளே, எங்கும் நிறைந்திருப்பவரே, எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாகவும் உயர்வான பொருளாகவும் இருப்பவரே, எல்லா வழியாகவும் இருப்பவரே, தவசிகளுக்கு அருமையானவரே...
---------------------

பன்னிரண்டு ஆண்டு பரிவாய் இறை இறுத்தால்
பின்இரண்டு ஆண்டு பொறுத்து இறைதாரும் என்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை ஆண்டிருந்தான் 
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம் பதத்தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவேன் அம்மானை.
***************விருத்தம்(ஆசிரியர் கூற்று)***************
இவ்வகையாகச் சோழன் இருந்து இராச்சியத்தை ஆள
கவ்வைகள் இல்லாவண்ணம் கலியுகம் வாழும் நாளில்
செவ்வகைத் திருவேயான திருவுளக் கிருபை கூர்ந்து
தெய்வ மெய்ந்நீதம் வந்த செய்தியைச் செலுத்துவாரே.
---------
உரை
---------
பன்னிரண்டு வருடங்கள் ஒழுங்காக வரி கொடுத்திருந்தால், இரண்டு ஆண்டுகள் வரியைத் தவிர்த்து, மீண்டும் வரி தரக் கூறிடுவான். இப்படியாகச் சோழன் இராச்சியத்தைத் ஆண்டு வந்தான். இவ்வாறு ஆண்டு வந்த வேளையில், மெய்யறிவு பெற்று மேலான இறைபதத்தைத் தெளிந்து வாழ்ந்து வந்தவர்களின் தெய்வ நிலையினைப் பற்றி இனிச் சொல்லப் போகின்றேன். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
***********ஆசிரியர் கூற்று***********
சோழமன்னன் இந்த வகையில் எந்தவிதப் பழிச் சொல்லும் இல்லாமல் இராச்சியத்தை ஆண்டு இக்கலியுகத்தில் வாழ்ந்து வருகின்ற நாளையில், செம்மை பொருந்திய இலட்சுமியின் திரு உள்ளத்தின் கருணையினால் சோழ நாட்டுக்குத் தெய்வநீதி வந்த செய்தியினை நாராயணர் இனிச் சொல்லுவார்.
---------------------


அன்னமடம் வைத்து அகம் களிகூர
எநேரம் பிச்சை இடுவார் எளியோர்க்கும்
பந்தல் இட்டுத் தண்ணீர் பக்தர்க்கு அளிப்பாரும் 
எந்த இரவும் இருந்து பிச்சை ஈவாரும்
ஆறில் ஒருகடமை அசையாமல்தான் வேண்டித்
தேறியே சோழன் சீமை அரசாண்டிருந்தான்
சிவாயநம என்னும் சிவவேதம் அல்லாது
கவாமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறில் ஒரு கடமையது தரவே மாட்டோம் என்று
மாறு ஒருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்...
---------
உரை
---------
....உண்பதற்கு அன்னமடம் வைத்து எப்பொழுதும் ஏழைகளுக்கு மனம் மகிழ்ச்சி பெறும் அளவில் அன்னப் பிச்சை இடுவர். இறை பக்தர்களுக்குத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தண்ணீர் கொடுப்பாரும், இரவு நேரத்தில்கூட எலியாருக்குப் பிச்சை அளிப்பவர்களும் ஆகிய தருமநீதி செய்பவர்கள் அங்கு உள்ளனர்.
வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை மட்டும் வாரியாகப் பெற்றுக் கொண்டு திடமாகச் சோழ மன்னன் அரசு செலுத்தினான். அங்குள்ள மக்கள் "சிவாய நம" என்னும் சிவமந்திரத்தைத் தவிர வேறு மந்திரச் சொல்லை அறியாதவர்களாக வாழ்ந்தார்கள். "வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைக்கூட வாரியாகத் தர மாட்டோம்" என்று யாராவது கூறினால் சோழ மன்னன் அவ்வரியை வற்புறுத்திக் கேட்கமாட்டான்.
---------------------

தருமநீதம் (இராசநீதம்)***************
ஆதிபொருளை அனுதினமும் தான்ஓதிச்
சோதியுட நீதம் சொல்லுவேன் அம்மானை 
தெய்வ மனுநீதம் தேச ராசநீதம்
மெய்யறிந்த நீதம் விளம்புவேன் அம்மானை
ஆயிரத்தெட்டு ஆன திருப்பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பும் முடங்காது
கோயில் கிணறு குளங்கரைகள் ஆனதையும்
தேய்வு வராதே சேரும் மதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்று எண்ணி மிகப்பாராமல்
களிகூர நன்றாய்க் கண்ட வழக்கே உரைப்பார்....
---------
உரை
---------
ஆதிபொருளின் திருநாமத்தைத் தினந்தோறும் சொல்லிவரும் நான், முதலில் அரச நீதியாகிய தேச ராசநீதம் (ஆண்கள் நிலைமை) பற்றிச் சொல்லப் போகின்றேன். அதற்கு அடுத்ததாக, உண்மையாகவே நான் அறிந்த தெய்வநீதம் பற்றியும், மனுநீதம் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவேன்.
1008 திருக்கோவில்களின் வாயில்களில் அதற்குத் தேவையான பூசை முறைகள் தடைபடாது நடந்துவரும். கோவில்கள், கிணறுகள், குளத்தின் கரைகள், ஆகியவை சேதமுறாவண்ணம் அரசன் மதில்கள் அமைத்திடுவான். மக்கள் "இவர் எளியவர்" என்றும், "இவர் வலியவர்" என்றும் பிரித்துப் பார்க்காமல் உண்மையான நீதியினையே மகிழ்ச்சியுடன் எடுத்துரைப்பர்.....
---------------------


மாரி பொழியும் மாதம் ஒன்று மூன்று தரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளர் எல்லாம்
நாத்து நடும் புரசி நளினம் மிகுசொல் ஒலியும் 
கூத்து ஒலியும் குருபூசைகள் ஒலியும்
எப்பார் எல்லாம் புகழும் ஏகாபதி அதுபோல்
தப்பாத தெச்சணத்தின் தன்மை ஈது அம்மானை.
***************விருத்தம்***************
காமனை எரித்த ஈசன் கழலிணை மறவாவண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான
சீமையின் குணமும் சொல்லிச் சிறந்திடும் பூமிதன்னில்
நேமம் அவர் தர்மஞாய நிலைதனை நிகழ்த்துவாரே.
---------
உரை
---------
...மழை ஒவ்வொரு மாதமும் மூண்டு தடவை பொழிந்து வரும், ஏறி எப்பொழுதும் பெருகி இருக்கும். நாற்றுப் பயிர்களை நட்டுக் கொண்டிருக்கும் உழவர்களின் நளினம் இழைந்தோடும் பேச்சு ஒலியும், எல்லா உலகத்தாரும் புகழுகின்ற வர்ணிக்க முடியாத தருமபதியைப் போன்று, தெச்சனாபூமியைத் தோன்ற வைத்தன. எந்தத் தவறும் நடக்காத தெச்சணாபூமியின் தன்மைகள் இவையாம்.
*******************ஆசிரியர் கூற்று*******************
தம்மை ஆசை உண்டாக்க வந்த காமனை எரித்த ஈசரின் கழல் அணிந்த பாதத்தினை மறவாதவாறு, பூவின் இனிய வாசம் பொருந்திய கூந்தலையுடைய கன்னி பக்கவதியாள் அமர்ந்திருக்கும் இத்சதெச்சணாபூமியின் இயற்கை வளத்தை நாராயணர் சொன்னார். இனிச் சிறந்து விளங்குகின்ற இத்தெச்சணா பூமியில் அன்புடன் வாழ்ந்து வருகின்ற மக்களின் இராசநீதி பற்றி சொல்லுவார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

சாத்திர வேதம் சமயம் வழுவாமல்
சூத்திரமாகத் துல்யப்படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்கள் ஒருகோடி பெற்று 
இனிதாக நாளும் இறவாது இருக்க என்றும்
சந்திர சூரியர்கள் தட்டு மிகமாறாமல்
இந்திரரும் தேவர்களும் ரிஷிநிலை மாறாமல்
தானதவங்கள் தப்பி மிகப் போகாமல்
ஈனம் இல்லாமல் இதுவும் தெய்வநீதம் எல்லாம்
மானம் நிறுத்தி வை என்றார் ஈசுரரும்
---------
உரை
---------
...ஆறு சாத்திரங்கள், நான்கு வேதங்கள், சமயக் கருத்துக்கள் ஆகியவை வழுவாமல் சூத்திரப் பொருளாக மக்கள் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்திடவும், அவர்கள் எல்லோரும் செழிப்புப் பெற்று அதிகமான சந்ததியனரைப் பெற்று என்றென்றும் மகிழ்ச்சியான வாழ்வில் திளைத்து "இறவாநிலை" பெற்றிடவும் வழி செய்.
மேலும் சந்திரனும், சூரியனும் எந்தவித இடையூறு செய்யாமலும் இந்திரனும், தேவர்களும் ரிஷித்தன்மை வழுவாமலும், தானங்களும் தவங்களும் அங்கு அழியாது இருந்திடவும், எந்தவிதக் குறையும் இல்லாமல் தெய்வநீதம் முதல் எல்லாவற்றையும் மானத்தோடு தெச்சணாபூமியில் நிலை நிறுத்தி வை" என்றார் ஈசுரர்.
---------------------


நினைத்தோர்க்கு உறுதி நினைவில் அறிவு தோன்றி
எனைத் தோத்திரங்கள் இளகாமல் வை என்றார்
பன்றியோடே கடுவாய் பாவித்து இருந்திடவும் 
அன்றிலோடே குயிலும் அன்புற்று இருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற்று இருந்திடவும்
பசுவும் புலியும் ஒரு பக்கம் நீர் உண்டிடவும்
கசுவும் கரைபுரளக் கரும்பு முத்து ஈன்றிடவும்...
---------
உரை
---------
இன்னும், ஈசர் தொடர்ந்து கூறியதாவது:
"என்னை நினைத்தாருக்கு அவருடைய உறுதியான நினைவின் மூலம் அறிவு தோன்றி என்னை மனம் மாறாதவண்ணம் துதி பாடகி செய்.
மேலும், பன்றியும் - கடுவாயும், அன்றிலும் - குயிலும், கீரியும் - பாம்பும் ஒரே இனத்தவர் போன்று அன்புற்றுக் கொஞ்சி வாழ்ந்திடவும், கடல், குளத்தைப் போல் ஒரு கட்டுப்பாட்டில் நின்றிடவும், அங்கு உள்ள மக்கள் விதைத்த விதைகள் பதினாறு மடங்காக பெருகிடவும், நாயும் - முயலும் ஒற்றுமையான பண்போடு வாழ்ந்திடவும், பசுவும் - புலியும், சேர்ந்து ஓரிடத்தில் நீர் பருகிடவும்,
குளங்களில் நீர் நிறைந்து கரைபுரண்டோடிடவும், முற்றிய கரும்புகள் முத்து ஈன்றிடவும்,...
---------------------


.நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமாதேவிதனை வருத்து
வருணன்தனை அழை நீ மாதம் மும்மாரி பெய்ய
கருணைக்குடை விரிக்க கங்குல்தனை அழை நீ
வாசியது பூவாய் வழங்க வரவழை நீ
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடு நீ
குருபூசை செய்யும் கூட்டமதில் சிவமாய்த்
திருவீற்று இருக்கச் செய்திடு நீ கோலமது
நித்திராதேவி நித்தம் அந்தப் பூமியிலே
மத்தீபமாய்க் காக்க வை என்றார் ஈசுரரும்...
---------
உரை
---------
..."மாயவனே, இது மிகவும் நல்ல காரியம்தான். சோழ நாட்டைக் காப்பதற்காக வல்லவனாகிய நீ பூமாதேவியை வரவழை; உழைத்த களைப்புத் தீரக் கருணை புரிந்து இளைப்பாறுதல் கொடுக்கும் இரவினை வரவழை; காற்று பூப்போன்று மெதுவாய் வீசிட வாயு பகவானை வரவழை; தோஷம் புரிகின்ற எமனை அங்குச் செல்லாதவாறு விலக்கி விடு; குருபூசை செய்கின்றவர் கூட்டத்தில் சிவக்கோலத்தில் இலட்சுமிதேவியை எழுந்தருள வை; என்றென்றும் அப்பூமியில் வாழும் மக்களுக்குத் தேவையான அளவு தூக்கம் கொடுத்துக் காக்க நித்திராதேவிக்குக் கட்டளை இடு." என்றார் ஈசர்.
---------------------


வாடிவந்த பச்சினுக்கு வாளால் அவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் தொடை அரிந்து ஈந்தவன்காண்
ஆறில் ஒருகடமை அவன் வேண்டிற்றான் எனவே 
மாறி அவன் புவியோர் மனதில் கௌவைகள் இல்லை
கோவில் சிவாலயங்கள் குளம் கூபம் வாவிகளும்
சேவித்து அனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளும் சீமையிலே
நீதமாய்த் தெய்வநிலை நிறுத்த வேணும் அய்யா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கண்டிருந்த ஈசர் கரியமாலோடு உரைப்பார்...
---------
உரை
---------
"தன் உயிரைக் காக்க வேண்டி வாட்டத்துடன் ஓடி வந்த புறாவினுக்குப் பதிலாகச் சோழன் தனது தொடையிலிருந்த மாமிசத்தை வாளால் அரிந்து அதைத் தேடி வந்த வேடனுக்குச் ஈந்ததை நீர் அறிவீராக. வருவாயில் ஆறில் ஒரு பகுதி மட்டும் வரியாகச் சோழன் பெற்றுக் கொண்டான். எனவே, அந்நாட்டு மக்கள் மனதில் சோழனை எதிர்க்கும் எந்தவிதப் பழி உணர்வும் இல்லை.
சோழமன்னன், சிவாலயங்கள், கோவில்கள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், ஆகியவற்றை தினந்தோறும் பாதுகாத்து வருவதோடு மக்களுக்குத் தானமும் தருமமும் செய்த வருகின்றான்.
எனவே, சோழன் அரசாளும் தெச்சணாபூமியில் தெய்வ நீதி முறையினை நிலை நிறுத்தி வைக்க வேண்டும், அய்யாவே," என்று தேவர்கள் எல்லாரும் அடி பணிந்து சிவனைத் தொழுதனர்.
இதைக் கண்டா ஈசர், கருமை நிறம் பொருந்திய திருமாலோடு பேசலுற்றார்,....
---------------------


..நாரணரும் வேதாவும் நாடிப்பொரும் போரில்
காரணரே நீரும் கனல்கம்பம் ஆனோரே
ஆலமுது அருந்தி அரவையும் மிகஉரித்துக் 
கோலத் திருக்கழுத்தில் கோவையாய் இட்டோரே
ஆனைதனை உரித்து அங்கமதிலே புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோவேங்கிரியில் குடியிருக்கும் கோவே
தானே இருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அரிய திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளும் அய்யா...
---------
உரை
---------
...விஷ்ணுவும், பிரம்மாவும், உமது ஆதி முடி காணச் செய்த போரில் எல்லாவற்றிற்கும் காரணமான நீர் அவர்களுக்கு அக்கினி ஜோதியாகக் காட்சியளித்தவரே. ஆழ கால விசத்தை அருந்தித் திருப்பாற்கடலில் தோன்றிய பாம்பை அடக்கிக் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டவரே.
ஆணவ யானையின் தோலை உரித்து உமது உடம்பிலே அணிந்து கொன்டு, மானினையும் மழு ஆயுதத்தையும் கையில் ஏந்தியபடி இருக்கின்ற, சிவனே, கயிலையங்கிரியில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறைவனே, தாமே உருவாகியிருக்கும் தவமானவரே, எல்லாவற்றுக்கும் காரணமாகவும் ஆதியாகவும் நின்ற அருமையான முதல்வரே, ஜோதி மயமானவரே, சோழ நாட்டில் நடக்கும் தரும நீதி நெறியினைக் கேட்டருள்வீராக.
---------------------
அய்யா உண்டு 

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

விருத்தம் (ஆசிரியர் கூற்று)*********
இப்படித் தெய்வ இராசமெய் நீதமும்
மற்படி தேச மனுவுட நீதமும் 
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தார்.
---------
உரை
---------
இவ்வண்ணம் இராச நீதமும் (தருமநீதமும் - ஆண்கள் நிலைமை) தெய்வ நீதமும் (மெய்நீதம்), மனு நீதமும் (பெண்கள் வளமை) வளமை பொருந்திய தெச்சணாபூமியில் நிலவி வந்ததால் நல்ல பண்புடைய மக்கள் அத்தேசத்தில் மகிழ்வுடன் வாழ்வதை அறிந்து சிவன் மகிழ்ச்சியுற்றார்.
---------------------


*சாதிவளமை*************
...வையம் வழக்கு வராதே இருந்தார்
அடிபணிய என்று அலைச்சல் மிகச்செய்யாமல் 
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தார் அம்மானை
சேயினுட ஆட்டு செவிகேட்டு இருப்பது அல்லால்
பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்
இந்தப்படி மனுவோர் எல்லாம் இருந்து ஒரு
விந்துக் கொடி போல் வீற்றிருந்தார் அம்மானை.
---------
உரை
---------
...இந்த உலகச் சம்மந்தமான வழக்குகள் அவர்களுக்குள் எழாமலேயே இருந்தன.
தம்மை நாடி வந்தவர்கள் தமக்கு அடிபணிய வேண்டும் என்று அலைச்சல் செய்யாமல் குடி மக்கள் எல்லோரும் ஒரு மனதோடு பொருந்தி வாழ்ந்து வந்தார்கள். தங்கள் குழந்தைகளின் விளையாட்டு வெற்றிகளைப் பற்றிக் கேட்டு மகிழ்ந்து இருந்தனரே அல்லாமல் பேய்ப் பிடித்து அடியவர்கள் பற்றி அம்மக்கள் அறியாது இருந்தனர். இப்படியாகத் தெச்சணாபூமியில் வாழ்ந்த மக்கள் ஒரே குடும்பத்தில் தோன்றிய மக்களைப் போன்று அமைதியாக வாழ்ந்தனர்.
---------------------



**சாதிவளமை*************
சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
உண்டான சாதி ஓக்க ஓரினம்போல் 
தங்கள் தங்கள் நிலைமை தப்பிப் மிகப்போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்து ஓங்கியே வாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அல்வல் தினம் செய்து அன்புற்று இருந்தனராம்
தான்பெரிது என்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரிது என்று மகிழ்ந்திருந்தார் அம்மானை
ஒருவருக்கு ஒருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தாய் இருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரில் அல்லாது...
---------
உரை
---------
சான்றோர் சாதிமுதல் சக்கிலியன் சாதிவரை, பதினெட்டுச் சாதி மக்களும் சேர்ந்து ஓர் இனம் போல் தங்கள் தங்கள் நிலையில் உள்ள கட்டுப்பாடுகள் தவறாமல், மாதம் மும்மாரி பொழியச் சிறந்தோங்கி வாழ்ந்தனர். செல்வம் பொங்கிப் பெருகச் சிவனைத் தொழும் நிலை மாறாமல் எல்ல வேலைகளையும் அன்றாடம் செய்து முடித்து, ஒருவரோடு ஒருவர் அன்புற்று இருந்தனர். "தாம்தாம் பெரியவர்" என்று தவறாக எண்ணாமல், மழை வளங்களே எல்லாவற்றுக்கும் பெரிது என்று மனம் மகிழ்ச்சியோடு வாழ்ந்திருந்தார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தனரே ஒழிய ஊழியங்கள் செய்வதில்லை. அவர்களின் சிந்தனை எப்போதும் எல்லாம் வல்ல சிவன் பேரிலேயே இருந்தது. அவர்களுக்குள் எழுகின்ற வழக்குச் சிவனைப் பற்றிய ஆராய்ச்சி வழக்காக இருக்குமே அல்லாது...
---------------------



*மனுநீதம் (பெண்கள் நிலைமை)************
...தவத்துக்கு அரிய தையல் நல்லார் தங்களுட
மனுநீதம் சொல்லி வகுக்க முடியாது 
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கும் அந்த நாளையிலே
வணிதான சாதி வளமைகேள் அம்மானை.
---------
உரை
---------
...தவத்தில் சிறந்த இப்பெண்களுடைய இயல்புகள் பிரித்துச் சொல்ல முடியாத அளவு பெருமை வாய்ந்தனவாம். கனிகளைப் போன்று இனிமையான கற்புநிலை மாறாத இப்பெண்கள் வாழ்ந்துவரும் நாளில், அங்கிருந்த சிறப்பான சாதி வளமை பற்றி இனிச் சொல்லுகின்றேன், இலட்சுமிதேவியே நீ கேட்பாயாக.
---------------------


*மனுநீதம் (பெண்கள் நிலைமை)*******
...முன்பான சோதி முறைபோல் உறவாடிப்
போற்றியே நித்தம் பூசித்து அவள்மனதில் 
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமானது தடவிக் கால் தடவி நின்றிடுவாள்
துயின்றது அறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை எழுந்திருந்து
முகத்தில் நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்துவமாக பாரிப்பார் பெண்ணார் ...
---------
உரை
---------
...ஏற்கனவே சொல்லப்பட்ட தரும நீதியோடு உறவு கொண்டாடி துதித்து, தினந்தோறும் அவர்களைப் பூசித்து வருவார். அவர்கள் தாங்கள் இளமையில் கற்று மனதில் பதித்து வைத்திருந்த வேதங்களின் உயர்ந்த மொழிகளை ஓதி வருவார்கள். அவர்கள், தம் கணவர் அமைதியாகத் தூங்குவதற்காகத் தாலாட்டி, கைகளையும், கால்களையும் கலைப்புத் தீரத் தடவிக் கொடுத்து, அன்பு பெருக்கெடுக்க நின்றிடுவர்; கணவனின் ஆழ்ந்த தூக்கத்தை அறிந்த பின்னர், தாமும் தூங்கச் செல்வர்; அவர்கள் விடிவதற்கு ஒரு சாமநேரம் முன்னரே விழித்தெழுந்து, தங்கள் முகத்தை நன்றாக நீர்விட்டுக் கழுவி, கணவரையும், நான்முகத்தோனையும் தொழுவர்; பிறகு, இப்பெண்கள் வீட்டின் உள்ளும், தெரு முற்றத்தையும், அழகாகச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வேலையாகப் பகுத்து முடித்து, தினந்தோறும் தன்னையும் சுற்றத்தாரையும் பாதுகாத்து வரும் குண இயல்பு உடையவர்கள்; ...
---------------------


*மனுநீதம் (பெண்கள் நிலைமை)************
தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய்நீதப் பெண்கள் நிலைமை கேள் அம்மானை 
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேன் அம்மானை
கற்கதவு போலக் கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திறவுகோல் அம்மனை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவாதுக்கும்...
---------
உரை
---------
தெய்வ நிலைமையை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி, தெச்சணாபூமியில் நோய் இல்லாமல் நீதியுடன் வாழும் பெண்களின் நிலைமையையும், கணவன் மொழிக்கு எதிர் மொழி பேசாத நல்ல மனைவியின் நிலைமையையும் நான் சொல்லுகிறேன். கல்லால் ஆன கதவுகளைப் போன்று யாரும் புக முடியாத அளவு உறுதி படைத்த மனக்கதவைக் கொண்டு பெண்கள் தம் கற்பினைக் காத்து வந்தனர். அத்தகைய பழமையான பாரம்பரியம் பெற்ற அக்கதவுக்குத் திறவு கோலாக இருப்பது ஞானமே ஆகும்.
அங்குள்ள பெண்கள் அன்பாகத் தம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரிடம்...
---------------------


விருத்தம்(ஆசிரியர் கூற்று)************
இப்படித் தெய்வ நீதம் ஈசுரர் இதுவே கூற
செப்படி மறவா வண்ணம் திருமருக்கோணும் செய்தார் 
அப்படித் தவறா நீதம் அம்புவிதனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே.
---------
உரை
---------
இப்படியாகத் தெய்வநீதம் பற்றி ஈசர் கூறவும், அவர் கூறிய சொல் மறவாதபடி பின்பற்றி நாராயணரும் செய்து முடித்தார். அப்படி உயர்ந்த தெய்வநீதி தவறாத வகையில் தெச்சணாபூமி இருந்தது. சிறப்பு ஆபரணங்களையும், கூந்தலையுமுடைய, பெண்களின் வழக்கை நெறியினை இனி அவர் கூறுவார்.
---------------------
அய்யா உண்டு
---------------------