திங்கள், 30 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

இராவணன் கொடுமை*****
... சந்திரரும் சூரியரும் சாய்ந்து மிகப்போகாட்டால்
சந்துசந்தாகச் சரத்தால் அறுப்பேன் என்பான் 
தெய்வ மடவார் திருக்கவரி வீசாட்டால்
கைவரிந்து கட்டிக் கழுவிலங்கில் வைப்பேன் என்பான்
நாலு மறையும் நல்ல ஆறுசாத்திரமும்
பாலுகுடம் சுமந்து பணிந்து முன்னே நில்லாட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்து அரைத்து
நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயம் என்பான் அரக்கன் ...
---------
உரை
---------
"சந்திரனும் சூரியனும் தன் கோட்டையை அணுகிச் சாய்ந்து போகாமல் இருந்தால் அவர்களைச் சந்துசந்தாக தன் அம்பு கொண்டு அறுத்து எறிந்திடுவேன்" என்பான்; "தெய்வக்கன்னிகள் தன் பக்கத்தில் நின்று கவரி வீசாவிட்டால் அவர்களின் கைகளை வரிந்து கட்டிக் கழு விலங்கில் மாட்டி வைப்பேன்" என்பான்; "நான்கு வேதங்களும் ஆறு சாத்திரங்களும் பாற்குடம் சுமந்து என்முன் பணிந்து நிற்காவிடில் அவற்றை அஸ்திரத்தால் கிழித்து அம்மியில் வைத்து அரைத்து வழித்து எடுத்து என் நெற்றியில் திலகமாக வைத்திடுவேன்; இது சத்தியம்" என்பான்.
---------------------




இராவணன் கொடுமை*****
முக்கோடி வரத்தை உச்சுக் கொண்டார் மாயவரும்
அங்கு அரைக்கோடி அரக்கன் வரம் கொண்டேகித் 
தேவரையும் மூவரையும் தெய்வேந்திரன் வரையும்
நால்வரையும் வேலை கொண்டு நாடாண்டான் அம்மானை
வாசுவும் அரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாரு என்பான்
வருணன் அவன் மேடைவந்து தெளியாது இருந்தால்
மரணம் வரும்வரைக்கும் வலு விலங்கில் வைப்பேன் என்பான் ...
---------
உரை
---------
மூன்று கோடி வரங்களையும் மாயவர் கவர்ந்து கொண்டார். எஞ்சியுள்ள அரைக்கோடி வரங்களுடன் இராவணன் தனது தேசம் சென்று தேவர்களையும், மூவர்களையும், தெய்வேந்திரன் ஆகியோரையும் தன் நாட்டில் வேலை செய்ய வைத்து நாட்டை ஆண்டு வந்தான். இலட்சுமியே, கேள்.
"வாயு பகவான் இராவணனுடைய மணிமேடையைச் சுத்தம் செய்யாவிடில் வாளாலே அவனை வீசி வெட்டி அழித்திடுவேன் என்பான்; வருணபகவான் அவன் மணிமேடையில் நீர்துளிகளைத் தெளியாதிருந்தால் சாகும்வரை வலிமையான விலங்கில் வைத்திடுவேன்" என்பான்.
---------------------



விருத்தம் (ஆசிரியர் கூற்று)*****
ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதையாலே சீவனுக்கு இடறும் பெற்று 
வாரிய மூணுகோடி வரமது தோற்றுப் பின்னும்
மூரியன் மூனுலோகம் முழுதுமே அடக்கி ஆண்டான்
---------
உரை
---------
சிவனைத் தொழுது தவம் செய்த இராவணன், வரங்களும் பெற்று, அழகிய சீதையால் தனது உயிருக்கு அழிவையும் தேடி, தான் பெற்றுக் கொண்ட வரங்களில் மூன்று கோடி வரங்களை மாயனிடம் இழந்து எஞ்சிய அரைக்கோடி வரங்களுடன் மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் அடக்கி ஆண்டான்.
---------------------



*இராவணன் வரம் வேண்டல்*****
கேட்ட வரங்கள் கெட்டியாய்த்தான் கொடுத்து
நாட்டமுடன் சீதை நகையால் அழிவை என்று 
இரக்கம் இல்லான் கேட்ட ஏற்ற வரங்கள் எல்லாம்
அரக்கன் அவன்தனக்கு ஆதி மிகக்கொடுத்தார்
ஆதி கொடுத்த அவ்வரங்கள் அத்தனையும்
நீதி இல்லான் வேண்டி நெடியோன்தனை வணங்கிக்
கொண்டு போகும்போது குன்றெடுத்த மாயவனார்
கண்டு மறித்துக் கௌசலம் இட்டே மாயன்
அரைக்கோடி வரமாய் ஆக்கி விட்டார் மாயவரும்
சரக்கோடி மூணும் தாம்தோற்றுப் போயினனே
---------
உரை
---------
இவ்வாறு வரங்களை எல்லாம் பலமுள்ளதாகக் கொடுத்துவிட்டு அவனை நோக்கி, "இராவணனே, காம நாட்டத்தையுடைய நீ சீதையின் நகைப்பினால் அழிந்து போவாய்" என்று அவன் விதி முடிவையும் கூறினார்.
சிவன் கொடுத்த எல்லா வரங்களையும் நீதி இல்லாத இராவணன் பெற்றுக் கொண்டு, திருமாலாகிய நெடியோனை வணங்கி, தன் இராச்சியம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது, குன்றெடுத்த மாயன் வழி மறித்து, தன் மாய வேலை திறத்தினால் அவனது வரங்களை அரைக்கோடி வரங்களாக குறைத்தார். பெருமைதரும் சரம்போன்ற மூன்று கோடி வரங்களையும் மாயவரின் மாய வேலையினால் அவன் இழந்து விட்டான்.
---------------------



இராவணன் வரம் வேண்டல்*****
... கெணியாமலே அரக்கன் கெடுவது அறியாமல்
அம்மைதனைக் கண்டு அயர்ந்து முகம் சோர்ந்து 
கர்ம விதியால் கைம்மறந்து நின்றனனே
நின்ற உணர்வை நெடிய சிவம் அறிந்து
அன்று அந்த அரக்கனுக்கு ஆதி வரம் கொடுத்தார் ...
---------
உரை
---------
அப்பொழுது, இராவணன், தனக்கு வரும் கேட்டை அறியாமல், அம்மை இலட்சுமிதேவியின் அழகைக் கண்டு, அதிக காம உணர்ச்சியால் அயர்ந்து முகம் சோர்ந்தான். தன் முன்வினைப் பயனால், தான் வந்த காரியத்தை (வரம் வேண்டுவதை) மறந்து நின்றான்.
இவ்வாறு அதிர்ச்சியுடன் நின்ற இராவணனின் காம உணர்வை நெடிய சிவம் அறிந்த நிலையில் இராவணனுக்கு அவன் கேட்ட வரம் அத்தனையும் கொடுத்தார்.



இராவணன் வரம் வேண்டல்*****
... கெணியாமலே அரக்கன் கெடுவது அறியாமல்
அம்மைதனைக் கண்டு அயர்ந்து முகம் சோர்ந்து 
கர்ம விதியால் கைம்மறந்து நின்றனனே
நின்ற உணர்வை நெடிய சிவம் அறிந்து
அன்று அந்த அரக்கனுக்கு ஆதி வரம் கொடுத்தார் ...
---------
உரை
---------
அப்பொழுது, இராவணன், தனக்கு வரும் கேட்டை அறியாமல், அம்மை இலட்சுமிதேவியின் அழகைக் கண்டு, அதிக காம உணர்ச்சியால் அயர்ந்து முகம் சோர்ந்தான். தன் முன்வினைப் பயனால், தான் வந்த காரியத்தை (வரம் வேண்டுவதை) மறந்து நின்றான்.
இவ்வாறு அதிர்ச்சியுடன் நின்ற இராவணனின் காம உணர்வை நெடிய சிவம் அறிந்த நிலையில் இராவணனுக்கு அவன் கேட்ட வரம் அத்தனையும் கொடுத்தார்.
---------------------



இராவணன் வரம் வேண்டல்*****
... துடுக்கன் இவன் கேட்ட சுத்தவரம் அத்தனையும்
கொடுக்கும் அளவில் குன்று எடுத்தோன்தன்தேவி 
அலைமேல் துயிலும் அச்சுதனார்தன்தேவி
சிலைமேல் எடுத்துச் செயிக்க வல்லோன்தன்தேவி
அலங்காரமாகி அன்றைப் பொழுததிலே
கலங்காதான்தேவி கயிலை உமையாள் அருகே
மணிமேடை தன்னில் மகிழ்ந்து இருக்கும் அவ்வளவில் ...
---------
உரை
---------
இப்படியாக, துடுக்குத்தனமுள்ள இராவணன் கேட்ட சக்தி வாய்ந்த வரங்களை எல்லாம் ஈசர் கொடுக்கத் தயாரானார்.
அச்சமயத்தில், குன்றெடுத்தோன்தேவியும், அலைமேல் பள்ளி கொள்ளும் அச்சுதனாரின்தேவியும், ஒலி பொருந்திய வேலாயுதம் எடுத்து வெற்றி கொள்வோன்தேவியும் ஆகிய இலட்சுமிதேவி, தன்னை அழகான முறையில் அலங்கரித்தபடி வந்தாள். இவ்வாறு வந்த இலட்சுமிதேவி, எதற்கும் கலங்காதவராகிய சிவனின் தேவியாகிய கயிலை உமையவள் அருகே மணி மேடையில் மகிழ்ச்சியுடன் அமர்ந்தாள்.
---------------------


*இராவணன் வரம் வேண்டல்*****
சொற்படி கேட்டே அரக்கன் சொல்லுவான் அப்போது
மூன்று லோகத்திலுள்ள முனிவர் தேவாதிகளும் 
வேண்டும் பல ஆயுதமும் விதம்விதமாய் அம்புகளும்
வீரியமாய் நான் இருக்கும் விண்தோயும் கோட்டை சுற்றிச்
சூரியனும் சந்திரனும் சுற்றி அவை போய்விடவும்
சிவனார் ஒரு கோடி உற்ற வரம் தரவும்
புவனம் படைக்கும் பிரம்மா ஒருகோடி
உமையாள் ஒரு கோடி உற்ற வரம் தரவும்
இமையோர் அரைக் கோடி இப்படியே உள்ள வரம்
மூணரைக் கோடி உள்ள வரம் அத்தனையும்
தாணரே என்றனுக்குத் தாரும் என்றான் அம்மானை ...
---------
உரை
---------
பிறகு ஈசரை நோக்கி, "ஈசுரரே,
1. மூன்று உலகங்களிலும் உள்ள முனிவர்களும், தேவர்களும், எல்லா வகையான ஆயுதங்களும், அம்புகளும், என்னைத் தாக்க முடியாத வண்ணம் நான் சக்தி பெற்றவனாக இருக்க வேண்டும்.
2. சூரியனும் சந்திரனும் எனது கோட்டையைச் சுற்றிப் போய்விட வேண்டும்.
3. சிவனாகிய நீர் ஒரு கோடி நல்ல வரங்கள் தரவும், இவ்வுலகம் படைக்கும் பிரம்மா ஒரு கோடி வரங்கள் தரவும், உமையாளும் எனக்குத் தேவையான ஒரு கோடி வரங்கள் தரவும், இந்திரன் அரைக்கோடி வரங்கள் தரவும் வேண்டும்.
இப்படியே எல்லா வரங்களும் சேர்த்து மூன்றரைக் கோடி வரங்களும், இன்னும் ஏதாவது வரங்கள் உண்டென்றால் அந்த வரங்கள் அத்தனையும், ஈசுரரே! எனக்கு நீர் தந்து அருளல் வேண்டும்" என்றான்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக