வெள்ளி, 21 நவம்பர், 2014

அன்பு:

எல்லாம் படைத்த இறைவன் தான் படைத்த மக்களிடம் முதலில் எதிர்பார்ப்பது,அன்பு என்னும் மிகப்பெரிய பொருளே ஆகும்.அன்பு ஒன்றே இந்த உலகில் மிகப்பெரிய பொருளாகும்.அது கொடுக்க,கொடுக்க குறைந்து போவதும் இல்லை,வாங்க வாங்க தெவிட்டுவதும் இல்லை.அன்பை விதை த்தால் மட்டுமே அதிக மகசூலை காண முடியும்.அத்தகைய சிறப்பு மிக்கது இந்த அன்பாகும்.

     ஒருவர்மீது நாம் வைக்கும் அளவுகடந்த அன்பு அவர் நமக்கு செய்யும் தீமைகளை கூட தாங்கி கொள்ள கூடியதாகும்.அன்பினால் தம்முடைய எதிரிகளையும் நம்மை நேசிக்க வைக்க முடியும்.ஆகவேதான் அய்யா வைகுண்டர் அன்பு என்ற அயுதத்தை கலிக்கு எதிராக கையில் எடுத்தார்.தன்னை துன்புருத்தியவரிடமும் அன்பு மொழி பேசினார்.அன்பின் பெருமையை உணர்ந்த வைகுண்டர் தன் மக்களிடம்"அன்புகுடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம் பொறுத்துயிருங்கோ பூலோகமாள வைப்பேன்" என்கிறார்.

அன்பின் வலிமை:

"பாசக் கயிறுகொண்டு பரமன்வை குண்டரையும்
கட்டியிறுக்கி கைவெடியா லிடித்துக்
கெட்டி யிறுக்கிக் கீழேபோட் டேமிதித்துத்
தலைமுடியைத் தான்பிடித்து தாறுமா றாயிழுத்துக்
குலையைக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்துக்
குண்டியிலே குத்திக் குனியவிடுவானொருத்தன்
நொண்டியோ என்று நெழியிலே குத்திடுவான்"

    மேற்கண்ட அகிலத்தின் வரிகளை காணுங்கள்.வைகுண்டருக்கு எதிராக கலியன் செய்த சில கொடுமைகள் இவைகள்.இவைகள் அனைத்தையும் வைகுண்டர் பொறுத்து கொள்ள வேண்டிய அவசியமென்ன?"அன்பு" ஆம் அன்பர்களே அவர் தன் மக்கள் மீது வைத்த அன்பே இதற்க்கு காரணமாகும்.அதுவே அனைத்து துன்பங்களையும் தாங்கி கொண்டது.அவர் அன்று சான்றோர் மேல் வைத்த அன்பே இன்று அய்யாவழி என்னும் தர்மயுகம் நோக்கிய வழியை உருவாக்கி கொடுத்துள்ளது.

அன்பின் தன்மை:

    அய்யாவைகுண்டர் தன்னை தேடிவந்த அனைத்து மக்களிடமும் வேறுபாடின்றி சம அன்போடு நடந்து கொண்டார்.அதுபோல நாம் ஒருவர் மீது வைக்கும் அன்பானது எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராத,உயர்வு தாழ்வு இல்லாத தூய அன்பாக இருத்தல் அவசியமாகும்.முன்பின் தெரியாத ஒருவரிடம் காட்டும் அன்பு மிகப் பெரியதாகும்.ஒருவர் மீது மற்றவர் வைக்கும் அன்பே கடவுளாகும்.இதனையே வைகுண்டர் "அன்பு என்னும் மலரெடுத்து அனுதினமும் பூசை செய்வாய்" என்கிறார்.அதாவது அன்பையே கடவுளாக கருதி அதனை பூஜிக்க அதாவது பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்.

  உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் அன்பையே போதிகின்றன.இறைனம்பிக்கை இல்லாதவன் கூட பிறரிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனின் அன்பிற்க்கு உரியவன் ஆகின்றான்.இத்தகைய சிறப்புமிக்க அன்பினையே இறைவன் முதலில் எதிர்பார்கின்றார்.

அய்யா உண்டு!                                                              
                                                                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக