வியாழன், 26 ஏப்ரல், 2018

அவதார பொன் கூட்டு சடலத்தின் விளக்கம்

சங்கு வண்ணர் நெமித்த சடலத்தின் பெருமை
உரைக்கின்றேன் அன்பர் உள்ளம் மகிழ்ந்தவர்க்கு
தரை ஈரேழும் அளந்த சுவாமி உரைக்கலுற்றார்
வி=சங்கு வண்ணப் பெருமாள் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று ஏற்படுத்திய பொன் கூட்டு சடலத்தின் அருமைப் பெருமைகளை
தெள்ளத் தெளிவாக சொல்கிறேன் என் அன்புக்கு உரியவர்களே மனதில் சந்தோசமாக இருக்கின்ற உங்களுக்கு அருள்கின்றேன்
ஈரேழு பதினான்கு உலகத்தையும் தன் காலால் அளந்த உலகளந்த பெருமாள் விவரம் கூறத் தொடங்கினார்
==
சீரான நல்ல தெக்ஷணா பூமியிலே
பாரான நல்ல பதி தாமரை ஊரில்
தவசிக் குகந்த தாமரை ஊர் நல்பதியில்
சிவ சிவா வளரும் தெக்ஷணாபுரி நாடு
வி=சீரும் சிறப்பும் பெற்று மிகவும் புகழோடு இருக்கின்ற தெற்கே கன்னியாகுமரியைச் சேர்ந்த தெட்சணத்து பூமியிலே
பார்ப்பதற்கு மிகவும் அழகான உயர்வான தன்மை உடைய தாமரை மலர் பூத்துக் குலுங்கும் தாமரைகுளம் ஊரில்
தவம் செய்வதற்கு ஏற்றபடி அமைந்துள்ள தாமரை தடாகத்தில் அமைந்துள்ள அந்த ஊர் சிறப்பு மிக்க நல்லதொரு இடம் ஆகும்
சிவ சிவா என்கிற மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும் தெட்சணத்து நாட்டோடு சேர்ந்த இடமாகும்
==
பாண்டவரின் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்ட பரமேசுரரை அகம் வைத்துப் போர் விசயன்
வி=துவாபரயுகம் நடக்கும் போது பஞ்சபாண்டவர்களின் வில் வித்தையில் சிறந்த அர்ச்சுனன் சிவனுடைய அம்பைப்பெறுவதற்காக
பாருலகத்தை ஆண்டு கொண்டு இருந்த பரமசிவனை தன் மனதில் ஒரே நினைவாக நினைத்து மகா பாரத போருக்குத் தயாரான அர்ச்சுனன்
==
நின்று தவம் முடித்து நெடியோனை மாதுமையை
கண்டு பதம் வாங்கிக் கைகண்டது இவ்வூரு
வி=நின்ற நிலையில் செய்கின்ற மிக உயர்ந்த தவத்தை இந்த பூமியில் முடித்துவிட்டு மிக உயர்ந்த சிவனையும் பார்வதியையும்
கண்களால் கண்டு சிவனுடைய அம்பை பாசுபதமாக பெற்றுக் கொண்டது இந்த தாமரை தடாகத்தில் தான்
==


ஆதியரசன் முன்னாள் அதிகச் தவசிருந்து
பதியரசி ஆனப் பார்வதியை ஈன்றதுதான்
வி=ஆதி மலை அரசானாகிய பர்வத ராஜா ஆதிகாலத்தில் அருந்தவசு மேற்கொண்டு அதன் பயனாக
பார் உலகத்திற்கே அரசியாக விளங்கக் கூடிய பார்வதி தேவி ஆனவளை பெற்றெடுத்தது இந்த ஊர் தவத்தால் தான்
==
இவ்வூரு தெக்ஷணந்தான் ஏற்ற தாமரை ஊரு
செவ்வூரு நல்ல சிறந்த மணவைப் பதிதான்
வி=இந்த ஊர் பாரத நாட்டின் தென்கரை மாவட்டம் ஆகும் தவம் செய்வதற்கு ஏற்றபடி தாமரைமலர்கள் நிறைந்த ஊர் ஆகும்
செம்மையான முறையில் அமைந்த நல்லதொரு ஊர் ஆகும் சிறப்பு பெற்ற மணவைப் பதியும் இது ஆகும்
==
வானலோகம் வாழும் வாய்த்த தெய்வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த இவ்வூரு
வி=இந்திரலோகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற தேவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற தெய்வேந்திரனும்
சிவபெருமானைக் கண்டு தன் சாபத்தைத் தீர்த்துக் கொள்ள பூலோகம் வந்து தவம் இருந்தது இந்த ஊர் ஆகும்
==
பஞ்சவர்க்கு முன்னம் பகவான் உதவிசெய்ய
அஞ்சல் செய்து நாதன் அமர்ந்திருந்தது இவ்வுரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்தது இவ்வுரு
வி=துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு கிருஷ்ணபகவான் மகாபாரத போருக்கு உதவி செய்வதற்காக ஆசைப்பட்டு
சிவபெருமானிடம் தகவல் சொல்லி விட்டு கிருஷ்ணர் தவநிலையில் இருந்து வெற்றி கண்டது இந்த ஊர் ஆகும்
சாம்பவ சிவனை வணங்கி
(சுசீந்திரம்)சிவனுக்கு உகந்த சான்றோர் குலமக்களாக வாழ்ந்தது இந்த ஊர் ஆகும்
==
தாம்பிரபரணி ஆவி தழைத்திருந்தது இவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசு பண்ணி
விரமான வியாகரரை மிக ஈன்றது இவ்வூரு
வி=தெட்சணத்து பூமியில் ஒடுகின்ற தாமிரபரணி நதி நீரால் செழிப்பாகக் காணப்பட்டது இந்த ஊர் ஆகும்
பராச முனிவன் என்று சொல்லக் கூடியவர் கடினமான முறையில் இந்த பூமிக்கு வந்து தவம் இருந்தது இந்த ஊரு
சத்தியவதிக்கு மகனான விவரமான அறிவுள்ள பிள்ளையாக வியாசரைப் பெறுவதற்கு தவம் இருந்தது இந்த ஊர் ஆகும்
==

தவம் புரியவென்று தான் நினைத்த பேர்களெல்லாம்
பாவமற்ற தாமரையூர் பதியாகும் என்றுரைப்பார்
வி=தமிழ்நாடு அந்தகாலத்தில் மிகப்பெரிய நந்தவனமாக இருந்தக் காரணத்தால் தவம் செய்ய வேண்டும் என்று நினைத்த மேலோகத்தார் எல்லோரும்
தவத்திற்கு அமைதியைக் கொடுத்து தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கிய குற்றம் குறை இல்லாதது தாமரைகுளம் பதியாகும் என்று கூறினார்
==
தவசுக்கு உகர்ந்த சந்தமுள்ள பேரூரு
பவிசுக்கு உகர்ந்த பாலதிய தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி அருளாலே
செவ்வு மகாவிஷ்ணு உருசெய்த சடமே பிறந்து
பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ் காட்டி
வி=மனதை ஒருநிலைப்படுத்தி தவம் செய்வதற்கு ஏற்றபடி மிகச் சிறப்பான அமைப்பைப் பெற்ற அமைதியான ஊர் இதுவாகும்
பெருமைப்படுவதற்கு உரிய விதத்தில் பாலோடு பழத்தோடு தவம் இருந்து உயர்வடைந்தது இந்த தாமரை ஊர் ஆகும்
இத்தகைய சிறப்பு பெற்ற தாமரைபூக்கள் புத்து குலுங்கிய சுவாமிதோப்பு ஊரில் ஆதி சிவனுடைய அருளால்
செம்மையும் நெர்மையும் பொருந்தி மகா விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட பொன்கூட்டு சடலம் பிறந்தது இந்த ஊர்
திருமாலின் அவதார சடலத்தில் சம்பூரணத் தேவனுடைய உயிர் பிறந்து முத்துக்குட்டி சுவாமி என்கிற பெயரில் பெருமையோடு வாழ்ந்து வந்தார்
==
மறந்திடா முன்னமைத்த மாத உறவாடி
பூலோக மனுக்கள் பிள்ளை போலே வளர்ந்து
மாலேக்கப் பூசை மனையில் மறவாமல்
வி=சம்பூரணத் தேவனாக இருக்கும் போது மறக்கமுடியாமல் இருந்த பரதேவதையை முன் ஜென்ம விதிப்படி அவளோடு உறவாடி
பூலோக மானிட மக்களைப் போல் எந்த பாகுபாடு இல்லாமல் மனிதப் பிள்ளையைப் போலவே வளர்ந்து வந்தார்
திருமால் ஏற்றுக்கொள்ளும் படியான வகையில் வீட்டில் பூஜை அறை அமைத்து நேரம் தவறாமல் பூஜை செய்து வந்தார்
==

விஷ்ணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டு
கட்டுத் தீர்க்காகக் கண் வளர்ந்தார் கலியில்
ஒருவருக்கோர் பொல்லாது உலகில் மிகச் செய்யாமல்
வி=மகாவிஷ்ணுவை போற்றித்தொழுது புகழ்பாடுவதற்காக தனிப்பட்ட முறையில் ஒரு மேடை போன்ற அமைப்பை அமைத்து
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தீர்க்கமான முறையில் விடாப்படியாக வழிபட்டு வந்தார் கலியன் வாழ்ந்த தேசத்தில்
எந்த விதமான பழிபாவங்களும் செய்யாமல் நேர்மையானவராக முத்துக்குட்டி சுவாமி என்பவராக வாழ்ந்து வந்தார்
==
குருவைக் குருகண்டு கொக்கரித்தே வளர்ந்தார்
எதிர்த்தோர் பெலமடக்கி எல்லோருக்கும் நல்லவராய்
வி=கடவுளைக் கண்ணால் கண்ட கடவுள் போல் நேர்மைக்காக கூக்குரலிட்டு ஞான அறிவோடு வளர்ந்து வந்தார்
நேர்மை நீதி இல்லாமல் செயல்படுபவர்களை எதிர்த்துப் போராடி வெற்றிக் கண்டவராக அனைவருக்கும் பிடித்தவராய் இருந்தார்
==
உருத்துக்கு அதியவராய் உலகில் மிக வளர்ந்தார்
எச்சாதி யார்க்கும் இவர் நல்லவர் எனவே
அச்சாதி எல்லாம் அகமகிழ்ந்து தான் வளர்ந்தார்
வி=நாட்டுப்பற்றுக் கொண்டவரைப் போல் உரிமையோடு அதிக முயற்சி எடுத்து மக்களுக்கு உதவி செய்து வளர்ந்து வந்தார்
எல்லா இனத்தைச் சார்ந்த பக்கத்து ஊர்மக்களுக்கும் இவர் மிகவும் நல்லவர் என்கிறப் பெயர் பெற்றார் ஆகவே
பிற இனத்தவருக்கு ஏற்றத்தாழ்வு பாராமல் அன்பு பாராட்டி மிகவும் சந்தோசமான மனநிலையில் வளர்ந்து வந்தார்
==
முன்னுதித்து உடன்பிறந்தோர் ஒருவர் முப்பு ஆடாமல்
பின்னுதித்துப் பெரியோராய்ப் பெருமையுடன் வளர்ந்தார்
வி=இவருக்கு முன்னால் தோன்றிய சான்றோர்களில் ஒருவர் கூட இந்த அளவுக்கு பெயர் வாங்கவில்லை என்பது உண்மை
கலியுகத்தின் கடைசி காலக்கட்டத்தில் பிறந்து பேரும் புகழும் பெற்று மதிப்புக்குரியவராய் வளர்ந்து வந்தார் முத்துக்குட்டி ஆவார்
==

தாய்தகப்பன் மாமன் சந்தமிந்தத் தம்பியென்று
ஞாயவான் என்றும் நாடி வளர்ந்தார்
ஊருக்குந் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
வி=மிக உயர்ந்த நிலையில் இருந்த இந்த பிள்ளையை பெற்ற தாய்,தகப்பன்,மாமன் எல்லோரும் இரக்க மனம் கொண்ட பிள்ளை என்றனர்
தவறு எங்கெங்கு நடக்கிறதோ அதை தட்டிக் கேட்கும் நியாய குணம் உடைய பிள்ளை என்று சொல்லி வளர்த்தார்கள்
தான் பிறந்த ஊருக்கும் தலைமை பொறுப்போடு நடந்து வந்தார் தான் பிறந்த குடும்பத்திற்கும் தலைமை பொறுப்போடு நடந்தார்
==
ஆருக்கும் தலைவன் என்று அன்னைபிதா வளர்த்தார்
ஞாயம் இருப்பதனால் நாடாளுவான் என்று சொல்லி
தாய் தமர்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
வி=எல்லோருக்கும் தலைவன் என்றுச் சொல்லக்கூடிய அளவில் அறிவுள்ள பிள்ளையை தாயும் தகப்பனும் செல்லமாக வளர்த்தனர்
இவனிடம் நீதியும், நியாயமும் நிறைந்து இருப்பதால் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்று நடத்துவான் என்று கூறினார்
தாய் தகப்பன் சொந்தப்ந்தங்கள் எல்லோரும் மிகவும் மரியாதைக் கொடுத்து வளர்த்து வந்தார்கள் அபூர்வ சக்தியும்
==
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரன் இவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு ஏற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நல்வளமை
வி=சாமர்த்தியமாக பேசும் திறன் பெற்ற இவன் எந்த செயலையும் தைரியமாக முன்னின்று நடத்தும் ஆற்றல் பெற்றவன்
வீண் வம்புக்கு வந்தவர்களை வாதாடி ஜெயிக்கும் ஆற்றலும் எதையும் தீர்மானிக்கும் சக்தியும் அதிகமாக இருந்தது
இளம் பெண்கள் விரும்பக் கூடிய அளவில் உடல் கட்டமைப்பும் இளம் பெண்களை வசப்படுத்தும் தன்மையும் கொண்டவன்
எங்கு சென்றாலும் இவன் யார்?
இவன் பெயர் என்ன? என்று கேட்க வைப்பான் அத்தனை நற்குணமாய் காணப்பட்டான்
==

பல்லாக்கும் ஏறிடுவான் பார் முழுவதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் வல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
வி=இவன் மிக உயர்ந்த நிலையை அடைந்து பதவி பொறுப்பேற்று உலகம் முழுவதும் ஆட்சி செய்வான் என்று நினைத்தார்கள்
இவனுக்கு நிகர் யாருமே கிடையாது என்று சொல்லக்கூடிய அளவில் திறமைசாலியாகவும் மனப்பக்குவமாகவும் இருந்தான்
==
எவ்வோரும் கொண்டாடி அவர் வளரும் நாளையிலே
பத்துவயது பண்போடு இருபதிலே
வி=எல்லோராலும் பாராட்டப்பட்டு மதிப்பு மரியாதையோடு அனைவருக்கும் ஏற்றவனாக வளர்ந்து வரும் சமயத்தில்
பத்து வயது இருக்கும்போது இவனுடைய செயல்பாடுகள் எல்லாம் இருபது வயதுக்கு ஒப்பாக இருந்தது
==
பற்று நிகரரொவ்வா மன்னவர் போலே வளர்ந்தான்
எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப்
வி=யாருக்கும் தலை வணங்கி நடக்காமல் தனக்கு நிகர் தானே என்று அரசனைப் போன்ற தன்மையொடு வளர்ந்தார்
சான்றோர் மக்களுடைய எல்லாத் தொழில்களையும் ஆர்வத்தோடு மிகவும் வேகமாய் சந்தோசமாக கற்றுக்கொள்வான்
==
பொல்லாதாரோடு பெரும்பகைப் போலே சீறி
நல்லாரை உள்ளில் நாளும் மறவாமல்
கல்லாரை எல்லாம் கண்டு கழித்தே இருந்தார்
வி=நீதி நேர்மை இல்லாமல் செயல்படுபவர்களோடு பகையாளிபோல் மிகவும் கோபம் கொண்டு வளர்ந்து வந்தார்
நல்லெண்ணம் கொண்டவர்களை உள்ளத்தில் அன்போடு ஏற்றுக்கொண்டு பிறர் செய்த நன்றியை மறவாமல்
படிப்பறிவு இல்லாத கீழ் ஜாதி மக்களையும் புறக்கணிக்காமல் எல்லோரிடமும் சரிசமமாக பண்போடு பழகி வந்தார்
==
ஈவதற்கும் தர்மமென எளியோரைக் கண் பார்த்து
ஆய்வதற்கும் நல்லான் என்றே மிக வளர்ந்தார்
வி=ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் அக்கறை காட்டி தர்ம சிந்தனை உள்ளவராக கருணைக் காட்டி வந்தார்
எந்த காரியத்தையும் ஓன்றுக்கு பல தடவை ஆராய்ச்சி செய்து நல்ல முடிவு எடுக்கிற நல்லவனாக வளர்ந்தார்
==

பதினேழு வயதில் பண்டமைத்த பெண்ணோடு
விதியான படியால் மெல்லியர் மேல் இச்சை கொண்டு
கூடிக் குணமாய்க் கொண்டவனையும் அகற்றி
தேடி இவரோடு செய்ய ரசமாய் இருந்தாள்
வி=பதினேழு வயது பருவ வயதை அடைந்து இளம் வாலிபனாக இருக்கும் போது முன் ஜென்மத்தில் அமைத்த பரதேவதையோடு சேர்ந்து வாழவேண்டும் என்பது விதியாக இருந்தபடியால்
பூலோகத்தில் பிறந்த பரதேவதை(திருமாலம்மை) மேல் ஆசைக் கொண்டு
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி பாசத்தால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய சொந்த கணவனை மறந்து விட்டு
சுவாமியைத் தேடி அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற அளவில் அன்பாக இருந்தாள்
==
வானு பரமேசுரனார் மாயவனார் ஆணையிட்டு
நானும் நீயுமாக நலமாக வாழவென்று
வி=அவர்கள் இருவரும் மேலோகத்தில் இருக்கின்ற பரசிவனும் மாயப்பெருமாளும் செய்கின்ற செயல்தான் என்று உறுதியோடு
நீயும் நானும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வாழ்வோம் என்று மனதில் ஒருவரும் முடிவெடுத்துக் கொண்டனர்
==
ஆணையிட்டு இருபேரும் அகமகிழ்ந்து அன்றுமுதல்
நாணமில்லாமல் நாயகன் போல் வாழ்ந்தார்
மங்கை காணாமல் மறுவூரு தங்கறியார்
வி=ஒருவரை ஒருவர் கைவிட மாட்டோம் என்று இறைவன் மேல் ஆணையிட்டு இருவரும் சந்தோசமாக அன்றுமுதல்
யாருக்கும் பயப்படாமல் வெட்கத்தை விட்டவர்களாக குடும்பமாகி குடும்பத் தலைவனைப் போல் வாழ்ந்து வந்தார் ஊரறியும் படியாக
சுவாமி தன் விருப்பத்திற்குரிய பெண்ணான திருமாலம்மையை பார்க்காமல் வெளி ஊரில் தங்கி இருக்க மாட்டார்
==
இத்தப் படியாய் இவர் வளரும் நாளையிலே
எந்தனருள் கண்டு இவர்க்கு இவளை அமைத்ததென்பார்
வி=இதுபோன்று இரண்டு பேரும் இணை பிரியாதவர்களாய் வாழ்ந்துக் கொண்டிருந்த சமயத்தில் மக்கள் எல்லோரும்
திருமாலாகிய என்னுடைய அருளால் இவர்களுடைய வாழ்க்கை இப்படி அமைந்து விட்டது என்று குறை கூறுவார்கள்
==

முன்னால் அமைத்த ஊழி விதியெனவே
சொன்னார் எவரும் அருளாலே
அன்றைக்கு அமைத்தது அவனை அவர்கல்லாது
வி=ஒரு தவறும் செய்யாத இவனுக்கு முன்பிறவியில் விதிக்கப்பட்ட கர்ம வினைப் பயனே என்று நொந்துக் கொண்டார்கள்
சொன்னவர்கள் எல்லோருமே கடவுள் அமைத்த விதிதான் எல்லாமே அவரால்தான் இப்படி நடக்கிறது என்று கூறினார்கள்
அன்றைக்கு எழுதிய எழுத்தை மாற்றி அமைக்க முடியாது அவனை அவருக்காகவே பிறவி செய்திருக்கிறார்
==
அன்றணைந்த தோசம் அகல மற்றோன் என்பதுதான்
என்று நருள்களெல்லாம் இயம்பி மிகவுரைத்தார்
மன்று ஈரேழும் அறிய மங்கையோடு வாழ்கையிலே
வி=அவர் அன்று எழுதின எழுத்துப்படி பாவ தோசத்தை தீர்க்க ஒருவன் மனைவி இன்னொருவருக்கு என்றாகி விட்டது என்றார்
இவ்வாறு நாட்டு மக்கள் எல்லோரும் அனுதாபம் கொண்டவர் களாக பரவலாகப் பேசிக் கொண்டார்கள் மிகவும் தல்லவராக இருந்தார்கள்
பதினான்கு உலகத்தில் உள்ளவர்களுக்கு அறியும்படியாக பரதேவதையோடு(திருமாலம்மை) வாழ்ந்து வரும் போது சோதனை ஏற்பட்டது
==
உற்ற வயது ஓர் இருப்பத்தி
இரண்டதிலே
சத்திராதி ஓர் நீசன் தானே பிழை ஏற்க
வி=முத்துக்குட்டி சுவாமிக்கு வயது இருபத்தி இரண்டு ஆகும் இந்த வயதுதான் சோதனையாக இருந்தது அவருக்கு
முத்துக்குட்டி சுவாமிக்கு பகைவனாக இருந்த ஒரு கலிநீசன் தானே விசம் கொடுத்து கொல்வதற்காக தீர்மானித்தான்
==
ஏக்கவே நீசன் அடறு செய்த எதுவினால்
ஆக்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே
எல்லோரும் இல்லா விசையடக்கித் தானிருந்தார்
வி=முத்துக்குட்டி சுவாமிக்கு விசம் கொடுத்தான் கலிநீசன் விசமருந்து கொடுத்து தவறு செய்த காரணத்தால்
தன்னுடைய வீரமிக்க ஆற்றல்கள் எல்லாம் அடங்கி நொய்வாய்ப்பட்டு அமர்ந்த நிலையில் இருந்தார்
எல்லோராலும் கைவிடப்பட்டவராக உடலில் செயல்பாடுகள் எல்லாம்
குறைந்தது பெலனற்றவராக இருந்தார்
==

நொம்பலங்களென்று நொந்து மிக உழன்று
தம்பிலங்கள் அடக்கித் தருணம் புலம்பலுற்றார்
வி=உடலில் ஏற்பட்ட வலிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் வேதனையோடு சத்தமிட்டு புலம்பினார்
தன்னுடைய சக்தியினால் எவ்வளவு அடக்க முடியுமோ அவ்வளவு அடக்கியும் அடக்க முடியாமல் புலம்பித் தீர்த்தார்
==
கருவுற்ற தோசம் கழிந்து சிவஞான
திருவுளவாசம் சிவமயமாய்ப் பெறவே
மனதில் மிகவுற்ற மாயவரை நெஞ்சில் வைத்து
வி=எந்த காரணத்திற்காக பிறக்க வேண்டியது வந்ததோ அத்த பாவதோசங்கள் எல்லாம் தீர்த்து சிவஞான அறிவுள்ளவராக
இறைவனை நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி சிவஞான சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று
தன்னுடைய மனதில் இரவும் பகலும் இடைவிடாமல் ஆதி நாராயணரை நினைத்து பற்றுதலோடு இருந்தார்
==
தினமும் வருந்தித் தீனமெனவே இருந்தார்
அப்படி ஒர் வசம் அங்கமதில் ஊரெல்லாம்
வி=நித்தமும் நாராயணரை விடாப்படியாக நம்மிக்கையோடு அழைத்த வண்ணம் நோய்ப்பட்டவராகவே இருந்தார்
நோய்வாய்பட்டவராக ஒரு வருடம் நடமாட முடியாமல் உடல் முழுவதும் எரிச்சலும் அரிப்பும் கொண்டவராக இருந்தார்
==
முப்படியே ஞாயமதால் உலகில் கழிய விட்டு
இகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலை
வி=முன் ஜென்ம கர்மவினையால் ஏற்பட்ட பாவங்களை எல்லாம் பூமியிலே பிறந்து இத்தனை பாடுகளும் பட்டு முடித்து விட்டு
கடவுளே என்னைக் காப்பாற்றும் என்று அவருடைய நினைவாக இருந்துக் கொண்டிருக்கும் அந்த நாளிலே
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக